தீபாவளிக் கவிதை

This entry is part 1 of 17 in the series 7 நவம்பர் 2021

 

 

பத்துக்குப்பத்து

 

பேத்தியாக…

மகளாக…

தாயாக…

இன்று  பாட்டியாக…

என் நான்கு தலைமுறைத்

தீபாவளிகள்

 

அன்று பேத்தியாக

நான் என் கிராமத்தில் …

 

ஒரு தீபாவளியில்

என் பாட்டி….

மண்டிக்குளக் கரைகளில்

மண்டிய  மருதாணி பறித்து

அம்மியில் அரைத்து

நான் தூங்கையில் பூசுவாள்

மறுதாள்….

கைச்சிவப்புக் காட்டி

கன்னம் பதிப்பாள்

 

சேக்ராவுத்தர் குளத்தில்

செக்கெண்ணை தேய்த்து

குளிப்பாட்டுவாள்

 

தையல்காரனைத்

துரத்தித் துரத்தித்

தைக்கவைத்த   

பாவாடை சட்டையை

அணிவித்து அள்ளிக்கொள்வாள்

 

பனியாரங்களால்

என்னைப் பசியாற்றி

பின் பசியாறுவாள்

 

மடியில் தாங்கி

நண்டூரு நரியூரு பாடி

கிச்சு மூட்டுவாள்

 

மத்தாப்பு  சுட்டுத் தந்து

சிரிக்கும் பொறிகள்

அவளாவாள்

 

சிலேட்டுப் பலகையில்

சாக்பீஸில் பெற்ற

பத்துக்குப்பத்து பார்த்து

கட்டித் தழுவுவாள்

சிரித்துக்கொண்டே அழுவாள்

ஓ! அதுதான் ஆனந்தக் கண்ணீரோ!

 

பாட்டியாக நான்

சிங்கப்பூரில்

இன்றைய தீபாவளியில்

என் பாட்டிபோல் ஆகி

பேத்தியைத் தழுவி

கன்னம் பதித்தேன்

 

ஆனால்…

மண்டிக்குளமில்லை

மருதாணி அம்மி இல்லை

சேக் ராவுத்தர் குளமில்லை

 

என் பேத்தி

ஐபேடில் பெற்ற

பத்துக்குப்பத்து பார்த்து

கட்டித் தழுவுகிறேன்

சிரித்துக்கொண்டே அழுகிறேன்

ஓ! இதுதான் ஆனந்தக்கண்ணீரோ!

 

அதே ஆனந்தக்கண்ணீர்

அதே தீபாவளியில்

 

அமீதாம்மாள்

Series Navigationநேற்றைய மனிதர்கள்: இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் சிறுகதைத் தொகுதி – மதிப்பீடு
author

அமீதாம்மாள்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *