ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா
தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா
“மது பானம் மிகத் தேவையான ஒரு குடிபானம். குடியின்றி வசிக்க வலுவற்ற பல கோடி மனிதருக்கு வாழ்வைத் தாங்கிக் கொள்ள அது உதவுகிறது. அதனால் பாராளுமன்றத்தில் பகல் 11 மணிக்குக் குடிபோதை இல்லாத மனிதன் செய்ய முடியாத ஒரு பணியை இரவு 11 மணிக்கு செய்ய முடிகிறது.”
ஜார்ஜ் பெர்னாட் ஷா (Major Barbara)
நாடக ஆசிரியர் பெர்னாட் ஷாவைப் பற்றி :
ஜார்ஜ் பெர்னாட் ஷா அயர்லாந்தின் தலைநகர் டப்ளினில் 1856 ஆம் ஆண்டில் ஜார்ஜ் கார் ஷா & லுஸிண்டா எலிஸபெத் ஷா இருவருக்கும் பிறந்தவர். அவரது அன்னை ஆப்ரா (Opera) இசையரங்குப் பாடகி, வாய்க்குரல் பயிற்சியாளி. தந்தையார் தோல்வியுற்ற வணிகத்துறையாளர். வறுமையி லிருந்து குடும்பத்தை விடுவிக்க முடியாத பெருங் குடிகாரர். இருபது வயதில் பெர்னாட் ஷா அன்னையுடன் லண்டனுக்குச் சென்றார். அங்கே தாயார் இசைத்தொழில் மூலம் ஊதியம் பெற்றுக் குடும்பத்தை நடத்திக் கொண்டு வந்தார். நிரம்ப இலக்கிய நூற் படைப்புகளைப் படித்து வந்த பெர்னாட் ஷா, முதலில் ஐந்து தோல்வி நாடகங்களை எழுதினார். பிறகு நாடக மேடை உலகில் புகுந்து மற்றவர் நாடகங்களைக் கண்டு 1894 இல் “சனிக்கிழமை கருத்திதழில்” (Saturday Review) நாடகங்களைப் பற்றித் திறனாய்வு செய்து எழுதி வந்தார். அப்போது பொதுவுடைமைக் கோட்பாடில் ஈடுபாடு மிகுந்து பிரதம மேடைப் பேச்சாளாராகவும் உரைமொழி ஆற்றினார்.
அவர் எழுதிய சிறப்பான நாடகங்கள்: பிக்மாலியன் (Pygmalion), ஜோன் ஆ•ப் ஆர்க் (Saint Joan), மனிதன் & உன்னத மனிதன் (Man & Superman), ஆப்பிள் வண்டி (The Apple Cart), டாக்டரின் தடுமாற்றம் (The Doctor’s Dilemma), மெதுசேலாவுக்கு மீட்சி (Back to Methuselah), மேஜர் பார்பரா (Major Barbara), கோடீஸ்வரி (Millionairess), இன்பியல் நாடகங்கள் (Plays Pleasant), துன்பியல் நாடகங்கள் (Plays Unpleasant), தூயவருக்கு மூன்று நாடகங்கள் (Three Plays for Puritans), நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House), ஆயுத மனிதன் (ஊழ் விதி மனிதன்) (The Man of Destiny) (1898) போன்றவை. ஐம்பது ஆங்கில நாடகங்கள் எழுதிய பெர்னாட் ஷாவுக்கு 1925 இல் இலக்கிய நோபெல் பரிசு அளிக்கப்பட்டது.
+++++++++++++++++++++
மேஜர் பார்பரா நாடகத்தைப் பற்றி :
இந்த நாடகம் ‘ஏழ்மைக் காப்பணிச் சேவகி’ மேஜர் பார்பரா (Major of Salvation Army) வாழிவில் நேர்ந்த வெற்றி, தோல்வியைப் பற்றியது. அவள் புரிந்த அரிய சமூகத் தொண்டில் இயற்பாடுக்கும், மெய்ப்பாடுக்கும் (Idealism & Realism) இடையே ஏற்பட்ட ஒரு போராட்டத்தைப் பற்றியது. அந்தத் தொண்டுக்கு ஆதரவாக நிதி உதவி செய்யும் அவளது இராணுவ ஆயுத உற்பத்தித் தந்தை ஆன்ரூ அண்டர்ஷா•ப்ட் (Andrew Undershaft) மற்றும் பார்பராவை மணக்கப் போகும் கிரேக்கப் பேராசியர் அடால்•பஸ் குஸின்ஸ் (Adolphus Cusins) ஆகியோருடன் பார்பரா போராடுவதை விளக்குவது. “நமது கொடுமைகளில் கோரமானது, குற்றங்களில் கொடூரமானது மானிட ஏழ்மை. மற்ற தேவை ஒவ்வொன்றையும் நாம் தியாகம் செய்து, நமக்கு முதற் கடமையாக இருக்க வேண்டியது மனிதர் ஏழ்மையை இல்லாமல் நீக்குவதே,” என்று மேஜர் பார்பரா நாடகத்தின் முன்னுரையில் பெர்னாட் ஷா கூறுகிறார். மேஜர் பார்பரா நாடகப் படைப்பின் அழுத்தமான குறிக்கோளும் அதுவே.
வறுமையைப் போக்காது வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் மனித இனம் வெறுக்கத் தக்கது என்று சாடுகிறார் பெர்னாட் ஷா. ஏழ்மை நீக்கப் பாடுபடும் காப்புப் படைச் சேவகி மேஜர் பார்பராவைச் சமூகம் ஆதரிக்க வேண்டுமா அல்லது அவளை ஒதுக்கி விட வேண்டுமா என்று நம்மைக் கேட்கிறார் பெர்னாட் ஷா ! ஆயுத உற்பத்தியில் கோடிக்கணக்கானப் பணச் சேமிப்பையே மதமாகக் கருதும் அவளது தந்தை, ஏழ்மைக் காப்பணிக்கு நிதி உதவி செய்வது நியாயமா அல்லது தவறா என்ற முரணான ஒரு வினாவை எழுப்புகிறது நாடகம் ! போருக்கு ஆயுதங்கள் உற்பத்தி செய்து செல்வம் பெருத்து வலுவாக, பாதுகாப்பாக, நலமாக மனித இனம் ஆடம்பரத்தில் வாழ வேண்டுமா அல்லது அன்பு, மதிப்பு, சத்தியம், நியாயம் என்ற அடிப்படை அறநெறியில் எளிமையாக மனிதர் வாழ வேண்டுமா என்று நாடகக் கதா நாயகர் நம்மை எல்லாம் கேட்கிறார்.
ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Salvation Army Major) மேஜர் பார்பரா, தனக்குத் தெரியாமல் அவளது கிறித்துவக் குழுவினர், இராணுவ ஆயுதங்கள் உற்பத்தி செய்யும் அவளது தந்தையிடமிருந்து நிதிக் கொடை ஏற்றுக் கொண்டதைக் கேட்டுப் பெருங் குழப்பம் அடைகிறாள். ஆரம்பத்தில் ஏழ்மைக் காப்பணி ஆயுத வணிகரிட மிருந்து ஏராளமான நிதியைப் சன்மானமாகப் பெற்றுக் கொள்வது முற்றிலும் தவறென்று பார்பரா கருதுகிறாள். ஆனால் அப்படி நாடக வாசகர் கருத வேண்டுமென்று பெர்னாட் ஷா விரும்பவில்லை ! அவர் முன்னுரையில் அறக் கட்டளையாளர் நிதிக் கொடையைத் தூய சேமிப்பாளர் மூலம்தான் பெற வேண்டும் என்னும் கருத்து நகைப்புக்குள்ளானது என்று தள்ளி விடுகிறார். எந்த வகைச் சேமிப்பாயினும் அற நிலையங்கள் பெற்றுக் கொள்ளும் நிதிக் கொடைகளை மக்கள் நல்வினைகளுக்குப் பயன் படுத்தலாம் என்று பெர்னாட் ஷா ஆதரவு தருகிறார். “பிசாசுவிடமிருந்து கூட நன்கொடையைப் பெற்றுக் கொண்டு கடவுளின் கரங்களில் கொடுக்க வேண்டும்”, என்று ஆலோசனை கூறுகிறார். நாடக முடிவில் வறுமையில் வாடுவோர் கைவசம் நிரம்பப் பணம் இருந்தால் பசி, பட்டினியின்றி நிம்மதியாய் வாழ இயலும் என்று மேஜர் பார்பரா அமைதி அடைகிறாள்.
மிஸ் பார்பரா பீரங்கி உற்பத்திச் செல்வந்தர் ஆன்ரூவுக்குப் பிறந்த ஓர் பூரணப் பண்பியல் புதல்வி (An Idealistic Daughter). சல்வேசன் ஆர்மிக்கு மேஜரான (Major in the Salvation Army) பார்பரா தன் தந்தை போன்ற பண முதலைகளுக்கு எதிராகப் போராடுவதில் தீவிரமாக ஈடுபடுபவள். அவளை வழிபடும் காதல் ரோமியோ அடால்•பஸ் (Adolphus) ஒரு கிரேக்கப் பேராசிரியர். அடால்•பஸின் மோகப் பொழுது போக்கில் பங்கு கொள்ள பார்பராவுக்கு நேரமில்லை, சல்வேசன் ஆர்மி உறுப்பினர் சிலர் அவளது பணக்காரத் தந்தையிடமிருந்து பெருந் தொகையைச் சன்மானமாகப் பெற்றதை அறிந்து பார்பரா அதிர்ச்சி அடைகிறாள்.
சிந்திக்க வைக்கும் முரணான இத்தகைய பிரச்சனைகளே மேஜர் பார்பராவில் புத்துணர்வோடு இன்பியல் நாடகமாக உருவெடுக்கிறது. தீப்பறக்கும் தர்க்க வசனங்கள் இங்குமங்கும் மின்னல்போல் அடிக்கின்றன, பெண்மணி மேஜர் பார்பரா நாடக மேதை ஜார்ஜ் பெர்னாட் ஷா ஆக்கிய உன்னத படைப்புப் தலைவி, உள்ளத்தைத் தொடும் நாயகி என்று ஆங்கில நாடக விமர்சகர் பலர் கூறுகிறார். ஆங்கில நாடக உலகிலே சிந்தனையைத் தூண்டும் சமூகச் சேவகி மேஜர் பார்பரா நாடகப் படைப்பைப் போற்றுபவர் பலர் இருக்கிறார் என்பது தெரிய வருகிறது.
**********************
நாடக உறுப்பினர்:
1. மேஜர் மிஸ். பார்பரா அண்டர்ஷா•ப்ட் (Major Ms. Barbara Undershaft). ஆன்ரூவின் மூத்த மகள்.
2. ஆன்ரூ அண்டர்ஷா•ப்ட் (Andrew Undershaft) : இராணுவ ஆயுத உற்பத்தித் தொழிற்சாலையின் அதிபர்.
3. மேடம் பிரிட்னி அண்டர்ஷா•ப்ட் (Lady Britomart Undershaft) : ஆன்ரூவின் விலக்கப் பட்ட மனைவி (வயது 50)
4. ஸ்டீ•பன் அண்டர்ஷா•ப்ட் (Stephen Undershaft) (வயது 25) ஆன்ரூவின் இளைய மகன்.
5. மிஸ். சாரா அண்டர்ஷா•ப்ட் (Ms. Sara Undershaft) : ஆன்ரூவின் இரண்டாவது மகள்.
6. அடால்•பஸ் குஸின்ஸ் (Adolphus Cusins) : பார்பராவின் காதலன்
7. சார்லஸ் லோமாக்ஸ் (Charles Lomax) (வயது 35) : சாராவின் காதலன்.
8 பணியாள் மாரிஸன் (Bulter Morrison) வயது 45
மற்றும் பலர்.
************************
இடம் : இங்கிலாந்து லண்டன் நகரம். வில்டன் வளைத் தெருவில் உள்ள மேடம் பிரிட்னியின் இல்லம்.
நிகழும் ஆண்டு : ஜனவரி 1906
நேரம் : மாலைப் பொழுது.
அரங்க அமைப்பு : வரவேற்பு அறையில் சோபாக்கள், மேஜை, நாற்காலிகள் காணப் படுகின்றன. மேடம் பிரிட்னி பகட்டான ஆடை அணிந்திருக்கிறாள். மேஜையில் ஏதோ எழுதிக் கொண்டி ருக்கிறாள். மேடம் நவ யுக நாகரீக மேற்குடி மாது. சுவரில் வண்ண எழில் ஓவியங்கள் தொங்குகின்றன. அவளது மகன் ஸ்டீ•பன் கையில் ஒரு நாளிதழோடு குனிந்து நாணமுடன் உள்ளே வருகிறான். சோபாவில் அமர்ந்து நாளிதழைப் புரட்டுகிறான். தாய் தன் கவனத்துக்கு மகனைத் திருப்புகிறாள். அப்போது அழைக்கப் பட்டிருந்த பார்பராவின் தந்தை வரவேற்பு அறையில் நுழைகிறார்.
++++++++++++++++++++
ஏழ்மைக் காப்பணிச் சேவகி
(மேஜர் பார்பரா)
அங்கம் -1 பாகம் -7
(முதலாம் அங்கம்)
மேடம் பிரிட்னி: (வரவேற்பறையில் எதிர்சென்று புன்னகையுடன் ஆன்ருவை வரவேற்று) குட் ஈவினிங் ஆன்ரூ ! நீங்கள் வந்தது எனக்கு மகிழ்ச்சி ஊட்டுது !
ஆன்ரு அண்டர்ஷா•ப்டு: (புன்முறுவலோடு) நலமோடு இருக்கிறாயா ?
மேடம் பிரிட்னி: உங்களுக்கு வயது முதிர்ச்சி தெரிகிறது !
ஆன்ரூ: ஆமாம் ! நான் வயதானவன்தான் ! அதில் ஐயமில்லை ! ஆனால் காலம் உன்னைக் கவர்ச்சியோடு கறைப்படுத்தாமல் இன்னும் வைத்துள்ளது !
மேடம் பிரிட்னி: (சற்று வெறுப்புடன்) போதும், பொய் சொல்ல வேண்டாம் ! (திரும்பிப் பார்த்து) ஆன்ரூ ! இதோ பாருங்கள் உன் குடும்பத்தாரை !
ஆன்ரூ: (பெரு வியப்புடன்) இத்தனை பெரியதா என் குடும்பம் ? என் நினைவுகள் சில எப்படியோ மறந்து போயின ! அழிந்து போயின ! (சார்லசுக்குக் கை கொடுக்கிறார்)
சார்லஸ்: (இளித்துக் கொண்டு) நீங்கள் எப்படி இருக்கிறீர் ?
ஆன்ரூ: (சார்லஸைப் பார்த்து) உன்னைப் பார்த்தால் மூத்தவன் போல் தெரியுது ! எப்படி இருக்கிறாய் என் மகனே ?
சார்லஸ்: (தயங்கிக் கொண்டு) இல்லை ! உங்களுக்குத் தெரியாதா ? நான் உங்கள் மகன் இல்லை.
மேடம் பிரிட்னி: (சற்று சினமுடன்) என்ன ? உமக்குத் தெரியாதா எத்தனை பிள்ளைகள் நமக்கென்று ?
ஆன்ரூ: (தயக்கமோடு பின்வாங்கி) எனக்குச் சரியாகத் தெரியாது ! நான் தவறிப் போய் தெரியாமல் தப்பு செய்கிறேன் ! தவறை நான் ஏற்றுக் கொள்கிறேன். எனக்கொரு மகன் என்பது நினைவு ! ஆனால் ஆண்டுகள் கடந்து பற்பல நிகழ்ச்சிகள் நடந்து விட்டன !
மேடம் பிரிட்னி: (சற்று அழுத்தமாக) தாறுமாறாய்ப் பேசாதீர்கள் ! ஆம் உமக்கொரு மகன்தான் !
ஆன்ரூ: கண்மணி ! நீ எனக்கு அவனை அறிமுகப்படுத்து !
மேடம் பிரிட்னி: (சார்லஸைப் பார்த்து) இது சார்லஸ் லோமாக்ஸ் ! சாராவை மணக்க போகிற மாப்பிள்ளைப் பையன் !
ஆன்ரூ: மன்னிக்க வேண்டும் வாலிபரே ! தெரியாமல் செய்த தவறு !
சார்லஸ்: அதனால் என்ன ? வருத்த மில்லை எனக்கு ! மகிழ்ச்சியே !
மேடம் பிரிட்னி: (மகனைக் காட்டி) இதுதான் ஸ்டீ•பன் !
ஆன்ரூ: உன் நட்பு கிடைத்ததற்கு மகிழ்ச்சி அடைகிறேன் மிஸ்டர் ஸ்டீ•பன் ! (திரும்பி அடால்•பஸைப் பார்த்து) நீ என் மகன் இல்லையா ? எப்படி இருக்கிறாய் ? சிறுவனாக நீ இருந்த போது உன்னைப் பார்த்தது ! (மேடம் பிரிட்னியைப் பார்த்து) கண்மணி ! அச்சில் வார்த்தாற் போல் இவன் உன்னை ஒத்திருக்கிறான் !
அடால்•பஸ்: மிஸ்டர் அண்டர்ஷாப்டு ! என் பெயர் அடால்•பஸ் குஸின்ஸ் ! நான் பார்பராவை மணக்கப் போகும் மாப்பிள்ளை ! இது மேஜர் பார்பரா ! சல்வேசன் ஆர்மியைச் சேர்ந்தவள் ! இதுதான் சாரா ! உங்கள் இரண்டாம் புதல்வி ! அதோ அங்கு நிற்பவர்தான் உங்கள் மகன் ஸ்டீ•பன் !
ஆன்ரூ: (வருத்தமுடன்) மன்னிக்க வேண்டும் ஸ்டீ•பன் ! யார் யாரென்று தெரியாமல் முதன்முதல் தடுமாறுகிறேன், ஒரே குழப்பம் எனக்கு ! எல்லாரும் மன்னிப்பீரா என்னை ? பார்பரா ! என் கண்மணி !
சாரா: நான் சாரா தந்தையே ! அதோ அவள்தான் என் சகோதரி பார்பரா ! சல்வேசன் ஆர்மியைச் சேர்ந்த பார்பரா !
ஆன்ரூ: (பார்பரா கையைக் குலுக்கி) ஹலோ பார்பரா ! இப்போது நான் தப்பாக அழைக்க வில்லை அல்லவா ?
பார்பரா: சரியாகச் சொன்னீர்கள் அப்பா ! நான்தான் பார்பரா ! உங்கள் மூத்த புதல்வி !
மேடம் பிரிட்னி: எல்லாரும் அமருங்கள். ஆன்ரூ ! இதில் உட்காருங்கள்.
ஆன்ரூ: நன்றி என்னருமைக் கண்மணி !
சார்லஸ்: இத்தனை நேரம் ஆகியிருக்கிறது யார் யாரென்று நீங்கள் அறிந்து கொள்வதற்கு !
ஆன்ரூ: என்னைத் திக்குமுக்காடச் செய்தது அவை அல்ல சார்லஸ் ! நான் ஒரு தந்தையாக என்னைக் காட்ட வேண்டும் என்றால் எல்லோருக்கும் அன்னியனாக ஆகி விடுகிறேன் ! நானோர் அன்னியனாக காட்ட முயன்றால் கடுமையான தந்தை ஆகிறேன் !
மேடம் பிரிட்னி: எந்த நடிப்பும் உமக்கு வேண்டாம் ஆன்ரூ ! உண்மையாக, இயல்பாக நடந்து கொள்வீரா ? அதுதான் நான் வேண்டுவது !
ஆன்ரூ: அப்படியே நடக்கிறேன் கண்மணி ! என் பிள்ளைகள் முன் பல்லாண்டுக்குப் பிறகு தந்தையாக வந்து நிற்கிறேன் இன்று ! சொல்லுங்கள், நான் என்ன செய்ய வேண்டும் உமக்கெல்லாம் ?
மேடம் பிரிட்னி: ஒன்றும் நீங்கள் செய்ய வேண்டாம் ஆன்ரூ ! இந்தக் குடும்பத்தில் ஒருவர் நீங்கள் ! எல்லோரையும் இன்று சந்தித்து இருக்கிறீர் ! உங்கள் மக்களைப் பற்றித் தெரிந்து கொள்வீர் ! அவர் மணக்கப் போகும் புதிய வாலிபரைப் பற்றி அறிந்து கொள்வீர் ! இது உங்கள் புதுக் குடும்பம் ! நீ கவனித்து வளர வைக்க வேண்டிய குடும்பம் !
சார்லஸ்: (கலகலவெனச் சிரித்து) மன்னிக்க வேண்டும் மேடம் பிரிட்னி ! சிரிப்பை என்னால் அடக்க முடியாது !
மேடம் பிரிட்னி: (கோபமாக) சார்லஸ் ! வாயை மூடிக் கொண்டு உன்னால் இருக்க முடிய வில்லை யானால் வரவேற்பு அறையை விட்டு வெளியே செல் !
பார்பரா: சிரிப்பது வயிற்றுக்கு நல்லது சார்லஸ் ! சிரியப்பா சிரி ! வயிறு குலுங்கச் சிரி !
மேடம் பிரிட்னி: பார்பாரா ! நீ உயர்ந்த பெண்ணாகப் படித்தவள் ! அதை உன் தந்தைக்குக் காட்டு ! தெருப் பெண்போல் இழிவாக நடக்காதே !
ஆன்ரூ: இதைப் பொருட் படுத்த வேண்டாம் ! நான் ஒன்றும் உயர்ந்த கோமகன் இல்லை ! எனக்கு ஒருவிதப் படிப்பும் கிடையாது ! சாதாரண மனிதன் நான்.
சார்லஸ்: அப்படியா ? ஒருவருக்கும் அது தெரியாலே இருக்கட்டும் ! உங்களைப் பார்த்தால் எனக்கு அப்படித் தெரியவில்லை !
(தொடரும்)
***********************
தகவல் :
Based on The Play : Major Barbara By : George Bernard Shaw, – Penquin Books (Editorial Supervision of Biographer : Dan. H. Laurence) (1960)
(a) The Portable Bernard Shaw By : Stanley Weintraub (1977)
(b) Writers & Critics – Shaw By A. M. Gibbs (1969)
(c) The Oxford Dictionary of Quotations (New Edition) (1992)
(d) DVD Video Classics – Bernard Shaw’s Major Barbara Released in August 2007 (2 Hours)
(e) Major Critical Essays By : Bernard Shaw Penguin Classics (1986)
********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (June 29, 2011)
http://jayabarathan.wordpress.com/
- இன்னும் புத்தர்சிலையாய்…
- குரூர மனச் சிந்தனையாளர்கள்
- கசங்கும் காலம்
- இந்திய வர்த்தகம் – குறியா, குறி தவறியதா?
- முன்பொரு காலத்தில் ஒரு மன்னன் இருந்தான்
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரு கதைகளுக்கு இடையே (கவிதை -40 பாகம் -1)
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஞானத்தைப் பற்றி (கவிதை -45 பாகம் -3)
- யுவன்-ன் “ஆரவாரக் கானகம்”
- ஆமைகள் ஏன் தற்கொலை செய்து கொள்வதில்லை?
- பாராட்டுவதற்கு ஏதுமற்றவரா கருணாநிதி?
- ஆன்மாவின் உடைகள்..:_
- எனது இலக்கிய அனுபவங்கள் – 5 விமர்சனமும் எதிர் வினையும்
- பழமொழிகளில் ஆசை
- கவிதைகள் : சு கிரிஜா சுப்ரமணியன்
- தளம் மாறிய மூட நம்பிக்கை!
- காமராஜ்: கருப்பு காந்தியின் வெள்ளை வாழ்க்கை புத்தக விமர்சனம்
- பாதல் சர்க்காரும் தமிழ் அரங்க சூழலும்
- கிருஷ்ணகிரியில் கணினி மற்றும் இணையக்கருத்தரங்கு
- திருமகள் இன்னும் விடுதலைப் புலி சந்தேக நபர்
- பருவமெய்திய பின்
- வினாடி இன்பம்
- தன் இயக்கங்களின் வரவேற்பு
- சாபங்களைச் சுமப்பவன்
- சிறுகவிதைகள்
- கடன் அன்பை வளர்க்கும்
- தமிழ் படுத்துதல்
- கொ.மா.கோ.இளங்கோ கவிதைகள்
- செய்யும் தொழிலே தெய்வம்
- தி ஜானகிராமனின் அம்மா வந்தாள்
- ஆட்டுவிக்கும் மனம்
- பறவைகளை வரைந்து பார்த்த ஒரு கார்ட்டூன் சித்திரக்காரன்
- ஒரு வர்க்கத்தின் நிதர்சன சூடுகள்
- மூன்றாமவர்
- கறை
- குழந்தைப் பாட்டு
- மனபிறழ்வு
- நிர்பந்தங்களின் தீப்பந்தங்களால்….
- தடாகம்’ கலை- இலக்கிய வட்டத்தின் அகஸ்தியர் விருது.
- மௌனத்தின் முகம்
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 7
- விருது பெற்ற எழுத்தாளர்களுக்கு கனடா எழுத்தாளர் இணையத்தின் பாராட்டு
- பல நேரங்களில் பல மனிதர்கள்
- குயவனின் மண் பாண்டம்
- எம். ரிஷான் ஷெரீபின் `வீழ்தலின் நிழல்’ பற்றிய குறிப்பு
- மரணித்தல் வரம்
- இணைய வர்த்தகமும் மருந்து பொருட்கள் விற்பனையும்
- பிம்பத்தின் மீதான ரசனை.:-
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 41
- நினைவு நதியில் ஒரு உயிரின் மிச்சம் !
- திண்ணைப் பேச்சு – கனிமொழி, சின்னக் குத்தூசி பற்றி ஜெயமோகன் பற்றி பி கே சிவகுமார் பற்றி ஸிந்துஜா
- அணுமின் நிலையங்களின் எதிர்கால இயக்கம் பற்றி உலக நாடுகளின் தீர்மானங்கள் !