Posted in

சங்கிலி

This entry is part 4 of 10 in the series 29 டிசம்பர் 2019

அந்த ஜன்னல் வழியே

கண்களை துருவவிட்டேன்.

அந்த இரும்புக்கம்பிகள்

கரும்புக்கம்பிகளாய் இனித்தன‌

வயது பதினாறில்.

இன்றும்

அப்படித்தான்

பார்வைகளின் நாக்குகள்

கம்பிகளை வளைத்து

நக்கிக்கொண்டிருந்தன.

அன்று அந்த விநாடிப்பிஞ்சில்

கண்ணின் பார்வையில்

அவள்
ஒரு அரை சதவீதத்தைக்கூட‌

என் மீது வீசவில்லையே.

அந்த மின்னல் கயிறு அன்றோடு

அறுந்தே போனது.

அப்புறம் நான்

சமஸ்கிருதத்தில்

மாங்கல்யம் தந்துநானே என்று சொல்லி

ஆண்டுகளின் அச்சு எந்திரத்தில்

நசுங்கிய கரப்பான் பூச்சியாய்

அச்சிடப்பட்டு விட்டேன்.

ஆம்.அது என் திருமணம்.

இந்த கேடு கெட்ட அந்துப்பூச்சிக்கும்

அழகாய் அமைந்தாள் ஒருத்தி

ஒரு குடும்ப விளக்காய்.

என் குடும்பம் ..என் மக்கள் என்று

என் தேசம் விரிவடைந்தது.

அந்த அன்புப் பிரவாகத்தில்

திணறிபோய் விட்டேன்.

அந்த சன்னல் பக்கம்

என்னவோ

ஒரு இரும்புத்திரை

விழுந்து விட்டது.

நரைவனம் புகுந்தும்

சன்னல் கம்பிகளில்

அந்த நிழற்சுவடுகள்

ஊமைத்தனமாய் “ஷாக்”அடித்தன.

என்றோ ஒரு நாள்

அந்த மூளிமேகங்களிடையே

மூண்டு எரிந்த

இனிப்புச்சுவாலை

இன்னும் மூட்டிக்கொண்டிருக்கிறது

சிதைத்தீயை.

காதலுக்கு இறப்பு நேர்ந்ததும்

அதற்கும் வாழ்க்கை கொண்டு

வரட்டிகள் அடுக்கத்தானே வேண்டும்.

இருப்பினும்

வாழ்க்கைக்கு வசந்தம் காட்டும்

தூங்குமூஞ்சி மரங்களின்

அந்த பஞ்சுமிட்டாய்ப்பூக்களின்

மென் சாமரங்களைக்கொண்டு

நான் காற்று வாங்கிக்கொள்ளப்  

பழகிக்கொண்டேன்.

பூ புல்  புள் வானம் என்று

வெறுமையின் கரைசலில்

காணாமல் போய்விட்டேன்.

வயதுகள்

என் இடுப்பில் முட்சங்கிலி கட்டி

இழுத்துக்கொண்டு ஓடுகிறது.

எங்கோ ஒரு கணத்தில்

விழுந்துவிட்ட அந்த முற்றுப்புள்ளியை

மைல்கணக்கில் நீட்டி

பொற்சங்கிலியாய் தட்டி தட்டி

தடம் பதித்து

ஓடிக்கொண்டிருக்கிறேன்.

======================================

Series Navigationசொல்வனம் இணையப் பத்திரிகையின் 213 ஆம் இதழ்புத்தாண்டு பிறக்குது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *