இரவு விழித்திருக்கும் வீடு

This entry is part 9 of 34 in the series 6 ஜனவரி 2013

 

 

நீ கதிரறுக்கும் வயல்பூமியை மஞ்சளால் போர்த்திய

அம் மாலை நேரம் எவ்வளவு அழகாயிருந்தது

இறுதியாக செஞ்சாயத் தேனீரும் கறுப்பட்டித் துண்டும்

சுமந்து வந்து அருந்த வைத்த உன் மனைவியின்

காலடித் தடத்தில் முழுவதுமாக இருள் உறைந்த

உனது தற்கொலைக்கு முன்னதான அக் கணம் வரை

 

பயிர்களை விதைக்கையில் நீயெழுப்பிய இனிய கீதம்

அம் மலைச்சரிவுகளில் இன்னும் அலைகிறது

மேய்ப்புக்காக நீயழைத்துச் செல்லும் செம்மறிகள்

ரோமம் மினுங்க வந்து காத்துக் கிடந்தன

களைகளகற்றுமுன் வலிய கைகளை

நெடுங்காலமாய்க் காணா பூமி வரண்டிருந்தது

மூதாதையர் தோண்டிய கிணற்றில்

ஒரு துளி நீரிருக்கவில்லை

 

நிலம் வெடித்துப் புழுதி கிளம்பும் காலங்களில்

அயல்கிராமங்களுக்கு கல்லுடைத்துச் சீவிக்கச் செல்லும் சனம்

அனல்காற்றில் வெந்துருகிச் சில காசு பார்க்கும்

விவசாயம்தான் மூச்சென வீராப்பாய் நீயிருந்தாய்

 

தந்தையைத் தேடியழும் பாலகிக்கு எதுவும் தெரியவில்லை

நச்சுச் செடிகளுக்கென தெளிக்க வைத்திருந்த கிருமிநாசினியை

உன் குடிசைக்கு எடுத்து வருகையில்

மனைவிக்கும் தவறாயெண்ணத் தோன்றவில்லை

விதைக்கும் காலத்தில் சேற்று மண்ணில் நீ தூவிய விதைகள்

கடன்களாய் முளைத்திருந்தன

உன் எதிர்பார்ப்புக்களையெல்லாம் வெள்ளத்தில் சுமந்துசென்று

ஆற்றில் சேர்த்தது பருவம் கடந்து வந்த மழை

 

வெயிலின் முதல் கிரணம் முற்றத்தில் வீழ்ந்த

அன்றினது விடிகாலையில் உன்னோடு ஓய்ந்த பாடல்

எழவேயில்லை உன் வீட்டில்

எல்லோரையும் உறங்க வைத்த அன்றைய இரவு

விழித்திருந்தது என்றென்றும்

 

– எம்.ரிஷான் ஷெரீப்,

இலங்கை

Series Navigationமனத்தில் அடையாத ஒரு காகம்நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து……….. 11. கல்கி – விந்தனின் ‘முல்லைக்கொடியாள்’
author

எம்.ரிஷான் ஷெரீப்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *