புதுமனை

This entry is part 35 of 44 in the series 15 ஏப்ரல் 2012

நாய்களிரண்டு கூடி
குலாவியிருந்ததன்
சாட்சியாய் புதிதாய்
பிரசவித்த குட்டி
நான்கின் ஊழைக் கதறல்

நிழலுக்கும் வாசத்திற்கும்
ஒதுங்கும் ஊர்க்குருவிகள்
அவ்வப்போது மலம்
கழிக்க வந்து போகும்
கருத்த பூனையொன்று.

போவோர் வருவோரென
அத்தனை பேரின்
மூத்திரத் துளிகளை
உள்வாங்கி செரிக்கும்
தளமும் சுவரும் .

சிறார்கள் ஆடியும்
ஓடியும் ஒளிந்தும்
சேர்த்து வைத்த
சந்தோசச் சப்தங்கள்
உலாவரும் நடுநிசிப்
பேய்களின் கூட்ட அரங்கம்.

துரத்தப்பட்ட அத்தனை
அகதிகளின் விலாசத்தை
விழுங்கி உயரே நிற்கிறது
புதுக்கட்டிடமொன்று-
நாளை நான்கு பேருக்கு
புது விலாசமாக.

-சோமா (sgsomu@yahoo,co.in)

Series Navigationதீபாவளியும் கந்தசாமியும்அன்பெனும் தோணி

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *