குரு அரவிந்தன்

ஐரோப்பாவின் மிகப்பெரிய எரிமலையான எட்னா எரிமலை கடந்த திங்கட்கிழமை ஜூன் மாதம் 2 ஆம் திகதி மதியம் போல மீண்டும் வெடித்ததாக இத்தாலியின் தேசிய புவி இயற்பியல் மற்றும் எரிமலையியல் எட்னா ஆய்வகம் தெரிவித்துள்ளது. எரிமலை வெடித்தபோது பல கிலோ மீட்டர் தூரத்திற்குக் கரும்புகையோடு கலந்த தூசிகளும் கற்களும் பறந்ததால், அங்கிருந்த சுற்றுலாப் பயணிகள் பயந்து போயிருந்தனர். எந்த நேரமும் விமானப் போக்குவரத்து தடைப்படலாம் என்ற பயத்தில் சில சுற்றுலாப் பயணிகள் சிசிலித் தீவைவிட்டு உடனே கிளம்பினார்கள்.

சென்ற வருடம் சுமார் 11,000 அடி உயரமான இந்த எட்னா எரிமலையைப் பார்ப்பதற்காக நான் அங்கு போயிருந்தேன். என்னைப் போலவே சுமார் 1.5 கோடி சுற்றுலாப் பயணிகள் வருடம் தோறும் அங்கு வருகிறார்கள். 2023 ஆம் ஆண்டு மே மாதம் கடைசியாக எட்னா எரிமலை வெடித்தாக நாங்கள் தங்கியிருந்த ஹோட்டல் வரவேற்பாளர் குறிப்பிட்டிருந்தார். அப்போது அருகே உள்ள நகரமான கட்டானியா விமான நிலையத்தில் அதிக சாம்பல் தூசுகள் காணப்பட்டதன் காரணமாக விமானப் போக்குவரத்து தடைப்பட்டிருந்தது.

நான் அங்கு நின்றபோது எட்னா எரிமலை எதுவுமே நடக்காதது போல, வெள்ளை நிறப்புகையை மட்டும் கக்கிக் கொண்டிருந்தது. உயிர்ப்புடன் இருக்கும் எரிமலை என்பதால் எந்த நேரமும் வெடிக்கலாம் எனச் சொன்னார்கள். ‘பயமாக இல்லையா?’ என்று மலையடிவாரத்தில் மதிய உணவு பரிமாறிய பெண்ணிடம் கேட்டபோது, ‘இதெல்லாம் எங்களுக்குப் பழகிப்போச்சு’ என்று சிரித்துக் கொண்டே சொன்னது ஞாபகம் வந்தது.

இதற்குமுன் நான் இத்தாலியில் காம்பானியாவில் நேப்பிள்ஸ் என்ற இடத்தில் உள்ள சுமார் 4200 அடி உயரமுள்ள வெசுவியஸ் எரிமலையையும் சென்று பார்த்திருக்கின்றேன். அதைவிட இது இரண்டு மடங்கு பெரியது. வெசுவியஸ் எரிமலை வெடிப்பால் பாம்பி, ஹெர்குலேனியம் போன்ற கிராமங்கள் அப்படியே சாம்பலால் மூடப்பட்டன. இதில் அப்பகுதியில் வாழ்ந்த 1000 மேற்பட்டவர்கள் இறந்து போனார்கள். இரவு தூக்கத்தில் இருந்தவர்கள் அப்படியே சமாதியாகி விட்டார்கள். சாம்பலால் மூடப்பட்டிருந்த அந்தக் கிராமத்தில் இறந்துபோய் பழுதாகாமல் இருந்த அந்த உடல்களைச் சமீபத்தில் அப்படியே எடுத்து அங்கே காட்சிக்கு வைத்திருந்தார்கள். அந்தக் கிராமத்தையும் அப்படியே காட்சிப் படுத்தி இருந்ததால், அக்கால மக்கள் எப்படியான வாழ்க்கை வாழ்ந்தார்கள் என்பதை அதிலிருந்து அறிய முடிந்தது.
ஜூன் மாதம் 1 ஆம் திகதி இரவு எட்னா எரிமலையில் நடுக்கங்கள் ஏற்பட்டதாகவும், தொடர்ந்து ஜூன் மாதம் 2 ஆம் திகதி வெடிப்பு ஏற்படத் தொடங்கியதாகவும் இத்தாலியின் புவி இயற்பியல் மற்றும் எரிமலையியல் தேசிய நிறுவனம் அறிக்கையில் தெரிவித்துள்ளது. முதல்நாள் இரவே வெப்பத்தை அவதானிக்கும் கமெராக்கள் வெப்ப அதிகரிப்பை எச்சரிக்கை செய்ததாகவும் தெரிகின்றது.
கி.மு. 396, கி.மு 122 காலங்களில் இந்த எரிமலை பெரிதாக வெடித்தாக வரலாற்றுச் சான்றுகள் இருக்கிறன. 1669 ஆம் ஆண்டு எற்பட்ட வெடிப்பு இப்பகுதியில் உள்ள பல கிராமங்களை அழித்ததாகத் தெரிகின்றது.
கருமையான சாம்பல், வாயு மற்றும் பாறைத்துண்டுகள் இந்த எரிமலை வெடிப்பின் போது வெளியேற்றப்பட்டன. ‘பைரோகிளாஸ்டிக் நகர்வு’ (Pyroclastic flow) என்று இதை ஆங்கிலத்தில் குறிப்பிடுகின்றார்கள். பாதுகாப்புக் கருதி எரிமலைப் பகுதிக்குச் செல்லும் அனேகமான பாதைகள் மூடப்பட்டிருக்கின்றன.
எட்னா எரிமலை சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய அடிக்கடி வெடிப்புகளின் வரலாற்றைக் கொண்டுள்ளது. பெப்ரவரி மாதம் நடந்த கடைசி பெரிய வெடிப்பின் போது, ‘புதிய வாய்’ என்று சொல்லப்படும் ‘போக்கா நுவோவா’ என்ற பள்ளத்திலிருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தூரம் வரை எரிமலைக் குழம்பு ஆறு போல் ஓடியது.
எரிமலைக் குழம்பு ஓடுவதை அருகே சென்று பார்க்க விரும்புபவர்கள் ஹவாய் தீவுகளுக்கோ அல்லது ஐஸ்லாந்து தீவுக்கோ சென்று பார்க்க முடியும். ஹவாயில் பாதுகாப்பு வேலி போட்டிருந்ததால் மிக அருகே செல்ல எங்களை அனுமதிக்கவில்லை, அது ஒரு பெரிய கொதிக்கும் நெருப்புக் குழம்பு ஆறு போல ஓடியது. ஆனால் ஐஸ்லாந்தில் எரிமலைக் குழம்பை மிக அருகே சென்று குழிகளுக்குள் புகையுடன் கொதித்துக் கொண்டிருப்பதைப் பார்க்க அனுமதித்தார்கள். கற்பனையில் கேள்விப்பட்டவற்றை நிஜமாகவே பார்த்ததில் மகிழ்ச்சியாகவும், அதே சமயம் எரிமலைகள் பற்றிப் பல விடயங்களை அறிந்து கொள்ளவும் முடிந்தது.
- ஏழாவது சுவையின் இணக்கம்.
- நிணம்
- எட்னா எரிமலையின் சீற்றம்!
- முடிவு
- Thug Life திரைப்படம் – என் குறிப்புகள்
- நீ