ஜென் ஒரு புரிதல் – பகுதி 19

This entry is part 11 of 38 in the series 20 நவம்பர் 2011

ஆதி கால மனிதன் அனைவருக்குமே மூதாதையர் தான். அவனது அடிப்படை இயல்புகளை யாருமே தாண்டிச் செல்லவில்லை. அந்த இயல்புகளைப் பயன்படுத்தி மேற் சென்ற திசை அல்லது இலக்கு மாறு பட்டிருக்கலாம். வேட்டையாடுவதும், துரத்துவதும், தப்பிப்பதும், இந்நடவடிக்கைகள் ஈடேறும் வரை எதிரி குறித்த அச்சமும் குறிப்பான அடிப்படை இயல்புகள். அவன் ஒரு சமூகமாக வாழத் துவங்கிய போதும் இவ்வியல்புகள் புதிய வடிவத்தை அடைந்தனவே ஒழிய அடிப்படையில் மாற்றம் இல்லை. துரத்துவதும் வேட்டையாடுவதும் சில விதிகளுக்கு உட்பட வேண்டிய தேவையை அவன் உணர்ந்ததும் அவற்றை வகுத்ததும், பல துறைகளை அழகியல், பொருளாதாரம், வழிபாடு என அவன் கண்டறிந்ததும் பண்பாட்டின் துவக்கமாயின. அவனது வேட்டை சில துறைகளில் அழகு மிளிர்வதும் ஏனையவற்றில் முகம் சுளிக்க வைப்பதும் இன்றும் வழக்கிலுள்ளன.

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக அவன் முன்னும் பின்னும் சென்று கொண்டிருக்கிறான். கல் ஆயுதமாயிருந்ததிலிருந்து இரும்பு ஆயுதமானது. மூங்கிற் குடிலுக்கு பதில் செங்கல், பின்னாளில் மின்னணுக் கருவிகள் ஆயுதங்கள். சகமாந்தர் ஏற்ற போட்டாப் போட்டி, வேட்டை இவை திறமைகள், பலம் என்னும் அளவிகளில் கோலொச்சுவது , பின்னடைவது, பின்னர் காலாவதியாவது என்னும் இடையறா சுழற் புள்ளிகளுக்குள் உழல்வதில் பெருமிதமும், ஈடுபாடும் ரசனையும் ஆக ஒரு குறுகிய சிந்தனைத் தடம் மிக ஆழமாகக் கட்டமைக்கப் பட்டு விட்டது.

இவை யாவுமே நாம் கட்டமைத்து நம்மைப் பிணைக்கும் சங்கிலிகள் என்னும் சிந்தனை இரு விதமான தடங்களில் சுய சிந்தனை அமையப் பெற்றோருக்கு வாய்த்தது. ஒன்று தருக்கம். மற்றொன்று ஆன்மீகம். தருக்கம் ஆதாரம், நிரூபணம் என்னும் இரு பக்கத்தைத் தாண்டி வேறு பரிமாணம் சாத்தியம் இல்லை என்று சபித்துத் தேங்கியது. ஆன்மீகம் தனது இயல்புகள் என்று அறியப்பட்டவற்றைத் தாண்டி பிரபஞ்ச இயங்குதல் என்னும் பிரம்மாண்டத்தின் சூட்சமத்தை நோக்கி நகரத் துவங்கியது. ஆன்மீகத் தேடலும் தரிசன்மும் சாத்தியமானவர்கள் அந்த அற்புதத்தின் சரித்திரச் சின்னங்களாய் இருந்த என்றும் இருக்கிற ஒரே சாதனையில் ஆயிரம் ஆண்டு மனித இனம் வளர்த்து தலைமுறைகளுக்கு வழங்கிய அகத்தை அழித்து ஆனந்தம் கண்டனர்.

இந்த ஆனந்தத்திற்கு ஒரு கோடிட்ட வரை படத் தடம் தானா? பதிமூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த “வூ மென்”னின் பதிவுகளை வாசிப்போம் .

உன்னதமான வழிக்கு வாயிலெதுவும் கிடையாது
ஆயிரம் சாலைகள் அதில் நுழைகின்றன
கதவில்லாத இந்த வாயிலைக் கடப்பவன்
சுதந்திரமாக பூமிக்கும் சுவர்க்கத்திற்கும் இடையே நடக்கிறான்

————————————–
வசந்தத்தில் பத்தாயிரம் பூக்கள்
இலையுதிர் காலத்தில் நிலா
குளிர் காலத்தில் வெண் பனி
உன் மனம் தேவையற்றவற்றால் மூட்டமுறவில்லை என்றால்
இதுவே உன் வாழ்க்கையின் சிறந்த பருவம்

—————————————
ஒரு தருணம் அழிவற்றது
அந்த அழிவில்லாப் பொழுது இதோ இக்கணமே
இந்த ஒரு பொழுதை நீ ஊடுருவிப் பார்க்க இயலும் எனின்
காண்போனை ஊடுருவிக் காண்பாய்

—————————————–

நிலவும் மேகங்களும் ஒன்றேயாம்
மலையும் பள்ளத்தாக்குமே வெவ்வேறானவை
அனைவரும் அருளாசி பெற்றோரே அனைவரும்
இது ஒன்றா? இது இரண்டா?

——————————————

ஒரு புத்த பிட்சு “சாவ் சவ் ட்ஸுங்க் ஷென்” னைப் பார்த்து “ஓக் மரத்திற்கு புத்த இயல்பு உண்டா?” என்றார்.

சாவ் சவ்: ஆம். உண்டு.

பிட்சு: எப்போது ஓக் மரம் புத்த இயல்பை அடையும்?

சாவ் சவ்: இப்பேரண்டம் வீழும் வரை காத்திருப்பீர்

பிட்சு: இப்பேரண்டம் எப்போது வீழும்?

சாவ் சவ்:ஓக் மரம் புத்த இயல்பை அடையும் காத்திருப்பீர்

(இப்பதிவு கோன் என்னும் படிம வழி உரையாடலாகும்)

Series Navigationகுறுங்கவிதைகள்அந்த நொடி
author

சத்யானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *