
தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா
“என் பீரங்கி வெடி மருந்து எதிரிகளைக் கொல்வது ! ஏராளமாய்க் கொல்வது ! அது என் நெறிப்பாடு ! ஆயிரம் ஆயிரம் பேரைக் கொல்லாமல் போர் ஏது ? உலகில் சமாதானம் ஏது ? எமது போர் நெறியே எமக்கு வணிக நெறி ! ஒரு பீரங்கி வெடி நூறு பேரைக் கொன்றால், வெடி மருந்து நல்முறையில் செலவாகியுள்ளது என்று பெருமை அடைபவன் நான்.”
ஜார்ஜ் பெர்னாட் ஷா (Andrews in Major Babara)
“என்னே பரிதாபம், நாமெல்லாம் வாழ்க்கையில் பாடங்கள் கற்கும் சமயத்தில் அவை தேவைப் படாத ஒரு சூழ்நிலையில் இருக்கிறோம் !”
ஆஸ்கர் வைல்டு (Oscar Wilde in Lady Windermere’s Fan)
“தகுதியற்ற பெரும்பான்மை மாந்தரால் சிறுபான்மை லஞ்ச மனிதரைப் பதவிக்கு நிறுவிடத் தேர்தலைப் பயன்படுத்திக் கொள்கிறது குடியரசு.”
ஜார்ஜ் பெர்னாட் ஷா (Man & Superman)
நாடக ஆசிரியர் பெர்னாட் ஷாவைப் பற்றி :
ஜார்ஜ் பெர்னாட் ஷா அயர்லாந்தின் தலைநகர் டப்ளினில் 1856 ஆம் ஆண்டில் ஜார்ஜ் கார் ஷா & லுஸிண்டா எலிஸபெத் ஷா இருவருக்கும் பிறந்தவர். அவரது அன்னை ஆப்ரா (Opera) இசையரங்குப் பாடகி, வாய்க்குரல் பயிற்சியாளி. தந்தையார் தோல்வியுற்ற வணிகத்துறையாளர். வறுமையி லிருந்து குடும்பத்தை விடுவிக்க முடியாத பெருங் குடிகாரர். இருபது வயதில் பெர்னாட் ஷா அன்னையுடன் லண்டனுக்குச் சென்றார். அங்கே தாயார் இசைத்தொழில் மூலம் ஊதியம் பெற்றுக் குடும்பத்தை நடத்திக் கொண்டு வந்தார். நிரம்ப இலக்கிய நூற் படைப்புகளைப் படித்து வந்த பெர்னாட் ஷா, முதலில் ஐந்து தோல்வி நாடகங்களை எழுதினார். பிறகு நாடக மேடை உலகில் புகுந்து மற்றவர் நாடகங்களைக் கண்டு 1894 இல் “சனிக்கிழமை கருத்திதழில்” (Saturday Review) நாடகங்களைப் பற்றித் திறனாய்வு செய்து எழுதி வந்தார். அப்போது பொதுவுடைமைக் கோட்பாடில் ஈடுபாடு மிகுந்து பிரதம மேடைப் பேச்சாளாராகவும் உரைமொழி ஆற்றினார்.
அவர் எழுதிய சிறப்பான நாடகங்கள்: பிக்மாலியன் (Pygmalion), ஜோன் ஆ•ப் ஆர்க் (Saint Joan), மனிதன் & உன்னத மனிதன் (Man & Superman), ஆப்பிள் வண்டி (The Apple Cart), டாக்டரின் தடுமாற்றம் (The Doctor’s Dilemma), மெதுசேலாவுக்கு மீட்சி (Back to Methuselah), மேஜர் பார்பரா (Major Barbara), கோடீஸ்வரி (Millionairess), இன்பியல் நாடகங்கள் (Plays Pleasant), துன்பியல் நாடகங்கள் (Plays Unpleasant), தூயவருக்கு மூன்று நாடகங்கள் (Three Plays for Puritans), நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House), ஆயுத மனிதன் (ஊழ் விதி மனிதன்) (The Man of Destiny) (1898) போன்றவை. ஐம்பது ஆங்கில நாடகங்கள் எழுதிய பெர்னாட் ஷாவுக்கு 1925 இல் இலக்கிய நோபெல் பரிசு அளிக்கப்பட்டது.
+++++++++++++++++++++
மேஜர் பார்பரா நாடகத்தைப் பற்றி :
இந்த நாடகம் ‘ஏழ்மைக் காப்பணிச் சேவகி’ மேஜர் பார்பரா (Major of Salvation Army) வாழிவில் நேர்ந்த வெற்றி, தோல்வியைப் பற்றியது. அவள் புரிந்த அரிய சமூகத் தொண்டில் இயற்பாடுக்கும், மெய்ப்பாடுக்கும் (Idealism & Realism) இடையே ஏற்பட்ட ஒரு போராட்டத்தைப் பற்றியது. அந்தத் தொண்டுக்கு ஆதரவாக நிதி உதவி செய்யும் அவளது இராணுவ ஆயுத உற்பத்தித் தந்தை ஆன்ரூ அண்டர்ஷா•ப்ட் (Andrew Undershaft) மற்றும் பார்பராவை மணக்கப் போகும் கிரேக்கப் பேராசியர் அடால்•பஸ் குஸின்ஸ் (Adolphus Cusins) ஆகியோருடன் பார்பரா போராடுவதை விளக்குவது. “நமது கொடுமைகளில் கோரமானது, குற்றங்களில் கொடூரமானது மானிட ஏழ்மை. மற்ற தேவை ஒவ்வொன்றையும் நாம் தியாகம் செய்து, நமக்கு முதற் கடமையாக இருக்க வேண்டியது மனிதர் ஏழ்மையை இல்லாமல் நீக்குவதே,” என்று மேஜர் பார்பரா நாடகத்தின் முன்னுரையில் பெர்னாட் ஷா கூறுகிறார். மேஜர் பார்பரா நாடகப் படைப்பின் அழுத்தமான குறிக்கோளும் அதுவே.
வறுமையைப் போக்காது வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் மனித இனம் வெறுக்கத் தக்கது என்று சாடுகிறார் பெர்னாட் ஷா. ஏழ்மை நீக்கப் பாடுபடும் காப்புப் படைச் சேவகி மேஜர் பார்பராவைச் சமூகம் ஆதரிக்க வேண்டுமா அல்லது அவளை ஒதுக்கி விட வேண்டுமா என்று நம்மைக் கேட்கிறார் பெர்னாட் ஷா ! ஆயுத உற்பத்தியில் கோடிக்கணக்கானப் பணச் சேமிப்பையே மதமாகக் கருதும் அவளது தந்தை, ஏழ்மைக் காப்பணிக்கு நிதி உதவி செய்வது நியாயமா அல்லது தவறா என்ற முரணான ஒரு வினாவை எழுப்புகிறது நாடகம் ! போருக்கு ஆயுதங்கள் உற்பத்தி செய்து செல்வம் பெருத்து வலுவாக, பாதுகாப்பாக, நலமாக மனித இனம் ஆடம்பரத்தில் வாழ வேண்டுமா அல்லது அன்பு, மதிப்பு, சத்தியம், நியாயம் என்ற அடிப்படை அறநெறியில் எளிமையாக மனிதர் வாழ வேண்டுமா என்று நாடகக் கதா நாயகர் நம்மை எல்லாம் கேட்கிறார்.
ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Salvation Army Major) மேஜர் பார்பரா, தனக்குத் தெரியாமல் அவளது கிறித்துவக் குழுவினர், இராணுவ ஆயுதங்கள் உற்பத்தி செய்யும் அவளது தந்தையிடமிருந்து நிதிக் கொடை ஏற்றுக் கொண்டதைக் கேட்டுப் பெருங் குழப்பம் அடைகிறாள். ஆரம்பத்தில் ஏழ்மைக் காப்பணி ஆயுத வணிகரிட மிருந்து ஏராளமான நிதியைப் சன்மானமாகப் பெற்றுக் கொள்வது முற்றிலும் தவறென்று பார்பரா கருதுகிறாள். ஆனால் அப்படி நாடக வாசகர் கருத வேண்டுமென்று பெர்னாட் ஷா விரும்பவில்லை ! அவர் முன்னுரையில் அறக் கட்டளையாளர் நிதிக் கொடையைத் தூய சேமிப்பாளர் மூலம்தான் பெற வேண்டும் என்னும் கருத்து நகைப்புக்குள்ளானது என்று தள்ளி விடுகிறார். எந்த வகைச் சேமிப்பாயினும் அற நிலையங்கள் பெற்றுக் கொள்ளும் நிதிக் கொடைகளை மக்கள் நல்வினைகளுக்குப் பயன் படுத்தலாம் என்று பெர்னாட் ஷா ஆதரவு தருகிறார். “பிசாசுவிடமிருந்து கூட நன்கொடையைப் பெற்றுக் கொண்டு கடவுளின் கரங்களில் கொடுக்க வேண்டும்”, என்று ஆலோசனை கூறுகிறார். நாடக முடிவில் வறுமையில் வாடுவோர் கைவசம் நிரம்பப் பணம் இருந்தால் பசி, பட்டினியின்றி நிம்மதியாய் வாழ இயலும் என்று மேஜர் பார்பரா அமைதி அடைகிறாள்.
மிஸ் பார்பரா பீரங்கி உற்பத்திச் செல்வந்தர் ஆன்ரூவுக்குப் பிறந்த ஓர் பூரணப் பண்பியல் புதல்வி (An Idealistic Daughter). சல்வேசன் ஆர்மிக்கு மேஜரான (Major in the Salvation Army) பார்பரா தன் தந்தை போன்ற பண முதலைகளுக்கு எதிராகப் போராடுவதில் தீவிரமாக ஈடுபடுபவள். அவளை வழிபடும் காதல் ரோமியோ அடால்•பஸ் (Adolphus) ஒரு கிரேக்கப் பேராசிரியர். அடால்•பஸின் மோகப் பொழுது போக்கில் பங்கு கொள்ள பார்பராவுக்கு நேர மில்லை, சல்வேசன் ஆர்மி உறுப்பினர் சிலர் அவளது பணக்காரத் தந்தையிடமிருந்து பெருந் தொகையைச் சன்மானமாகப் பெற்றதை அறிந்து பார்பரா அதிர்ச்சி அடைகிறாள்.
சிந்திக்க வைக்கும் முரணான இத்தகைய பிரச்சனைகளே மேஜர் பார்பராவில் புத்துணர்வோடு இன்பியல் நாடகமாக உருவெடுக்கிறது. தீப்பறக்கும் தர்க்க வசனங்கள் இங்குமங்கும் மின்னல்போல் அடிக்கின்றன, பெண்மணி மேஜர் பார்பரா நாடக மேதை ஜார்ஜ் பெர்னாட் ஷா ஆக்கிய உன்னத படைப்புப் தலைவி, உள்ளத்தைத் தொடும் நாயகி என்று ஆங்கில நாடக விமர்சகர் பலர் கூறுகிறார். ஆங்கில நாடக உலகிலே சிந்தனையைத் தூண்டும் சமூகச் சேவகி மேஜர் பார்பரா நாடகப் படைப்பைப் போற்றுபவர் பலர் இருக்கிறார் என்பது தெரிய வருகிறது.
**********************
நாடக உறுப்பினர்:
1. மேஜர் மிஸ். பார்பரா அண்டர்ஷா•ப்ட் (Major Ms. Barbara Undershaft). ஆன்ரூவின் மூத்த மகள்.
2. ஆன்ரூ அண்டர்ஷா•ப்ட் (Andrew Undershaft) : இராணுவ ஆயுத உற்பத்தித் தொழிற்சாலையின் அதிபர்.
3. மேடம் பிரிட்னி அண்டர்ஷா•ப்ட் (Lady Britomart Undershaft) : ஆன்ரூவின் விலக்கப் பட்ட மனைவி (வயது 50)
4. ஸ்டீ•பன் அண்டர்ஷா•ப்ட் (Stephen Undershaft) (வயது 25) ஆன்ரூவின் இளைய மகன்.
5. மிஸ். சாரா அண்டர்ஷா•ப்ட் (Ms. Sara Undershaft) : ஆன்ரூவின் இரண்டாவது மகள்.
6. அடால்•பஸ் குஸின்ஸ் (Adolphus Cusins) : பார்பராவின் காதலன்
7. சார்லஸ் லோமாக்ஸ் (Charles Lomax) (வயது 35) : சாராவின் காதலன்.
8 பணியாள் மாரிஸன் (Bulter Morrison) வயது 45
மற்றும் பலர்.
************************
இடம் : இங்கிலாந்து லண்டன் நகரம். வில்டன் வளைத் தெருவில் உள்ள மேடம் பிரிட்னியின் இல்லம்.
நிகழும் ஆண்டு : ஜனவரி 1906
நேரம் : மாலைப் பொழுது.
அரங்க அமைப்பு : வரவேற்பு அறையில் சோபாக்கள், மேஜை, நாற்காலிகள் காணப் படுகின்றன. மேடம் பிரிட்னி பகட்டான ஆடை அணிந்திருக்கிறாள். மேஜையில் ஏதோ எழுதிக் கொண்டி ருக்கிறாள். மேடம் நவ யுக நாகரீக மேற்குடி மாது. சுவரில் வண்ண எழில் ஓவியங்கள் தொங்குகின்றன. அவளது மகன் ஸ்டீ•பன் கையில் ஒரு நாளிதழோடு குனிந்து நாணமுடன் உள்ளே வருகிறான். சோபாவில் அமர்ந்து நாளிதழைப் புரட்டுகிறான். தாய் தன் கவனத்துக்கு மகனைத் திருப்புகிறாள். அப்போது அழைக்கப் பட்டிருந்த பார்பராவின் தந்தை வரவேற்பு அறையில் நுழைகிறார்.
++++++++++++++++++++
ஏழ்மைக் காப்பணிச் சேவகி
(மேஜர் பார்பரா)
அங்கம் -1 பாகம் -9
(முதலாம் அங்கம்)
ஆன்ரூ: சார்லஸ் ! சிறிய வயதில் நான் பட்ட துன்பத்தை நீ அறிய மாட்டாய் ! எனது செல்வந்தக் கோபுரம் பல்லாண்டு காலம் நான் வடித்த கண்ணீரில் கட்டப் பட்டது ! உனக்கு அது கேலியாகத் தெரிவதில் வியப்பில்லை.
சார்லஸ்: மிஸ்டர் அண்டர்ஷா•ப்டு ! உம்மை நான் தனிப்பட்ட முறையில் தாக்க வில்லை.
ஆன்ரூ: அப்படித் தாக்குவது உனக்கு நியாயமாகத் தெரியலாம் ! கவலைப் படவில்லை நானதற்கு ! போரில் பிறர் உயிரைப் பறிப்பதிலும், கை கால்களை முறிப்பதிலும் பணம் சம்பாதிப்பவன் நான் என்பது பலருக்கும் தெரிந்ததே ! குறிப்பாகச் சொல்லப் போனால் இன்று எங்கள் ஆயுதத் தொழிற்சாலையில் புதியதாய் நாங்கள் தயாரித்த துப்பாக்கியில் 30 போலிப் படையாளிகளைச் சுட்டுத் தள்ள முடிந்தது. இதற்கு முன் அது 15 போலிகளைத்தான் தூளாக்கியது !
