ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா
தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா
அசலான பொதுடைமைத் தத்துவம் (Socialism) என்பது சமூகம் அனைத்துகும் நலம் படைத்துக் குடியரசு முறையில் செயற்பட்டு வரும் ஒன்றே ஒன்றுதான் என்பது தெரிகிறது..
ஜார்ஜ் பெர்னாட் ஷா (Everybody’s Political What is What ?)
மேஜர் பார்பரா நாடகத்தைப் பற்றி :
இந்த நாடகம் ‘ஏழ்மைக் காப்பணிச் சேவகி’ மேஜர் பார்பரா (Major of Salvation Army) வாழ்வில் நேர்ந்த வெற்றி, தோல்வியைப் பற்றியது. அவள் புரிந்த அரிய சமூகத் தொண்டில் இயற்பாடுக்கும், மெய்ப்பாடுக்கும் (Idealism & Realism) இடையே ஏற்பட்ட ஒரு போராட்டத்தைப் பற்றியது. அந்தத் தொண்டுக்கு ஆதரவாக நிதி உதவி செய்யும் அவளது இராணுவ ஆயுத உற்பத்தித் தந்தை ஆன்ரூ அண்டர்ஷா·ப்ட் (Andrew Undershaft) மற்றும் பார்பராவை மணக்கப் போகும் கிரேக்கப் பேராசியர் அடால்·பஸ் குஸின்ஸ் (Adolphus Cusins) ஆகியோருடன் பார்பரா போராடு வதை விளக்குவது. “நமது கொடுமைகளில் கோரமானது, குற்றங்களில் கொடூரமானது மானிட ஏழ்மை. மற்ற தேவை ஒவ்வொன்றையும் நாம் தியாகம் செய்து, நமக்கு முதற் கடமையாக இருக்க வேண்டியது மனிதர் ஏழ்மையை இல்லாமல் நீக்குவதே,” என்று மேஜர் பார்பரா நாடகத்தின் முன்னுரையில் பெர்னாட் ஷா கூறுகிறார். மேஜர் பார்பரா நாடகப் படைப்பின் அழுத்தமான குறிக்கோளும் அதுவே.
வறுமையைப் போக்காது வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் மனித இனம் வெறுக்கத் தக்கது என்று சாடுகிறார் பெர்னாட் ஷா. ஏழ்மை நீக்கப் பாடுபடும் காப்புப் படைச் சேவகி மேஜர் பார்பராவைச் சமூகம் ஆதரிக்க வேண்டுமா அல்லது அவளை ஒதுக்கி விட வேண்டுமா என்று நம்மைக் கேட்கிறார் பெர்னாட் ஷா ! ஆயுத உற்பத்தியில் கோடிக்கணக்கானப் பணச் சேமிப்பையே மதமாகக் கருதும் அவளது தந்தை, ஏழ்மைக் காப்பணிக்கு நிதி உதவி செய்வது நியாயமா அல்லது தவறா என்ற முரணான ஒரு வினாவை எழுப்புகிறது நாடகம் ! போருக்கு ஆயுதங்கள் உற்பத்தி செய்து செல்வம் பெருத்து வலுவாக, பாதுகாப்பாக, நலமாக மனித இனம் ஆடம்பரத்தில் வாழ வேண்டுமா அல்லது அன்பு, மதிப்பு, சத்தியம், நியாயம் என்ற அடிப்படை அறநெறியில் எளிமையாக மனிதர் வாழ வேண்டுமா என்று நாடகக் கதா நாயகர் நம்மை எல்லாம் கேட்கிறார்.
ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Salvation Army Major) மேஜர் பார்பரா, தனக்குத் தெரியாமல் அவளது கிறித்துவக் குழுவினர், இராணுவ ஆயுதங்கள் உற்பத்தி செய்யும் அவளது தந்தையிடமிருந்து நிதிக் கொடை ஏற்றுக் கொண்டதைக் கேட்டுப் பெருங் குழப்பம் அடைகிறாள். ஆரம்பத்தில் ஏழ்மைக் காப்பணி ஆயுத வணிகரிட மிருந்து ஏராளமான நிதியைப் சன்மானமாகப் பெற்றுக் கொள்வது முற்றிலும் தவறென்று பார்பரா கருதுகிறாள். ஆனால் அப்படி நாடக வாசகர் கருத வேண்டுமென்று பெர்னாட் ஷா விரும்பவில்லை ! அவர் முன்னுரையில் அறக் கட்டளையாளர் நிதிக் கொடையைத் தூய சேமிப்பாளர் மூலம்தான் பெற வேண்டும் என்னும் கருத்து நகைப்புக்குள்ளானது என்று தள்ளி விடுகிறார். எந்த வகைச் சேமிப்பாயினும் அற நிலையங்கள் பெற்றுக் கொள்ளும் நிதிக் கொடைகளை மக்கள் நல்வினைகளுக்குப் பயன் படுத்தலாம் என்று பெர்னாட் ஷா ஆதரவு தருகிறார். “பிசாசுவிட மிருந்து கூட நன்கொடையைப் பெற்றுக் கொண்டு கடவுளின் கரங்களில் கொடுக்க வேண்டும்”, என்று ஆலோசனை கூறுகிறார். நாடக முடிவில் வறுமையில் வாடுவோர் கைவசம் நிரம்பப் பணம் இருந்தால் பசி, பட்டினியின்றி நிம்மதியாய் வாழ இயலும் என்று மேஜர் பார்பரா அமைதி அடைகிறாள்.
மிஸ் பார்பரா பீரங்கி உற்பத்திச் செல்வந்தர் ஆன்ரூவுக்குப் பிறந்த ஓர் பூரணப் பண்பியல் புதல்வி (An Idealistic Daughter). சல்வேசன் ஆர்மிக்கு மேஜரான (Major in the Salvation Army) பார்பரா தன் தந்தை போன்ற பண முதலைகளுக்கு எதிராகப் போராடுவதில் தீவிரமாக ஈடுபடுபவள். அவளை வழிபடும் காதல் ரோமியோ அடால்·பஸ் (Adolphus) ஒரு கிரேக்கப் பேராசிரியர். அடால்·பஸின் மோகப் பொழுது போக்கில் பங்கு கொள்ள பார்பராவுக்கு நேரமில்லை, சல்வேசன் ஆர்மி உறுப்பினர் சிலர் அவளது பணக்காரத் தந்தையிடமிருந்து பெருந் தொகையைச் சன்மானமாகப் பெற்றதை அறிந்து பார்பரா அதிர்ச்சி அடைகிறாள்.
சிந்திக்க வைக்கும் முரணான இத்தகைய பிரச்சனைகளே மேஜர் பார்பராவில் புத்துணர்வோடு இன்பியல் நாடகமாக உருவெடுக்கிறது. தீப்பறக்கும் தர்க்க வசனங்கள் இங்குமங்கும் மின்னல்போல் அடிக்கின்றன, பெண்மணி மேஜர் பார்பரா நாடக மேதை ஜார்ஜ் பெர்னாட் ஷா ஆக்கிய உன்னத படைப்புப் தலைவி, உள்ளத்தைத் தொடும் நாயகி என்று ஆங்கில நாடக விமர்சகர் பலர் கூறுகிறார். ஆங்கில நாடக உலகிலே சிந்தனையைத் தூண்டும் சமூகச் சேவகி மேஜர் பார்பரா நாடகப் படைப்பைப் போற்றுபவர் பலர் இருக்கிறார் என்பது தெரிய வருகிறது.
**********************
நாடக உறுப்பினர்:
1. மேஜர் மிஸ். பார்பரா அண்டர்ஷா·ப்ட் (Major Ms. Barbara Undershaft). ஆன்ரூவின் மூத்த மகள்.
2. ஆன்ரூ அண்டர்ஷா·ப்ட் (Andrew Undershaft) : இராணுவ ஆயுத உற்பத்தித் தொழிற்சாலையின் அதிபர்.
3. மேடம் பிரிட்னி அண்டர்ஷா·ப்ட் (Lady Britomart Undershaft) : ஆன்ரூவின் விலக்கப் பட்ட மனைவி (வயது 50)
4. ஸ்டீபன் அண்டர்ஷா·ப்ட் (Stephen Undershaft) (வயது 25) ஆன்ரூவின் இளைய மகன்.
5. மிஸ். சாரா அண்டர்ஷா·ப்ட் (Ms. Sara Undershaft) : ஆன்ரூவின் இரண்டாவது மகள்.
6. அடால்·பஸ் குஸின்ஸ் (Adolphus Cusins) : பார்பராவின் காதலன்
7. சார்லஸ் லோமாக்ஸ் (Charles Lomax) (வயது 35) : சாராவின் காதலன்.
8. பணியாள் மாரிஸன் (Bulter Morrison) வயது 45
9. ஓபிரைன் பிரைஸ், ரம்மி மிட்சென்ஸ், ஜென்னி ஹில், பீடர் ஷெர்லி, பில் வாக்கர் – சல்வேசன் ஆர்மியில் உண்டு உறங்கி வந்து போகும் பழைய / புதிய சாவடி வாசிகள்.
மற்றும் பலர்.
************************
ஏழ்மைக் காப்பணிச் சேவகி
(மேஜர் பார்பரா)
(இரண்டாம் அங்கம்)
அங்கம் – 2 பாகம் – 10
இடம் : இங்கிலாந்து லண்டன் நகரம். வெஸ்ட் ஹாம் ஏழ்மைக் காப்பணிச் சாவடி (West Ham Shelter of the Salvation Army)
நிகழும் ஆண்டு : ஜனவரி 1906
நேரம் : காலைப் பொழுது.
அரங்க அமைப்பு : ஏழ்மை மனிதரை ஜனவரிக் கடுங்குளிர் நடுக்கத்தில் பாடுபடுத்தும் ஒரு பழைய சத்திரக் கூடம் சல்வேசன் ஆர்மிச் சாவடி. புதிதாக வெள்ளை அடிக்கப் பட்டுள்ளது. கறைபடிந்த மேஜை, நாற்காலிகள், பெஞ்சுகள் அங்கு மிங்கும் தெரிகின்றன. அறைக் கதவுகள் ஜன்னல்கள் திறந்துள்ளன. முன்னறையில் ஓர் ஆணும், பெண்ணும் நடமாடி வருகிறார். மேஜையில் சாவடி வாசிகள் சாப்பிட்ட தட்டுக்களை மூதாட்டி ஒருத்தி எடுத்துக் கொண்டி ருக்கிறாள். உலவும் ஆடவன் வேலை இல்லாத வாலிபன். வாயாடி மனிதன். பெண் நடுத்தர வயது மூதாட்டி. அவரது உடையிலும், நடையிலும் ஏழ்மை தெரிகிறது. கடுங்குளிர் நடுக்கத்தைப் பொருட் படுத்தாமல் நாற்காலில் சிலர் அமர்ந்திருக்கிறார். காலை உண்டி சாப்பிட்டு அவர் இருவரும் தெம்புடன் இருக்கிறார். ஆடவன் குவளையில் உள்ள ஆறிப்போன சூப்பைச் சுவைத்துக் கொண்டிருக்கிறான். மேஜர் பார்பரா தன் சகபாடிகள் பலரோடு வாத்தியத் தம்பட்டம் கொட்ட அணிவகுத்துக் கொடி உயர்த்தி நடந்து வருகிறாள். மூதாட்டியும், வாலிபனும் வாதாடிக் கொண்டுள்ள போது ஜென்னி ஹில்லும், பீட்டர் ஸெர்லியும் நுழைகிறார். பீட்டருக்கு உணவு கொண்டு வருகிறாள் ஜென்னி. அப்போது மூர்க்கன் வில்லியம் வாக்கர் [William Walker] சல்வேசன் சாவடிப் பின் தோட்டத்தில் வேகமாய் நுழைகிறான். ஜென்னியைக் கண்டதும் வெகுண்டு அவள் கூந்தலைப் பற்றி இழுக்கிறான். ஜென்னியைக் காப்பாற மேஜர் பார்பரா உடனே அழைத்து வரப் படுகிறாள். புதிய நபர்களைப் பார்பரா பதிவு செய்கிறாள். அப்போது மேஜர் பார்பராவின் செல்வீகத் தந்தை காரில் வருகிறார். தந்தையை அறிமுகம் ஆகிறார். இடையே பார்பராவின் காதலன் அடால்·பஸ் நுழைகிறான்.
(சென்ற வாரத் தொடர்ச்சி)
அடால்·பஸ்: போரும் அமைதியும் மாறி மாறி வரும் ! மாந்தரின் மரணங்கள் பெருகும் ! மரண தேவதை தன் கோரப் பற்களால் உலகைக் கைப்பற்றுவாள் ! பீரங்கி, வெடிமருந்து உற்பத்தி நாட்டை எப்போதும் போருக்குத் தயார் செய்கிறது ! அப்பாவி மக்களைக் கொல்லத் தயாராகிறது ! வெடி மருந்தை விற்றுப் பணம் குவித்து அதைத் தர்மமாகக் கொடை தருவது கொடூரச் செயல் ! அது அற்பக் காசு ! அது மரணக் காசு ! நீவீர் பணப் பைத்தியமாய் அலைகின்றீர் ! நீவீர் பணத்துக்கு அடிமை ! உமக்குப் பணமே கடவுள், மதம், தர்மம் எல்லாம் !
ஆன்ரூ: நீ எப்படிப் பட்டவன் ? வருவாய் இன்றி உண்டு உறங்கி வருபவன். எம்மைத் தவிர மற்ற எல்லோரையும் ஏழையாய் ஆக்குகின்றீர். நீங்கள் யாவரும் வறுமைக்கு அடிமை ! ஏழ்மையே உமது இறைவன், மதம் எல்லாம் ! உன் கண்முன் ஏழை, எளியவர், எல்லாம் இழந்தவர் உண்ண உணவின்றி, உடுத்த உடையின்றி உயிரிழப்பதை எப்படி நியாயப் படுத்துவாய் ! நமக்கு ஏழ்மை ஒழிய வேண்டுமா ? அல்லது சீரும், செல்வச் செழிப்பும் வேண்டுமா ? செல்வந்தர்தான் ஊழியம் அளித்து ஏழ்மையை ஒழிப்பவர் !
அடால்·பஸ்: எந்தப் பைத்தியக்காரன் பீரங்கி உற்பத்தி செய்வான் ? வெடி மருந்து தயாரித்து அப்பாவி மக்களைக் கொல்வான் ? இதுவரை நீவீர் என்ன செய்திருக்கிறீர், வறுமையப் போக்க ? ஒன்றுமில்லை ! சல்வேசன் ஆர்மியை விலைக்கு வாங்கி உமது பொன் கரங்கள் அன்னதானம் செய்யப் போகிறதா ?
ஆன்ரூ: வெடிமருந்து தயாரிக்கும் நான் யாரையும் கொல்ல வில்லை. அதைத் தயாரிப்பது என் தொழில். பிறரைக் கொல்வது என் கரங்கள் அல்ல ! இப்போது சொல் ! சல்வேசன் ஆர்மியில் இரண்டு அல்லது மூன்று பைத்தியங்கள் இருக்குமா ?
அடால்·பஸ்: என்ன ? பைத்தியகாரர் நம்மோடு பார்பராவையும் சேர்த்து விட்டீரா ?
ஆன்ரூ: நாம் படிப்படியாய் ஏறி நம்மை ஒப்பிடுவோம். நானொரு கோடீஸ்வரன். நீயரு கவிஞன் ! பார்பரா மானிட ஆத்மக் காப்பாளி ! நம்மூவருக்கும் என்ன வேலை, இப்போது அடிமைகளும் வடிவ வழிபாடு மனிதரும் இங்கே இருக்கும் போது ?
அடால்·பஸ்: கவனம் வைப்பீர் ஐயா ! பொதுமக்கள் மீது பார்பராவுக்கு மதிப்பும் மன நேயமும் அதிகம். நானும் அப்படித்தான். அவளது காதல் விளையாட்டை நீர் உணர முடிகிறதா ?
ஆன்ரூ: தோழனே ! நீ என்றாவது வறுமையில் வாடித் துயர் அடைந்துள்ளாயா ? ஏழ்மை என்றால் என்ன வென்று உனக்குத் தெரியுமா ? உண்மையாகத் தெரியுமா ? ஊழியத்தில் மண்ணோடும், புழுதியோடும் இதுவரை புரண்டுள்ளாயா ? நோயுற்றோர், துயருற்றோர் இடையே நீ வாழ்ந்து வந்திருக்கிறாயா ?
அடால்·பஸ்: நீங்கள் வெடி மருந்துப் போரில் கை முறிந்து, கால் முறிந்து முடமாய் நடமிடும் மனிதரை பார்த்திருக்க மாட்டீர் என்று நினைக்கிறேன்.
ஆன்ரூ: போர் நிகழாத ஒரு நாடும், போர் நேராத காலமும் உன்னால் கூற முடியுமா ? போர்கள் நிகழக் கூடாது ! ஆனால் நேரும் போரை யாரும் நிறுத்த முடியாது. போர்களை நிறுத்த ஒரு நாடு வெற்றி அடைய வேண்டும். பராக்கிரமம் உள்ளனொரு நாடுதான் வெற்றி பெறும். ஒரு நாட்டுக்கு எப்படிக் கைப்பலமும் மேலாக ஓங்கும் ? பீரங்கியும், வெடி மருந்தும் அந்தத் தேவையைப் பூர்த்தி செய்கிறது நான் பிறக்கும் போது வாயில் வெள்ளிக் கரண்டி யோடு பிறக்க வில்லை ! ஏழ்மையிலும் ,இல்லாமை யிலும் நோயுற்று உழன்றேன். காதல் களியாட்டங்களில் ஈடுபட நேரம் இல்லை. வறுமை ஓர் ஆசீர்வாதம் என்று ஏழைகள் ஏற்பதை நான் பார்த்துக் கொண்டிருக்க மாட்டேன். கோழைகளும் பயங்கொள்ளிகளும் பணிவுப் பண்பைப் போதித்து மதப் போர்வைக்குள் ஒளிந்து நிற்கிறார். நாம் அதை மிஞ்சிச் செய்ய முடியும். நாம் பாமர மக்களுக்கு மேலாகச் சிந்திக்க வேண்டும். அவரது பிள்ளைகள் மேலே உயருவதற்கு நாமேன் உதவி செய்ய முடியாது ? பார்பரா என் கட்சியில் சேர நான் அவளை என்வசம் இழுக்க வேண்டும். பார்பரா சல்வேசன் ஆர்மிக்கு உரியவள் இல்லை.
அடால்·பஸ்: நீவீர் பேசுவதைப் பார்த்தால் உமக்கு பார்பராவைப் பற்றி எதுவுமே தெரியாது என்பது தெளிவான என் யூகம் !
ஆன்ரூ: தோழரே ! நான் வாங்கு முடிவதைப் பிறரிடம் கெஞ்சிக் கேட்பதில்லை !
அடால்·பஸ்: அதாவது சொல்வதைப் பார்த்தால் நீங்கள் மேஜர் பார்பராவை பணத்துக்கு வாங்கி விடுவீர் போல் என்னிடம் பேசி வருகிறீர்.
ஆன்ரூ: இல்லை ! இல்லை ! அப்படி இல்லை ! நான் நினைத்தால் சல்வேசன் ஆர்மி முழுவதையும் செல்வத்துக்கு வாங்கி விடுவேன் தெரியுமா ? என் வெடி மருந்து செல்வத்தால் அதை ஓர் சொர்க்க பூமியாய் ஆக்கி விடுவேன் தெரியுமா !
அடால்·பஸ்: உம்மால் அதை நிச்சயம் செய்ய முடியாது தெரியுமா ?
ஆன்ரூ: நீ பார்த்துக் கொண்டு வா ! உலக நாடுகளில் உள்ள எல்லா மதக் கொடை நிறுவகங்களும் தம்மைச் செல்வந்தருக்கு விற்றுத்தான் உயிர் வாழ முடிகிறது தெரியுமா ?
அடால்·பஸ்: எமது காப்பணிக் கூடம் பட்டாளத்துக்குச் சொந்தமில்லை ! அது ஓர் கிறித்துவ ஆலயம் ! ஏழ்மையில் இருப்பவர் மட்டுமே இங்கு வாழ்கிறார்.
(தொடரும்)
***********************
தகவல் :
Based on The Play : Major Barbara By : George Bernard Shaw, – Penquin Books (Editorial Supervision of Biographer : Dan. H. Laurence) (1960)
(a) The Portable Bernard Shaw By : Stanley Weintraub (1977)
(b) Writers & Critics – Shaw By A. M. Gibbs (1969)
(c) The Oxford Dictionary of Quotations (New Edition) (1992)
(d) The Wicked Wit of Oscar Wilde (1997)
(e) The Great Quotations Compiled By : George Seldes (1967)
(f) DVD Video Classics – Bernard Shaw’s Major Barbara Released in August 2007 (2 Hours)
(g) Major Critical Essays By : Bernard Shaw Penguin Classics (1986)
********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (October 5, 2011)
http://jayabarathan.wordpress.
- நாட்டிய கலாமணி வசந்தா டானியல் அவர்களின் நடன நெறியாள்கையில் நாட்டிய கலாலய மாணவிகள் வழங்கும் உயிர்ப்பு நாட்டிய நாடகம்.
- உறவுகள்
- இப்போதைக்கு இது – 3 மரணதண்டனை
- மகிழ்ச்சியைத் தேடி…
- வாழ்க்கை எதார்த்தம்
- மனுநீதி நாளில் ஒரு மாசற்ற ஊழியன்
- மனித நேயர்
- சிறகை விரிப்போம். தென்கச்சி கோ. சுவாமிநாதனின் நூல் விமர்சனம்
- காலமாகாத கனவுகள்
- வேறு தளத்தில் என் நாடகம்
- சயனம்
- மனித நேயம் கடந்து ஆன்ம நேயத்துக்கு
- உடனடித் தேவை தமிழ் சாகித்ய அகாதெமி
- ஜென் ஒரு புரிதல் – பகுதி-14
- வாழும் கலை 212 Durham Avenue Metuchen, NJ 08840 Map
- 21 ஆம் நூற்றாண்டில் பாதுகாப்பாய் இயங்கி வரும் அணுமின் நிலையங்கள் நாட்டுக்குத் தேவையான தீங்குகள் – 1
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 10
- மேலும் மேலும் நசுங்குது சொம்பு!
- நன்றி மறவா..!
- திறவுக்கோல்
- வியாபாரி
- ஷாம்பூ
- அவரோகணம்
- ஆப்பிள்-ன் புதுமைக் கடவுள் ஸ்டீவ் ஜாப்ஸ்- சில தகவல்கள்
- கரும்புள்ளியின்மீது விழும் வெளிச்சம் ( ”தேவந்தி” என்னும் சுசிலாவின் சிறுகதைத்தொகுப்புக்கு எழுதிய முன்னுரை
- (79) – நினைவுகளின் சுவட்டில்
- நாயுடு மெஸ்
- எனது இலக்கிய அனுபவங்கள் – 19
- துளிப்பாக்கள் (ஹைக்கூ)
- கொக்கும் மீனும்..
- சாமியாரும் ஆயிரங்களும்
- Strangers on a Car
- சிற்சில
- காக்கைகள் துரத்திக் கொத்தும் தலைக்குரியவன் – சிறுகதை
- நிலாவும் குதிரையும்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) காதல் என்பது என்ன ? (கவிதை – 49 பாகம் -2)
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) மரக்கோடரி ( புதையல் தோண்டுதல்) (கவிதை -51 பாகம் -1)
- யார் குதிரை?
- இரு கவிதைகள்
- கேரளா நெல்வயல் மற்றும் நீர்பாங்கான பகுதி பாதுகாப்பு சட்டம் 2008
- கையாளுமை
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 48
- பஞ்சதந்திரம் தொடர் 12 நன்றி கெட்ட மனிதன்
- முன்னணியின் பின்னணிகள் – 8 சமர்செட் மாம்
- பேசும் படங்கள்::: பஸ்ஸ்டாண்டில் சாரயக்கடை வருமா…?