சிறகு இரவிச்சந்திரன்.
பசியோடு, மலையாளக்கரையோரம் ஒதுங்கும், தமிழ் பாடும் குருவிக்கு, புட்டும் கடலைக் கறியும் வைத்தால் எப்படியிருக்கும்? பசிக்கு கொஞ்சம் உள்ளே போகும். அடங்கியவுடன் புறந்தள்ளும். இட்லி வடை கிடைக்காதா என்று ஏங்கும். அப்படி இருக்கிறது படம்.
சந்தோஷ் சிவன், பிரபு தேவா, ப்ருத்விராஜ், ஜெனலியா, வித்யா பாலன். பெத்த பெயர்கள். சிறந்த ஒளிப்பதிவு, சோடை போகாத நடிப்பு. ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும் நோ பீஸ் ஆப் தமிழ் மணம்.
கேரளக் கரை. பதினைந்தாம் நூற்றாண்டுக் கதை. ஆனாலும் கர்ணனையும் கட்ட பொம்மனையும் ரசித்த அளவிற்கு ரசிக்க முடியவில்லை. படத்தோடு ஒன்ற முடியவில்லை என்பது கசப்பான நிஜம்.
நிகழ்காலத்தில் ஆரம்பித்து, பின் நோக்குக் காட்சிகளாகப் பயணிக்கிறது படம். அதே கதாபாத்திரங்கள், கால மாற்றத்தால் எப்படி மாறி விடுகிறார்கள் என்பது ஒரு சுவையான கற்பனை. மண்ணுக்காக போராடிய கேலு ராயனார் ( ப்ருத்விராஜ்) நிகழ் காலத்தில் ஒரு எதிர்காலம் பற்றிக் கவலையில்லாத நவீன இளைஞன். அவனோடு தோள் கொடுக்கும் வவ்வாலி ( பிரபுதேவா) கிடைத்ததைத் தேட்டை போடும் சந்தர்ப்ப வாதி, ஆணுக்கு இணையாக போர் புரிய வல்ல அரக்கல் ஆயிஷா ( ஜெனிலியா) அறிவு பிறழ்ந்த பெண், சூழ்ச்சி மந்திரி தற்கால அரசியல்வாதி. மோகினி ( வித்யா பாலன் ) என்.ஜி.ஓ. காலமாற்றம் புதிய எண்ணங்களைத் தோற்றுவிக்கிறது. எல்லோரும் சுத்தமான தமிழில் தெளிவாகப் பேசுகிறார்கள். ஆனாலும் மனம் இது தமிழில்லை மலையாளம் என்று ஓரத்தில் குறளி போல் சொல்லிக் கொண்டே இருக்கிறது.
வாஸ்கோடகாமாவின் கப்பலும், அதில் பயணிக்கும் டச் ஆட்களும் சரியான தேர்வு. கடலில் கப்பல் மிதக்கும் காட்சிகள், கண்களை விட்டு அகலா போஸ்ட்கார்ட் படங்கள். பிரபுதேவா சண்டைக் காட்சிகளில்கூட நடன அசைவுகள். ( ‘சண்டை போட்டாய் சரி! அதற்கு ஏன் நாட்டியம் ஆடுகிறாய்?’) ப்ருத்விராஜுக்கு ராவணனிற்குப் பிறகு ஒரு நல்ல படம். முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். ஜெனிலியா வில்லாக வளைந்து, கண்களால் பேசி மயக்குகிறார். வித்யாபாலன் கௌரவத்தோற்றத்திற்கு கவுரவம் சேர்க்கிறார்.
நமக்குத் தெரிந்த உருமி, மேளம். இசைக்கருவி. அங்கே அது சுருள்கத்தி. சுருண்டதைச் சுழற்றினால், இரண்டு ஆள் நீளத்திற்கு பாய்கிறது. மனம் பிறழ்ந்த ஜெனிலியா உருமியைத் தொட்டவுடனேயே தெளிவது சினிமா லாஜிக். உருமி வரும் காட்சிகள் எல்லாம் சூப்பர். சரித்திரம் காமாவைத்தான் நினைவில் வைத்திருக்கிறது, கேலு ராயனாரை அல்ல என முடிகிறது படம்.
அவ்விட தேசத்துச் சரித்திரத்தை உலக மக்களுக்குக் கொண்டு செல்லும் நாட்டுப்பாசம் படம் முழுக்க துல்லியமாகத் தெரிகிறது. ஆனாலும் கயத்தாறு கட்டபொம்மனை, கண் முன்னே கொண்டு நிறுத்திய, சிவாஜி என்கிற நடிப்பு மேதை போல், இப்போது யாரும் இல்லை என்பதால், படம் மனதில் பதிய மறுக்கிறது.
படத்தை யாரும் பொறுமையாக பார்க்க முடியவில்லை. இடைவேளையில் பாதி கூட்டம் தப்பித்தது. மீதி கூட்டம் செல்போனை நோண்டிக் கொண்டிருந்தது. ஜெனிலியா, நித்யா மேனன், வித்யா பாலன் காட்சிகளில் மட்டும் நிமிர்ந்து உட்கார்ந்தது.
கலைப்புலி தாணு, சல்லிசாக வாங்கி, காசு பார்க்க எண்ணியிருப்பார் என்பது உறுதி ஆகிறது. ஆனாலும் காசு தேறுமா என்பது சந்தேகமே. என்னதான் வைரமுத்து வரிகள் என்றாலும் தீபக் தேவின் மெட்டுகளில் அநியாயத்துக்கு மலையாள வாடை. ஆனாலும் பின்னணி இசையில் சரக்கு இருப்பதை உணர்த்துகிறார். பல குதிரைக் காட்சிகள். ஆனாலும் ஒரு குதிரை கூட கால் தடுக்கி கீழே விழவில்லை. வாழ்க.
இரண்டரை மணிநேரப் படம். அரை மணிநேரம் குறைத்து இருந்தால் சீக்கிரமாக வாவது வீட்டுக்குப் போயிருக்கலாம். இடைவேளையில் தப்பித்த பத்து இருபது பேர் அதிர்ஷ்டசாலிகள்!
#
கொசுறு
சாலிக்கிராமம் எஸ் எஸ் ஆர் பங்கஜத்தில் ஏசி ஓடவில்லை. இங்கொன்றும் அங்கொன்றுமாக மின்விசிறிகள் மிதமான வேகத்தில் ஓடிக்கொண்டிருந்தன. நெற்றி வியர்வையைத் துடைத்துக் கொண்டிருந்ததில் பாதி நேரம் படம் தொடர்பற்றுப் போனது.
வடபழனி அருணாச்சலம் சாலையில் புதிதாக திறந்திருக்கும் கடை “ கருணாஸ் இட்லிக்கடை “ பெரிய சைஸ் இட்லிகளை வாழையிலையில் பறிமாறுகிறார்கள். இரண்டு வகைச் சட்னி, மிளாகாய்ப்பொடி எண்ணை, சின்ன வெங்காயம் சாம்பார் என்று அசத்துகிறார்கள். விலையும் சல்லிசுதான். ஒரு இட்லி 7 ரூபாய். விலைப்பட்டியலில் பார்த்தேன், புதினா தோசையும் உண்டாம்!
#
- காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரமிது!
- முள்வெளி அத்தியாயம் -11
- தங்கம் – 9 உலகத் தங்கக் குழுமம்
- தடயம்
- நாஞ்சில் கவிஞரின் நகைச்சுவைத்துளிகள்..
- காத்திருப்பு
- சந்தோஷ்சிவனின் “ உருமி “
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் 15
- தாகூரின் கீதப் பாமாலை – 16 கீத இசையின் தாக்கம்
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 22)
- மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (முதலாம் அங்கம்) அங்கம் -1 பாகம் – 4
- நான் செத்தான்
- நச்சுச் சொல்
- மாறியது நெஞ்சம்
- பாரதியும் பட்டுக்கோட்டையாரும்(பகுதி-4)
- ஜூன் முழுவதும் சென்னையில் வானவில் விழா!
- எஸ்.எழிலின் “ மனங்கொத்திப்பறவை “
- பஞ்சதந்திரம் தொடர் 46
- காத்திருப்பு
- இஸ்மத் சுக்தாய் – ஒரு சுயசரிதை
- சுற்றுச்சூழல் மாறுதல்களால் அழிந்த சிந்து சமவெளி நாகரிகம்
- விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் தொண்ணூற்றிரண்டு
- 2014 இல் இந்தியா அடுத்தனுப்பும் சந்திரயான் -2 தளவுளவி இறக்கத் திட்டத்தில் ஏற்படும் தாமதம்
- மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 28
- கேரளாவின் வன்முறை அரசியல்
- துருக்கி பயணம்-4
- அத்திப்பழம்
- கேரளாவில் சிபிஎம் தனது மரணச்செய்தியை எழுதிகொண்டிருக்கிறதா?