ஜென் – ஒரு புரிதல் பகுதி 3

This entry is part 17 of 32 in the series 24 ஜூலை 2011

கணிதம் பல சமயம் நமக்கு ஒரு சவாலாகவே இருக்கிறது. கணிதம் பற்றிய புரிதல் மெதுவாக பலவேறு வழிகளில் நம்முள் நிகழ்கிறது. சரியான அறிமுகம் துவக்கமாகவும் பின்னர் நடப்பு வாழ்க்கையில் கணிதம் தரும் பலன்கள் மென்மேலும் கணிதத்தின் அருகாமைக்கு நம்மை இட்டுச் செல்கின்றன. நமது புரிதலின் நிலை அல்லது அளவு எத்தகையதாயிருந்தாலும் கணிதம் அன்னியமாயில்லாமல் சொந்தமாகி விடுகிறது. ஜென் பற்றிய பதிவுகள் இத்தகைய ஒரு மாற்றத்தைத் துவக்கி அதைப் பரிணாமம் என்னுமளவு நம்முள்ளே வெளிச்சமிடுகின்றன.

ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜெங் டீ சான் (Zeng T”san) “அப்பழுக்கற்ற நம்பிக்கையுள்ள மனம்” என்னும் நீண்ட கவிதையில் ஜென்னுடன் நம்மை நெருங்கச் செய்கிறார்.

அப்பழுக்கற்ற நம்பிக்கையுள்ள மனம்
——————————————

தனது விருப்பங்களில் பற்றில்லாதவருக்கு
உன்னதமான அந்தப் பாதை கடினமானது அல்ல

ஏக்கமோ ஒவ்வாமையோ இரண்டும் போகட்டும்
ஒவ்வொன்றும் தெள்ளத் தெளிவாகும்

வானமும் பூமியும் வெவ்வேறானவையே
நீ நூலிழையான வேறுபாட்டையே நோக்கினால்

நீ உண்மையை உணர வேண்டுமென்றால்
ஏற்றலையும் எதிர்ப்பதையும் விட்டு விடு

நல்லதுக்கும் கெட்டதுக்கும் இடைப்பட்ட போர்
மனதின் அடிப்படை நோயாகும்

ஆழ்ந்த உட்பொருளை நாடாமல்
மனதின் அழகிய சூழலை அவஸ்தைப் படுத்துகிறாய்

பிரபஞ்சத்தைப் போல விளிம்பற்றதாய்
குறையேதுமின்றி முழுமையானதாய்

அதை நீ காண இயலாததற்குக் காரணம்
நீ அறிந்ததெல்லாம் தேர்ந்தெடுப்பது அல்லது நிராகரிப்பது

உலகுடன் சிக்கிக் கட்டுறாதே
உள்ளீடற்ற உலகில் உன்னை இழக்காதே

அனைத்தும் ஒன்றெனும் உணர்வில் அமைதி காண்
எல்லாத் தவறுகளும் தானே மறையும்

‘தாவோ’ வாழ்க்கையை நீ வாழா விட்டால்
அறுதி செய்வதும் மறுப்பதுமாய்க் கழியும் உன் காலம்

உலகம் உண்மையென்று நீ அறுதியிட்டால்
அதன் ஆழ்ந்த உண்மையைப் புறந்தள்ளுகிறாய்

உலகின் உண்மையை நீ மறுத்தால் நீ காணாதது
எல்லா உயிர்களுள் உறையும் தன்னலமின்மையை

இவற்றையெல்லாம் பற்றி எவ்வளவு யோசிக்கிறாயோ
அந்த அளவு உண்மையை விட்டு விலகுகிறாய்

சிந்தனை எல்லாவற்றிடமிருந்தும் விலகி நில்
நீ அடைய முடியாத இடமே இல்லை

வேரை நோக்கித் திரும்பினால் அர்த்தத்தை உணர்கிறாய்
தோற்றங்களைத் துரத்தினால் வெற்றிடத்தை

உண்மையைத் தேடிக் கொண்டே இருக்காதே
அபிப்ராயங்களை (கருத்துக்களை) விட்டுத் தள்ளு

தாவோ உடன் ஒருங்கிணைந்த மனதிலிருந்து
வெறுமை நீங்கி விடும்

நீ தன்னை சந்தேகிக்கா விட்டால்
பிரபஞ்சத்தை முழுமையாக நம்பலாம்

பார் நீ திடீரென விடுதலையாகி விட்டாய்
பற்றிக் கொள்ள ஏதும் மீதவில்லை

எல்லாமே சூன்யமாய் பிரகாசமாய்
தன்னளவில் முழுமையாக –
‘தான்’ ‘தான் இல்லை’ என்ற இரண்டுமே அற்ற
உலகில் தன்வயமாய் இருக்கின்றன

அதன் சாரத்தை நீ வர்ணிக்க விரும்பினால்
‘இரண்டில்லை’ என்பதே ஆகச் சிறந்தது

எல்லாக் காலத்திலும் எல்லா இடங்களிலும்
ஞானம் பெற்றோர் அதன் உண்மைக்குள் கலந்தனர்

பத்தாயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும்
அபூர்வமான லாப நட்டமற்ற நிலை அது

இவ்விடம் அவ்விடம் என்று ஏதுமில்லை
விளிம்பற்ற வெளி உன் கண் முன்னே

நாம் ஏற்படுத்திய எல்லைகள் அழிந்தால்
கடுகளவானதும் பிரம்மாண்டமும் ஒன்றே

வெளிப்புற வேலிகள் இல்லையேல்
பிரம்மாண்டமும் கடுகளவும் ஒன்றே

இருப்பது இல்லாமலிருப்பதின் ஒரு அம்சமே
இல்லாமலிருப்பது இருப்பதிலிருந்து வேறானது அல்ல

இதைப் புரிந்து கொள்ளும் வரை நீ எதையும்
தெளிவாகக் காண்பது இயலாது

ஒன்றே பலவும் பலவும் ஒன்றே இதை
உணர்ந்தால் புனிதமும் ஞானமும் எதற்கு?

பரிபூரணமான நம்பிக்கையில் எல்லா ஐயங்கள்
இடையறா முயற்சிகள் அனைத்தையும் தாண்டி
மனம் பூரண சாந்தி பெறும்

அங்கே நேற்றில்லை இன்றில்லை
நாளையுமில்லை

மிக நீண்ட கவிதை இது. எளிதாக உரையாடும் தொனி உள்ளது. ஏற்பது – எதிர்ப்பது, நல்லது – கெட்டது, தேர்ந்தெடுப்பது – நிராகரிப்பது, தான்- தான் இல்லை, கடுகளவானது- பிரம்மாண்டமானது என இருமைகள் மறைய வேண்டும் என்கிறார் ஜெங் டீ சான். மறுபடி மறுபடி வாசிக்கும் போது இந்த எட்டு வரிகள் ஜென் பற்றிய புரிதலுக்கு இந்நீண்ட கவிதையின் சாராம்சமென்று கொள்ளலாம்.

இவற்றையெல்லாம் பற்றி எவ்வளவு யோசிக்கிறாயோ
அந்த அளவு உண்மையை விட்டு விலகுகிறாய்

சிந்தனை எல்லாவற்றிடமிருந்தும் விலகி நில்
நீ அடைய முடியாத இடமே இல்லை

வேரை நோக்கித் திரும்பினால் அர்த்தத்தை உணர்கிறாய்
தோற்றங்களைத் துரத்தினால் வெற்றிடத்தை

உண்மையைத் தேடிக் கொண்டே இருக்காதே
அபிப்ராயங்களை (கருத்துக்களை) விட்டுத் தள்ளு

புலங்களின் வழியே காண்பதில், தொடுகையில், ருசிப்பதில், கேட்பதில் மற்றும் நுகர்வதில் பெறும் அனுபவம் வார்த்தைகளில் சிக்குவதில்லை. புலனுக்கு அப்பாற்பட்ட ஆனால் அனுபவித்து உணர வேண்டிய ஆன்மிகத்தை ஜென் வழி புரிந்து கொள்ள மேலும் வாசிப்போம்.

சத்யானந்தன்

Series Navigationகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரு கதைகளுக்கு இடையே (கவிதை -40 பாகம் -4)காதல் பரிசு
author

சத்யானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *