Posted in

காலத்தின் கொலைகாரன்

This entry is part 5 of 31 in the series 7 ஏப்ரல் 2013

வினைகளின் சருகுகளைத் தீண்டிடவென

புதிதாக விழுந்திருக்கிறது

ஐங்கூர் பழுத்த இலை

சிவப்புக் கலந்த நிறமதற்கு

உடைசல்களின் சிதிலங்களுக்கிடையில்

சிக்கியிருக்கிறது புதுத் தளிரொன்றும்

எப்படிப் பூத்ததுவோ

பசுமையெரிந்த செடிகளுக்கிடையில்

எதற்கும் வாடிடா மலரொன்று

அன்றியும்

எந்தக் கனிக்குள் இருக்கின்றது

அடுத்த மரத்துக்கான விதை

எல்லா வாசனைகளும் பூக்களாகி

நாசிக்குள் நுழையும் கணமொன்றில்

செழித்த ஏரியின்

கரைகளைக் காக்கின்றன ஓர மரங்கள்

வசந்தத்தின் முகில் கூட்டங்களலையும்

சுவரோவியங்களில் தோப்புக்கள்

எவ்வளவு ரம்யமானதாயிருக்கின்றன

இங்கு நீர் தேங்கிய குட்டைகளில்

தலைகீழாக வளருகின்றன

அருகாமை சடப்பொருட்கள்

விம்பங்கள் மட்டுமே காட்டுகின்றன

வாழ்வின் நிறங்களை

கனவுக் கண்ணாடிகளில்

தேய்ந்திடும் காலமொன்றை நோக்கியே

நகரும் எண்ணங்களுக்குக் கூடமைத்து

வர்ணங்களைத் தீட்டலாமினி

ஆமாம்

காத்திருப்பு

காலத்தின் கொலைகாரன்தான்

– எம்.ரிஷான் ஷெரீப்,

இலங்கை

Series Navigationசின்னஞ்சிறு கிளியேஅமெரிக்க அனுபவங்கள் – ஒரு சமூகவியல் பார்வை – புத்தக மதிப்புரை ஆசிரியர் – நாகேஸ்வரி அண்ணாமலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *