அறிதுயில்..

This entry is part 31 of 47 in the series 31 ஜூலை 2011

ஆயிரம் முறை சொல்லியனுப்பியும்
இனிப்புடன் வரமறந்த
தந்தையின் மீதான நேற்றைய கோபத்தை
ஒரு கண்ணிலும்; ..
உடன் விளையாட வரமறுத்த
அன்னையின் மீதான இன்றைய கோபத்தை
இன்னொரு கண்ணிலும்
சுமந்துகொண்டு;
கட்டிலிலேறி கவிழ்ந்துகொள்கிறாய்..

என்னுடைய எல்லா
சமாதானமுயற்சிகளையும் புறந்தள்ளிவிடுகிறது….
உன்னுடைய செல்லக்கோப
கன்னஉப்பல்…

அம்மாசித்தாத்தாவின் பஞ்சுமிட்டாய்வண்டி
தூதனுப்பிய மணியோசையும்
உனது பொய்த்தூக்கத்தை
கலைக்கமுடியாமல் வெட்கி;
முகம் மறைத்தோடுகிறது இருளில்..

தாயின் குரலும்
தந்தையின் சீண்டலும் பலனளியாமல்..
ஊர்ந்துவந்த நண்டும் நரியும்கூட
விரல்விட்டு இறங்கியோடிவிடுகின்றன..

இனிப்புப்பெட்டியின் கலகலச்சத்தம் ஏற்படுத்திய
இமைகளுக்குள்ளின் மெல்லிய நடமாட்டத்தை,
அவசரமாய் தலையணையில் முகம்புதைத்து
கைதுசெய்கிறாய்..

கொஞ்சலும் கெஞ்சலும் பயனற்றபொழுதில்;
மிட்டாய்ப்பெட்டி திரும்பக்கொடுக்கப்பட்டுவிடுமென்ற
செல்லமிரட்டலுக்கு உடனே பலனிருக்கிறது!!..
‘தூங்கும் பிள்ளைக்கு காலசையுமே’யென்ற
பல்லாண்டு பழைய அங்கலாய்ப்புக்கு
உடனே பதில்சொல்கிறாய் ‘தற்செயலாய்’ விரலசைத்து..

பொய்த்தூக்கமேயெனினும்
அவ்வழகும் ரசிக்கக்கூடியதேயன்றோ!!!!!..
இதற்காகவென்றேனும், அடிக்கடி ,
அறிதுயில் கொள்ளடா..
என்,
அனந்த பத்மநாபனே………

Series Navigationமழையைச் சுகித்தல்!சிறகின்றி பற
author

அமைதிச்சாரல்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *