முடிவு

This entry is part 4 of 6 in the series 8 ஜூன் 2025

ஆர் சீனிவாசன்

மூன்று நிமிடங்கள். திகில் நிறைந்த மூன்று நிமிடங்கள். அம்மூன்று நிமிடங்களில் பல விஞ்ஞானிகளின், பொறியாளர்களின் கனவு நினைவாகலாம் அல்லது இதற்கு முன் நடந்ததைப்போலத் தோல்வியைத் தழுவலாம். மூன்றே நிமிடங்கள். விண்கலம் நிலவின் பரப்பிற்கு மேல் சுமார் ஏழு கிலோமீட்டர் தொலைவில் இருந்தபோது விண்வெளிவீரர்கள் குமார் மற்றும் குப்தா தங்கள் விண்வெளி உடைக்குள் பதட்டத்துடன் விண்கலத்தின் கணினியை நோக்கினர். அனைத்து அமைப்புகளும் சரியாகத்தான் இயங்கிக்கொண்டிருந்தன. 

"இறங்கும் செய்முறையைத் துவக்கலாம். வெற்றி கைகூடட்டும். நன்றி " என ஆங்கிலத்தில் தரை கட்டுப்பாட்டு நிலையத்திலிருந்து கட்டளை வந்த பின், குப்தா கட்டுப்பாட்டுப் பலகையில் இருந்த ஒரு மஞ்சள் நிற பொத்தானை அழுத்தியதும் இரண்டு நிகழ்வுகள் நடந்தன. முதலாவது,  விண்கலத்தின் திசைதிருப்பிகள் மற்றும் இன்ஜின் ஒருங்கிணைப்போடு செயல்பட்டு விண்கலத்தைத் தரையிறங்க ஆயத்தமாக்கியது. இன்ஜின் மெதுவாகச் சக்தி குறைக்க, விண்கலம் கேழே இறங்கத்தொடங்கியது. இரண்டாவது, தரைக் கட்டுப்பாட்டு நிலையத்துடன் வானொலி இணைப்பு துண்டிக்கப்பட்டது. கட்டுப்பாட்டுப் பலகையில் பொருத்தியிருந்த திரையில் விண்கலத்தின் வெளிப்புறத்தில் பொருத்தப்பட்டிருந்த நான்கு கேமெராக்களிலிருந்து  நிலவின் தரை, விளிம்பு, விண்வெளியின் படிமங்களோடு பல தரவுகள் தெரிந்தன. முக்கியமாக விண்கலத்தின் செங்குத்து . வேகம் மற்றும் விண்கலத்திற்கும் நிலவின் பரப்பிற்கும் இடையே இருந்த தூரம் தெரிந்தது.  ஆறாயிரத்து முந்நூறு மீட்டர்....ஐந்தாயிரம் மீட்டர்..குறைந்துகொண்டே வந்தது. 

வானொலி இணைப்பு துண்டிக்கப்பட்டவுடன் தரைக் கட்டுப்பாடு நிலையத்தில் பதட்டம் உச்சியை அடைந்தது. அவையில் இருந்த விஞ்ஞானிகள், பொறியியலாளர்கள் மட்டுமின்றி அவையின் மேற்புறத்தில் அமர்ந்திருந்த பாரத பிரதமரின் முகத்திலும் மறுக்கமுடியாத பதட்டம். நிலையத்தைத் தாண்டி  பல கோடி மக்கள் தொலைக்காட்சி திரையில் மிக ஆர்வத்துடன் நடப்புகளை நேரலையில் பார்த்துக்கொண்டிருந்தனர். எல்லோருக்கும் பயம், பதட்டம் , ஆவல் இன்னும் என்னென்னவோ.

"மூவாயிரத்து இருநூறு மீட்டர் " என்றார் தலைமை அதிகாரி ஆங்கிலத்தில். வானொலி இணைப்பு துண்டிக்கப்பட்டதேயன்றி தரவுகளின் இணைப்பு சரியாக இயங்கிக்கொண்டு இருந்தது. இன்னும் தொண்ணூறு வினாடிகளில் வெற்றி அல்லது தோல்வி.

விண்கலத்தில் குமாரும், குப்தாவும் பதட்டம் நிறைந்த கணங்களைச் சுவைத்துக்  கொண்டிருந்தனர். ஐந்து சதவீதமே வெற்றிக்குச் சாத்தியக்கூறுகள் என்றிருந்தாலும்   தயக்கமின்றி இந்த சாகசத்தில் இறங்கினர் இருவரும். விண்கலத்தின் கணினித் திரையில் இப்போது நிலவின் பரப்பு மிகத் துல்லியமாகத் தெரிந்தது. முழு வெள்ளை மணல் பரப்பு, சில கற்கள், இறங்குவதற்கு உகந்த இடம். எழுநூறு மீட்டர் இருக்கையில் விண்கலம் சற்று தடுமாறியபோது இருவருக்கும் இருதயத் துடிப்பு அதிகரித்தது. சில வினாடிகளுக்குள் தடுமாற்றம் சரியாகி மீண்டும் விண்கலம் இறங்கியது. முந்நூறு மீட்டர்..நூற்று ஐம்பது..எழுபது..முப்பது..வெற்றி!!!!. 

நிலவின்மேல் தரையிறங்கியது இந்திய கலம். இதிகாசம் அன்று படைக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானவர்களின் உழைப்பு, கோடி மக்களின் கனவு, இதோ இப்போது நினைவானது. இருவரும் சில மணித்துளிகள் உட்கார்ந்த இடத்திலேயே அமர்ந்திருந்தனர். குமார் மெதுவாகக் கட்டுப்பாட்டுப் பலகையில் இருந்த மஞ்சள் நிற பொத்தானை மீண்டும் இயக்கினான். தரைக் கட்டுப்பாட்டு நிலையத்துடன் மீண்டும் வானொலி இணைப்பு ஆரம்பிக்கப்பட்டது. 

தரைக் கட்டுப்பாடு நிலையத்திற்கு நிலவின்மேல் இந்திய கலம் வெற்றிகரமாகத் தரையிறங்கிய செய்தி மூன்று நிமிடங்களுக்குப் பின் கிடைத்ததும் ஆரவாரங்கள் வெடித்தன. நிலையத்தில் குதூகலம், அதிகாரிகள் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து செய்திகளைப் பரிமாறிக்கொண்டனர். பிரதமரைப் பலர் வாழ்த்தினர். இரண்டாம் முயற்சியில் நிலவை வென்றது இந்தியா. இருபது ஆண்டுகள் முயன்று பல பொறியியல் சிக்கல்களைக் கடந்து, முதல் தோல்வியின் துயரத்தைத் தாண்டி, கற்ற பாடங்களை நினைவில் வைத்துக்கொண்டு நம்பிக்கையுடன் முயன்றதன் வெற்றி இது. ஆகா ! என்ன தருணம். உலகிற்கு இந்தியாவின் தொழில்நுட்ப மேன்மையையும், அறிவுத்திறனையும் உணர்த்தும் நிகழ்ச்சி. வறுமையில் வாடிக்கிடப்பவர்கள் இருக்கும்போது நிலவு பயணம் எதற்கு என முகம் சுளித்தவர்களின் தலையில், "ஏனென்றால் எங்களால் முடியும்" என்ற பெரிய குட்டு.  

ஆரவாரங்கள் அடங்க சில நிமிடங்கள் ஆனது. மேலவையில் பிரதமரிடம் ஒரு அதிகாரி வந்து ஒரு நாணயத்தைக் கையில் கொடுத்து,

"யார் முதலில் தரையிறங்கப் போகிறது என்பதை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும்" என்றார். பிரதமருக்குப் புரிந்தது.

"ஏஹ் சஹியே க்யா (இது தேவையா?)?" என்றார் ஹிந்தியில்.

"இருவரும் சமமாகத் தகுதி உடையவர்கள். அதனால்தான் இது தேவை" என்றார் அதிகாரி. 

"டீக் ஹை (சரி) " என்று நாணயத்தைக் காற்றில் சுண்டுவதற்கு முன் அந்த அதிகாரி, 

"தலை விழுந்தால் குப்தா" என்றார். சிரித்துக்கொண்டே பிரதமர் நாணயத்தைக் காற்றில் சுண்டி உள்ளங்கையில் பிடித்துத் திறந்தபோது பிரதமரின்  முகம் சற்று சுருங்கியது. விழுந்தது பூ. குமரனுக்குத்தான் அன்று மச்சம்.

"குமார் நீங்கள் முதலில் இறங்கலாம்" எனத் தரைக் கட்டுப்பாட்டிலிருந்து ஆணை பிறப்பிக்கப்பட்ட மூன்று நிமிடங்களுக்குப் பிறகு குமார் மற்றும் குப்தாவின் தலைக்கவசத்தில் இந்த குரல் ஒலித்தபோது குமாருக்குப் பூரிப்பு, குப்தாவிற்குச் சிறிது நிராசையென்றாலும், குப்தா அதைக் காட்டிக்கொள்ளவில்லை. மெதுவாக விண்கலத்தின் கதவைத் திறந்தார்கள். என்ன காட்சி அது!! நிலவு, பிரமாண்டமான வெள்ளை வெறுமை, கரடுமுரடான மணல் பரப்பு. கோயம்புத்தூரில் பிறந்த குமார் எத்தனையோ நாட்கள் வீட்டின் மாடியிலிருந்து நிலவைப் பார்த்திருக்கிறான். இந்திய விமானப்படை வீரனாக முதலில் தேர்ச்சிபெற்று பின்னர் விண்வெளி பயணத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது அவன் மனதில் உதித்த ஆசைகள், உணர்ச்சிகள் ஏராளம். ஐந்தாண்டுகள் அமெரிக்கா, ருஷ்யா போன்ற நாடுகளில் கடும் பயிற்சிக்குப் பின் இப்போது....

மெதுவாக ஏணியில் இறங்க ஆரம்பித்தான் குமார். ஒன்று ..இரண்டு... மூன்று  வலது கால்தடம் நிலவின்  மேல் படிந்த தருணம் சொல்லமுடியாத உணர்ச்சிகள். விண்கலம் நின்றிருந்த பக்கத்திலிருந்து திரும்பி நிலவின் பரப்பை சில மணித்துளிகள் மெதுவாகப் பார்த்துக்கொண்டிருந்தான். அப்போதுதான் குப்தா மெதுவாக இறங்குவது தெரிந்தது. கால்களை உயர்த்தி நடக்க முயன்றபோது ஈர்ப்பு சக்தியில்லாததால் பறக்க ஆரம்பித்தான். திரும்பிப் பார்த்தபோது குப்தாவும் இறங்கிவிட்டது தெரிந்தது. குப்தாவிற்கும் பூரிப்பு. மெதுவாக நிலவில் இருவரும் நடந்தனர். அந்த தருணங்களை எப்படி விளக்குவது?. குப்தா திடீரென நின்றான். தலைக்கவசத்திற்குள் அவர்கள் இருவருக்குள் மட்டும் பேசப் பொருத்தப்பட்டிருந்த வானொலியில், 

"போலோ, குச் போலோ (பேசு, ஏதாவது பேசு)" என்றான். அப்போதுதான் தரையில் எல்லோரும் தன் குரலைக் கேட்கக் காத்திருப்பது நினைவுக்கு வந்தது. தரை கட்டுப்பாட்டு நிலையத்துடன் என்ன பேசலாம் என்பதைப் பற்றி யோசிப்பதற்குள்,

"குமார் ஜி, பத்தாயி ஹோ ! கைசா லக் ரஹா ஹை சந்த்? (குமார் அவர்களே!, பாராட்டுக்கள் !! எப்படி இருக்கிறது நிலவு?)" என்றார் பிரதமர். 

அப்போதுதான் தர்ம சங்கடம் ஆரம்பமானது. குமார் இத்தருணத்திற்காகத் தன்னை தயார்ப் படுத்திக்கொள்ளவில்லை. உடலாலும், அறிவாலும் தன்னை விண்வெளிப்பயணத்திற்கு தயார் படுத்திக்கொண்டாலும் இத்தருணத்தில் என்ன பேசவேண்டும் என யோசிக்கவில்லை.என்ன சொல்லலாம் என்பதைவிட முக்கியமாக எந்த மொழியில் சொல்லலாம் என்ற எண்ணம்தான் குமாருக்கு.  ஹிந்தி பேசத் தெரியாதவன் அல்ல குமார். ஆனால் அத்தருணத்தின் உணர்ச்சிகளால் ஹிந்தி வரவில்லை. என்ன பேச வேண்டும்? , தமிழில் பேசினால் பிரதமருக்குப் புரியாது, ஒருவேளை "இன்ஹே வொஹி சோட் தொ (அவனை அங்கேயே விட்டு விடு)" என்று கட்டளை பிறப்பித்து  விடுவாரோ? சே! அப்படியெல்லாம் ஆகாது. ஆனால் தமிழில் பேசினால் நிச்சயம் அவருக்குப் புரியாது. ஆங்கிலத்தில் பேசிவிடலாமா என யோசித்தான். உலக மக்கள் என்ன நினைப்பார்கள்? இந்தியாவிற்குச் சொந்த மொழிகளே இல்லையா? ஏன் ஆங்கிலம் ? கூடாது. ஐயோ! என்ன செய்யலாம்? இதற்குப் பதில் குப்தாவையே முதலில் இறங்க விட்டிருக்கலாம் அவன் ஏதாவது சொல்லியிருப்பான். முக்கால் மணிநேரத்திற்குள் சுவாசக்காற்று காலியாகிவிடும் நிலையில் வேலைகள் நிறைய இருந்தன. ஆ ! என்ன சங்கடமிது?. 

அத்தருணத்தில் அண்ணாந்து விண்வெளியைப் பார்த்தான் குமார். பூமியிலிருந்து நிலவைப் பார்த்தபோதெல்லாம் அவனுக்கு ஒரே வரிதான் ஞாபகம்  வரும். தன்னையும் அறியாமல் தலைக்கவச தொலைப்பேசியில், 

"ஐய! திங்கள் குழவி! வருக! என யான் நின்னை
அம்புலி காட்டல் இனிது"  என்றான். 

மெதுவாகத் தலைக்கவசத்தில் பொருத்தப்பட்டிருந்த கேமராவை குப்தாவின் விண்வெளி உடையின் வலது தோள்பட்டையில் நெய்யப்பட்டிருந்த இந்தியத் தேசியக் கொடியின் பக்கம் திருப்பி, கேமெராவிற்கு தெரியும்வண்ணம் இரண்டு கை விரல்களையும் சேர்த்து இருதயம் போல சமிஞை சேய்தான். அதன் பின், 

தரையிலும் அமைதி, நிலவிலும் அமைதி. 
Series Navigationஎட்னா எரிமலையின் சீற்றம்!Thug Life திரைப்படம் – என் குறிப்புகள்
author

ஆர் சீனிவாசன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *