மனசா? உண்மையா?நம்பிக்கை. விளையாட்டுப் பிள்ளை

This entry is part 13 of 42 in the series 1 ஜனவரி 2012

அத்தை வீட்டுக்கு வந்திருந்தான் ஒரு சாமியாடி. அந்த சாமியாடிக்கிட்ட தங்களோட கஷ்ட்டங்களச் சொல்லி விடிவு காண வந்திருந்த கூட்டத்துல எப்படியும் ஒரு நூறு பேராவது இருந்திருப்பாங்க. சரி. இந்த சாமியாடிய கூட்டிட்டு வந்தது யாரு தெரியுமா? அவருதான் அத்தையோட மாமனாரு குட்டிக் கவுண்டரு. சாமி சொல்லரதெல்லாம் நெசமா இருக்குதாம். காணாம போன பொருட்கள கண்டுபிடிச்சுத் தருதாம் சாமி. தீராத வியாதிகளையெல்லாம் தீர வைக்குதாம். கேட்டவங்களுக்கு கேட்ட வரமெல்லாம் தருதாம். புள்ள வரம், பொண்டாட்டி வரம், புருஷன் வரம், மாமியாக்காரிய வசியம் பண்ண வரம் வசிய மருந்த எடுக்குரது, காணாம போன ஆடு மாடுகள கண்டு புடுச்சி தர்ரது, கொடுத்த கடன் திரும்ப கெடைக்க வழி சொல்லரது இப்படி பல வகை கவலைகளுக்கு பரிகாரம் செய்யரது, செய்வினைகள் இருந்தா வீடுகளுக்கு போய் பூசை போட்டு எடுக்கிறது என சாமியாடியின் அற்புத செயல்கள் பத்தி கேள்விப் பட்டு குட்டிக் கவுண்டரு தாத்தாதான் அத்த வீட்டுக்கு கூட்டி வந்தாராம் சாமியை. அவுங்க வீட்டிலையும் செய்வினை இருக்கரதா தெரிஞ்சி அத எடுக்கத்தான் தாத்தா கூட்டியாந்தாராம் அந்த சாமியாடியை. மை போட்டோ சொம்பு வச்சோ வாக்கு சொல்ல அனுமாரையோ பத்திர காளியையோ ஜக்கம்மாவையோ இப்படிஎதாவது ஒரு தெய்வத்தையோ அல்லது கூட்டு தெய்வங்களைக்கொண்டோ சாமியாடி பலப் பலஅதிசயங்களை நடத்துவதாக நம்புகிறது ஊர்.
நல்ல சிவம்னு ஒருத்தரு வந்திருந்தாராம். அவருக்குத்தான் அன்னைக்கி மொத வாக்காம். வந்தவரு {சாமி, என் பொண்டாட்டியோட நகை அஞ்சு பவுன காத்தாலகாணல. நேத்து அத அவ போட்டிருந்தத என் ரண்டு கண்ணால பாத்தேன் சாமி. இண்ணைக்கி காத்தால பாத்தா காணலையே?} என முரைப்பாடு செய்து {நகை கெடச்சா சாமி நானு உனக்கு செய்ய வேண்டிய மரியாதைய செஞ்சிபுடரேன் சாமி, ஒரு வெல்லாட்டுக் கெடா வெட்டி பொங்கலும் வைக்கிறேன்}னு வேண்டிக்கிட்டாராம். {என் ராசா கவல படாதரடா கண்ணே. நகை எங்கேயும் போயிடலடா பொன்னே. அது அடகுக் கடையில அம்முசமா இருக்குனு காளியாத்தா காட்டுராடா என் சாமி. உன் நகை நான் சொன்னாப்புல இல்லன்னாஆத்தா ஒரு காத அறுத்துப்பேன்னு சொல்லராடா தெய்வமே. இது அந்த காளியாத்தாமேல சத்தியமுடா சாமி. நீ ஊட்டுக்கு போடா. உன் நகைக்கு ஆத்தா கேரண்டிடா ராசா. இப்போ பொறப்படுடா சாமின்னு சொல்ல அவரும் பொரப்பட்டுப் போயி ஊட்டுல நகை காணாம பொனது பத்திய சங்கதிய ஊட்டுக்காரிக்கிட்ட சொல்ல அவளும் {அட கூரு கெட்ட மச்சான் நேத்துதான் எம் பொறந்தவன் அம்மாக்காரியோட வந்து நகைய அடகு வச்சித் தர சொன்னான். நானும் அவசரம்னு கேட்டதால பிரகாசம் கடைக்கு கூட்டிப்போய் நகைய வச்சி அவங்களுக்கு பணம் வாங்கித் தந்தனுப்பிச்சேன். கரும்பு ஆல ஆடி முடிஞ்சதும் மீட்டுத் தராங்களாம் கழுத்துச் செயினை. எங்கப் போவுது நக. அவங்க போட்ட நகை அவங்களுக்கு இல்லன்னா எப்படி நீயே சொல்லு மாமா?}என்றாலாம் வள்ளியம்மா.
நல்ல சிவம் என்ன பண்ணுவாரு பாவம். சொன்னபடியே சாமிக்கு எட்டு மொழ சோமமும் பட்டுத் துண்டும் அம்பத்து ஒன்னேகால் ரூபா காணிக்கையும் செலுத்தினதோட வெல்லாட்டுக் கெடாவும் வெட்டி பொங்கலும் வச்சி பத்து பேருக்கு சாப்பாடும் போட்டாராம். இல்லன்னா தெய்வ குத்தம் ஆயிடாதா பின்ன?
இது அத்த வீட்டாரு சொன்ன கதைகள்ளநூத்துல ஒண்ணு. இது மாதிரியான பல சங்கதிகள கேட்டதாலத்தான்னு நெனைக்கிறேன். சாமியாடிக்கிட்ட வாக்கு கேக்க வந்த கூட்டம் அண்ணைக்கி அவங்க வீட்டுல நெரஞ்சி வழிஞ்சிட்டு இருந்துச்சி.
எங்க அத்த சுலோசனாவுக்கு நாங்கன்னா அத்தன பாசம். நெசமாத்தான். தன்னோட புள்ளைங்களவிடவும் மேலான பாசம் அதுக்கு எங்கமேல. நானும் அக்காநீலவேனியும் அத்தைய எப்பவும் பெரியம்மான்னுதான் கூப்பிடுவோம். பொங்கலோ தீவாளியோ மாரியம்மன் பண்டிகையோ எந்த விசேஷமானாலும் எங்களுக்கு அத்தை புதுத் துளி எடுக்கும். போதா கொறைக்கு கட்டாயம் அத்தையோட ஊரான செக்கோடிக்கு தானே வந்து எங்களை அழச்சிட்டுப் போகும். பண்டிக முடிஞ்சி நாலு நாளைக்கு அப்புரம்தான் எங்க வீட்டுக்கு கூட்டி வந்து விடும். அப்போ எங்க அம்மாவும் அப்பாவும் ஊருக்கு போனவங்க அங்கியே இருந்துக்கவேண்டியதுதானே. எதுக்கு வரனும்? ஊட்டுல கால வைக்கக் கூடாது. வெளியே போங்கனு செல்லமா கோவிச்சிக்குவாங்க. நானும் அக்காவும் ஓஓஓ னுஒப்பாரி வச்சி அழுவோம். மால மாலையா நீளிக் கண்ணீரு வடிக்கிராங்க பாரு மூளி அலங்காரிங்கனு அம்மா கேலி செய்யும். அத்தைதான் சமாதானப் படுத்தும். பெரியவங்க கிட்ட நானும் அவளுங்கள கூட்டிட்டுப் போவுலன்னா அவங்க எங்கப் போவாங்க? அவங்களுக்கு உங்களையும் என்னையும் விட்டா யாரு இருக்காங்க? அதனால அவங்கள கேலி செஞ்சது போதும்னு சொல்லிட்டு பலகாரங்களையும் தின்பண்டங்களையும் அம்மாட்ட குடுத்துட்டு பொரப்படும். போரப்போ எங்களொட நெலைய நெனச்சி நெனச்சி கண் கலங்கும். கிளி மாதிரி புள்ளைங்கள ஆண்டவன் இப்படி ஒச்சமா படச்சிப்பிட்டானே? கடங்கார நாயி. அவனுக்கு கண்ணு இல்லையா? இது சாமி உனக்கே அடுக்குமா? என்றெல்லாம் புலம்பும் அந்த அத்தை மாரியம்மாத்தான் இப்படி ஒரு சாமியாடி வரப்போரான்னா சும்மா இருக்குமா என்ன?.
எப்படியாச்சும் எங்களுக்குகண்ணு வெளிச்சம் வராதான்னு ஏங்கிட்டு இல்ல இருக்கு அத்தை. சாமியாடி வரான்னு தெரிஞ்ச மொத நாளே எங்கள வந்து அவுங்க ஊட்டுக்கு கூட்டினு போச்சி அத்த. {சாமி நல்ல வாக்கு சொல்லனும். எங்க தம்பிப் பொண்ணுங்க கண் தொரக்கனும். அதுமட்டும் நடந்துச்சின்னா உனக்கு ஒரு கோயிலே கட்டரோம்} சாமி என்று வேண்டிக்கிச்சாம் அத்தை. மத்தியானம் வரைக்கும் வந்திருந்த பலஊராருக்கும் வாக்கும் குறிகளும் சொன்னான் அந்த சாமியாடி. அத்தைக்கோ ஒரே கவலை எங்களுக்கு வாக்கு சொல்லலியேன்னு. ஆச்சி, மத்தியான கஞ்சி நேரம் முடிஞ்சிச்சு சாமியாடி மத்தவங்களுக்கு கட்டு நாலு மணிக்கு மேலத்தான் இருக்கும்னு ஆத்தா சொல்லரா. அவ இப்போ மலை ஏரரா. ஆத்தா தன்னோட வயத்தையும் பாக்கவேணாமா?}என்று கூறி தன் வாக்கு பொழிவுக்குத் தர்க்காலிகமாய் ஒரு கார் புள்ளி போட்டான் சாமியாடி.
ஆச்சி நாலு மணி. ஊட்டுல இருந்த செவுரு கடியாரம் நாலு தபா அடிச்சி ஓஞ்சுச்சோ இல்லையோ. சாமியாடிக்கு மீண்டும் கட்டு வந்துடுச்சாம். எப்போடா சாமி கண் தெரக்கும்னு காத்திருந்த அத்தை எழுந்து நின்னு ?ஆத்தா தாயி மகமாயி இந்த புள்ளைங்களோட கட்ட நீ கொஞ்சம் கண் எடுத்துப் பாரு தாயின்னு சொல்லி சாமியாடி காலுல விழுந்துச்சி தடால்னு. என்ன நடந்துச்சி அப்புரம் தெரியுமா?
காதேல்லாம்செவுடாவுரமாதிரி ஒரு சத்தம். கிருஷ்ணவேனியாகிய நானும் அக்கா நீலவேனியும் சாமி போட்ட கூச்சல் சத்தத்துல பதரிப் பதரி பயந்தே போனோம். துள்ளித் துள்ளிவிழுந்து அலர ஆரம்பிச்சோம். அத்த மவ தொளசி தான் எங்கள கட்டிப் பூடுச்சி தண்ணி குடுத்து சாந்தப் படுத்தினா. அவதான் எங்களுக்கு புரியும்படியா சொன்னா. (அட அழுவாதிங்க புள்ளைங்களே, சாமி வந்துருக்கு. நீங்க அழுதா சாமி மலையேரிடும். அதனாலஅழுவக்கூடாது. சாமி ஒண்ணும் பண்ணாது. பயப்படாதிங்க) என்று எங்களுக்கு புத்தி சொன்னா. நாங்களும் ஒரு மாதிரி பயம் தெளிஞ்சி என்னா நடக்குதுன்னு கவனிக்க ஆரம்பிச்சோம். சாமியாடி எதோ தரையே பொளந்துப்புடரமாதிரி ஒரு நாப்பது அம்பது தடவதங்கு தங்குன்னு குதிச்சான். அத்த எங்கள அவன் முன்னால பய பக்தியோட நிருத்தி எங்களோட கைகள ஒண்ணு சேத்து சாமியாடிய கும்பிட வச்சா. அப்புரம் சாமி என் தம்பி புள்ளைங்களுக்கு கண்ணு வெளிச்சம் குடு தாயேன்னு எங்களுக்காக சாமியாடிய எங்க குல தெய்வமாகிய காளின்னு நெனச்சி வேண்டுனா.
சாமியாடியும் ஓ! ஓ! ஓ!ஓம் க்ளீம் ரீம் என என்னவோ மந்திரங்களையெல்லாம் சொல்லிகிட்டு எங்கள வேப்பலைக் கொத்தால அடிச்சான். அப்புரம் கொஞ்ச நேரம் என்ன பண்ணான்னு எங்களுக்கு தெரியல. அந்த எடம் திடீர்னு மழ பேஞ்சி ஓஞ்சமாதிரி சத்தமே இல்லாம இருந்துச்சி. அப்புரம் சாமியாடியே கேட்டான். (இந்த பொண்ணுங்களுக்கு எத்தன வருஷமா இப்படி இருக்கு? என்ன என்ன வைத்தியம் செஞ்சிங்க? நேத்திர கோளாருமட்டும்தானா?ஆத்தா கேக்குரா தாயி.)என்று இப்படி கேள்விங்கள அடுக்கினேபோனான்.
அத்த சாமியாடிக்கு பதில் சொல்லுச்சி இப்படி. (உனக்கு தெரியாததா ஆத்தா. எங்க கொறைகள எங்க வாயாலே கேட்டுப் பாக்கணும்னு உனக்கு ஆசையா தாயி. புள்ளைங்க பொரந்தப்போ மகாலட்சுமி மாதிரித்தான் இருந்திச்சிங்க. அப்புரம் மூனு வருஷத்துல மொதோ புள்ளைக்கு சின்னம்மா வந்துச்சி. கண்ணுல வெள்ள படந்துச்சி. பூ விழரமாதிரி இருந்துச்சி. என்னடா கண்ணு மூடினே போவுதுன்னு தாய் தகப்பன் போவாத ஆச்பத்திரி இல்ல. செய்யாத வைத்தியமில்ல. வேண்டாத தெய்வமில்ல. ஆஸ்பத்திரியில குடுத்த மருந்ததான் புள்ள கண்ணுல விட்டாங்க பெத்தவங்க. அது அதிகமா போயி புள்ள கண்ண முழுசா இருட்டாக்கிடுச்சி ஆத்தா. இதுதான் இப்படின்னால ரண்டாவது புள்ளைக்கு கண்ணுல சும்மா தண்ணி வருதுன்னு சொல்லி மொதோ புள்ள கண்ணுல ஊத்தன மருந்த ரண்டாவது புள்ள கண்ணுலையும் ஊத்திப்புட்டா ஆத்தாக்காரி. அப்புரந்தா தெரிஞ்சது அது கண் வர மருந்து இல்ல, கண்ண போக்கடிக்கிற மருந்துன்னு. நாங்களும் உங்கள மாதிரி சாமிங்க சொல்லர வைத்தியமெல்லாம் பண்ணோம். கண்ணுல நந்தியாவாட்டம் பூவ கசக்கி விடச் சொல்லுச்சி ஒரு சாமி. செஞ்சிப் பாத்தோம். ஒரு சாமி எதோ ஒரு ரொட்டித் துண்ட குடுத்து அத ராத்திரிக்கு ஒரு பாத்திரத்துல போட்டுதண்ணிய ஊத்தி ஊறவச்சிக் காலைல காப்பி குடிக்கிறமாதிரி அந்த தண்ணிய கொதிக்கவச்சி சக்கரை போட்டு ஒரு மண்டலம் குடிக்க குடுத்தா கண்ணு தெரக்கும்னு சொல்லுச்சி. செஞ்சி பாத்தோம். ஒண்ணுமே நடக்கல ஆத்தா. நீ எதாச்சும் நல்ல வழி காட்டு இந்த புள்ளைங்களுக்கு. உனக்கு கண்ணடகம் செஞ்சி வைக்கிறேன். வாரம் தவராம உன் சன்னதிக்கு கூட்டியாரேன். எப்படியாவது நல்ல வழி காட்டுத் தாயி. என்று அத்த சாமியாடிக்கிட்ட முரையிட்டுச்சி. அத்தனையும் கேட்டுட்டு சாமியாடி சொன்னான் இப்படி. (தாயி நான் என்னாத்தன்னு சொல்லட்டும் ஆத்தா. விதிய வெல்ல என்னாலையும் முடியாது. என் புருஷனாலையும் முடியாது. உன்னாலையும் முடியாது. உங்களப் படச்ச அந்த பிரம்மனாலையும் முடியாது. கண்ணு வரம் கேக்கரத உட்டுரு தாயி. இது இவங்கள பெத்தஅப்பனோட பெண் பாவம். உனக்கு தெரியாததில்ல தாயி. பெண்ணுக்கு செஞ்ச துரோகம் சும்மா உடுமா?அவ குடுத்த சாபம்தான் பொண்ணுங்களோட கண்கள அவுச்சிப்புடுச்சி. கவல படாத தாயி. இவங்கள கோல் குடுத்து நடத்தரது என்னோட பொருப்பு. நாம நெனைக்கிறதோட புள்ளைங்க மேலுக்கு போவாங்க. ராணிங்கள மாதிரி ராஜாங்கம் பாப்பாங்க. இது சத்தியம் அம்மா. ஆத்தா வாக்கு பொய் இல்ல தாயி. இப்போநான் சொல்லரது உன்னால நம்ப முடியாது. பொருத்து இருந்து பாரு தாயி. நடக்கிறத நீ உன் கண் குளிர பாப்ப. சாமி மலை ஏரரா வழி உடு தாயி. )
என்று சாமியாடி சொன்ன வாக்க அத்தையால நம்பவும் முடியல. நம்பாம இருக்கவும் முடியல.
அவங்க ஊட்டுல அண்ணைக்கி இராத்திரி செய்வினையை எடுத்தாங்களோ இல்லையோ அது எனக்கு தெரியாது. அத்தை எங்களுக்கு சாமியாடி சொன்ன வாக்குல திருப்தி அடையில போல இருக்கு. அண்ணைக்கி சாயங்காலமே எங்கள எங்க வீட்டுக்கு கூட்டிட்டு வந்து விட்டுட்டு போயிடுச்சி.
இப்போ நானு இதையெல்லாம் நெெனச்சிப் பார்த்து மனசுக்குள்ளவே ஒரு பசு மாதிரி இல்ல அசை போட்டுட்டு இருக்கேன்.

Series Navigationஎன்றும் மாறாத தமிழ் வெகுஜனப் பத்திரிகைச் சூழல்தி கைட் ரன்னர்
author

முனைவர். கோ. கண்ணன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *