Posted in

சந்திப்பு

This entry is part 25 of 41 in the series 25 செப்டம்பர் 2011

ஒரு உறவு ஏற்படும்போதே
அதிலிருந்து விலகிப்
பார்ப்பதான சிந்தனையும்
தோன்ற ஆரம்பிக்கிறது.

எந்நேரமும் பிரியலாம்
என்ற அணுக்கத்தோடே
பகிரப்படுகிறது எல்லா
சொந்த விஷயங்களும்

இந்நேரத்தில் இன்னதுதான்
செய்து கொண்டிருக்கக்கூடும்
என்பது தெரியும் வரை
தொடர்கிறது பேச்சு.

ஏன் பேசுகிறோம்
எதற்கு சந்திக்கிறோம்
என்ன உண்கிறோம் என்பது
சிந்தனைக்கு உரியதாயில்லை.

முதல் முதல் ஏற்பட்ட
ஒரு சந்திப்பு மட்டுமே
வித்யாசமாய் இருந்ததால்
நினைவில் இருக்கிறது.

அடுத்தடுத்து நட்பும் பிரிவும்
சகஜமாகிப்போவதால்
எல்லாமே ஒரு
சாதாரண விஷயமாகிறது.

ஆனாலும் முதல் சந்திப்பின்
ஆவலும் சந்தித்த பின் நீர்ப்பும்
புரையேற்றிக் கொண்டேயிருக்கிறது
திரும்பச் சந்திக்கும் ஆவலை.

எல்லா சந்திப்புகளையும்
தூக்கிப்போட்டுவிட்டுப்
போகச் சொல்கிறது
யதார்த்த வாழ்க்கை.

ஏதோ ஒன்று இனிமையைத்
தூண்டிக்கொண்டே இருப்பதால்
இன்னும் விட்டுப் போகாமல்
தொடர்கிறது சில சந்திப்பு.

Series Navigationஒரு விதையின் சாபம்தமிழர் கலாச்சார மீட்டெடுக்கும் முயற்சிக்கான விண்ணப்பம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *