நான்கு கவிதைகள்

This entry is part 12 of 16 in the series 3 ஏப்ரல் 2016

ஸிந்துஜா

நகரம் தின்ற இரை

அடுக்கு மாடிக் கட்டிடத்தில்
மகளின் மனை .
கதவைத் தட்டும்
சத்தம் கேட்டுத்
திறந்தேன் .
தாடியுடன் ஒரு
அறிமுகமற்றவர் .
சிரித்தபடி
“குப்புச்சாமி என்று இங்கே ? ”
“இல்லை. இங்கே யாரும்
அப்படியில்லை . ”
“பக்கத்து, எதிர் ப்ளாட்டில் ? ”
” ஸாரி எனக்குத்
தெரியலை . ”
“தேங்க்ஸ் ” என்றார்
செய்யாத உதவிக்கு .

மரக் .கதவை அடைத்தேன் .
மனக் கதவு திறக்க
சில பல ஆண்டுகள் முன்
பக்கத்து வீடுகள்
எதிர் சாரி கடைகள்
அடுத்த தெரு ஆபிஸ்கள்
லேடி டோக் போகும்
ரெட்டை ஜடை இந்திரா .
ரெண்டு மைல் தள்ளி
தண்டல்க்காரன் பட்டியில்
வண்ணார் தவசி ,
கருப்புசாமி டெய்லர் ,
பால்கார லெச்சுமி
பஸ் டிரைவர் பழனி
தெரியாத ஆளில்லை
பெயரில்லை, இடமில்லை .
அப்பா சொல்லுவார்
” நம்ம ஏரியா
போஸ்ட்மேன் இவன்தான் ” ….
மகள் குரல் கேட்டு நிகழ்வுக்கு வந்தேன் .
” அப்பா, ரொம்ப
தலைவலி ” என்றாள்
மருந்துக் கடைக்கு போலாமென்று
கதவைத் திறந்து வெளியே வந்தேன்.
லிப்டில் போகக்
காத்திருக்கையில்,
மூன்றாம் ப்ளாட்டு கதவு திறந்தது.
வெளியே வந்தார் தாடிக்காரர் .
கூடவே வந்தது குப்புச்சாமியாம் .
அருகே வந்து
அறிமுகம் செய்தார்.
சிரித்து வைத்தேன் .
“தேங்க்ஸ் ” என்றார்
தாடிக்காரர் .

விலகி நில் !

செயற்கரிய செயல்
செய்ய வேண்டாம் .
செய்தால்
இன்னும் கூடுதல் வேலை
வரிசையில்
வந்து நிற்கும்
.
முயற்சி
திருவினை அல்ல .
வினை ஆக்கும் .
ஒவ்வொரு வெற்றிக்குப்
பின்னாலும்
நிற்ப
நெருங்கியவரின்
துவேஷம் , பொறாமை ,
எரிச்சல் .

எனவே
எப்போதும்
தூரத்துக் குளிர்ச்சி
கண்ணுக்குப் பசுமை.

மதுரையை எதற்கு ?

மாதவியின் வீட்டிலுள்ள
என் வீட்டுக் கோவலன்
நான் கண்ணகியாக
இருக்க விரும்புகிறான் .
அடுப்பில் எரியும்
விறகை எடுத்து
அவனை எரித்தால்
ஆயிற்று .

.

நேதாஜி

.
மூடி மூடி வைத்திருந்ததை
எடுத்துக் காட்ட வந்தார் ஓடி
கண்டபின்பு தோன்றிற்று
மூடியே இருந்திருக்கலாமென .

Series Navigationஇலக்கியவாதிகளின் இதயத்தில் இடம்பிடித்த சாகித்தியரத்தினா வரதர்தோழா – திரைப்பட விமர்சனம்
author

ஸிந்துஜா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *