ஜென் ஒரு புரிதல் – பகுதி 35 (நிறைவுப் பகுதி)

This entry is part 3 of 36 in the series 18 மார்ச் 2012

ஜென் பற்றிய புரிதலுக்கான வாசிப்புக்கு இடம் தந்த திண்ணை இணையதளத்தாருக்கு நம் நெஞ்சார்ந்த நன்றிகளுடன் நிறைவுப் பகுதியைத் தொடங்குகிறோம். Daisetz Teitaro Suzuki (1870 – 1966). டி.டி.ஸுஸுகி ஜப்பானில் பேராசிரியராகவும், இலக்கியவாதியாகவும் இயங்கியவர். மேற்கத்திய நாடுகளுக்கு ஜென் பற்றிய புரிதலை எடுத்துச் சென்றோருள் ஆகச் சிறந்தவராக அறியப்படுபவர். இவரது “ஜென் ஒரு அறிமுகம்” என்னும் உரையுடன் நம் வாசிப்பை நிறைவு செய்வது முத்தாய்ப்பாக இருக்கும்.

ஜென் ஒரு மதமா? இல்லை. மதம் எனப் பெருமளவு புரிந்து கொள்ளப் பட்ட வரையறைகளில் ஜென் இல்லை. ஏனெனில் ஜென்னுக்கு வழிபடும் கடவுள் கிடையாது. சடங்குகள் கிடையாது. இறந்தவர் சென்று சேரும் எதிர்காலப் புனித இடம் இல்லை. எல்லாவற்றிற்கும் மேலாக ஜென்னுக்கு பிறரால் நலம் பேணப் பட வேண்டிய, அதன் அழிவின்மையைப் பற்றி ஆழ்ந்த கவலை கொள்ள வேண்டிய ஆன்மா எதுவும் கிடையாது. பழமைவாதமிகுந்த இத்தகைய சுமைகள் எதுவும் ஜென் மீது இல்லை.

ஜென் கோவில்களில் காணப் படும் புத்தர்கள், போதிசத்துவர்கள், தேவர்கள் மற்றும் பல உயிரினங்களின் வடிவங்கள் உலோகததிலோ அல்லது மரத்தினாலோ ஆன வேறு எந்தப் பொருட்களுக்கும் ஒப்பானவை. அவை எனது தோட்டத்திலுள்ள செம்பருத்தி, அரளி அல்லது கல்லாலான விளக்குளைப் போன்றவை. இப்போது பூரணமாய் மலர்ந்துள்ள செம்பருத்தியை நீ விரும்பினால் வணங்கு என்பதே ஜென் சொல்வது. இவ்வாறு செய்வதில் புத்தர்களை வணங்குவது, புனித நீரைத் தெளிப்பது அல்லது கடவுளின் இரவு உணவில் பங்கு பெறுவது இவற்றில் எந்த அளவு மதம் உள்ளதோ அதே அளவு மதம் உள்ளது. ஜென்னின் பார்வையில் உன்னதமானதும் புனிதமானதுமாகக் கருதப்படும் இத்தகைய செயல்கள் செயற்கையானவை. “அப்பழுக்கற்ற யோகிகள் நிர்வாணத்தை அடைவதில்லை. கோட்பாட்டிலிருந்து விலகிய பிட்சுக்கள் நரகத்துக்குப் போவதில்லை” என்று அது துணிச்சலாக பிரகடனம் செய்கிறது. சாதாரண மனங்களுக்கு இது ஒழுக்கமான வாழ்க்கைக்கான பொது விதிக்கு முரணானதாகத் தெரியலாம். ஆனால் இங்கே தான் ஜென்னின் உயிரும் உண்மையும் இருக்கின்றன. ஜென் மனிதனின் ஆன்ம உணர்வாகும். (Zen is the spirit of a man. ) ஜென் உட்தூய்மையையும் நற்தன்மையையும் நம்புகிறது. மேற்சுமத்தப்பட்டதோ அல்லது வன்முறையாகப் பிய்த்து எரியப் பட்டதோ ஆன்மாவின் முழுமையைக் காயப் படுத்துகிறது. எனவே மத அடிப்படையிலான எந்த ஒரு சம்பிரதாயத்திற்கும் ஜென் முற்றிலும் எதிரானது.

“மனிதனின் உள் உறைவதில் பூரணமான நம்பிக்கை வீற்றுள்ளது. ஜென்னில் எந்த ஆட்சிமை (authority) இருந்தாலும் அது எல்லாம் தன்னுள்ளேயிருந்தே வருகிறது.”

ஆகவே ஜென் நம்மை நாய் தான் கடவுள், மூன்று பவுண்டு ஆழி விதை (சணல் விதை) புனிதமானது என்னும் எண்ணத்தின் மீது தியானிக்கச் சொல்லவில்லை. அப்படி ஜென் செய்தால் அது நம்மை ஒரு திட்டவட்டமான தத்துவத்திற்குள் தன்னைப் பிணைத்துக் கொண்டதாக ஆகும் ; அதன் பிறகு ஜென் என்று ஒன்று இருக்காது. ஜென் நெருப்பு சுடுமென்றும் பனிக்கட்டி சில்லிடும் என்றும் உணர்கிறது. உறைபனி சில்லிடும் போது நாம் நெருப்பைத் வரவேற்கிறோம் . ஃபாஸ்ட்* பிரகடனப் படுத்தியதைப் போல இந்த உணர்வு அனைத்துள்ளும் அனைத்தானது ; நமது தத்துவப்படுத்துதல் எல்லாம் யதார்த்தத்தைத் தொடத் தவறி விடுகிறது. ஆனால் “அந்த உணர்வு” இங்கே அதன் ஆகத் தூய அல்லது ஆக ஆழ்வு வடிவில் புரிந்து கொள்ளப் பட வேண்டும். ” இது தான் அவ்வுணர்வு” என்று சொல்லுதல் கூட இனி ஜென் அங்கே இல்லை என்பதாகவே பொருளாகும். ஜென் எல்லா கோட்பாடு – கட்டமத்தலையும் நிராகரிக்கிறது. அதனாலேயே ஜென்னை ஸ்பரிஸித்துப் பற்றிக் கொள்ளுதல் கடினமானது…

{* ஃபாஸ்ட் ( Faust )- ஜெர்மானிய புராதன கதாபாத்திரம். சாத்தானிடம் தன் ஆன்மாவுக்கு பதிலாக அளவற்ற அறிவையும் துய்ப்பையும் பேரம் பேசியவன். Faustian- என்னும் ஆங்கிலப் பிரயோகம் தனது வெற்றிக்காகத் தனது அறவுணர்வை அடமானம் வைக்கும் முயற்சியைக் குறிக்கப் பயன் படுத்தப் படுவது.}

உண்மையென்னவெனில், ஜென் புறவயமான தன்மைகளப் பொறுத்த அளவில் நழுவி விடுகிறது. அதன் ஒரு தரிசனம் கிடைத்தது என நீங்கள் நினைக்கும் போது அது அங்கே இருப்பதில்லை. தள்ளி இருந்து பார்க்கும் போது அணுகக் கூடியதாகத் தெரியும். ஆனால் அருகினாலோ அது முன்னை விடவும் தள்ளியிருப்பதை நீங்கள் காண்பீர்கள். ஆகவே நீங்கள் சில வருடங்கள் அதன் அடிப்படைக் கொள்கைகளைப் புரிந்து கொள்ளச் செலவிடாத பட்சத்தில் அதைப் பற்றிய சுமாரான பிடிமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கக் கூடாது.

“கடவுளை நோக்கி உயரே செல்ல வேண்டுமென்றால் ஒருவர் தன்னுள்ளே ஆழ்ந்து செல்ல வேண்டும்” இது ஹ்யூகோ**வின் சொற்கள். “கடவுளின் ஆழ்ந்த விஷயங்களை நீ தேடிக் கொணர விரும்பினால் நீ உன் அந்தராத்மாவில் தேடு” என்பது “ஸெயின்ட் விக்டாரின் ரிச்சர்ட்”*** கூறியது. அப்படி எல்லா ஆழ்ந்த விஷயங்களையும் தேடி முடிக்கும் தருணத்தில் “அகம்”, “அந்தராத்மா”, கடவுள் என்று ஆழ்ந்து தேடப் படுபவை எதுவுமே இல்லை. ஏனெனில் ஜென் ஒரு ஆழ்வின் விளிம்பு இல்லாத வெளியாகும். சற்று வித்தியாசமான முறையில் ஜென் அறிவிப்பது “முவ்வுலகிலும் எதுவுமே இல்லை. நீ எங்கே பார்க்க விரும்புகிறாய் மனதை (அல்லது ஆத்மா அல்லது ‘ஹ்ஸின்’****)? நான்கு பூதங்களும்***** அவைகளின் அதிநுட்பமான இயல்பில் உள்ளீடற்றவை; புத்தரின் சன்னிதி எங்கே இருக்க இயலும்? – ஆனால் பார்! உண்மை தன்னைத் தானே உன் கண்ணெதிரே துல்லியமாய் கட்டவிழ்த்துக் கொள்கிறது – அதற்குண்டானதெல்லாம் இது தான். வேறேதுமில்லை” . ஒரு நிமிடம் தயங்கினால் ஜென் பிடிக்கவே இயலாத படி காணாமற் போய் விடும். கடந்த, சமகால மற்றும் எதிர்கால புத்தர்கள் எல்லோரும் அதை நீ மீண்டும் ஒரு முறை கைப்பற்ற உனக்கு உதவலாம். ஆனாலும் அது ஆயிரம் மைல்கள் தள்ளியிருக்கும். ‘மனக்கொலை’ – சுயபோதை’ விட்டுத்தள்ளுங்கள்! இத்தகைய விமர்சனங்களைப் பொருட்படுத்த ஜென்னுக்கு நேரமில்லை.

{ஹ்யூகோ**-புகழ் பெற்ற ப்ரென்ச் நாவலாசிரியர் மற்றும் கவி.
“ஸெயின்ட் விக்டாரின் ரிச்சர்ட்”*** – ஸ்காட்லாந்தில் பிறந்து பிரான்ஸில் மதபோதகரான கிறித்துவ மத குரு.
‘ஹ்ஸின்’**** – கி.மு 3 மற்றும் 4ம் நூற்றாண்டில் கன்ஃயூசியஸ் தத்துவ மரபில் மென்ஸியஸ் என்னும் அறிஞரால் சிந்திப்பதும் முடிவெடுக்கும் ஆற்றல் ‘ஹ்ஸின்’ என்று அறியப்பட்டது.

நான்கு பூதங்களும்***** – நிலம் நீர் நெருப்பு காற்று }

விமர்சகர்கள் சொல்ல வருவது இதுதான். ஜென் சுய வசியம் வழி மனத்தை ஸ்மரணையில்லாத நிலைக்குக் கொண்டு சென்று அது வசமானதும் புத்தரின் விருப்பமான கோட்பாடான “சூன்யதம்” *******உணரப்படுகிறது. அந்நிலையில் தன்னையும் ஸ்தூலமான உலகையும் அவன் உணருவதேயில்லை. அவன் ஒரு விரிந்த சூன்யத்திலோ அல்லது எதோ ஒன்றிலோ மறைந்து விடுகிறான். இவ்வாறு விளங்கிக் கொள்வது ஜென்னைச் சரியாக அணுகும் முறையில்லை. இவ்வாறு புரிந்து கொள்வதற்கான சில பதிவுகள் ஜென்னில் இருப்பது உண்மை தான். ஆனால் இந்த இடத்தில் நாம் ஒரு பாய்ச்சல் பாய வேண்டும். “விரிந்த சூன்யம்” தாண்டப் பட வேண்டும். ஆழ்பவர் அவர் உயிரோடு புதை பட விரும்பாத பட்சத்தில் ஸ்மரணையற்ற நிலையினின்று எழுப்பப் பட வேண்டும். சுயபோதையைக் கைவிட்டு சுயத்தின் அதி ஆழத்தில் அந்தக் “குடிகாரன்” விழிக்க வேண்டும். என்றேனும் மனதைக் “கொல்ல” வேண்டுமென்றால் அந்த வேலையை ஜென்னிடம் விட்டு விடுங்கள். ஏனெனில் ஜென் மட்டுமே அந்தக் கொல்லப் பட்டவரை உயிரற்றவரை ஆதியந்தமில்லா வாழ்வு என்னும் நிலையில் மீட்டெடுக்கும். “மறுபிறவி எடு, கனவிலிருந்து விழித்தெழு. சாவிலிருந்து எழுங்கள்! குடிகாரர்களே” என்று அது கூக்குரலிடும். கண்ணைக் கட்டிக் கொண்டு ஜென்னைப் பார்க்க முயலாதீர்கள். உங்கள் கரங்கள் அதைப் பற்ற முடியாத அளவு நடுங்குபவை”. நான் உவமைச் சொற்பெருக்கில் ஈடுபடவில்லை என்பதை நினைவிற் கொள்ளுங்கள்.
(“சூன்யதம்” *******- அதிருப்தி மனமுடைதல் ஆகியவற்றிலிருந்து விடுபட்டு பிரக்ஞையில் நிலைத்தல்)

இதே போல் பன்மடங்கு விமர்சனங்களை அவசியமானால் நான் எடுத்துக் கொள்ள இயலும். ஆனால் மேற்குறிப்பிட்டவை வாசகரின் மனதை, பின் வரும் நேர்மறையான கருத்துக்களுக்கு ஆயத்தமாக்கியிருக்கும் என் நம்புகிறேன். நம் இருப்பின் செயற்பாடுகளுடன் நெருங்குவது- அதுவும் எந்த அளவு சாத்தியமோ அவ்வளவு நேரடியான வழியில் , புறவயமானதும் மேற்சுமத்தலான எதையும் கைகொள்ளாது – நிகழ்த்துவதே ஜென்னின் அடிப்படைக் கருத்தாகும். ஆகவே புறவயமான ஆட்சிமை போன்றது எதையும் ஜென் நிராகரிக்கிறது. ஒரு மனிதனின் அக ஜீவனின் மீது பரிபூரண நம்பிக்கை வைக்கப் படுகிறது. ஜென்னில் எந்த ஆட்சிமை இருந்தாலும் அனைத்தும் உள்ளிருந்தே வருபவை. இது உண்மை என்னும் சொல்லின் ஆகக் கடுமையான பொருளில் சத்தியமானது. ஆய்ந்தரியும் ஆற்றல் கூட இறுதியானதோ முழுமையானதோ என்று கருதப் படவில்லை. மாறாக அது மனம் தன்னுடன் ஆக நேரடியான தொடர்பு கொள்வதற்குத் தடையாய் நிற்கிறது. புத்தி இடைப்பட்டதாக இயங்கும் போது தனது இலக்கை அடைந்து விடுகிறது. ஆனால் ஜென்னுக்கு ஊடகத்துடன் எந்த சம்பந்தமுமில்லை, விதிவிலக்காக மற்றோருடன் தொடர்பு கொள்ளும் சந்தர்ப்பத்தைத் தவிர்த்து. இந்த ஒரே காரணத்தினால் எல்லா மறை நூல்களும் மேம்போக்கானவை அல்லது குத்துமதிப்பானவை. இதுதான் இறுதியானது என்று அறுதியிட்டுக் கூற அவற்றுள் ஏதுமில்லை. வாழ்க்கை எப்படி வாழப் படுகிறதோ அதன் மைய உண்மையை தொடுகை வசமாக்குவதே ஜென்னின் இலக்கு – அதுவும் ஆக நேரடியான வழியில் ஆக வீரியமான முறையில் . ஜென் தன்னை பௌத்தத்தின் ஆன்மாவாகப் பெருமிதம் கொண்டாலும் அது எல்லாத் தத்துவங்களின் மதங்களின் ஆன்ம வடிவாகும். ஜென்னைத் துல்லியமாகப் புரிந்து கொண்ட பின் பூரணமான மனச்சாந்தி கிடைக்கப் பெறுகிறது. ஒரு மனிதன் தான் எப்படி வாழ வேண்டுமோ அப்படி வாழ்கிறான். இதற்கு மேல் நாம் என்ன எதிர்பார்க்க இயலும்?

Series Navigationஇந்தியாவின் வறுமைக்கோடு- கோட்பாட்டு விளக்கமும் ஹர்ஸ் மந்தரின்# கட்டுரையும்ஜி.கிச்சாவின் ‘ மாசி ‘
author

சத்யானந்தன்

Similar Posts

6 Comments

  1. Avatar
    chithra says:

    மதிப்பிற்குரிய சத்யானந்தன் அவர்களுக்கு,
    மிகுந்த நன்றி.
    ஜென்னை பற்றி ஒரு glimpse கிடைக்க உதவியாக இருந்த கட்டுரையின் “நிறைவு பகுதி” என்றதும் ,கண்கள் பனிக்கிறது
    மீண்டும் நன்றி – சித்ரா

  2. Avatar
    Shantha says:

    Thanks for the precious article. Last 2 lines consist of the entire meaning and essence of the Zen Philosophy. Well done !
    Awaiting many more from your pen.

  3. Avatar
    KARTHI says:

    மொழிநடை கொஞ்சம் கடினமாக இருக்கிறது ஆனாலும் அறுமையான படைப்பு

    1. Avatar
      sathyanandhan says:

      Thanks Mr.Karthi. In the earlier part of the series on zen I used give a small introduction to the translated content of a zen master. Later on i started giving the content itself which might have looked hard to follow. Understanding zen may require a dedicated devotion of years as Suzuki puts correctly. All I tried to do was to present the originals without compromising on the richness of the content. Regards. Sathyanandhan

  4. Avatar
    அக்களூர் இரவி says:

    அன்புள்ள சத்யானந்தன்

    மிக கடினமான ஒரு முயற்சி. சிறப்பாக செய்துவிட்டீர்கள்.
    வாழ்த்துகள்.

Leave a Reply to Shantha Cancel reply

Your email address will not be published. Required fields are marked *