சார்லஸ்: அது சரியில்லையே ! அதிகப் படைகளைக் கொன்றால் சீக்கிரம் யுத்தம் முடிந்து விடுமல்லவா ? போரை நீடிப்பதுதான் உமக்கு வருமானத்தை மிகையாக்கும் !
ஆன்ரூ: அப்படி இல்லை எனது குறிக்கோள். யுத்தம் கடுமையாகிப் பலர் ஒரு நொடியில் மடிவது எமக்குப் பேருவகை ஊட்டுவது ! எமது ஆயுத உக்கிரம் ஆதாயமாகத் தெரியலாம் உமக்கு ! நான் அதற்கு நாணம் அடையவில்லை ! அவமதிக்கப் படுவதையும் நான் ஏற்க மாட்டேன் ! என் பீரங்கி வெடி மருந்து எதிரிகளைக் கொல்வது ! ஏராளமாய்க் கொல்வது ! அது என் நெறிப்பாடு ! ஆயிரம் ஆயிரம் பேரைக் கொல்லாமல் போர் ஏது ? உலகில் சமாதானம் ஏது ? எமது போர் நெறியே எமக்கு வணிக நெறி ! ஒரு பீரங்கி வெடி நூறு பேரைக் கொன்றால், வெடி மருந்து நல்முறையில் செலவாகியுள்ளது என்று பெருமை அடைபவன் நான் ! சிலர் கல்விக் கூடங்கள், மருத்துவ மனைகள், ஆலயங்கள் கட்டத் தமது பணத்தைச் செலவழிப்பார். என்னுடைய ஆய்வுகள், சோதனைகள் உயிரினத்தை அழிக்கவும், மாட மாளிகைகளைத் தகர்க்கவும், ஆயுதச் சாதனங்களைச் சீராக்கவும், மேலாக்கவும் பயன்படும் ! இதுவரை நான் அவற்றைச் செய்து வந்திருக்கிறேன் ! இனியும் அவற்றைத் தொடர்வேன் ! ஆதலால் உமது கிறித்துவ வாழ்த்துக்கள் ‘பூலோகத்தில் அமைதி’ போன்ற வேண்டுகோள் எனக்கு அர்த்தம் அளிக்காது ! உங்கள் போதனையான ‘தீயவரைத் தாக்காதே, அடுத்த கன்னத்தைக் காட்டு’ போன்ற அறிவுரை எனக்கு நட்டத்தையும் இழப்பையும் தரும் ! எனது நீதி, நெறி, நியாயம் எல்லாம் ஆயுத உற்பத்தி ! பீரங்கி உற்பத்தி ! கடலடிக் கணை உற்பத்தி, வெடி மருந்து சேமிப்பு ! இவற்றை உலகுக்குத் தயார் செய்வதுதான் என் மதப்பணி ! மதநெறி ! எனது ஒரே குறிக்கோள் !
ஸ்டீ•பன்: (சற்று வெறுப்பாக) நீங்கள் சொல்வதைப் பார்த்தால் தேர்ந்தெடுக்க ஏதோ அரை டஜன் நெறிப்பாடுகளும், மதப்பாடுகளும் இருப்பதாகத் தெரிகின்றன ! மனித நெறிப்பாடு ஒன்றைத் தவிர பல்வேறில்லை !
ஆன்ரூ: எனக்கென ஒரு நெறிப்பாடுதான் உள்ளது உண்மையாக ! ஆனால் அது உனக்கு ஏற்றதாக இல்லாமல் இருக்கலாம் ! காரணம் என்னைப் போல் நீ ஆகாயப் போர்க்கப்பல் தயாரிப்பவன் இல்லை ! ஒவ்வோர் மனிதனுக்கும் ஒரு நெறிப்பாடுதான் உள்ளது. ஆனால் ஒவ்வோர் மனிதனும் வெவ்வேறு நெறிப்பாடைப் பின்பற்றுவான்.
ஸ்டீ•பன்: அதாவது சிலர் நேர்மையாக இருப்பார் ! சிலர் அயோக்கியராக இருப்பார் என்று சொல்கிறீர் இல்லையா ?
பார்பரா: (சட்டென) அயோக்கியர் என்று எவரையும் முத்திரை அடிப்பது சரியில்லை !
ஆன்ரூ: அப்படியா ? நல்லவர் என்று யாரும் உள்ளாரா நாட்டில் ?
பார்பரா: இல்லை ! இல்லவே இல்லை ! நல்லவர் என்போரும் இல்லை; பொல்லாதவர் என்போரும் இல்லை. எல்லோரும் ஒரு பிதாவின் பிள்ளைகள்தான் ! ஒருவர் மீது ஒருவர் பழிசுமத்தாமல் இருப்பதே மேலானது. நீங்கள் சொல்ல வேண்டாம். நான் அறிவேன் அவரை எல்லாம் ! என் மனத்தில் ஓர் எண்ணிக்கை உள்ளது எத்தனை பேரென்று ! கள்ளர், கபடர், கயவர், காதகர், வஞ்சகர், மூர்க்கர், மதக்குரு, போதகர், ஊராண்மை உறுப்பினர், ஊழியர் போன்று பலரை நான் அறிவேன். அவரெல்லாம் ஒரே மாதிரிப் பாபத்தைச் செய்பவர். அவர் அனைவருக்கும் ஒரே மாதிரிப் பாபத் தீர்வுதான் (Salvation) எங்களிடம் உள்ளது !
ஆன்ரூ: பார்பரா ! நான் ஒன்று கேட்கலாமா ? ஆயுத உற்பத்திச் சீமானுக்குப் பாப விமோட்சனம் உள்ளதா ?
பார்பரா: இருப்பதாகத் தெரிய வில்லை ! ஆனால் நான் முயற்சி செய்ய அனுமதிப்பீரா ?
ஆன்ரூ: சரி ! நாமின்று ஓர் உடன்படிக்கை செய்து கொள்வோம் ! நாளைக்கு நான் உங்கள் ஏழ்மைக் காப்பணிக் கூடத்தைப் பார்வை இட வந்தால், நீ அதற்கு அடுத்த நாள் எனது பீரங்கித் தொழிற் சாலையைக் காண வருவாயா ?
பார்பரா: நல்ல ஒப்பந்தம் தான் ! ஆனால் சற்று கவனம் வேண்டும் தந்தையே ! எங்கள் ஏழ்மைக் காப்பணிக்காக நீங்கள் உமது ஆயுதச் தொழிற்சாலையைக் கைவிடும் நிர்ப்பந்தம் நேர்ந்து விடலாம் !
ஆன்ரூ: இல்லை பார்பரா ! என் ஆயுதச் சாலைக்காக நீ உன் சல்வேசன் ஆர்மியை விட்டுவிடும் சந்தர்ப்பம் நேரலாம் !
பார்பரா: அப்பா ! நான் அந்த சவால் இழப்பை வரவேற்கத் தயார்
ஆன்ரூ: நானும் தொழிற்சாலை எதிர்பார்ப்பு இழப்பை எதிர்நோக்கித் தயாராக இருக்கிறேன் ! சொல் ! எங்கே இருக்கிறது உன் காப்பணிக் கூடம் ?
பார்பரா: காப்பணிக் கூடம் மேற்கு ஹாம் (West Ham) பகுதியில் உள்ளது. சிலுவைச் சின்னம் தெரியும் வாசல் முன்பாக. யாரைக் கேட்டாலும் சொல்வார். உங்கள் தொழிற்சாலை எங்குள்ளது அப்பா ?
ஆன்ரூ: பிரைவேல் செயின்ட் ஆன்ரூஸ் (Perivale St. Andrews) என்னும் இடத்தில் உள்ளது. முன்னே போர்வாள் சின்னம் தென்படும். ஈரோப்பில் எவரைக் கேட்டாலும் சொல்வார் என் தொழிற்சாலை இருப்பிடத்தை !
பார்பரா: நாளை எங்கள் காப்பணிக் கூடத்தில் சந்திப்போம் தந்தையே !
(தொடரும்)
***********************
தகவல் :
Based on The Play : Major Barbara By : George Bernard Shaw, – Penquin Books (Editorial Supervision of Biographer : Dan. H. Laurence) (1960)
(a) The Portable Bernard Shaw By : Stanley Weintraub (1977)
(b) Writers & Critics – Shaw By A. M. Gibbs (1969)
(c) The Oxford Dictionary of Quotations (New Edition) (1992)
(d) The Wicked Wit of Oscar Wilde (1997)
(e) ZThe Great Quotations Compiled By : George Seldes (1967)
(f) DVD Video Classics – Bernard Shaw’s Major Barbara Released in August 2007 (2 Hours)
(g) Major Critical Essays By : Bernard Shaw Penguin Classics (1986)
********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (July 13, 2011)
http://jayabarathan.wordpress.com/
- கரியமிலப்பூக்கள்
- திண்ணை கட்டுரை எதிரொலி: இடிக்கப்பட்ட கோயில் மீண்டும் கட்டப்படுகிறது
- விபத்து தந்த வெகுமதி
- ‘அது’ வரும் பின்னே, சிந்தை தெளியட்டும் முன்னே
- விட்டு விடுதலை
- நடனக்கலைஞர் சாந்தா ராவ் நினைவாக…
- அவனேதான்
- ப மதியழகன் கவிதைகள்
- அழுகையின் உருவகத்தில்..!
- கிறீச்சிடும் பறவை
- பிரயாண இலக்கியம் – தி ஜானகிராமனும் மற்றோரும் – இரண்டு
- என் கைரேகை படிந்த கல். தகிதா பதிப்பகத்தின் மிகச்சிறந்த கவிதைத் தொகுப்பு
- முற்றுபெறாத கவிதை
- ஜென் ஒரு பு¡¢தல் – பகுதி -2
- காத்திருக்கிறேன்
- கதையல்ல வரலாறு: ருடோல்ப் ஹெஸ்ஸென்ற பைத்தியக்காரன் ? (தொடர்ச்சி)
- எனது இலக்கிய அனுபவங்கள் – 7 எழுத்தாளரும் புத்தக வெளியீடும்
- உருமாறும் கனவுகள்…
- வேறெந்த சொற்களும் அவனிடம் மிச்சமில்லை
- பழமொழிகளில் திருமணம்
- அன்னையே…!
- கவிதைகள். தேனம்மைலெக்ஷ்மணன்
- செல்லம்மாவின் கதை
- சித்தி – புத்தி
- விடாமுயற்சியும் ரம்மியும்!
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரு கதைகளுக்கு இடையே (கவிதை -40 பாகம் -3)
- நினைவுகளின் மறுபக்கம்
- மிக பெரிய ஜனநாயக திட்டம்?!!! ஊழலில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புதல்!
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) இதயத்தின் இரகசியங்கள் (Secrets of the Heart) (கவிதை -46)
- அம்ஷன் குமாருடன் ஒரு சந்திப்பு
- ஆள் பாதி ஆடை பாதி
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 9
- பஞ்சதந்திரம் – தொடர் – நூல்வரலாறு
- பனியுகத்தின் தோற்றமும், மாற்றமும் ! கடற்தளங்களின் உயர்ச்சியும், தாழ்ச்சியும் -2