Posted in

இதற்கும் அப்பால்

This entry is part 2 of 37 in the series 18 செப்டம்பர் 2011


 

கதவில் பூட்டு தொங்கியது

யார் பூட்டியிருப்பார்கள்

காலையில் நான் தான் பூட்டினேன்

இந்த நாய்

நகர்ந்து தொலைக்க கூடாது

வாலை மிதித்துவிட்டேன்

நல்ல வேளை கடித்து தொலைக்கவில்லை

வீட்டில் வைத்தது வைத்தபடி

அப்படி அப்படியே இருந்தது

கலைத்துப் போட குழந்தையுமில்லை

துவைத்துப் போட மனைவியுமில்லை

அலமாரியிலிருந்து புஸ்தகங்களை எடுத்து

மேஜையின் மீது வைத்தேன்

தன்னைப் பற்றிச் சிந்திப்பது

ஞானத்தை பரிசளிக்கும்

ஆனால் ஊர் பைத்தியம் என

பட்டம்கட்டிவிடும்

வாசலில் பூனை கத்தியது

இரவு உணவில் பங்கு கேட்க

முன்பே வந்துவிட்டது போலும்

படுக்கையை விரித்தேன்

இனி என்னிடம் வாலாட்ட முடியாது

இவ்வுலகம் என்று

எப்போதும் போல்

நினைத்துக் கொண்டு படுத்தேன்

விடிந்ததும்

எவரிடம் கைகுலுக்கி

எவரைப் புகழ்ந்து பேசி

எவர் ஜோக்குக்கு

சிரிக்க வேண்டியிருக்குமோ

சாக்கடையில் குளித்துவிட்டு

சந்தனத்தை பூசிக் கொள்வது தான்

வாழ்க்கையோ.

Series Navigationதனிமனித உரிமையை நிலைநாட்டிய தீர்ப்புஇரண்டு கூட்டங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *