முள் எடுக்கும் முள்

This entry is part 13 of 38 in the series 20 நவம்பர் 2011

கோதையாறு நீர்த் தேக்கத்துக்குப் பக்கத்தில் ஒரு சின்னக் கிராமம். இது குமரி மாவட்டத்தில் கேரள நாட்டின் எல்லைக்கு அருகில் உள்ளது. அங்கு, சின்னச்சாமி ஒரு பெரிய புள்ளி! நிறைய ரப்பர் எஸ்டேட்! வயது அறுபதுக்கு மேல் ஆனாலும் உடம்பில் ஒரு மினுமினுப்பு! சம்சாரம் தவறிப்போய் நாலைந்து வருஷமிருக்கும்! ஒரே மகன். டாக்டருக்குப் படித்துவிட்டு உள்ளுரிலேயே வேலை பார்க்கிறான்.

சின்னச்சாமியின் ரப்பர் எஸ்டேட்டுக்குப் பக்கத்தில் ஒரு காணி நிலம். அதில் பத்துப் பன்னிரண்டு தென்னை மரங்கள்! அத்துடன் சின்ன வாழைத் தோட்டம்! இது பெரியசாமி என்ற கிழவனுக்குச் சொந்தமாக இருந்தது. சின்னசாமி கூட அடிக்கடி, “ஐநூறு ஏக்கர் ரப்பர் எஸ்டேட் இருந்து என்ன பிரயோஜனம்! எனக்குப் பெயர் சின்னசாமிதான்! ஆனால், நீதான் பெரியசாமியாக இருக்கிறாய்!” என்று பெயர்ப்பொருத்தத்தைப் பற்றி வேடிக்கையாகச் சொல்லுவார்.

பெரியசாமி குடிசை வீட்டில் திடீரென்று ஒரு நாள் அதிசயம். நீலவானத்துப் பூரண சந்திரன் ‘கலகல’வென்று சிரித்து விளையாடிக் கொண்டிருந்தது.

ஆம்! பதினாறு வயது பருவ மங்கை! மணிக்கட்டு எலும்பு எங்கிருக்கிறது என்று கண்டுபிடிக்கமுடியாத அளவு மொழுமொழுவென்ற சதைப்பிடிப்பு! பளபளக்கும் பொன்மேனியில் மலையாளத்து மினுமினுப்பு! பார்த்துவிட்டால் போதும், பார்வையை வேறு பக்கம் திருப்பவே மனம் வராது! அப்படி ஒரு கவர்ச்சி!

அவளுக்குப் பெயர் கோதையம்மை. பெரியசாமியின் மகள் வயிற்றுப் பேத்தி. தக்கலைக்குப் பக்கத்து கிராமத்தில் தாயிழந்த பெண்ணாக, தந்தையின் ஓடுகாலிதனத்தைத் தாங்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்த இவளைப் பெரியசாமிக் கிழவன் தன்னுடைனேயே இருக்கும்படி அழைத்துக் கொண்டு வந்துவிட்டான்.

சின்னசாமியின் கண் ஒரு நாள் கோதையம்மையின் மேல் விழுந்துவிட்டது. அவ்வளவுதான்! தேகம் முழுவதும் ஒரு சிலிர்ப்பு உணர்ச்சி! உடம்பின் அத்தனை நரம்புகளிலும் முறுக்கேறிய மதமதப்பு!

அடுத்த நாள் பெரியசாமியின் குடிசை வீட்டுக்கு வெற்றிலைப் பாக்குப் பழத் தட்டுடன் சின்னசாமி விஜயம் செய்தார்.

“என்ன விஷயம்” என்று கேட்டான் பெரியசாமிக்கிழவன். பரிசம் போட வந்திருப்பதாக, சின்னசாமியிடமிருந்து பதில் வந்தது.

பெரியசாமிக் கிழவனுக்குக் கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. சின்னசாமியின் மகனோ டாக்டர். அவன் பேத்திக்கு இப்படி ஓர் அதிர்ஷ்டமா?

“உங்க மகனைக் கட்டிக்க என் பேத்தி கொடுத்து வச்சிருக்கணும்!” என்றான் பெரியசாமிக் கிழவன் தழுதழுத்தக் குரலில்.

சின்னசாமி சிடுசிடுத்தார். “மகனுக்குப் பெண் பார்க்கல்லே கிழவா! எனக்குத்தான் பார்க்கிறேன்! உன் பேத்தியை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு” என்றார் ஓங்காரக் குரலில்.

முதலில் கையும் ஓடாமல் காலும் ஓடாமல் தவித்த பெரியசாமிக் கிழவனுக்கு இப்போது வாயும் ஓடவில்லை. சிலையாக நின்றான். ஆனால், கதவுப் பக்கத்தில் மறைந்து நின்ற கோதையம்மை ‘களுக்’ என்று சிரித்தாள்.

“பாத்தியா! பெண்ணுக்குச் சம்மதம்!” என்றார் சின்னசாமி.

“ஆமா! உங்களுக்கு மாலை போட காத்திருப்பேன்!” என்று கோதையம்மையின் குரல் கதவுக்குப் பக்கமிருந்து வந்த போது, “ஆஹா! ஆஹா!” என்று பரமானந்தமாகச் சின்னச்சாமி வாயைத் திறக்க, பல் செட்டு பளபளத்தது.

ஆனால், அடுத்து வந்த வார்த்தைகள் சின்னசாமியை அதிர வைத்தன.

“சின்னசாமித் தாத்தா! பச்சை மூங்கியிலே, நாலு பேருக்கு மத்தியிலே நீங்க கடைசி ஊர்வலம் வரபோது, உங்களுக்கு மரியாதை செலுத்தி மாலை போட நான் காத்திருப்பேன்!”

காணி நிலத்தில் பத்துப் பன்னிரண்டு தென்னை மரத்தோடிருக்கும் பத்தினிப் பெண்ணைத் தேடி வந்த சின்னச்சாமி அவமானம் தாங்க முடியாமல் கருவிக் கொண்டே வெளியேறினார். சும்மா இருப்பாரா? அடுத்த நாளே ஊர்ப்பஞ்சாயத்தார் முன்னிலையில் வழக்குப் போட்டார். கிழவன் அவமானப்படுத்திவிட்டான் என்றா? அது தான் இல்லை!

ஆறு மாதத்திற்கு முன்பு சின்னச்சாமியிடம் பெரியசாமிக் கிழவன் ஐயாயிரம் ரூபாய் கைமாற்று வாங்கியதை இன்னும் திருப்பிக் கொடுக்கவில்லை! அதைப் பஞ்சாயத்தார் வாங்கிக் கொடுக்க வேண்டும்! இது தான் வழக்கு.

பெரியசாமிக் கிழவன் வெலவெலத்துப் போனான். “பணம் கொடுக்காமலே அபாண்டமாய் இப்படிப் பழி சுமத்தலாமா?” என்று சின்னச்சாமியிடம் பேசிப் பார்த்தான். “நீயும் உன் பேத்தியுமாக என்னை அவமானப்படுத்தியதற்கு பழி வாங்காமல் விட மாட்டேன்! பஞ்சாயத்துக்கு வா! சாட்சியோடு நிரூப்பிக்கிறேன்!” என்று ஒரேயடியாகச் சொல்லிவிட்டார் சின்னச்சாமி.

சாட்சியோடு நிரூபித்துவிட்டால் பெரியசாமிக் கிழவனின் பாடு அதோகதி தான். வாங்காத பணத்தை அவன் கட்டியாக வேண்டும். இருக்கும் ஒரு காணி நிலத்துக்கும் ஆபத்து வந்துவிடும்.

பஞ்சாயத்தும் கூடியது. சின்னச்சாமியின் சார்பில் இரண்டு பேர் சாட்சி சொன்னார்கள். அதன் சாராம்சம்: “நாங்கள் ஆடி அமாவாசையன்று சின்னச்சாமியின் வீட்டுக்குப் போயிருந்தோம். அப்போது பெரியசாமிக் கிழவன் இவரிடத்தில் ஐயாயிரம் ரூபாய் கைமாற்று வாங்கிக் கொண்டு ஐப்பசி மாதத்தில் திருப்பிக் கொடுப்பதாகச் சொல்லிப் போனான்!”

இந்தச் சாட்சிக்குப் பிறகு பஞ்சாயத்தார் பெரியசாமிக் கிழவனை விசாரித்தார்கள். நான் சொல்ல ஒன்றுமில்லையென்று தன் சாட்சியை விசாரிக்கலாமென்றும் அவன் சொன்னான்! அந்தச் சாட்சி சொன்னதாவது: “நானும் ஆடி அமாவாசையன்று சின்னசாமியின் வீட்டுக்குப் போயிருந்தேன். முன் சாட்சிகள் சொன்னது போல் ஐயாயிரம் ரூபாய் கைமாற்றுக் கொடுத்தது உண்மைதான்!”

இதைக் கேட்டதும் சின்னச்சாமிக்கு படுகுஷி! “பார்த்தீர்களா?” என்று தாவிக் குதித்தார். ஆனால், அந்தச் சாட்சி தொடர்ந்து சொன்னான்:

“அதன் பிறகு மூன்று மாதம் கழித்து ஐப்பசி மாத அமாவாசையன்று சின்னச்சாமியின் வீட்டுக்கு நான் போக நேர்ந்தது. அப்போது இந்தப் பெரியசாமிக் கிழவன் அங்கே வந்து கைமாற்று வாங்கிய ஐயாயிரத்தையும் திருப்பிக் கொடுத்ததை நான் பார்த்தேன்!”

இதைக் கேட்ட பஞ்சாயத்தார், “சின்னச்சாமி பொய் வழக்குப் போட்டதற்காக, பெரியசாமிக் கிழவனுக்கு நஷ்ட ஈடு கட்ட வேண்டும்” என்று தீர்ப்புச் சொன்னார்கள்.

வாங்காத கடனைக் கொடுக்காமலேயே அடைத்துவிட்டான் பெரியசாமிக் கிழவன்! முள்ளை முள்ளால் எடுத்துவிட்டான்! இந்த முள்ளெடுக்கும் முள்ளை அவனுக்கு யார் கொடுத்தது?

அவனுடைய துடுக்குப் பேத்தி கோதையம்மைதான்!

Series Navigationஅந்த நொடிவாசிப்பு அனுபவம்
author

சகுந்தலா மெய்யப்பன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *