ஆசாரப் பூசைப்பெட்டி

This entry is part 6 of 15 in the series 7 மார்ச் 2021

 

 

ஜோதிர்லதா கிரிஜா

 

(1.5.1989 மந்திரக்கோல் இதழில் வந்தது. அன்பைத் தேடி எனும் கவிதா பப்ளிகேஷன்ஸ்- இன் சிறுகதைத் தொகுப்பில் உள்ளது.)

 

       அனந்தராமனுக்கு அவனது அலுவலகத்தில் அப்படித்தான் பெயர். எப்படித்தான் பெயர்?

        “ஆசாரப் பூசைப்பெட்டி”

       அப்படி ஒரு பெயரைத் தன் அலுவலகத் தோழர்கள்  தனக்கு இட்டிருந்தார்கள் என்பது அனந்தராமனுக்கு வெகு நாள்கள் வரையில் தெரியாதிருந்தது. கொஞ்ச நாள்களுக்கு முன்னால்தான் தனக்கு அவர்கள் வைத்திருந்த கேலிப்பெயர் தெரிய வந்தது. அது கூட, யாரும் சொல்லி அவனுக்குத் தெரியவரவில்லை. மிகவும் தற்செயலாக.

        சிற்றுண்டிப் பொட்டலத்தை அவன் மேசை மீது வைத்துவிட்டுக் கை கழுவச் சென்றிருந்த நேரத்தில் அவன் எதிர் மேசைக்காரன் சம்பத், “பொட்டலத்தைப் பிரிச்சுப் பார்க்கலாமாடா?” என்று கேட்க, அவன் சகபாடிகள், “வேணாண்டா. அவன் சமாசாரந்தான் நமக்குத் தெரியுமே? எதுக்கு வீண் வம்பு?” என்றனர். சற்றே இரைந்த குரலில், “அவன் ஒரு முசுடுடா,” என்றான் யாதவமூர்த்தி.

        “அதென்னடா அப்படி ஒரு வழக்கம் அவன்கிட்ட? தான் கொண்டு வர்றதை யாருக்கும் ஒரு விள்ளல் கூடக் கொடுக்க மாட்டான். தானும் யார் கிட்டேருந்தும் வாங்கிச் சாப்பிட மாட்டான். விசித்திரமான ஆளுப்பா. நீயும் தரவேண்டாம், நானும் தரலைங்கிறது ஒரு கொள்கையா இருக்கலாம். ஆனாலும் காசு விஷயத்தில வேணா அப்படிக் கறாரா இருக்கலாம். டிஃபன் விஷயத்துல கூடவா!…சேச்சே. சரியான கட்டுப்பெட்டிப்பா அந்தாளு.” – இது சம்பத்.

        “நம்ம தாமோதரன் ‘ஆசாரப் பூசைப்பெட்டி’ ன்னு அவனுக்கு வச்சிருக்கிற பேரு ரொம்பப் பொருத்தமான பேருதாம்ப்பா. நீ என்ன சொல்றே?” – இது பெருமாள்.

       கை கழுவச் சென்றிருந்த அனந்தராமன் தன் பிரிவுக்குள் புகுவதற்கு முன்னால், தன் பெயரை யாதவமூர்த்தி சொன்னது காதில் விழுந்ததால் நின்று தற்செயலாய்க் கேட்க நேர்ந்தவைதான் இந்தச் சொற்பரிமாற்றங்கள்.

        அனந்தராமன் அப்போதுதான் வருகிறவன் போல் தொண்டையைக் கனைத்துவிட்டுத் தலையைக் குனிந்துகொண்டு பிரிவுக்குள் நுழைந்தான். அவன் என்றும் தன் சிற்றுண்டிப் பொட்டலத்தை மேசை மீது வைத்துவிட்டுக் கை கழுவச் சென்றதே இல்லை. இன்று என்னவோ தவறுதலாய்ப் பொட்டலத்தை எடுத்து முதலில் வைத்துவிட்டான்.

        அனந்தராமனைப் பார்த்ததும் அங்கே ஒரு பேசாமை விளைந்தது. அவன் தன் நாற்காலியில் உட்கார்ந்து பொட்டலத்தைப் பிரித்தான்.  அடுத்த கணத்தில் தோசையும் எள்ளு மிளகாய்ப்பொடியும் கலந்த வாசனை அங்கே பரவி அனைவரின் மூக்குகளையும் துளைத்தது. யாதவமூர்த்தி தயிர்சாதமும் எலுமிச்சங்காய் ஊறுகாயும் கொண்டுவந்திருந்தான். சம்பத் அரிசி உப்புமா.  தியாகு ரவை உப்புமா.  வெங்காயம் போடாதது. அதைச் சாப்பிடுவதை விடப் பட்டினி கிடக்கலாம் என்பது உப்புமாவை அவனோடு பகிர்ந்து கொள்ளும் நண்பர்களின் கருத்தாகும். ராகவசுந்தரம் எப்போதும் இட்லி. இட்லி பூப்போல இருந்தாலும், எண்ணெய் ஊற்றி எடுத்துவர மாட்டானாதலால், விழுங்கும் போது மென்னியைப் பிடிக்கும். தொட்டுக்கொள்ள வாகாக எதுவும் எடுத்துவரமாட்டான். அலுவலகத்தில் ஒரு சின்ன பாட்டிலில் சர்க்கரை எப்போதும் வைத்திருப்பான். அதிலிருந்து எடுத்துப் போட்டுக்கொள்ளுவான். சர்க்கரையைத் தொட்டுக்கொண்டு இட்லி தின்பதைப் பற்றி அந்தப் பிரிவில் இருந்தவர்களால் கற்பனை கூடச் செய்து பார்க்க முடிந்ததில்லை. சர்க்கரையைத் தொட்டுக்கொள்ள வைத்துக் கொள்ளுவானே ஒழிய,  நண்பர்களிடமிருந்து தினமும் ஊறுகாய், மிளகாய்ப்பொடி என்று கேட்டு வாங்கி இட்லிகளுடன் பிசிறிக்கொள்ளாமல் இருக்க மாட்டான். வாயைத் திறந்து கேட்பதால் கொடுப்பார்கள். ஆனால், இப்படி வீட்டிலிருந்து கொண்டுவராமல், ஒரு நாளைப் போல பிச்சைக்காரன் மாதிரிக் கைவிரிக்கிறானே என்று எல்லாருக்குமே அவன் மீது எரிச்சல்தான். இருந்தாலும் சேர்ந்து உட்கார்ந்து சாப்பிடுகிற வழக்கத்தைக் கடைப்பிடித்து வருவதால், யாரும் வெளிப்படையாய் முகம் கடுத்துக்கொன்டதில்லை.

        யாருடனும் நெருக்கமாய்ப் பழக்கம் வைத்துக்கொள்ளாத நிலையிலும் கூட, அனந்தராமனுக்கு இந்த விஷயங்கள் யாவும் நன்றாகத் தெரியும். மவுனம் காப்பவர்களுக்கே உரிய அசாத்திய உள்ளுணர்வும், செவிகளின் உன்னிப்பும் அவனுக்கு நிறைய உண்டு.

        அனந்தராமன் தோசையை விண்டு வாயில் திணித்துக் கொண்டான். எதிர் மேசையிலிருந்து கிளம்பிவந்த தோசை-கம்-மிளகாய்ப்பொடியின் மணம் தாக்கியதில் யாதவமூர்த்திக்கு நாவு உமிழ்நீரில் முழுகிப் போயிற்று. சம்பத் ஒரு பொறாமையுடன் அனந்தராமனை வெறித்தான். மற்றவர்களும் ஓர் ஆற்றாமையுடன் அவனைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

        “இவன் தினமும் நல்ல நல்ல டிஃப்னா எடுத்துக்கிட்டு வராண்டா. அதான் நம்மோட பங்கு போட்டுக்க இஷ்டப்பட மாட்டேங்கறான்.” – இது யாதவமூர்த்தி முணுமுணுப்பாய்ச் சொன்னது.

        “அது மட்டுமில்லேடா. அவன் சரியான ஆசாரக்காரன்னு நினைக்கிறேன். ஒரு நாளாவது நெத்தியில் திருநீறு இடாம வர்றானா பார்த்தியா? சரியான பார்ப்பான்!” – இது சம்பத் அவனுக்குச் சொன்ன பதில்.

        ‘பார்ப்பான்’ என்கிற சொல்லை மட்டும் தன்னை மறந்த கடுப்புடன்  சம்பத் உச்சரித்து விட்டமையால், அது அனந்தராமனின் காதுகளில் விழுந்து அவற்றின் மடல்களில் சிவப்பேற்றியது, ஆனால் அவன் தலையைத் தூக்கிப் பாராமல் கருமமே கண்ணாக இருந்தான்.

        ‘எனக்கு அறிவில்லை. இனிமேல் டிஃபன் கொண்டு வரக்கூடாது. இவங்க கொண்டுவர்றதெல்லாம், பெரும்பாலும் எண்ணெய்ப்பசையே இல்லாத உப்புமா, இட்லிதான். என்னிக்காவதுதான் தோசை. அடிக்கடி தயிர்நாதம்கிற பேரால  வெறும் மோர் சாதத்தைத்தான் எடுத்து வராங்க. என் டிஃபன் மேல ரொம்ப நாளாவே இவங்களுக்கெல்லாம் ஒரு கண்ணு. இனிமே நான் மோர் சாதம்தான் கொண்டுவரணும். காலையில டிஃபன் சப்பிட்டுடலாம் …’ அனந்தராமனின் எண்ணம் இப்படி ஒடியது.

       … மறு நாள் அனந்தராமன் தனது டப்பாவைத் திறந்த போது, அவனுடைய சகபாடிகள் பாதிச் சாப்பாட்டில் இருந்தார்கள். தலையாய வேலை ஒன்றில் அவன் ஈடுபட வேண்டி இருந்ததால் டப்பாவைத் திறப்பதில் தாமதம் விளைந்துவிட்டது.

       எல்லார் பார்வைகளும் சொல்லி வைத்தாற்போல் அனந்தராமனின் டப்பாவின் மீது படிந்தன.

       அட! மோர் சாதம்!

       “என்னப்பா, அனந்தராமா! நீயும் என்ன மாதிரி மோர் சாதம் கொண்டுவர ஆரம்பிச்சுட்டே?” என்று யாதவமூர்த்தி கேட்டுவிட்டு அனந்தராமனின் பதிலுக்கு ஆவலாய்ப் பார்த்தான்.

       அனந்தராமன் வாயைத் திறந்து பதில் என்று உச்சரிக்காமல் ஒரு புன்சிரிப்பை மட்டுமே தனது விடையாக அளித்தான்.

       யாதவமூர்த்தி விடவில்லை: “என்னப்பா பதில் சொல்லாம இருக்கே?” என்றான் விடாப்பிடியாக.

       “இனிமே என்னிக்கும் மோர் சாதம்தான்.”

       இப்போது எல்லாருடைய பார்வைகளுமே வியப்புடன் அவன் மீது விழுந்தன.

       “அதேம்ப்பா அப்படி? நாங்க கூட இப்பல்லாம் டிஃபன் கேட்டு உன்னைத் தொந்தரவு கூடச் செய்யிறதில்லியே?” என்றான் சம்பத்து.

       “அட, என்னப்பா, இப்பல்லாம்குறே? எப்பதான் நாம கேட்டு அவரு குடுத்திருக்காரு?” என்று ராகவசுந்தரம் கிண்டினான்.

       “அதான் தெரிஞ்ச விஷயமாச்சே! அவரு ரொம்ப சுத்தம். நாமல்லாம் குடுத்தா வாங்க மாட்டாரு. அவரு குடுத்தா நம்ம கிட்ட  வாங்கிக்க வேண்டி வருமே? அதனாலதான் குடுக்கவும் வேணாம், வாங்கவும் வேணாங்கறாரு,” என்றான் தியாகு.

       எப்போதும் கல் மாதிரி உணர்ச்சியற்று இருக்கும் அனந்தராமனின் முகம் அவர்கள் பேச்சால் முதன் முறையாக மாறியது. உதடுகள் துடித்தாற்போல் தோன்றியது உண்மையா அல்லது தனது கற்பனையா என்பதைத் திட்டவட்டமாய்த் தெரிந்துகொள்ள யாதமூர்த்தி அவனைக் கூர்ந்து பார்த்தான். இதற்குள் அனந்தராமன் இயல்பாகிவிட்டான். வழக்கம் போல் அவனது முகம் ஒரு மரத்தட்டு மாதிரி இருந்தது.

       அனந்தராமன் அவசரமாய் அள்ளிப் போட்டுக்கொண்டு கை கழுவ எழுந்து போனான்.

       “எங்கம்மா சொல்லுவாங்கடா – ஆசாரப் பூசைப் பெட்டி, அதன் மேலே தோசைப்பெட்டின்னு. இருக்க வேண்டியதுதான். அதுக்காக இப்படியா? அதுவும் இந்தக் காலத்துல? ஆஃபீசுக்குத் தனி டம்ப்ளர், ஸ்பூன் எடுத்துக்கிட்டு வர்றான். அதுலதான் கான்ட்டீன்ல காபியை வாங்கிக்கறான். …” என்று கூறிக்கொண்டு போன சம்பத்தை, “டவராவும் கொண்டுட்டு வராண்டா. அத்த விட்டுட்டியே?” என்று இடைமறித்துத் தியாகு சத்தம் போட்டுச் சிரித்தான்.

       கழுவுதொட்டியை நோக்கி நடந்துகொண்டிருந்த அனந்தராமனின் காதுகளை வந்தடைந்த அந்தச் சிரிப்போசை அவர்கள் தன்னைக் குறித்துத்தான் ஏதோ பேசிச் சிரித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று அவனை நினைக்க வைத்தது. அவன் ஒரு பெருமூச்சுடன் நடந்தான். …

       “ … இனிமே என்னிக்கும் மோர் சாதம்தான்னு சொன்னானே ஒழிய ஏன்னு சொல்லல்லே, கவனிச்சியா? திருப்பித் திருப்பி ரெண்டு வாட்டி கேட்டும் ஆளு வாயே திறக்கல்லே,” என்று யாதவமூர்த்தி வியப்புடன் சலித்துக்கொண்டான்.

       “அவன் தினமும் ருசியான டிஃபன்களா வகை வகையாக் கொண்டுட்டு வர்றான் – அடை, காஞ்சிபுரம் இட்லி, வெங்காய ஊத்தப்பம், சேவை அது இதுன்னு. நமக்கும் குடுக்காம சாப்பிட்றான். நாமோ உப்புச் சப்பில்லாத டிஃபனா எடுத்துக்கிட்டு வர்றோம். அதனால நம்ம கண்ணு பட்டு ஏதானும் ஆயிட்டா என்ன செய்யிறதுங்குற ஞானோதயம் வந்திருக்கும் அந்தாளுக்கு. அதான்.  வேற என்னடா காரணம் இருக்க முடியும்கறீங்க?” என்று ராகவசுந்தரம் எரிச்சலாய்க் கேட்டான்.

       அன்று தனது பிறந்த நாள் என்பதால் பிற்பகலில் யாதவமூர்த்தி எல்லாருக்கும் காபி வாங்கிக் கொடுத்தான். கான்டீலிருந்து வந்த காபியை வழக்கம் போல் தன் தம்ப்ளரில் ஊற்றச் சொல்லி எடுத்துக் குடிக்கலானான் அனந்தராமன். குடித்து முடித்ததும் தம்ப்ளரைக் கழுவி வைக்கலாம் என்கிற எண்ணத்துடன் அதை எடுக்க வந்த அந்தப் பிரிவைச் சேர்ந்த நான்காம் வகுப்பு ஊழியன் தம்பையாவை, “வேணாம்ப்பா. நீ எடுக்காதே. அதையெல்லாம் நானே கழுவிப்பேன்,.”  என்று அவசரமாய்த் தடுத்துத் தானே எடுத்துக்கொண்டு கழுவுதொட்டியை நொக்கி நடந்தான்.

        “இப்படி ஆசாரம் பார்க்கிறவன் கான்டீன் காபியை மட்டும் வாங்கிக் குடிக்கிறானே, அது எப்படிப்பா? தன்னோட ட்மப்ளரைக்கூட யாரும் தொடக் கூடாதுன்றானே! சரி…ய்யான மடிசஞ்சிப்பா!” என்று யாதவமூர்த்தி ஆத்திரமாய்ச் சொன்னான்.

       … இரவு எட்டு மணிக்கு வீடு திரும்பிய கணவனிடம், “டாக்டர் என்ன சொன்னார்?” என்று மைதிலி ஆவலுடன் விசாரித்தாள்.

       “ஆரம்ப நிலையிலேயே வந்துட்டதால கம்ப்ளீட்டா சரியாப் போயிடுத்துன்னு சொன்னார். இனிமே மருந்து சாப்பிட வேண்டாம்னும் சொல்லிட்டார்.”

       மைதிலி கண்களில் பொங்கிய நிம்மதிக் கண்ணீருடன் அவன் கையைப் பிடித்துக்கொண்ட போது, “மைதிலி! வேணாம். சரியாப் போயிடுத்துன்னு டாக்டர் சொல்லிட்டாலும், இன்னும் ஒரு அஞ்சாறு மாசத்துக்கு நீ என்னைத் தொட வேண்டாம்…” என்று அவன் அவளை மெதுவாக அப்புறப்படுத்தினான்.

        “அப்பா!” என்று வழக்கம் போல் தன் கால்களைக் கட்டிக்கொள்ள வந்த குழந்தையிடமிருந்து விரைவாக நகர்ந்து, “மைதிலி! இவனை எடு சொல்றேன். .. இன்னும் கொஞ்ச நாள் பொறுத்துக்கோடா. அதுக்கு அப்புறம் அப்பா உன்னைத் தூக்கி வெச்சுப்பேன். கடைக்குக் கூட்டிண்டு போவேன். எல்லாம் பண்ணுவேன். அப்பாவுக்கு இப்ப உடம்பு சரியில்லை பாரு,” என்றன்.

        கணவனுக்கு நம்பிக்கை அளிப்பதற்காக, “தொழுநோய் என்பது தீர்க்க முடியாத நோய் அன்று” எனும், வாசகம் உள்ள – மைதிலி சுவரில் தொங்கவிட்டிருந்த – சுவரொட்டி புதிய மெருகுடன் மின்னியது,

…….

      

                                                                                



 

 

 

Series Navigationஉப்பு வடைஊடகவியலாளர் ஜமால் கஷோக்ஜியின் கொலை – நடந்தது என்ன
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *