‘ இளைய ராணியின் நகைப் பெட்டி’ 4

This entry is part 9 of 20 in the series 4 செப்டம்பர் 2016

4

 

ரூபவதியோட வாரிசுகளின் விலாசம் கிடைக்குமா என்று கேட்ட பரந்தாமனிடம்,

 

“ என்கிட்டே அந்த காகிநாடா விலாசம் இருக்குது.. எண்பது வருஷத்துக்கு முந்தினது.. அதை என் டைரியில் எழுதி வைத்திருக்கிறேன்” என்றார் சுதாகர் ராஜா.

 

“ நான் காகிநாடா போய் தேடிப் பார்க்கிறேன்.. போறதுக்கு பணம் மட்டும் கொடுங்க.. நான், அந்த வரைபடத்தை கண்டுபுடிச்சி எடுத்திட்டு வர்ரேன்..” என்றான் பரந்தாமன்.

 

“ என் கிட்ட ஆயிரம் ரூபாய் மட்டும் தான் இருக்குது.. உங்களோட பூஜைக்காக வைச்சிருந்தேன்.. அதை கொடுக்கிறேன். என்கிட்ட வேற பணம் கெடையாது.. அரண்மனையில பழைய காலத்து கலைப் பொருட்கள் கொஞ்சம் இருக்குது.. அதை  மதுரைக்கு கொண்டு போய் வித்து பணம் பண்ணி காகி நாடா போய் வாங்க…”

 

சுதாகர் ராஜாவும் அவர் மனைவியும், தங்கள் அரண்மனையில் இருக்கும் கலைப் பொருட்களை எடுத்து வந்து ஒரு இடத்தில் அடுக்கினார்கள்.

 

குத்தீட்டிகள், தந்த கைப்பிடியோடு கூடிய கத்தி, மர வேலைப்பாடு கொண்ட கலைப் பொருட்கள், பழைய அங்கிகள் இப்படிப் பட்ட பொருட்கள்…

 

எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு போய் விற்க முடியாது என்று தோன்றியது. குத்தீட்டிகளையும், பழைய அங்கிகளையும் விட்டு விட்டு மற்ற பொருட்களை மட்டும் தன் பெட்டியில் எடுத்து அடுக்கினான்.

 

 

துரைக்கு வந்து கையில் இருந்த கலைப்பொருட்களை விற்று பணம் பண்ண மேல மாசி வீதி, கீழ மாசி வீதி என்று  அலைந்தான். மிகக் குறைந்த விலைக்கு கேட்டார்கள். என்ன விலைக்கு அப் பொருட்கள் போகும் என்று அவனுக்கு தெரியாது. அதனால் அதிகம் பேரம் பேச முடியவில்லை. மொத்தம் இரண்டாயிரம் ரூபாய் கையில் கிடைத்தது. சுதாகர் ராஜா கையில் பணமாக கொடுத்த ஆயிரம் ரூபாயும் சேர்த்து மூவாயிரம் ஆனது. கையில் பணம் சேர்ந்தவுடன், வேறு மாதரியான யோசனைகள் வந்தன அவனுக்கு.

 

எண்பது வருஷத்துக்கு முந்தைய விலாசத்தை வைத்து அந்த ரூபவதியின் வாரிசுகளை கண்டு பிடிக்க முடியுமா.. எத்தனை குடும்பங்கள் ஆகி இருக்கும்.. எத்தனை வாரிசுகள் ஆகி இருக்கும்.. எந்த வாரிசுடன் அந்த வெற்றிலைப் பெட்டி போயிருக்கும்.. அப்படி ஒரு வெற்றிலைப் பெட்டி இருப்பதை கவனித்து இருப்பார்களா.. அதை வைத்து இருப்பார்களா.. தூக்கிப் போட்டு இருப்பார்களா.. அதில் அந்த வரைபடம் இருக்குமா..

 

இதெல்லாம் ஆகாத காரியம் என்று தோன்றியது அவனுக்கு.

 

காகிநாடாவுக்கு போவதில்லை என்று முடிவு செய்து கொண்டான்.

 

சென்னை வந்து, பூஜை நல்ல படியாக முடிந்தது என்றும், அந்த ராஜா மூவாயிரம் ரூபாய் காணிக்கையாக கொடுத்தாகச் சொல்லி, மெஸ் ஓனருக்கு ஆயிரம் ரூபாயும்,  ராமுவின் கடனுக்காக ஆயிரம் ரூபாயும் கொடுத்தான். மீதியை தன் கையில் வைத்துக் கொண்டான்.

 

நாட்கள் ஓடியது. சுதாகர் ராஜாவிடமிருந்து போன் வந்தால் எடுக்க மாட்டான்.

 

ஒரு நாள் சுதாகர் ராஜாவிடம் இருந்து அவன் ரூம் விலாசத்திற்கு உருக்கமாய் ஒரு கடிதம் வந்தது. தற்செயலாய் அங்கு வந்த ராமு அதை படித்து விட, விஷயம் தெரிந்து விட்டது.

 

“ நீ இப்படி ஏமாத்தினது சரியில்ல. உன்னுடைய திறமைக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு.. அந்த காகிநாடா விலாசத்துக்கு போய் தேடிப் பாரு.. எண்பது வருஷம் ஆயிடுச்சின்னு நெனச்சி விட்டுடாதே..  முயற்சி பண்ணி பாக்கலாம்.. நீ ஸ்கூல்ல முதலாவதா வந்தேன்னு சொன்ன பாரு.. அந்த திறமையெல்லாம் உபயோகிச்சி, இந்த வரைபடத்தை கண்டு பிடி.. நீ திறமைசாலின்னு மத்தவங்களுக்கு நிரூபிச்சி காண்பி.. காகிநாடா போறதுக்கு நான் பணம் கொடுக்கிறேன்.. பழைய கடனை பத்தி மறந்துடு..” என்றான் ராமு.

 

ராமு ஐயாயிரம் பணம் கொடுக்க, அதை எடுத்துக் கொண்டு காகிநாடா போனான் பரந்தாமன். நீண்ட அலைச்சலுக்கு பின் ரூபவதியின் குடும்பம் ஒன்று அங்கு இருந்ததாகவும், அவர்கள் ஹைதராபாத் போய் விட்டதாகச் சொல்லி தோராயமான ஒரு ஹைதராபாத் விலாசம் கொடுத்தார்கள்.

 

ஹைதராபாத்தின் நாம்பள்ளி ஏரியா. பரந்தாமனுக்கு கொஞ்சம் தெலுங்கு தெரியும். நாள் பூராவும் அலைந்து ஒரு இடத்திற்கு வந்தான்.

 

தோல் பொருட்கள் செய்யும் தொழிலாளர்கள் குடியிருக்கும் பகுதி. சுத்தமின்மையும், ஏழ்மையும் குடி கொண்ட பகுதி. சிறிய அளவிலான லெதர் பேக்டரி. அதற்கு மேல் மாடியில்  ஆஸ்பெஸ்டாஸ் தகடுகள் வேயப் பட்ட ஒரு குடித்தனத்தைக் காண்பித்தார்கள். கதவைத் தட்டினான். முக்காடு போட்டுக் கொண்டு ஒரு பெண்மணி வந்து கதவைத் திறந்தார்கள். உள்ளே வரும் படி அவனை அந்த பெண்மணி கூப்பிடவே இல்லை. . தான் வந்த விஷயத்தை தெலுங்கில் சொன்னான். ஆச்சர்யப் பட்டு போன அந்த அம்மா,

 

“ என் மகன் ஹாஸ்பிட்டலுக்கு டியூட்டிக்கு போயிருக்கிறான். சாயங்காலம் ஏழு மணிக்கு வருவான். அப்புறம் வாங்க..” என்று சொல்ல,

 

“ அந்த ஹாஸ்பிட்டல் அட்ரஸ் கொடுங்க.. நான் போய் நேர்ல பாக்கிறேன்..” என்றான் பரந்தாமன்.

 

அந்த அம்மா கொடுத்த விலாசத்தை வாங்கி படித்தான். டாக்டர் வெங்கட் என்று பெயர் போட்டு இருந்தது. ஒரு தனியார் மருத்துவ மனை விலாசம் அது. நடக்க ஆரம்பித்தான்.

 

வெங்கட்டின் அம்மா கீழே இருக்கும் தோல் பொருட்கள் தைக்கும் பாக்டரியில் வேலை செய்வதாகவும், அந்த பாக்டரிக்காரர்கள் அவர்களை மேல் மாடியில் தங்க அனுமதித்து இருக்கிறார்கள் என்றும் விசாரித்து தெரிந்து கொண்டான். வெங்கட் சமீபத்தில் தான், படிப்பு முடித்து டாக்டர் ஆனான் என்று சொன்னார்கள். எவ்வளவு சிரமப் பட்டு தன் மகனை டாக்டருக்கு அந்த அம்மா படிக்க வைத்து இருப்பார்கள் என்று ஆச்சர்யப் பட்டு போனான்.

 

டாக்டர் வெங்கட்டை தேடிப் போய் விஷயத்தை சொன்ன போது அந்த இளைஞனுக்கு கண்கள் விரிந்தன.

 

சுதாகர் ராஜாவிடம் இருந்து தனக்கு கடிதம் வந்ததிலிருந்து அனைத்து விஷயங்களையும் விவரித்தான் பரந்தாமன்.

 

“ என்னோட தாத்தா கைக் குழந்தையா இருக்கும் போதே அவங்க அம்மா, அதாவது நீங்க சொல்ற அந்த ரூபவதி பாட்டி இறந்திட்டதா சொன்னாங்க.. ரூபவதி பாட்டியோட அழகை பாத்திட்டு, அவரை மதுரைக்கு பக்கத்தில இருந்து வந்த ஒரு ராஜா கல்யாணம் பண்ணிக்கிட்டாருன்னு சொன்னாங்க..”

 

“ காகிநாடா தான் உங்களுக்கு பூர்வீகமா.. எப்ப காகிநாடாவில இருந்து உங்க குடும்பம் ஹைதராபாத்துக்கு வந்திச்சி..”

 

“ சுதந்திரம் கெடைச்சதுக்கு அப்புறமா இருக்கும்னு நெனக்கிறேன்.  என்னோட தாத்தாவை அவரோட தாய் மாமன் தான் வளர்த்ததா சொல்வாங்க..”

 

“ ரூபவதி பாட்டி கொண்டு வந்த பெட்டி, பொருட்கள்னு ஏதாவது உங்க வீட்ல இருக்கா..”

 

“ ஒரு பெட்டி ஒன்னு பரண்ல இருந்திச்சி.. வாங்க வீட்டுக்கு போய் தேடிப் பாக்கலாம்..”

 

வீட்டுக்கு வந்து தன் அம்மாவிடம் எல்லாவற்றையும் சொன்னான் வெங்கட்.

 

இப்படி ஒரு வரைபடம் அவர்களிடம் இருப்பதாக அவர்களுக்கு தெரியாது என்று வெங்கட்டின் அம்மா சொன்னார்கள்.

 

தன் அம்மா ரூபவதியின் ஞாபகமாக, அந்த ரூபவதி உபயோகித்த பொருட்களை தன் மாமனார் ஒரு இரும்பு பெட்டியில் வைத்து இருந்ததாகவும், அதில் ஒரு வேலைப்பாடமைந்த வெற்றிலைப் பெட்டி ஒன்று இருந்தது ஞாபகம் இருந்தாகவும் வெங்கட்டின் அம்மா சொல்ல சிமெண்ட் லாப்டில் ஏறி இருவரும் தேடினார்கள்.  அந்த இரும்பு பெட்டிக்குள்ளே ஒரு வெற்றிலைப் பெட்டி கிடைத்தது.

 

வெற்றிலைப் பெட்டியை திறந்து பார்க்கும் போது, உள்ளே ஒட்டப் பட்டிருந்த துணி பிரிந்து, ஏதோ பழுப்பு நிறத்தில் தெரிந்தது. அது  அவன் தேடி வந்த வரைபடம் தான்..

 

தன்னிடம் அந்த வரைபடத்தை கொடுத்து விடுமாறு அவர்களைக் கேட்டு, அவர்கள் தன்னை சந்தேகப்படும்படியான ஒரு சுழ்நிலையை உருவாக்க கூடாது என்று முடிவு செய்து கொண்டான் பிரபாகரன்.

 

அதற்கு இன்னொரு காரணமும் உண்டு. ரூபவதியின் ஆவி மேல் அவனுக்கு இருந்த பயம் தான் அது. ரூபவதியின் வாரிசான  இந்த டாக்டர் வெங்கட் வந்து அந்த நகைப் பெட்டியை  எடுத்தால் ரூபவதியின் ஆவி ஒன்றும் செய்யாது என்று நினைத்தான்.

 

“ நீங்களே வந்து அந்த மேப்பை வைச்சி நகைப் பெட்டியை கண்டு பிடிங்க.. உங்க  தாத்தா பாட்டியையும், அரண்மனையையும் வந்து பாருங்க..”  என்று சொன்னான்.

 

பரந்தாமனுக்கு அந்த அரண்மனை ஏற்கனவே பழக்கம் என்றாலும் அவனால் அந்த வரைபடத்தை புரிந்து கொள்ள முடியவில்லை. சுதாகர் ராஜாவும் புரியாமல் தடுமாற, டாக்டர் வெங்கட் எளிதில் புரிந்து கொண்டு அந்த நகைப் பெட்டியை எடுத்து விட்டான்.

 

அந்த நகைகளைப் பார்த்து அனைவரும் பிரமித்து விட்டார்கள். அதன் மதிப்பை போடமுடியாது என்று தோன்றியது.

 

அந்த நகைகளில் தனக்கு ஏதாவது பங்கு கிடைக்குமா என்று எதிர்பார்த்த பரந்தாமனுக்கு டாக்டர் வெங்கட் சொன்னது மிகுந்த ஏமாற்றத்தை கொடுத்தது.

 

“ இந்த நகைகளை நாம வைச்சுக்க போறதில்ல.. எங்க ரூபவதி பாட்டி கஷ்டப் பட்டது மாதரி, கஷ்டத்தில இருக்கிற விதவைப் பெண்களுக்காக இதை நன்கொடையா கொடுத்திடலாம்…” வெங்கட் சொன்னான்.

 

சுதாகர் ராஜா தம்பதியரைப் பார்த்து,

 

“ தாத்தா பாட்டியும் இதுக்கு சம்மதிக்கணும்..  நான் ஹைதராபாத்துக்கு உங்கள கூட்டிகிட்டு போகப் போறன். நீங்க எங்களோட இருந்திடுங்க.. நான் பாத்துக்கறேன்..” என்றான் டாக்டர் வெங்கட்.

 

பேரன் வெங்கட் தங்களை தாத்தா பாட்டி என்றதும், நான் உங்களைப் பார்த்துக் கொள்கிறேன் என்று சொன்னதும், சுதாகர் ராஜா தம்பதியினருக்கு புதிதாய் ஒரு உறவு வந்ததை உணர்த்தி, அந்த வறண்ட இதயங்களை துளிர்க்க வைத்தது. எந்த உறவும் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் அவர்களுக்கு, இந்த வயதில் தேவையானது பாசமும் அன்பும் கவனிப்பும் தான், நகைகள் அல்ல. சொல்லப் போனால் தன் தாத்தா நரசிம்ம ராஜாவின் விருப்பப் படி இந்த நகைப் பெட்டி ரூபவதிக்கும் அவளுடைய வாரிசுக்கும் தான் சொந்தமானது. அந்த ரூபவதியின் வாரிசு, வறுமையில் வாடிக் கொண்டிருந்தும், தனக்கு இந்த நகைகள் வேண்டாம் என்று கூறி விதவைப் பெண்களுக்காக கொடுத்து விடுகிறேன் என்று சொல்லும் போது, உரிமையில்லாத  தான் எப்படி நகைகள் வேண்டும் என்று கூற முடியும்..

 

சுதாகர் ராஜா இதற்கு சம்மதம் என்று சொல்ல, பரந்தாமன் என்ன சொல்கிறான் என்று கேட்க, அவன் பக்கம் திரும்பினான் டாக்டர் வெங்கட். உடனே பரந்தாமன்,

 

“ நகையில யாருக்கும் பங்கு இல்லைன்னு சொல்லிட்டீங்க.. எனக்கு வேற ஒரு உதவி செய்யணும்..” என்றான்.

 

“ சொல்லுங்க..” என்று டாக்டர் வெங்கட் சொல்ல,

 

“ இந்த நகைப் பெட்டி வரைபடத்தின் உதவியினால கெடைக்கல, என்னோட பரிகார பூஜையினால் தான் கெடைச்சதுன்னு வெளியில நீங்க எல்லாரும் சொல்லணும், அப்படிச் சொன்னீங்கனா, நான் பேமஸ் ஆயிடுவேன்.. அதுக்கு நீங்க உதவி பண்ணனும்..” என்று பணிவாய் கேட்டான் பரந்தாமன்.

 

“ பரிகார பூஜைன்னு பணத்தை கறக்கறது, மை போட்டு பார்க்கிறேன்னு சொல்லி ஏமாத்தறது, இதெல்லாம் எனக்கு பிடிக்காது.. உங்க டிமாண்டுக்கு நான் ஒத்துக்க மாட்டேன்.. இந்த தொழிலை விட்டுங்க.. நான் உங்களுக்கு என்னோட ஹாஸ்பிட்டல்ல வேற வேலை வாங்கித் தரேன்.. என்னோட ஹைதராபாத்துக்கு வாங்க..” என்றான் டாக்டர் வெங்கட் கண்டிப்புடன்.

 

பரிகார பரந்தாமன் வெப் சைட் மூடப்பட்டு, ஹைதராபாத் மருத்துவ மனைக்கு பரந்தாமன் போய்ச் சேர்ந்தான்.  கொஞ்ச நாள் கழித்து தன் நண்பன் ராமுவுக்கு அவன் போன் செய்த போது,  ஒரு நர்ஸ் பொண்ணை தனக்கு டாக்டர் கல்யாணம் செய்து வைத்து இருப்பதாகச் சொன்னான்.

 

-முற்றும்

————————————————————————————————————————

 

 

Series Navigationசூழல் மாசு குறித்த கவிதைகள் சில‘ இளைய ராணியின் நகைப் பெட்டி’ – 3
author

தாரமங்கலம் வளவன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *