தண்ணீரிலே தாமரைப்பூ

This entry is part 14 of 18 in the series 15 நவம்பர் 2015

 

சிறுகதை:         29.10.2015
வே.ம.அருச்சுணன்
வாசல் கதவைத் திறந்து வெளியே எட்டிப் பார்த்தபோது நான்
திடுக்கிட்டுப்போகிறேன்.நடுகடலில் மிதக்கும் கப்பல் போல் என் வீடு
தண்ணீரில்  இருந்தது. அவசரமாக முற்றத்திற்கு விரைகிறேன்.கூடவே என் மனைவி
கமலமும் வருகிறாள். வெளியே கண்ணுக்கு எட்டிய தூரம் பார்வையைச்
செலுத்துகிறேன்.தோட்டத்தில் இருக்கும் அனைத்து வீடுகளும் வெள்ளத்தால்
சூழப்பட்டிருந்தன.
நேற்றிரவு பெய்த கடும் மழையினால் சுமார் இரண்டு மீட்டர் அளவிற்குத்
தோட்டமெங்கும் வெள்ளக் காடு. கடந்த ஆண்டைக் காட்டிலும்  இந்த ஆண்டு சற்று
அதிகமாகவே வெள்ளம் ஏறியிருந்தது. தோட்டத்தின் நடுவே ஓடும்  பெரிய ஆற்றின்
அருகிலேயே என் வீடு அமைந்திருந்ததால்,தோட்டத்தில் வெள்ளம் ஏற்படும்
போதெல்லாம் என் வீடுதான் வெள்ளத்திற்குப் பலியாகும் முதல் வீடாகவும்
அமைந்திருந்தது.
யாருடனோ போட்டிப்போட்டுக் கொண்டு, முப்பது கிலோ மீட்டரில்
அமைந்திருக்கும் கடலை நோக்கி வீட்டைச் சூழ்ந்திருந்த வெள்ளம் விரைந்து
செல்கிறது. காலை இளம் சூரியன் ஒளி பட்டு தண்ணீர்  வெள்ளியைப் போல் தகதக
வென்று மின்னிக் கொண்டிருக்கிறது.
“அடக் கடவுளே…இந்த ஆண்டும் நமக்குத் தீபாவளி தண்ணீரில்தானா….?”
மனைவி கமலம் கன்னத்தில் கையை வைத்துக்கொண்டு அங்கலாய்த்துப்
போகிறாள்.தீபத்திருநாளைக் கொண்டாட இன்னும் ஒரு வாரம் மட்டுமே
எஞ்சியிருந்த வேளையது.
“கமலம்….வெள்ளம் ஏறுவதெல்லாம் நமக்கென்ன புதுசா….? இந்தத் தோட்டத்துல
நாற்பது வருசமா வாழ்றோம்.பெரும்பாலும் நாம தீபாவளிய வெள்ளத்துலதானே
கொண்டாடியிருக்கோம்.மேக்கடை வீடு என்பதால் தண்ணீரில் கால்படத்
தேவையில்லை.வழக்கம் போல மேக்கடையிலேயே தீபாவளியைக் கொண்டாடுவோம்” என்று
சிரித்தவாறு கூறிய போது மனைவிக்குக் கோபம் வந்துவிடுகிறது.நான் எரியும்
நெருப்பில் எண்ணையை ஊற்றி விட்டது போல் எண்ணிக்கொண்டாளோ? அவள் முகம்
வாட்டத்துடன் காணப்படுகிறது.அவள் முகத்தை காண எனக்கும் வருத்தமாகவே
இருந்தது.
வழக்கம் போல் கிழக்கில் சூரியன் தோன்றி  அது தன் பணிகளைச்
சுறுசுறுப்புடன் செய்து கொண்டிருந்தன.வழக்கமானப் பணிகளைச்
செய்யவிடாமல்,வெள்ளம் என்னை முடக்கிப் போட்டதுதான் வருத்தமாக இருந்தது.
ஆனால், உலகை வலம் வரும் சுரியனுக்கு எந்த தடங்களும் இல்லையே?
வீட்டின் முன்னே நிலை கொண்டிருக்கும் வெள்ளத்தை வெறித்துப் பார்க்கிறேன்.
இன்னும் சில நாட்களுக்கு பூமியில் கால் வைக்க இயலாது என்ற உண்மையை
மட்டும் தெளிவாகப் புரிந்து கொள்கிறேன்.
குப்பைகளும்,கட்டைகளும்,பிளாஸ்டிக் பாத்திரங்களும்,   இறந்து
உப்பிப்போயிருந்த நாய் ஒன்றும்  வெள்ளத்தில் அடித்துச்
செல்லப்படுக்கின்றன.முகம் சுழித்தவாறு விரைந்துசெல்லும் வெள்ளத்தைப்
பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
அண்டை வீட்டுக்காரர் முற்றத்திற்கு வருகிறார்.அவர் என்னைக் கண்டதும் ஏதோ
பேச எத்தனிக்கிறார்.நான் முந்திக்கொள்கிறேன்.
“வெள்ளச்சாமி அண்ணே….உங்க காரு எங்கே….?”அவரை நோக்கிக் வேகமாகக்
குரல் கொடுக்கிறேன்.
“பொன்னம்பலம்…..நேற்று இரவு வெள்ளம் ஏறதுக்கு முன்னாடியே மேட்டு
லயத்துல இருக்கிற என் மாமா இருசன் வீட்டுலக் காரைக் கொண்டு போயி
பத்திரமாக வெச்சிட்டேன்….” ஒலிம்பிக்கில் தங்கம் வென்று சாதனைப்
புரிந்தவர் போன்று மகிழ்ச்சியுடன் கூறுகிறார்.
“நல்ல காரியம் பண்ணிட்டிங்கண்ணே.உங்க தொலை நோக்குப் போல வேறு யாருக்கு
வரும்?” அவரைப் பாராட்டும் போது அவர் மிகவும் மகிழ்ந்து போகிறார்.ஆபத்து
அவசர வேளைகளில்,தோட்ட மக்களுக்குச் சேவை செய்யும் ஆம்புலன்ஸ் என்று அவரது
கறுப்பு நிறக் காரைத் தாராளமாகக் குறிப்பிடலாம். பட்டணத்திலுள்ள அரசாங்க
மருத்துமனையில் சிகிட்சைப் பெற தோட்டத்திலிருந்துப் பத்து கிலோ மீட்டர்
தூரம் பயணிக்க வேண்டும்.
என் வீட்டிற்குச் சற்று தள்ளி வேகமுடன் ஓடிக்கொண்டிருக்கும் வெள்ளத்தில்
பல சிறுவர்கள் பயமின்றி நீந்தி விளையாடிக் கொண்டிருந்தனர்.நீச்சல்
இன்னும் கற்றுக் கொள்ளாத சிறுவர்கள் வீட்டின் படிக்கட்டுகளில்
அமர்ந்தவாறு  வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருதனர்.
“நம்ம பிள்ளைகளோடும் பேரப்பிள்ளைங்களோடும் சந்தோசமா இந்த ஆண்டு
தீபாவளியைக் கொண்டாடலாம்னா நினைச்சேன்,ஆனா….கடவுள் கருணைக் காட்டாம
நமக்கு எதிராக இருக்கிறாரே!” கவலையோடு பேசும் வேளை அவளது கண்களில் நீர்
தொக்கி நிற்கிறது.
“கமலம்…..நமக்கு மட்டுமா தண்ணீரிலத் தீபாவளி? இந்தத் தோட்டத்துல வாழ்ற
ஐநூற்றுக்கும் மேற்பட மக்களுக்கும் தான்…..! ம்…..சரி கமலம்
தீபாவளிப் பலகாரமெல்லாம் செய்து முடிச்சிட்டியா?”
“நேற்றே எல்லா பலகாரங்களை எல்லாம் செய்து முடிச்சிட்டேன்”மகிழ்ச்சியுடன்
கூறியவள் சிறு குழந்தை போல துள்ளல் நடையுடன் அறைக்குச் செல்கிறாள்.அவள்
முகத்தில் இழையோடிய அளவற்ற மகிழ்ச்சிதைக் கண்டு இரசிக்கிறேன்.
“கடந்த இரண்டு வாரமா வீடே பலகார வாசனையிலத்தானே மூழ்கி இருந்துச்சு”
என்று சொல்லிச் சிரிக்கிறேன்.
அறையில் அடுக்கி வைத்திருக்கும் டின்களில் ஒன்றை எடுத்து வந்து, “இதோ
பாருங்க……உங்களுக்குப் பிடிச்ச முறுக்கு…..” என்று ஆவலுடன்
டின்னைத் திறந்து முறுக்கொன்றை எடுத்து என்னிடம் நீட்டுகிறாள்.அதனை
வாங்கிக் கொண்டு கலையம்சத்தோடு   மனைவி செய்திருந்த முறுக்கை வியந்து
போகிறேன்.
“மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்னு சும்மாவா சொன்னாங்க…..!
வரைந்த வட்டம் மாதிரி எந்தப் பிசிரும் இல்லாம, நீ சுட்ட முறுக்கோட
அழகைப்பார்க்கும் போது….சும்மா சொல்லக்கூடாது.எது எதுக்கோ டாக்டர்
பட்டம் கொடுக்கிறப் பல்கலைக் கழகங்கள் உன்னோட முறுக்குக்குத் தாராளமா
டாக்டர் பட்டம் கொடுக்கலாம்” என்று வாய் விட்டு சிரிக்கிறேன்.
நல்லவற்றைப் பாராட்டுவதில் கஞ்சத்தனம் கடுகளவும் என்னிடம் இல்லை என்பதை
என் நெருங்கிய நண்பர் டாக்டர் மலையப்பன் இராமசாமி அடிக்கடிக் கூறுவது
மனைவிக்கும் தெரிந்த விசியம்தான்.
“மண்ணாங்கட்டி மகன் தண்ணீர்ல விழுந்துட்டான்……! மண்ணாங்கட்டி மகன்
தண்ணீர்ல விழுந்திட்டான்…..! ஓடிவாங்க….ஓடிவாங்…..!
காப்பாத்துங்க…..! காப்பாத்துங்க…..!” குரல் கேட்டு அறையை விட்டு
வெளியே ஓடி வருகிறேன்.வீட்டின் படிக்கட்டில் அமர்ந்து வேடிக்கைப்
பார்த்துக் கொண்டிருந்த பையன் தவறி தண்ணீரில் விழுந்து மூழ்கிவிடுகிறான்.
அவனைக் காப்பாற்றுவதற்காகப் பையன் விழுந்த இடத்தை நோக்கிப் பலர் வேகமாக
நீந்திச் செல்கின்றனர்.
“கமலம்…..நீ பத்திரமா இரு…. தண்ணீரில விழுந்த பையனைப் போய்ப்
பார்த்திட்டு வர்றேன்.”  அவசரமாகப் புறப்படுகிறேன்.
“பார்த்துப் போங்க….! பார்த்துப் போங்க…..! பத்திரம்…..பத்திரம்”
மனைவி பதற்றமுடன் கூறுகிறாள்.
“பொன்னம்பலம்…..இப்படி நீந்தி வாப்பா….” வெள்ளைச்சாமி குரல் கொடுக்கிறார்.
“இதோ….வந்துட்டேண்ணே நீங்க அங்கேயே இருங்க….” பையன் விழுந்த இடத்தை
நோக்கி வேகமாக நீந்துகிறேன்.என்னைப் பின் தொடர்ந்து பலரும் நீந்தி
வருகின்றனர்.பையனின் உயிரைக் காப்பாற்ற நொடிப்பொழுதில் அங்கு தோட்டமே
திரண்டுவிட்டது.
“இதோ…..நான் பையனைக்  காப்பாற்றிட்டேன்….! இதோ….பையனைக்
காப்பாற்றிட்டேன்….!” என்று உரத்தக் குரலில் கூறியபடி துடிப்பு மிக்க
இளைஞர் எட்டி தண்ணீரில் மூழ்கிய ஆறு வயதே நிரம்பிய பையனை தனது வலது
கரத்தில் உயர்த்திப் பிடித்தவாறு  நீந்தி பையனின் வீட்டுப்படிக்கட்டை
அடைகிறார்.நல்ல வேளை வெள்ளம் பையனை நீண்ட தூரத்திற்கு அடித்துச்
செல்லவில்லை. அப்போது எட்டியும் பையனின் வீட்டுக்கருகில்தான்  தண்ணீரில்
நீந்திக் கொண்டிருந்தார்.
“எட்டி…நீ தெய்வமா தக்க சமயத்தில் வந்து என் ஒரே பிள்ளையக்
காப்பாத்திடியேப்பா…! என் உயிர் உள்ளவரை உன்னை மறக்க மாட்டேன்பா”
கண்ணீருடன் கைகூப்பி வணங்குகிறார் அக்குழந்தையின் தாய். தன் அன்புக்
குழந்தையை மார்போடு அணைத்துக்கொள்கிறார்.
இருபத்து மூன்று வயதே நிரம்பிய கட்டிளங்காளை எட்டி அழுந்து புலம்பும்
குழந்தையின் தாயை வியப்போடு பார்க்கிறார்.தன்னாலும் ஒரு உயிரைக்
காப்பாற்ற முடிந்ததே என்று நினைக்கும் போது எட்டியின் கண்களில் ஆனந்தக்
கண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.
மூன்று நாட்களாக வெளியில் எங்கும் போக முடியவில்லை.வெள்ளம் முற்றாக என்னை
முடக்கி  விடுகிறது.மூன்று நாட்களுக்குப் பின் வெயில் நன்றாக
அடிக்கத்தொடங்குகிறது; வெள்ளமும் வடிந்துவிட்டது.தோட்டம் முழுவதும்
சேரும் சகதியுமாய்க் காணப்படுகிறது.செத்து கிடக்கும் பெரிய பெரிய மண்
புழுக்கள், பெருமளவில் மாண்டு கிடக்கும்
கோழிகள்,பூனைகள்,எலிகள்,ஆங்காங்கே அகோரமாய்ச் சிதறுண்டு கிடக்கும்
பலகைகள்,கட்டைகள் அவற்றுக்கிடையில் எழும் துர்நாற்றம் வயிற்றைக்
குமுட்டிக் கொண்டு வந்தது.
“கமலம்….கடவுள் நமக்குக் கண் திறந்துட்டாரு.அடுத்த சில நாட்களுக்கு மழை
பெய்யாதுன்னு இப்பதான் வானிலைப்பற்றி  தொலைக்காட்சியில்  அறிவிப்புச்
செய்தாங்க….” மகிழ்ச்சியுடன் கூறுகிறேன்.
“இத கேட்க ரொம்ப சந்தோசமா இருக்குங்க. வெள்ளம் வந்ததும் வேதனையா போச்சு.
இன்னும் மூன்று நாள்ள வரப்போகும்  தீபாவளியை விமரிசையாக் கொண்டாடிவோம்.
டவுன்ல இருக்கிற நம்ம பிள்ளைகளையும் பேரப்பிள்ளைகளையும் தீபாவளிக்கு
வரச்சொல்லிடுங்க. இயற்கையானச் சூழல்ல நம்மோடு தீபாவளிய தோட்டத்துலக்
கொண்டாடினாத்தான் பிள்ளைகளுக்குப் பிடிக்கும்”
“நம்ம நாளு பிள்ளங்களும் இந்தத் தோட்டத்திலதானே பிறந்தாங்க.இங்க
இருக்கிறத் தமிழ்ப்பள்ளியிலத்தான் படிச்சி, நம்ம இரண்டு பிள்ளைங்க
முனியம்மாவும்,இருசம்மாவும் டாக்டரானாங்க” மனைவி பெருமையுடன் கூறுகிறாள்.
“பெரியவன் சாமிக்கண்ணும்,கடைக்குட்டி சங்கரனும் இப்ப வழக்கறிஞர்களா
கோலாலம்பூரில தொழில் நடத்தி வராங்கனு நினைக்கும் போது பெருமைப் படாம
இருக்க முடியல கமலம்”  பெற்ற வெற்றியை நினைத்து உணர்ச்சியடைகிறேன்.
“அதுக்கெல்லாம் நீங்க பட்டப்பாடு இருக்கே சும்மா சொல்லக்கூடாது.தோடத்துல
காலையில் வேலை செஞ்சிட்டு,மாலையில வளர்த்த முப்பது பசு மாடுகள, பால்
கறந்து பத்து கிலோ மீட்டர் தூரத்தில இருக்கிற பட்டணத்துக்கு சைக்கிளை
மிதித்துக் கொண்டு போய் பாலை விற்ற பணத்துலதானே நான்கு பிள்ளைகளையும்
நல்லா படிக்க வைச்சிங்க….”
“கமலம்….முயற்சி என்னுடையதா இருந்தாலும்,உன்னோட ஒத்துழைப்பும் கடவுள்
உதவியும் இல்லாம நான் எதையும் சாதிச்சிருக்க  முடியாது…”
“மறந்திடாம….இப்பவே போன் பண்ணி பிள்ளைங்களத் தீபாவளி முதல் நாளே
வீட்டுக்கு வந்திடச் சொல்லுங்க…..” கமலம் எனக்குக் கட்டளை விட்ட கையோடு
தீபாவளிக் கொண்டாடத்திற்கான வேலைகளிலும் இறங்கிவிடுகிறாள்.
தீபாவளிக்கு முதல் நாளே,கமலம் நினைத்த மாதிரியே பிள்ளைகளும்,பத்து
பேரப்பிள்ளைகளும் வீட்டிற்கு வந்துவிடுகின்றனர்.இரவு படையலுக்குப்
பின்,குடும்பமே குதுகலத்துடன் மத்தாப்பு கொளுத்தியும்,பட்டாசு வெடித்தும்
நல்லிரவு வரை வீடே மகிழ்ச்சியில் ஆழ்ந்து போகிறது!மறுநாள் தீபாவளி
அல்லவா?
விடியற்காலை நான்கு மணி இருக்கும்.வீட்டிலுள்ள அனைவரும் அயர்ந்து
உறங்கிக் கொண்டிருந்தனர்.அப்போது, திடீரென வானத்தில் பலமாக இடி
இடிக்கிறது. திடுக்கிட்டு அனைவரும் படுக்கையிலிருந்து எழுகின்றனர்!

Series Navigationபூவைப்பூவண்ணாதிருப்பூர் இலக்கிய விருது 2015 (கவிஞர் சுகந்தி சுப்ரமணியன் நினைவுப் பரிசு)
author

வே.ம.அருச்சுணன்

Similar Posts

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *