Posted in

எனக்குச் சொந்தமில்லா உன் பெயர்

This entry is part 10 of 46 in the series 5 ஜூன் 2011

 

அதீத வாஞ்சையொன்று முட்டித் தள்ள

உந்துதலில் உரைக்கிறேன் உன் பெயரை

வெண்புகை குடை விரித்த

மலைச் சிகரத்தினுச்சியில்

காற்றில் தவழ்ந்த பெயரோ

நேற்றுப் பிறந்த மழலையாய் சிணுங்கி

அடர் பச்சை ஊசியிலை மரங்களின்

இலைகளின் கைகுலுக்கி

நீர் சுனையொன்றில் குளிக்கக் குதித்தது.

மலையின் மடியில் வீசிய

நெற்பயிரின் தலை கோதி

நெல்மணியின் கரம் பற்றி ஊசலாடி

கரைகின்றது காற்றில்

இதுவரையில் உறவாடிய உன் பெயர் கூட

இனியெனக்குச் சொந்தமில்லை.

அது எங்கிருந்து எடுக்கப்பட்டதோ

அங்கேயே கொடுக்கப்பட்டது.

 

-வருணன்

 

Series Navigationராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி – 13எழுதப்படாத வரலாறு – வெள்ள முறுக்கு தாத்தா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *