வேப்பம்பூக்களுக்காகக் காத்திருக்குமொருத்தி

This entry is part 4 of 27 in the series 29 செப்டம்பர் 2013

 

 

மழையுமற்ற கோடையுமற்ற மயானப் பொழுது

இலைகளை உதிர்த்துப் பரிகசிக்கிறது

வேனிற்காலத்தைப் பின்னிக் கிடக்குமொரு

மலட்டு வேப்ப மரத்திடம்

 

நீவியழித்திடவியலா

நினைவுச் சுருக்கங்கள் படர்ந்திருக்கும்

நீயொரு மண்பொம்மை

 

உனது கண் பூச்சி

செவி நத்தை

கொல்லை வேலியொட்டிப் புறக்கணிக்கப்பட்டிருக்கும்

உன்னிடமும் வேம்பிடமும்

இவையிரண்டும் என்ன உரையாடுகின்றன

 

திசைகளின் காற்று

விருட்சத்துக்குள் சுழல்கிறது

 

தன் மூதாதையர் நட்ட மரத்தில் இதுவரை

ஆசைக்கேனுமொரு பூப் பூக்கவில்லையென

தொலைவிலிருந்து வந்த புதுப் பேத்தியிடம்

கதை பகர்கிறாள் மூதாட்டி

வேப்பமரத்தடி வீடெனத் தன் வீட்டிற்கேவோர்

அடையாளம் தந்திருக்கும் மரத்தை

வெட்டியகற்ற மறுக்கிறாள் கிழவியென

மருமகளொருத்தி முணுமுணுக்குமோசையை

சமையலறை ஜன்னல் காற்று

உன்னிடம் சேர்க்கிறது

 

மனித ஓசைகள் கேட்டிடக் கூடாதென

காதுகளை மீண்டும்

நத்தைகளால் அடைத்துக் கொள்கிறாய் – பிறகும்

கண்களை மூடும் பூச்சிகள் தாண்டி

வேப்பம்பூக்களுக்காகக் காத்திருக்கிறாய்

 

– எம்.ரிஷான் ஷெரீப்

 

Series Navigationஜாக்கி சான் -9. பள்ளி அனுபவம்கு சின்னப்ப பாரதி அறக்கட்டளை
author

எம்.ரிஷான் ஷெரீப்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *