அதுவும் அவையும்!

This entry is part 22 of 37 in the series 18 செப்டம்பர் 2011

யாரங்கே
என
ஏய்த்துக்கொண்டிருந்தது அது
பசுத்தோல் நம்பி
மேய்ந்துகொண்டிருந்தன அவை

பாம்புக்கு வாலும்
மீனுக்கு தலையும்
காட்டிக்கொண்டிருந்தது அது
பாம்பென்று பயந்தும்
மீனென்று வியந்தும்
மாட்டிக்கொண்டிருந்தன யாதும்

வாங்கமாட்டேன்
வரதட்சனை யென
விழித்துக்கொண்டது வாலிபம்
வெள்ளையுஞ் சொள்ளையு மென
வேட்டியுஞ் சட்டையுமோ
பட்டும் பகட்டு மென
சேலையுஞ் சோளியுமோ அணிந்து
இளித்துக்கொண்டிருந்தது அது

இருமனம் இணையும்
திருமண நிகழ்வை
ஒருமனதாக யாவரும்
ஏற்றுக்கொண்டிருந்தும்
ஆணுக்கு வரவும்
பெண்ணுக்கு செலவுமென
மாற்றிக்கொண்டிருந்தது அது

சிலாகித்தும் சமாளித்தும்
சிரித்தும் மழுப்பியும்
சேர்த்து வைத்தது மணமக்களை
சில காலம் சென்றபின்
கேட்டு வைத்த தொரு கேள்வி
வேட்டு வைத்த தது வாழ்வில்:

கல்யாணத்துக்கு முன்
பேசிக்கொண்டபடி
காசுமாலையும்
கற்களற்ற அட்டியலும்
வாங்கிக்கொண்டு
வீட்டுக்குள் வா

துரத்தியடித்தது அது

எதிர்க்கத் திராணியும்
இணங்கத் தகுதியு மின்றி
மரத்து நின்றன அவை!

Series Navigationநகரத்து மாங்காய்..காரணமில்லா கடிவாளங்கள்

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *