This entry is part 1 of 35 in the series 29 ஜூலை 2012

அன்றைய மழைக்கால முன்னிரவில்

அவளது நீண்ட நேரக் காத்திருப்பின் முடிவு

பேருந்துத் தரிப்பிடத்தில் தேங்கி நின்றதோர் கணம்

தாண்டிச் சென்ற எவரையோ அழைத்துப் பேசி

கூடச் செல்லுமுனது பார்வையின் கீழே

நழுவியதவளது பூமி

தெருவோரம் எவரோ வெட்டி வீழ்த்தியிருந்த

மரத்தினை நோக்கிக் கூடு திரும்பிய பட்சிகள்

இருளாய் வட்டமிட்ட அன்றைய இரவு

ஒரு சாத்தானின் உருவம் கொண்டது

அந்தகாரத்தில் உனது நடை

மீன்களின் நீச்சலை ஒத்திருந்தது

நீ எடுத்து வைத்த ஒவ்வொரு எட்டிலும்

நதிகள் உதித்தன

தண்ணீரில் தோன்றிய மலையின் விம்பத்தில்

தலைகீழாய் ஏறினாய்

வானவில் தொட்டில் அந்தரத்தில் ஆடிய

அம் முன்னந்திப் பொழுதில்

இதுநாள் வரையில் அவள் கண்டிருந்த

மேகங்கள், வெண்ணிலவு, நட்சத்திரங்களெல்லாம்

உன் காலடியில் நீந்தின

அந்தப் பயணத்தின் முடிவில்

இருவரும் பிரிந்துவிடுவதான உறுதி

தீர்மானமாயிற்ற பின்னரும்

உனக்காக மட்டுமே காத்திருந்தவளை

விழுங்கிய அம் மௌனச் சிலந்தி

நீர் வலைப்பின்னல்களின் மீது

இன்னும் ஊர்கிறது

இரவின் பனியோடு சொட்டுகிறது

எட்டுக்கால் பூச்சியின் ரேகைகள்

– எம்.ரிஷான் ஷெரீப்,

இலங்கை

Series Navigationபரிணாமம் (சிறுகதை)