மொய்

This entry is part 1 of 19 in the series 2 நவம்பர் 2014

” என்ன திருட்டுத் தபால் ஏதாச்சும் கெடச்சிருச்சா . மேய்ஞ்சுட்டு இருக்கீங்க”

“ இதுலே அதுவெல்லா புடிக்கறதுக்கு வயசும், புது டெக்னாலஜி மூளையும் வேணும் “

கண்களை இடுக்கிக் கொண்டு மூக்குக் கண்ணாடி பிரேமை மூக்கிலிருந்து தற்காத்துக் கொண்டார் மணியன். .தனலட்சுமி பூச்சி பூச்சியாய் நெளியும் கணினி எழுத்துக்களைப் பார்த்து நகர்ந்து விட்டாள்..அவளுக்கும் மூக்குக்கண்ணாடிதான் தெளிவு தரும்.

“ அதிகாரம் இருந்துச்சு திருடின்னீங்க.. இதிலே முடியுமா.. “

“ என்ன பெரிய அதிகாரம் போ… இப்போ இங்க இதிலெ சகஜம்ன்னு சொல்றாங்க. இங்க அதுக்கெல்லா புது டெக்னாலஜியெல்லா தேவை.” . கணினியின் மானிட்டர் எழுத்துக்களால் நிறைந்திருந்தது. மின்னஞ்சல்கள் வரிவரியாய் நின்றிருந்தன..

* *

தபால்காரர் என்ற அதிகாரத்திலேயே கொஞ்சம் தபால்களை பிரித்துப் பார்த்திருக்கிறார் மணியன். படித்துமிருக்கிறார். சுவாரஸ்யமாய் தென்பட்டக் கடிதங்களை .பின்தொடர்ந்துமிருக்கிறார். செகடந்தாளி கிராமத்திற்கு அதிகபட்சமாய் நாற்பது தபால் வரும். எளச்சிபாளையம் தபால்காரர் விடூமுறை என்றால் இன்னும் இருபது கூடுதலாகும்.தொடக்கப் பள்ளி, பஞ்சாயத்துத் தலைவர் என்று முக்கியமானவை ஒற்றை இலக்கத்துள் இருக்கும். அதெல்லாம் கவர்மெண்ட் சமாச்சாரங்கள். சுவாரஸ்மிருக்காது.அகவிலைப்படி உயர்வு, அரசு சாலை போட ஒதுக்கும் தொகை, கழிப்பறை கட்டாமல் இருக்கக் காரணங்கள் கேட்டு கடிதம், புது தெரு விளக்கு ஏன் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை என்றிருக்கும்.

உமா பெயரில் வந்த கடிதங்களில் சுவாரஸ்யம் இருந்ததைக் கண்டு கொண்டார். எதேச்சையாய் கடிதக் கவர் ஒன்று ஒட்டப்படாமல் இருந்ததை எடுத்துப் படிக்க ஆரம்பித்தார். அவசரத்தில் ஒட்டாமல் விட்டிருப்பார்கள் போல. சகஜமான நலம் விசாரிப்புதான். எதிர் தரப்பில் வேலை அமைந்து விட்ட சந்தோசத்தை அக்கடிதம் சொன்னது. உமா பட்டப்படிப்பு, ஆசிரியை பயிற்சி முடித்து விட்டு வீட்டிலிருக்கிறவள். அவள் அப்பாவிற்கு நிலம், விவசாயம் , தென்னந்தோப்பு கொஞ்சம் என்று உண்டு.

படித்து விட்டுக் கடிதத்தை ஒட்டி பத்திரமாக உமாவிடம் சேர்த்திருந்தார்.

“ என்னமா லெட்டர் “

‘” டீச்சர் டிரையிங் பேட்ச் மேட். “

“ பொண்ணூதானே.”

“ ஆமாப்பா. மேரி ஏஞ்சல்.. “

“ கிறிஸ்துவங்கதா நெறைய படிப்பாங்க. டீச்சர்கள்ல அவங்கதா அதிகம் “

ஆனால் அக்கடிதம் எழுதியது ஏஞ்சல் இல்லை. தேவதை இல்லை. தேவன்தான். பெயரும் கூட தேவன். தேவதைக்கு தேவைப்பட்ட தேவன். அப்பாவின் கேள்விக்கு மேரி ஏஞ்சல் என்று பொய்யாய் பெயர் சொன்னது காதில் விழுந்தது மணியனுக்கு., அதுவே அதன் பின் உமா பெயருக்கு வந்த கடிதங்களை சற்றே உற்று நோக்க வைத்தது. பிரித்தும் பார்க்கவும், படிக்கவும் வைத்தது.

கொஞ்சம் எச்சிலைத் தொட்டு இழுத்தால் பிரிந்து விட்டன தேவனின் கடிதங்கள். அல்லது கொஞ்சம் நீராவியில் பிடித்தால் கழண்டு கொண்டன. மறுபடியும் அரிசி சோற்றுப் பருக்கையையோ , பசையையோ வைத்து சுலபமாக ஒட்டி நல்ல போஸ்ட் மேனாக கடிதங்களை கொண்டு சேர்த்தார்.

பின்னால் வந்த தேவன் கடிதங்களில் சுவாரஸ்யங்கள் கூடிக்கொண்டே இருந்தன. தேவனும் உமாவும் ஆசிரியர் பயிற்சிக்கல்லூரியில் ஒன்றாய் படித்தவர்கள். தேவனுக்கு வேலை கிடைத்து விட்டது. அவளும் ஏதாவது வேலை கிடைத்தால் போய் விடுவாள். பட்டிக்காடு ரொம்பவும் போர் அடிக்கிறது.நூலகத்திற்கு கூட 5 கி.மீ தாண்டி கருமத்தாம்பட்டிதான் போகவேண்டும். அண்ணன் வெள்ளிகிழமை சோமனூர் மீனாம்பிகா திரையரங்கில் படம் மாற்றுகிற நாளில் சோமனூர் போகிற போது தினத்தந்தி வாங்கி வருவான். மற்றபடி அவன் வாரப்பத்திரிக்கைக்கு மாறுவானா என்று உமா காத்துக் கொண்டிருந்தாள். தொலைக்காட்சி, கைபேசி அதிகம் வராத காலம். பஞ்சாயத்துத் தலைவர் வீட்டில்தான் தரை வழி தொலை பேசி கூட இருந்தது..

கடிதங்களில் உமா பெரும்பாலும் தன் தனிமையைப் பகிர்ந்து கொண்டிருந்தாள்.தேவன் நகர வாழக்கையின் சுவாரஸ்யங்கள் பற்றிச் சொல்லிக் கொண்டே இருந்தான். ” கல்யாணராமன் “ படத்தில் கமலஹாசனின் பல்லு ரோல் சிறப்பாக இருந்ததையும் சொல்லியிருந்தான் ஒரு கடிதத்தில். “ பதினாறு வயதினிலே” இன்னொரு தரம் பார்ப்பதற்க்கும் கூட சோமனூர் தான் உமா போக வேண்டியிருந்தது,அதுவும் அது வரும் சமயம்தான்.

மெல்ல மெல்ல காதல் வார்ததைகள் கூடிக் கொண்டு வந்த போதுதான் அந்த அதிர்ச்சித் தகவலை உமா கடிதத்தில் சொன்னாள்: செம்மாண்டாம் பாளையத்தில் தென்னந்தோப்பு வைத்திருப்பவன் தன்ராஜ். பட்டப்படிப்பு படித்தவன். குடிகாரன் என்ற பட்டமும் அவனுக்கு இருக்கிறது, தென்னந்தோப்பும், தென்னங்கள்ளும், தன்ராஜிம் பிடிக்கவில்லை அவளுக்கு, பட்டம், ஆசிரியைப் பயிற்சி எல்லாம் வீணானானாலும் பரவாயில்லை இப்போதே குடிகாரன் என்ற பட்டப் பெயர் உள்ளவனோடு திருமணம் செய்து கொண்டு காலம் தள்ள முடியாது. அவனைத் திருத்துவதும் கஷ்டம். காரணம் அவர்களின் தலைமுறையே குடியில் சம்பந்தப்பட்டது, திருத்த முடியாது என்று புலம்பிக் கொண்டிருந்தாள்.

“ நான் என்ன பண்ணட்டும் “ ஒரு கடிதத்தில் தேவன் கேட்டு விட்டான்.

“ அடப்பாவி மனுஷா .மனசே பறிகுடுத்துட்டனே ..புரியலையா .. செரின்னா கூட குடிகாரனுக்கு வாழ்க்கைபடறதிலே விருப்பமில்லே. அவங்க அப்பனே குடிச்சு குடல் கருகி அவங்கம்மாவை விதவையாக்கியவன்தான் “

கடிதங்கள் தினந்தோறும் என்றானபோது உமாவே பெரும்பாலும் வந்து கடிதங்களைப் பெற்றுக் கொண்டாள். மணியன் சோமனூரிலிருந்து வரும் கடிதங்களைப் பிரித்து உமாவின் கடிதங்களை தனியே வைத்து விடுவான். தனலட்சுமி இல்லாத நேரம் பார்த்து மாலையில் அவற்றைப் படிப்பான்.” திருட்டு தபால் படிக்கறவனும், திருட்டு சகவாசம் வெச்சிட்டிருக்கறவனும் ஒண்ணுதா “ என்று மறைமுகமாய் ஒருதரம் தனலட்சுமி சொன்னபின் உசாராகி விட்டான்.ஆனாலும் தனலட்சுமிக்கு சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது.

தேவன் கடைசியில் நாள் குறித்து விட்டான். “ உன்னாலே முடியாதுன்னு சொன்னப்புறம் நான் கண்ணெ மூடிட்டு இருக்கறது நாம பழகனதுக்கு துரோகம் பண்ற மாதிரி இருக்கு. வெள்ளிக்கிழமை உஙக ஊருக்கு சாயங்காலம் வர்ற எஸெமெஸ் பஸ்சிலே வந்திருவேன். அது எளச்சிபாளையும் போயிட்டு திரும்பி வர்றப்போ நீயும் ஏறிக்க. வெள்ளிக்கிழமை மாரியம்மன் கோவிலுக்கு வர்றதா சொல்லிட்டு வந்திரு. சந்தேகப்படற மாதிரி இல்லாமெ வெறும் கையோட வா. பாத்துக்கலாம் “. அந்தக் கடிதம் வெள்ளிக்கிழமை காலையில்தான் வந்திருந்தது, தனலட்சுமி ஊரில் இல்லாத தைரியத்தில் உடனே பிரித்துப் படித்தவன் அவசரம் கருதி பசையால் நன்கு ஒட்டி உமாவிடம் உடனே சேர்த்து விட்டான்.

“ இன்னிக்கு தபால் காரர் சீக்கிரம் வந்துட்டாரா அம்மினி “ என்று கேட்டபடி உமா தகப்பன் ஒரு மரத்துத் தென்னங்கள்ளுக்காகக் கிளம்பினார். அவருக்கு எளப்பு சீக்கு உண்டு. ஒரு மரத்து கள்ளை ஒரு மண்டலம் குடித்தால் சரியாகிவிடும் என்று யாரோ சொல்லியிருந்தார்கள். உமா ரொம்பவும் பதற்றமாகத்தான் இருந்தாள்.

சாயங்காலம் எஸெமெஸ் பேருந்து வந்ததும் கவனித்தார் மணியன்.. தேவன் அழகாகத்தான் இருந்தான். உமாவுக்கு நல்ல ஜோடி. இருவரும் நல்ல உயரம்..தேவனைப் பார்த்து மணியன் சிரித்தார், தேவன் பயந்து போயிருப்பது தெரிந்தது.

எஸெமெஸ் பேருந்து எளச்சிபாளையம் போய் விட்டுத் திரும்பியபோது உமா வந்து விட்டாள். அம்மன் கோவில் விபூதி குங்குமம் அவள் நெற்றியில் மினுங்கியது.

சுற்றிலும் பார்த்துக் கொண்டே பேருந்தில் ஏறி நான்காவது வரிசையில் உமா உட்கார்ந்து கொண்டாள். தேவன் சற்றே பயம் நீங்கியவன் போல் கடைசி வரிசையில் ஒடுங்கி உட்கார்ந்தான். மணியனைப் பார்த்ததும் தேவனின் முகம் இருளடைந்தது.இந்த ஆள் அடிக்கடி தென்படுகிறானே என்ற விசனம்.

உமாவின் பக்கம் சென்ற மணியன் அவள் கையில் அய்நூறு ரூபாய் நோட்டொன்றை வைத்து அழுத்தினார். ” மகராசியா இரு அம்மா “ மெல்லிய குரலில் சொன்னார். அவள் பயத்தை உள்ளடக்கிக் கொண்டு திருப்பிக் கொடுக்க எத்தனித்தவள் பின் தயங்கி மவுனமானாள். தேவன் மணியனின் முகத்தை இருளுடன் பார்த்தான்

* * *

“ திருட்டுத் தபால் இல்லை நிஜ தபால் ஒண்ணு வந்திருக்கு தனம் “

மின்னஞ்சலைப் பார்த்தபடி சொன்னார் மணியன்.

“ நம்ம பையனெ திருட்டுப் பையன்ம்பீங்க . அவனா எழுதியிருக்கான்.”

“ நம்ம பையன் மணி மணீயானவன் உமாவோட பையன் எழுதியிருக்கான். அமெரிகாவில கம்யூட்டர் என்சினீயராமா… செகடந்தாளியை வுட்டு பதினஞ்சு ஊர் வேலைக்குன்னு மாறி வந்து வயசான காலத்திலே இங்கிருக்கோம். நம்மள உமா பையன் கண்டுபுடிச்சு இ மெயில் அனுப்பி இருக்கான்”

“ யாரு உமா “

‘ திருட்டுக்கடிதாசில்லே அது மாதிரி சுவாரஸ்யமா இருந்ததில்லேன்னு சொல்வனே . அந்த உமாவோட பையந்தா.”

“ என்ன திருட்டு கடுதாசி படிச்ச தபால்காரனுக்கு அவன் வந்து ஒதை குடுக்கப்போறானா “

“ எங்கமாவுக்கு மொய் குடுத்து ஆசீர்வாதம் பண்ணுன ஒரே ஆள் நீங்கதா. இங்க அமெரிகாவிலெ ஏதாச்சும் விசேசம்னா வர்ற நம்ம கொங்கு நாட்டுக்காரங்க கொழந்தைக கிட்ட ஏதாச்சும் குடுக்கறப்பொ இந்தா மொய்ம்பாங்க., எங்க அம்மாவை வாழ்த்தி மொய் குடுத்த ஒரே ஆள் நீஙகதா. உங்களெ அடுத்த தரம் கோயமுத்தூர் வர்றப்போ பாக்க வருவேன். போன வாரம் எம்பொண்ணுக்கு பொறந்த நாளன்னிக்குத்தா உஙக மொய் பத்தி அம்மா சொன்னாங்கன்னு எழுதியிருக்கான். உங்க ஆசிர்வாதம் தா அவங்கள அந்த பட்டிக்காடெ வுட்டுத் துரத்தியிருக்கு. இல்லீன்னா எங்கம்மா என்ன ஆகியிருப்பாங்கன்னு எழுதியிருக்கான் அந்த அமெரிக்கப்பையன் ..போன் நெம்பர் கேட்டிருக்கான். அவங்கம்மா போன் பண்றன்னு சொன்னாங்களாமா “

“ உங்க மொய் ஆசிர்வாதம் நல்லாத்தா இருக்கு.”

எப்போதோ கேட்டக் குரலை மீண்டும் கேட்க ஆவலாக இருந்தாள் தனலட்சுமியும்.

சுப்ரபாரதிமணியன் 8/2635 பாண்டியன் நகர், திருப்பூர் 641 602

Series Navigation
author

சுப்ரபாரதிமணியன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *