ரம்யம்/உன்மத்தம்

This entry is part 21 of 30 in the series 15 ஜனவரி 2012

ரம்யம்

வசந்தகாலத்தின்
முதல் பழங்களை
அணில் ருசிக்கும்
பறவைகளின் சப்தம்
சன்னமான இசை
மேகங்களற்ற வானம்
மலை உச்சியிலிருந்து
கீழே விழுந்தான்
பாறையில் மோதிய கணத்தில்
சிறகு முளைத்தது
அந்தி வானத்தில்
கூடு திரும்பும்
பறவைக் கூட்டம்
பருந்தின் நிழல் கண்டு
அஞ்சும் புறாக்கள்
லேசான தூறல்
ரம்யமான மாலை
கிழக்கு வானத்தில் வானவில்
அலைகள் சொன்ன கதைகளை
கரை யாரிடம் சொல்லும்
குளம் எப்படி
நிலாவை
சிறை பிடித்தது
தோட்டத்து மலர்களில்
அவள் கூந்தலை
அலங்கரிக்கப் போவது எது
கடல் காற்று
கரை மோதும் அலைகள்
நீர்க்குமிழிகள் உடைகின்றன
என் மனம் போல
அவரவர் உலகத்தில்
அவரவர் பத்திரமாய்.

உன்மத்தம்

கதவைத் திறந்தேன்
முன்பனி முகத்தில்
அறைந்தது
உறக்கம் தழுவும் தருணம்
யாருக்கு இங்கே தெரியும்
கதவைத் திறந்தே வைத்திருங்கள்
எந்த உருவத்திலும்
இறைவன் வரலாம்
சில சமயம்
பார்க்க நேர்ந்துவிடுகிறது
அம்மாவின் முகத்தை
பொட்டில்லாமல்
இன்று ஒரே நிறத்தில்
உடையணிந்து வந்திருக்கிறோம்
எதேச்சையாக நேர்வது தான்
என்றாலும்
மனதில் வண்ணத்துப்பூச்சி
சிறகடிக்கிறது
விழுந்த மரத்தில் இருந்தது
வெறுமையான குருவிக் கூடு
வழிதவறிய யானைக் கூட்டம்
வாழைத் தோட்டத்தை
துவம்சம் செய்தது
கார்காலத்தில்
மனதில் ஏனோ ஈரப்பதம்
வாழ்க்கைக் குறிப்பேட்டில்
உங்களுடைய வாசகத்தை
நீங்கள் தான் எழுத வேண்டும்.

ப.மதியழகன்

Series Navigationகடவுள் டெம்போரல் லோபில் வருகிறார் – 5அன்று கண்ட பொங்கல்
author

ப மதியழகன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *