Posted in

நீண்டதொரு பயணம்

This entry is part 18 of 31 in the series 13 அக்டோபர் 2013
 
ஜி. ஜே. தமிழ்ச்செல்வி, தமிழ்நாடு
 

 

நீண்ட தூர பயணம் தான்

இதற்கு முன்பும்,

இதற்கு பின்பும் ஒருவரு மில்லை.

தனித்து விடப்பட்டும்

தனியன் என்று ஒப்பும் மனமில்லை !

சொந்தம் கொண்டாடும்

சொந்தங்களே சொந்தமில்லை.

பிடி மண்ணில்

ஆசைபட்டு நிற்குமா மனம் ?

 

பொம்மையை இறுகப் பற்றி

மழலைக் குணம் ஒவ்வொரு

மனிதத்திடமும்.

காதலன் காதலியையும்

காதலி காதலனையும்

பொருளாகப் பாவிக்கும் உயர்ந்த குணம்

பெற்றோர் பிள்ளைகளையும்

உரிமை பாராட்டட்டும்.

கொத்தடிமைகள் தான் ஏதோ

ஒரு வகையில் !

 

நான்கு பிள்ளைகளுக்குள்

தாயும் கூட உடமைதான்

தனதாக்க வென்றே

தவித்துப் போகிறது நெஞ்சம் !

பாச விலங்கிற்கு முன்னாக

ஒவ்வொருவரும்

தூக்கி எறிந்துவிடத் துரித கதியில்

முடிந்துவிட வில்லை

விருப்பம் என்று எடுத்துக் கொள்ள

துணிகர முயற்சி இல்லை.

 

வாழ்க்கையின் சரிக்கட்டுதலுக்கென

மறுஜென்ம கதைகளைத்

திரித்து விடுகிறது உலகம் !

பயம் கொண்டவர்களின் முதுகுகளில்

யானை சவாரி !

சுயமாக சிந்தித்துணர்தலுக்கு

ஒரு சீவனும் பிறக்கவில்லை.

பிறந்திருந்தாலோ

அது பாசத்தின்

வட்டத்திற்குள் இல்லை !

 

பார்வைக்கு எட்டாத உலகத்தில்

பார்க்கப்படும்

பார்வையாளனுக்கு

அவனவன் நீதி !

உலகத்தின் ஒரு துண்டில்

நின்று கொண்டு

நீதி தேடும் எனக்கோ

நீதியின் துளி மட்டுமே

புசித்தலுக் கென்று பரிமாறப்படுகிறது.

 

+++++++++++++++++++++++++

Series Navigationஅவசரகாலம்கோமதி மாமியாத்து கொலுவுக்குப் போகலாமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *