இதுவும் அதுவும் உதுவும்

This entry is part 10 of 44 in the series 16 அக்டோபர் 2011

சும்மா இருக்கப்பட்ட நேரத்தில் நாலு அயல் மொழி கற்று வைத்துக் கொண்டால் ஏகத்துக்கு நல்லது என்று எல்லோரும் எக்காலத்திலும் சொன்னாலும் மெனக்கெட்டு வேற்று மொழி கற்பவர்களை ஒரு லேப் டேப் கம்ப்யூட்டர் துணையோடு எண்ணிப் பட்டியல் போட்டு விடலாம். ஆயிரம் பேர் உள்ள ஜனக் கூட்டத்தில் பத்து பேர் இந்திப் பிரசார சபாவில் ராஷ்ட்ர்ர பாஷா பரீட்சையில் ஜெயிக்க பாடப் புத்தகங்களோடு தினசரி சபைக்குப் போகிறவர்களாக இருப்பார்கள். பெரும்பாலும் இளவயது. கன்னையாலால் கடையில் விலை கேட்டு, பர்ஸில் இருந்து பத்து ரூபாய் எடுத்துக் கொடுத்து நாலு வாழைப்பழம் வாங்கிச் சாப்பிட்டான் என்பது போன்ற சிரமமான வாக்கியங்களை இந்தியில் கற்றுக் கொள்வதால் கன்னையாலாலுக்குக் கொல்லைக்குப் போகுமே தவிர இவர்களுக்கு குறிப்பிட்ட பிரயோஜனம் இருப்பதாகத் தெரியவில்லை. டெல்லி மும்பையில் வேலை கிடைத்துப் போனால்? போனால் என்ன? அங்கே பெட்டிக் கடையில் வாழைப் பழத்தைக் காட்டிக் கேட்டால் எடுத்துக் கொடுக்க மாட்டானா? என்னத்துக்கு கன்னையாவை இழுக்கணும்?

வீம்புக்கோ, பக்கத்து வீட்டில் வேறு மொழி பேசுகிற பெண் குடியேறினால் நப்பாசையோடோ சம்பந்தப் பட்ட மொழியைப் படிக்கிறவர்கள், எழுதக் கற்றுக் கொள்வதை விட நாலு வார்த்தை பேசுவதில் தான் அக்கறை காட்டுகிறார்கள். வடக்கில் இருந்து தமிழ் சினிமாவில் நடிக்க வருகிற நடிகைகள் இந்தப் பட்டியலில் வரமாட்டார்கள். சாப்பாடு, வணக்கம், தமிழ்நாடு, பிடிச்சிருக்கு என்று டிவி சானல் டிவி பேட்டிக்கு உபயோகமாக நாலு வார்த்தை கற்றுக் கொண்டால் தமிழ் இவர்களுடைய தெரிந்த மொழி பட்டியலில் சேர்ந்து விடும்,

இப்படி அவசரமாக மொழி கற்றவர்கள் பேசும்போது அந்த மொழிக் காரர்களுக்கு மொழி அதிர்ச்சி அவ்வப்போது ஏற்பட வாய்ப்பு உண்டு. பஞ்சாபி ராதா சலூஜா எம்.ஜி.ஆர் படத்தில் கதாநாயகியாக வந்து ’ஐயோ விடுங்க, அத்தை வெந்துடப் போறாங்க’ என்று சிணுங்குவது இந்த ரகம்.

அயல் மொழி தெரியாமல், இதுதான் அர்த்தம் என்று உத்தேசமாக அனுமானம் செய்து கொண்டு இருக்க, ஏற்படும் மொழி அதிர்ச்சி இன்னொரு மாதிரி.

தில்லியில் வங்கி அதிகாரியாக வேலை இட மாற்றம் கிடைத்துப் போனபோது பேங்க் லோனுக்காக வந்த கௌரவமான சர்தார்ஜி சொன்னது போல – ‘நான் இண்டர்கோர்ஸ் வரைதான் படிச்சிருக்கிறேன். மீதியை எல்லாம் சொந்தமா அனுபவிச்சுக் கத்துக்கிட்டேன்’. இண்டர்மீடியட் வகுப்பு தமிழ்நாட்டில் இல்லாமல் போச்சே என்று ஏக்கமாக இருந்தது.

அயல்மொழி உச்சரிப்பிலும் வார்த்தை, வாக்கிய அமைப்பிலும் சொந்த மொழிக்கு எவ்வளவு நெருக்கமாக இருக்குமோ அதைப் பொறுத்து அதிர்ச்சியின் அளவு கூடும் அல்லது குறையும்.

உதாரணத்துக்கு தமிழும் மலையாளமும்.

மலையாள மகாகவி உள்ளூர் பரமேஸ்வர அய்யர் பிறப்பால் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட குடும்பத்தில் பிறந்தவர். அவருடைய கவிதையில் ‘இடி முழக்கம்’ என்று கம்பீரமாக ஓர் இடத்தில் வந்ததைக் குற்றம் சொன்னார் ஒரு பிரபல மலையாள இலக்கிய விமர்சகர். ‘இடி நாதம்’ தான் சரியான வார்த்தைப் பிரயோகமாம்.

‘பரமேஸ்வர அய்யருக்கு மனதளவில் கவிதைக்குள் தமிழில் தான் இடி முழங்கியது. நாதம் என்பது வீணையை மீட்டினால் வருவது. மலையாளத்திலேயே நினைத்து மலையாளத்திலேயே அவர் கவிதை செய்திருந்தால் இடி இசை பாடி இருக்கும் என்று அந்த விமர்சகரிடம் சொல்ல வேண்டி வந்தது.

வீட்டில் தூங்கிட்டிருந்தேன் என்று மலையாளியிடம் சொன்னால் பேயைப் பார்த்ததுபோல் கலவரத்தோடு பார்க்கிறார். ’தூங்கி’ என்பது குறுக்கல் விகாரமாகத் ’துங்கி’ என்று அவர் காதில் விழுந்த்தே காரணம். துங்குதலானது தமிழில் தூக்குப் போட்டு உயிரை விடுவது என்று அறியப்படும்.

தூறல் நின்னு போச்சு என்று பாக்கியராஜின் படம் வந்த போது தமிழ்நாட்டில் ‘என்ன மாதிரி கவித்துவமான தலைப்பு’ என்று சிலர் சொன்னார்கள். கேரளத்தில் படம் வெளியிட ஏகப்பட்ட தயக்கம். ‘இதென்ன சார் டைட்டில்? எப்படி படம் பார்க்க வருவாங்க, முக்கியமா லேடீஸ்?’ என்று விநியோகஸ்தர்கள் சங்கடத்தோடு சிரித்தார்கள்.

காரணம் தூறல் என்ற சொல் தமிழில் சிறு மழை. மலையாளத்தில் காலைக் கடன்.

பழைய தமிழ்ப் படத்தில் சிவாஜி உருக்கமாக ‘அண்ணன் காட்டிய வழியம்மா’ என்று பாடிக்கொண்டு உடம்பு முழுதும் விதிர்விதிர்க்க நடக்க, கோழிக்கோடு சினிமா கொட்டகையில் படம் பார்க்க வந்த சேட்டர்கள் சேட்டையாகச் சிரித்தார்கள்.

‘இவ்வளவு பெரிய மனுஷர்.. இவருக்கு வழி காட்ட வேறே யாராவது கிடைக்கலியா? போயும் போயும் ..’ என்று மலையாளத்தில் குறைப்பட்டுக் கொண்டார்கள்.

அண்ணன் (அண்ணான்) என்றால் மலையாளத்தில் ஓணான்.

பாக்கியராஜின் இன்னொரு படத்தில் ஒரு மலையாளப் பாடல் வரும். சப்த ஸ்வர தேவி உணரு என்று தொடங்குவது. உணரு என்றால் தமிழ் அறிந்தவர்கள் உணர்ந்து கொள் என்று பொருள் கொள்வது சகஜம். இங்கே மலையாள உணருக்கு அது அர்த்தமில்லை. விழித்துக் கொள் என்பதே பொருள்.

இது கூடப் பரவாயில்லை. பாட்டு நாலு அடி முன்னால் போனதும் விழித்துக் கொண்ட சப்த ஸ்வர தேவியை இப்படி பிரார்த்திக்கும்.

என் கழிவில் ஒளிதீபம் ஏற்று.

தலையை ஆட்டி ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்த நண்பர் கேட்டார், ‘என்ன சார், கோபார் காஸ் சமாச்சாரம் போல் இருக்கே. மங்கலகரமா நெய் விளக்கு, மாவிளக்கு ஏத்தி கும்பிடாம. அது எதுக்கு லெட்ரின்லே இருந்து .. மலையாளப் பழக்கம் அவ்வளவு நல்லா இல்லீங்களே’.

என்ன செய்ய? கழிவு என்றால் மலையாளத்தில் திறமை. தமிழ்க் கழிவு அங்கே, சொன்னேனே, தூறல்.
888888888888888888888888888888888888888888888888888888888888888888888888

மொழி அதிர்ச்சி வேற்று மொழியில் தான் இருக்க வேண்டும் என்று இல்லை.

சகலமானதையும் கம்ப்யூட்டரிலேயே எழுதி எழுதிப் பழக்கமாகிப் போய், தாளும் பேனாவுமாக எழுத உட்கார்ந்தபோது ஏற்பட்ட மொழி அதிர்ச்சி.

அக்கன்னாவுக்கு மேலே ரெண்டு வட்டம் கிழே ஒரு வட்டமா அல்லது மேலே ஒரு வட்டம் கீழே ரெண்டு வட்டமா?

*********************************************************************************************

மணிக்கொடி காலத்துக்குப் பின் விஜயபாஸ்கரனின் ’சரஸ்வதி’ காலமும் அதன் பிறகு சி.சு.செல்லப்பாவின் ‘எழுத்து’ காலமும் தமிழ் இலக்கியத் தடங்கள்.

செல்லப்பா எப்பொழுதும் ‘எழுத்துவில்’ என்று தான் எழுதுவார். கேட்டால் அவருடைய பதில் –

நவரத்தினங்களில் ஒன்றான முத்தைப் பார்த்தால், முத்தைப் பார்த்தேன் என்கிறோம். முத்து என்ற பெயர் உடைய ஒருவரைச் சந்தித்ததைக் குறிப்பிடும்போது ‘முத்துவைப் பார்த்தேன்’ என்கிறோம். அது போல்தான் ‘எழுத்துவில்’.

அவர் ‘இதற்கும்’, ‘அதற்கும்’ என்பவற்றை ‘இதுக்கும்’, ‘அதுக்கும்’ என்று கையாண்டது என்னையும் பிடித்துக் கொண்டது.

என்னைப் பிடித்துக் கொண்ட இன்னொரு சொல்லாட்சி – ‘அவன்கள்’. படர்க்கை – பன்மை – ஆண்பால்.. ஒரு கும்பல். ‘அவர்களை’ என்று எழுதினால் மரியாதை கொடுத்தமாதிரி ஆகிறது.ஆகவே ‘அவன்கள்’.

‘பண்ணு’ என்ற பிரயோகம் நான் வளர்ந்த சூழலிலும் இல்லை. எழுத்திலும் இல்லை. ‘செய்’ தான் எப்போதும் (எப்பவும்). அதே போல், ‘மெல்ல’ தான். ‘மெள்ள’ என்று எழுதினால் ஏதோ கடமுடவென்கிறது.

அவை நிறைவாக நடந்த அரவான் இசை வெளியீட்டு விழாவுக்கு மூன்று மணி நேரம் முன்னதாகவே போய் அண்ணா நூலகத்தில் இதையும் அதையும் படித்துக் கோண்டிருந்தேன். கலைஞரின் பெயரைக் காலாகாலத்துக்கும் சொல்ல புது அசெம்பிளி கட்டிடம் வேண்டாம். இந்த நூலகம் போதும்.

நாடி வந்து வரவேற்ற பட இயக்குனர் வசந்தபாலனின் வரவேற்பு இதம். பத்து வருடம் முன் கதை சொல்ல வீட்டுக்கு வந்த முகம் இன்றும் அதே அடக்கமும், ஆர்வமும் நட்புமாக.

ராமகிருஷ்ணனோடும் ஜெயமோகனோடும் பேசிக் கொண்டிருந்தபோது (முக்கியமாக ராமகிருஷ்ணனின் ‘யாவரும்’ சொல்லாட்சி பற்றி) வ.பாலனும் கலந்து கொண்டார். அவர் விருப்பப்படி நால்வரும் சம்பிராதயமான புகைப்படத்தில் உறைந்தோம்.

பாட்டுக்களையும் முன்னோட்டத்தையும் பார்க்கும் போது பதினெட்டாம் நூற்றாண்டை கிட்டத்தட்ட சரியாக வ.பா படத்தில் கொண்டு வந்திருக்கிறார் என்று தோன்றுகிறது.

தமிழில் முக்கியமான micro-history படம் இதுவாக இருக்கலாம். பாரதிராஜா அழகாக ஆரம்பித்து திசைமாறிப் போன ‘நாடோடித் தென்றல்’ (19ம் நூற்றாண்டு) போலவோ, வரலாற்று அபத்தங்கள் நிறைந்த ‘மதராஸப் பட்டிணம்’ (20-ம் நூற்றாண்டு 1947 வரை) போலவோ அரவான் சறுக்கியிருக்க மாட்டான்.

ஒரு ஆம்னிபஸ் லோடு அளவு நபர்களை மேடையேற்றி ரெண்டே ரெண்டு வார்த்தை பேசச் சொல்வதை விட, படத்தோடு தொடர்புடைய நாலு பேர், வாழ்த்த நாலு பேர் போதுமே.

சில கவனிப்புகள் –

ஏஆர் ரஹ்மான் மொழிநடை மாறியிருக்கிறது. ரெண்டு நிமிஷப் பேச்சில் நிறைய ‘வந்துண்டு இருந்தேன்’ ‘ பார்த்துண்டு இருந்தேன்’..

எஸ்.ராமகிருஷ்ணன் கேன்ஸில் சர்வதேச பரிசு இந்தப் படம் பெறும் என்றார். அவர் கேனைச் சொன்னார் என்று நினைக்கிறேன். Cannes என்று எழுதி Kan என்று உச்சரிக்கப்படும் பிரஞ்சு ஊர்ப்பெயர் அது.

நிகழ்ச்சித் தொகுப்பாளர் வெண்ணிலா இலக்கியப் பரிச்சயம் உள்ளவர் என்று தெரிந்தது. சேக்‌ஷ்பியரின் கிளியோபாட்ராவை பாஸ்டஸ் என்ற கவிஞர் பாடலில் வடித்த வரிகளைப் போகிற போக்கில் குறிப்பிட்டார். அவர் கிறிஸ்டஃபர் மார்லோ ‘Helen of Troy’ பற்றி எழுதிய Doctor Faustus கவிதையைக் குறிப்பிட்டிருக்கக் கூடும்.

இன்னொரு தொகுப்பாலர் இயக்குனர் மனோபாலா சிறு பொறி தீயாவது போல் ஒரு வார்த்தைச் சிந்தனை இரண்டு மணி நேரப் படமாகிறது என்பதெல்லாம் சரிதான். உதாரணத்துக்கு பாரதிராஜாவின் ‘கிழக்கே போகும் ரயில்’ பிறக்கக் காரணம் ‘அம்பட்டன் மகன் கவிஞன்’ என்ற ஒன்லைனர் என்றபோது நெருடலாக இருந்தது. நாவிதர் என்ற தொழில் கௌரவத்தோடு கூடிய சொல் உண்டே.

Series Navigationபுரட்டாசிக் காட்சிகள்அலைகளாய் உடையும் கனவுகள்
இரா முருகன்

இரா முருகன்

Similar Posts

10 Comments

  1. Avatar
    பா. ரெங்கதுரை says:

    //கலைஞரின் பெயரைக் காலாகாலத்துக்கும் சொல்ல புது அசெம்பிளி கட்டிடம் வேண்டாம். இந்த நூலகம் போதும்.//

    நெஞ்சம் கொதித்திடுதே
    கருணாநிதியைக் கலைஞர் என்றால்

  2. Avatar
    Paramasivam says:

    The media does not like that credit to kalaignar.That is why they blackout the news of a function at this library where Hillary Clinton compared the library to world class libraries.Any visitor can understand the uniqueness.Even many people who criticise the construction of New Secretariat building never visited it.

  3. Avatar
    R.Karthigesu says:

    அயல்மொழி கற்றுக்கொள்வது பற்றிய உங்கள் உதாரணங்கள் சிரிக்க வைத்தன. “சப்த ஸ்வர தேவி உணரு” நான் அனுபவித்துக் கேட்கும் பாட்டு. இப்போது கெடுத்துவிட்டீர்கள். மலையாளத்துக்கும் தமிழுக்குமே இவ்வளவு வேடிக்கைகள் என்றால்.. வேறு அந்நிய மொழிகளில் இன்னும் வேடிக்கையாக இருக்கும். எங்கள் மலாய் மொழியில் air என்றால் என்ன தெரியுமா? தண்ணீர். எரியும் நெருப்பை அணைக்க நீங்கள் airதான் கேட்க வேண்டும்.

    ரெ.கா.

  4. Avatar
    gopi says:

    ambattan enbathe sariyana varthai endru ninaikiren athil ondrum izhivu illai.pirpadu vendumanal athu izhivana varthayaga mari irukalam.battan enbathu parpanai thane kurikiradhu athil enna izhivu.

  5. Avatar
    Kavya says:

    .//நிகழ்ச்சித் தொகுப்பாளர் வெண்ணிலா இலக்கியப் பரிச்சயம் உள்ளவர் என்று தெரிந்தது. சேக்‌ஷ்பியரின் கிளியோபாட்ராவை பாஸ்டஸ் என்ற கவிஞர் பாடலில் வடித்த வரிகளைப் போகிற போக்கில் குறிப்பிட்டார். அவர் கிறிஸ்டஃபர் மார்லோ ‘Helen of Troy’ பற்றி எழுதிய Doctor Faustus கவிதையைக் குறிப்பிட்டிருக்கக் கூடும்….//

    புரியவில்லை மோகன்.

    பாஸ்டஸ் என்று ஒரு கவிஞரா ? கேள்விப்பட்டதேயில்லை. பாஸ்டஸ் என்பதை நீங்கள் ஆங்கிலத்திலும் எழுதியிருந்தால் விக்கிப்பீடீயா அக்கவிஞரைப்பற்றிச் சொல்லித் தெரிந்து கொள்ளலாம்.

    செகப்பிரியரின் கிளியோபாட்ரா என்பது ஒரு பாத்திரம். ஆன்டனி அன்ட் கிளியோபாட்ரா என்பதே அன்னாரின் நாடகத்தின் பெயர். இதில் எப்படி கிளியோபாட்ராவைப் பாடலில் வடித்தார். அவளின் அழகையா? இல்லை ஆளுமையா ?

    உங்கள் ஊகம் குழப்பத்தை இரட்டிப்பாக்குகிறது. மார்லோவின் நாடகமே டாக்டர் பாஸ்டஸ். நாடக நாயகன் டாகடர் பாஸ்டஸ் ஓரிடத்தில் ட்ராய் ராணியைப்பற்றி அவளின் அழகின் கவர்ச்சியைப்பற்றிக் குறிப்பிடுவார். நாடகமே ஒரு கவிதை நாடகமாக்கும். அதில் என்ன தனியாக கவிதை பாடுவது? உங்கள் ஊகம் என்னவோ டாக்டர் பாஸ்டஸ் நாடகத்தைப்படித்தமாதிரி எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் தட்டுதடுமாறித் தவறாக எழுதியிருக்கிறீர்கள். படிக்கவில்லை என்பது தேற்றம்.

  6. Avatar
    GovindGocha says:

    ‘அம்பட்டன் மகன் கவிஞன்’ — இதில் என்ன நாகரீகச் குறைச்சல்…. அவர் சொன்னது பேச்சு மொழி… பேச்சு மொழியில் அன்று அம்பட்டன் என்று தான் சொன்னார்கள். அந்தக் கதைக் களம் கண்ட காலத்தில் இப்போது இருப்பது போல் பியூட்டி சலூன் கிடையாது.. அதுவும் அம்பட்டன் மகனை கதாபாத்திரமாக அதுவும் கதாநாயகனாக வைக்க, வெகுஜன வெற்றியும் தேவைப்படும் வியாபார சினிமா தளத்தில் வைக்க, மிகத் தைரியம் வேண்டும். அந்த தைரியம் இருந்ததற்கு பாரதிராஜவை பாராட்டிய தருணம் அது. அரசானையோ, ரிசர்ச் ஆர்டிக்களோ, ஒரு வேளை அம்பட்டன் என்று சொன்னால் தவறு.. இன்றும் பாரதிராஜா படங்களில் பலர் கி.போ.ரயிலை மற்றபடங்களை விட பாராட்டுவோர் உண்டு. என் சிறு வயதில், “… அம்பட்டன் கடையில உட்கார்ந்து என்ன பேச்சு…” என்பது சகஜமான வார்த்தைகள். ( நாவிதர் மட்டுமல்ல, “மருத்துவர், அழகு கலைஞர், முடிதிருத்துவோர் என்ற சொற்களும் உண்டு… “ அதுவும் போக, நாவிதன் என்ற பிரயோகமே வழக்கில் உண்டு…. )… இனங்களின் வலிகள் வாழ்க்கையில் இருக்கிறது…. அதை அந்த வார்த்தைகள் தாங்கி நிற்கிறது.

  7. Avatar
    Kavya says:

    சாதிகள், மேல், கீழ், இடையென்று எந்த நிலையில் இருந்தாலும், பொதுமக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் அச்சாதிகளைப் பெரும்பாலும் அவச்சொற்களாலே, தமுக்குள் பேசிக்கொள்ளும்போது, குறிப்பிடுவார்கள்.

    எ.கா

    பார்ப்பனர் அல்லது அந்தணர் – பாப்பான் (நிறைய சொல்வடை. மலையாளத்தில் கூட” பட்டர் பொட்டில்லா” )
    நாடார் – சாணான் (சாணான் புத்தி சான் புத்தி என்பது அவர்களைப்பிடிக்கதவர் சொல்வது)
    செட்டியார் – செட்டி (செட்டி கெட்டி என்பது ஒரு சொல்வடை)

    இப்படியாக தமக்குள் பேசுவது மனித சுபாவம். அவர்களுக்குள்ளாகவே பேசிக்கொள்ளும்போது எவரும் தடைபோட முடியாது. எப்படியும் பேசிக்கொள்ளலாம். ஆண்கள் பெண்களைப்பற்றி என்னன்ன அசிங்கமாகப்பேசிகிறார்களே தங்கள் அரட்டையில். அதே போலத்தான் நாவிதரை அம்பட்டன் என்று கோவிந்த கோசா வீட்டில் சொன்னது. அவர் வீட்டில் மட்டுமல்ல எல்லார் வீடுகளிலும்தான். இது தனிநபர்களின் அவர்களின் குடும்பங்கள், நண்பர் குழாம் போன்றயிடத்து வாழ்க்கை.

    பொதுமேடை, பொதுயிடம், பலரோடு சம்சாரிக்கும்போது, அவச்சொற்கள் தவிர்க்கப்படுகிறது. தவிர்க்கப்படவேண்டும்.

    அதே வேளையில், இலக்கியம், புதினத்தைக்காட்டும் சினிமா. நாடகங்கள், நாட்டுப்புறப்பாடல்கள் – இவை எந்தச்சமூகத்தில் எந்த பாத்திரங்களின் உரையாடல்களை நமக்குக்காண்பிக்க விழைகின்றன‌வோ அப்பாத்திரங்களின் அச்சமூகத்தின் இயல்பான சம்பாசனையைக்காட்டுவதே இலக்கியத்தின் கடமையும் சிறப்பும் ஆகும். எக்காலத்தைக்காட்டுகிறதோ அக்காலத்தின் கண்ணாடியது. அப்பாத்திரங்களின் சம்பாஷணை அதை எழுதியவரின் கொள்கையாகக் கொள்ள முடியாது.

    மனோபாலா பேசியது பொதுமேடை. அவர் சொன்ன தீமே அத்திரைப்படத்தின் அச்சாணி என்பது உண்மை. ஆனால் அதை அவர் நாவிதன் என்ற பதத்தைப்பயன்படுத்திச் சொன்னால் கேட்பவர்களுக்குக் கண்டிப்பாகப் புரியும்தானே ? அவர் அப்படிப் பேசும்போது, அவரின் புத்தியே இப்படி ஈனப்புத்தியென்றுதான் சொல்லவைக்கிறது. ஏனெனில், அவர் அப்படிப்பேசி விட்டு, மற்றவர்களின் பேச்சு என்று சொல்லமுடியாது. அவர் கற்றகல்வியினால் யாது பயன்? கற்றபின் நிறக அதற்குத் தக. அவர் நிற்கவில்லை.

    எனவே மோகனின் ஆதங்கம் மிகச்சரி.

  8. Avatar
    GovindGocha says:

    காவ்யா, மனோபாலா சொன்னது, கதை தேடல் நேரத்தில் சொல்லப்பட்ட சொற்றொடர். ( உங்களுக்கு ஒரு தகவல் – நான் முற்பட்ட வகுப்பினன் அல்ல. ). மனோபாலா, பாரதிராஜாவின் தலையாய அக்கால உதவி இயக்குனர். ரொம்ப இலகுவான யதார்த்த மனிதர். அவர் தெளிவாக சொல்லியிருக்கிறார் – தீப்பொறிய ஆக….. என்ற பதம். தீப்பொறிகள் உரசலில் வருவது… அந்த வார்த்தை அக்னி கிளப்பியது… ஒரு வேளை கதைத் தேடலின் போது, “.. ஒரு சிகை அழகு கலைஞர் , கவிஞர் ஆன கதை… “ என்றோ, ஒரு “நாவிதர், கவிஞர் ஆன கதை..” என்றோ, ஒரு, “முடிதிருத்துவோர் , கவிஞர் ஆன கதை ..” என்றோ சொல்லியிருந்தால், அக்குழுவிடம் தாக்கம் வந்து அது கதைக்களனாக வந்திருக்காது…. அதத் தான் நான் சொன்னேன்…

  9. Avatar
    GovindGocha says:

    இந்த விவாதம் கூட, மனோபாலா, “ நாவிதர்…” என்ற சொல்லை உபயோகித்திருந்தால் வ்ந்திருக்காது. அப்படம் வந்த காலத்தில், ஒரு காட்சியில், “நாவிதர்” – தொட்டுக்க என்ன இருக்கு என்று தனக்கு தூக்குப்போணியில் சோறு கொண்டு வந்த பாஞ்சாலியிடம் கேட்க, அவள் “என்ன வேணாத் தொட்டுக்க,,,” என்று சொல்ல அவன் தொட… அதில் அழகாக ஜாதி வேற்றுமை தொடுதல் நிலை பற்றி சொல்லியிருப்பார் பாரதிராஜா… மேலும், தன்னைத் தேடி , “..நான் தேவர்..” என்று சான்ஸ் தேடி வருபவர்களிடம், “..அது என்ன தகுதியா…” என்று கேட்பவர். ஆனால் சிலர் தனது ஜாதியினரையே அதிக முன்னுரிமை கொடுப்பர்… ஆனால் ஜாதியில்லை அது இது என்று படமெடுப்பர்… மேடை காண்பர்….. >>> நீங்கள் அந்த தள நிலையில் விவாதம் செய்தால் நிறைய கிடைக்கும்… அதுவும் போக, கி.போ.ரயிலில் இரு முக்கிய நபர்கள் தாழ்த்தப்பட்ட வகுப்பினர்… அவர்களுக்கு தெரியாத சொற்றொடர் நிலையா…? அது ஒரு வேகமான தமிழ்திரை மாற்ற காலம்… அந்த அடித்தளத்தில் தான் இன்று நிறைய மாற்றங்கள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *