ஜென் ஒரு புரிதல்- பகுதி 18

This entry is part 23 of 41 in the series 13 நவம்பர் 2011

“கோன்” என்னும் படிமங்கள் வழி புரிதலுக்கு வழி செய்யும் ஜென் பாரம்பரியத்தைப் பற்றி ஏற்கனவே வாசித்தோம். வண்ணக் கலவைகள் மாறி மாறித் ததும்பும் ஒரு கோப்பையாக மனதைக் கொள்ளலாம். தான் உள்வாங்கும் எதன்மீதும் அந்த வண்ணங்களைப் பூசியே மனம் ஒரு பார்வையை அல்லது ஒரு காட்சியை அல்லது ஒரு அனுபவத்தை அணுகும். ‘பூமி தன்னைத் தானே சுற்றி சூரியனை விட்டு மறைந்தும் பின்னர் அதன் ஒளியில் அமிழ்ந்தும் பகல் இரவு என்னும் இருமையைக் காண்கிறது’ என்று நாம் சொல்லப் போவதே கிடையாது. சூரியன் உதித்தது. மறைந்தது என்று தானே சொல்கிறோம்? நம் மனப்பாங்கை மாற்றிக் கொள்வது என்பது மிகவும் எளிமைப் படுத்திய தேவையாக இருக்கும். நம் மனத்தைக் கழற்றி விட்டுப் பிறகு உண்மைக்கு அருகாமையில் நோக்குவது என்பதே பொருத்தமாக இருக்கும்.

மனம் உள்ளார்ந்த வர்ணப் பூச்சுகள் வழி காணும் இருமைகள் கசப்பு இனிப்பு உயர்வு தாழ்வு என குறுகிய வட்டத்துள் உழன்று அதைத் தாண்டி ஏதுமில்லை என்று தேங்கி விடுகிறது. முற்றிலும் இந்த மாய சுழற்சியினின்று விடுபட்ட நிலையில் மட்டுமே புரிதல் துவங்குகிறது. இந்தத் துவக்கம் நிகழ்ந்த இருவரிடையே நடக்கும் உரையாடலை நாம் “கோன்”கள் என்னும் படிமம் வழி அடைந்து ஜென் சிந்தனைத் தடத்தில் செல்ல இயலும். பதினாங்காம் நூற்றாண்டின் “ர்யூசன்” என்னும் சிந்தனையாளரின் ஒரு உரையாடலைக் காண்போம்.

ஒரு முறை “டோசன்’ என்னும் ஜென் துறவி மற்றொரு புத்த பிட்சுவுடன் ஒரு மலைவழிப் பயணம் மேற் கொண்டார். ஒரு நீரோடையில் காய்கறியினின்று வெட்டப் பட்ட ஒரு இலை மிதந்து வந்தது. ‘ இங்கே யாருமில்லை என எண்ணியிருந்தோம். ஆனால் யாரோ வசிப்பது போலிருக்கிறதே?” என்றார். ” மலை மீது ஏறிச் செல்கையில் நாம் யாரேனும் ஒரு வழி தவறிய ஆளைக் காணக் கூடும்”. புதர்கள் மண்டிய பாதையில் அவர்கள் பல மைல்கள் மேற்சென்றதும் ஒடிசலான வற்றிய வடிவத்து ஆள் ஒருவரைக் கண்டார்கள். அது ஆசான் “ர்யூசன்”. அந்தப் பெயருக்கு ‘டிராகன் மலை” என்று பொருள். அவருக்கு “யின்ஷன் ” என்றும் ஒரு பெயர் உண்டு. “மலைக்குள் மறைந்தவர்” என்று பொருள். தம் சுமைகளை இறக்கி வைத்த இருவரும் அவருக்கு வணக்கம் தெரிவித்தனர்.

ர்யூசன்: பாதையில்லாத இந்த மலையில் இவ்வளவு உயரம் எப்படி வந்தீர்கள்?

டோசன்: பாதையில்லை என்பதை விட்டு விடுவோம். நீங்கள் எந்த இடத்தில் நுழைந்தீர்கள்?

ர்யூசன்: நான் மேகம் வழியோ அல்லது நீர் வழியோ வரவில்லை

டோசன்: எவ்வளவு காலமாகத் தாங்கள் இந்த இடத்தில் வசிக்கிறீர்கள்?

ர்யூசன்: வருடங்களும் பருவங்களும் கடப்பதால் இதை அடைய இயலாது

டோசன்: தாங்கள் இங்கே முதலில் வந்தீரா? மலை முதலில் இருந்ததா?

ர்யூசன்: எனக்குத் தெரியாது

டோசன்: ஏன் இல்லை?

ர்யூசன்: நான் வானுலகின் அல்லது மனிதச் சூழலனின்று வருபவனல்லேன்

டோசன்: இந்த மலையில் வாழ வந்ததில் நீர் உணர்ந்த உண்மை யாது?

ர்யூசன்: நான் இரண்டு எருதுகள் முட்டி மோதி சமுத்திரத்தில் ஆழ்ந்து முழுகியதைக் கண்டேன். இதுவரை அவை பற்றிய
தகவல் ஏதுமில்லை.

இதைக் கேட்டதும் முதன் முறையாக ஆழ்ந்த மரியாதையுடன் டோசன் ர்யூசனை வணங்கினார்.

டோசன்: உபசரிப்பவருக்குள் இருக்கும் விருந்தாளி யார்?

ர்யூசன்: நீல மலை வெண் மேகங்களால் மூடப்பட்டுள்ளது

டோசன்: உபசரிப்பவருள் இருக்கும் உபசரிப்பாளர் யார்?

ர்யூசன்: அவர் வாசல் தாண்டி வெளியே போவதில்லை

டோசன்: உபசரிப்பவரும் விருந்தாளியும் எந்தத் தொலைவு இடைவெளியில் உள்ளனர்?

ர்யூசன்: நதியின் மீது அலைகள்

டோசன்: உபசரிப்பவரும் விருந்தாளியும் சந்திக்கும் போது என்ன சொல்லப் படுகிறது

ர்யூசன்: தூய தென்றல் வெண் நிலவை வீசி அசைக்கிறது

டோசன் விடை பெற்றார்.

உரையாடலின் முதற் பகுதியில் உள்ள இருப்பு என்பது வசிப்பிடம் அல்ல. இரண்டு எருதுகள் என்பது மாயையும் விழிப்பும் ஆகும். விருந்தாளி என்பவர் உபசரிப்பவர் இருவரும் ஒருவரே. புற உலகு விருந்தாளியாக நம் மனம் வழியே உள் நுழைந்தபடியே இருக்கிறது. புற உலகின் ஒரு அங்கமாகவும் அக உலகில் ஆன்மீகம் மட்டுமே அடையாளமாகவும் இருவகையான இருப்பு நமக்கு உள்ளது. ம்லை முதலில் வந்ததா அல்லது நீர் வந்தீரா என்னும் கேள்வி பகவத் கீதையில் ஷேத்ரன் ஷேத்ரஞன் என்னும் விவாதம் நடக்கும் அத்தியாத்தை நினைவு படுத்துகிறது. “கோன்” களைப் புரிந்து கொள்வதில் இது ஒரு எளிய முயற்சி. இன்னும் ஆழ்ந்த் உட்பொருள் இந்த உரையாடலுக்குள் இருக்கக் கூடும்.

ர்யூசன் கவிதை இது:

தெள்ளிய நீலத்துள் நிலா!
சில்லென்ற தண்ணீர் தொடுவானம் வரை
மேல் கீழ் இவற்றின் விளக்கமாய்
அதிர்ந்த டிராகன்
மேக மூட்டத்தில் இருந்து வெளிப்படும்

உயர்வு தாழ்வு இவை சந்திக்கும் தொடுவானம் எது? இந்தச் சிந்தனையைத் தூண்டும் நோக்கோடே கவிதை எழுதப் பட்டுள்ளது.

Series Navigationகவிதைகவிதை
author

சத்யானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *