புகழ் ​பெற்ற சமூகவிரோதி – ஷேக்ஸ்பியர்

This entry is part 29 of 31 in the series 7 ஏப்ரல் 2013

தேமொழி

Shakespeareஉலகப் புகழ்பெற்ற இலக்கியவாதி ஷேக்ஸ்பியர். அவர் எழுத்துக்களைப் படித்து விமரிசிப்வர்களே சிறந்த ஆங்கிலப் புலமை பெற்றவர்களாகவும், ஆங்கில அறிஞர்களாகவும் இன்றும் கொண்டாடப் படுவார்கள்.

அவரது “Et tu, Brute?” என்ற வாக்கியமும் உலகப் புகழ் பெற்றது. ரோம அரசின் பேரரசர் ஜூலியஸ் சீசர், தனது முதுகில் குத்திய தனது உற்ற நண்பன் புருட்டஸை வேதனையுடன் நோக்கி “நீயுமா புருட்டஸ்?” என்று கேட்டு உயிர் விடும் முன் சொல்லிய கடைசி உரையாடல் அது.

இப்பொழுது ஷேக்ஸ்பியரின் அன்பு ரசிகர்கள் அதே தொனியில் “நீங்களுமா ஷேக்ஸ்பியர்?” என்று மனதிற்குள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதற்குக் காரணம் சென்ற வார இறுதியில் (மார்ச் 31, 2013) உலகம் முழுவதும் பரபரப்பான செய்தியாகப் பேசப்பட்டு, அனைத்து நாளிதழ்களும் போட்டி போட்டுக்கொண்டு வெளியிட்ட ஷேக்ஸ்பியர் பற்றிய செய்திதான்.

இலக்கியமேதை என்று போற்றப்பட்ட ஷேக்ஸ்பியரின் மறுபக்கம் அவர் ஒரு சமூக விரோதி எனத் தெரிவிக்கிறது. வேல்ஸில் உள்ள ‘அபெர்ஸ்ட்டிவித் பல்கலைகழக’ (Aberystwyth University in Wales) ஆராய்ச்சியாளர்கள், நீதிமன்ற ஆவணங்களையும், ஷேக்ஸ்பியர் வாழ்ந்த காலத்தில் அவரைப் பற்றிக் குறிப்பிட்ட மற்ற பிற ஆவணங்களையும் இணைத்து ஆராய்ச்சி செய்து கண்டறறிந்ததோ அவரைப் பற்றிய அதிர்ச்சி தரும் மறுபக்கம்.

அந்த ஆராய்சிக் குழுவில் ஒருவரான ‘ஜேன் ஆர்ச்சர்’ (Jayne Archer) என்ற ஆராய்ச்சியாளர், ஷேக்ஸ்பியர் ஒரு சமூகவிரோதியாக வாழ்ந்தார் என்று கூறுகிறார். ஷேக்ஸ்பியர் கள்ளச் சந்தையில் தானியங்களைப் பதுக்கி, பஞ்ச காலத்தில் அதிக விலைக்கு விற்றார். அந்தப் பணத்தில் வட்டிக்கு கடன் கொடுத்து வாழ்ந்தார், பணத்தைத் திருப்பிக் கொடுக்கமுடியாத நிலையில் இருந்தவர்களுக்கு மனிதாபிமானம் இல்லாமல் நெருக்கடி கொடுத்தார். இவ்வாறு சுயநலத்தை மட்டும் கருத்தில் கொண்டு ஈட்டிய வருமானத்திற்கு வரிகட்டாமல் வரி ஏய்ப்பு செய்தார். சட்ட விரோதமான கள்ளச் சந்தை வியாபாரத்திற்காகவும், வரி ஏய்ப்பிற்காகவும் நீதிமன்றம் அவருக்கு பலமுறை அபராதம் விதித்தது. தொடர்ந்து அவ்வாறே செய்தால் சிறையிலும் அடைக்கப் படுவார் என்ற எச்சரிக்கையும் அவருக்கு விடப்பட்டது என்பது இந்த ஆராய்ச்சி வழி தெரிகிறது.

தனது ‘குலோப் நாடக அரங்கம்’ (Globe Theatre) மூலம் கிடைத்த வருமானத்தை எல்லாம் 15 ஆண்டுகளாக மால்ட்டும், பார்லியுமாக வாங்கி மூட்டை மூட்டையாக பதுக்கிவைதிருந்து, அதிக விலைக்கு பஞ்ச காலத்தில் விற்றிருக்கிறார். பிறகு இவற்றில் வந்த பணத்தில் வட்டிக்கு கடன் கொடுத்தும், நிலங்களிலும் கட்டிடங்களிலும் முதலீடு செய்தத்தாலும் அவர் இறந்த பொழுது, அவர் வாழ்ந்த ‘வார்விக்க்ஷையர்’ (Warwickshire) நகரின் மிகப் பெரிய நிலச்சொந்தக்காரராகவும், பெரும் செல்வந்தாராகவும் இருந்தார். பஞ்ச காலத்தில் பதுக்கல் மற்றும் கள்ளச் சந்தை வியாபாரியாக இருந்ததற்கும், வரி ஏய்ப்பிற்கும் ஷேக்ஸ்பியர் மீது தொடுக்கப்பட்ட வழக்கின் பெப்ரவரி மாதம், 1958 ஆம் ஆண்டு ஆவணம் கிடைக்கப் பெற்றுள்ளது.

ஷேக்ஸ்பியர் 1616 ஆம் ஆண்டு இறந்த பொழுது, அவருக்கு ‘ஸ்டாஃபோர்ட் புனித தேவாலயத்தில்’ (Stratford’s Holy Trinity Church) எழுப்பப்பட்ட நினைவுச் சிலையும் கையில் ஒரு தானிய மூட்டையை ஏந்தி நின்ற ஷேக்ஸ்பியரைத்தான் சித்தரிப்பதாக வடிவமைக்கப் பட்டிருந்தது. ஆனால், காலப்போக்கில் அவரது இலக்கிய மேன்மையை மட்டும் புகழ் பாடும் வண்ணம், கையில் இறகுப்பேனாவை வைத்திருக்கும் இலக்கியாவாதி தோற்ற சிற்பம் 18 ஆம் நூற்றாண்டில் அமைக்கப் பட்டது. இந்த மாற்றத்திற்குக் காரணம் அவரைப்பற்றிய மதிக்கத் தகுந்த வாழ்க்கையை மட்டும் மக்கள் அறியும் வண்ணம் செய்ய ஏற்பட்ட முயற்சி என ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். இதுவரை ஷேக்ஸ்பியர் வாழ்ந்த மாளிகையையும், அவர் மறைந்த இடத்தையும் கண்டு வரும் சுற்றுலாப் பயணிகள் முன்னிருந்த நிலையை அறிந்திருப்பதில்லை.

இவ்வாறு வரலாற்று ஆவணங்கள் மூலம் தெரிந்து கொண்ட … மனிதாபமற்ற வியாபாரியாக, சமூக விரோதியாக வாழ்ந்த ஷேக்ஸ்பியரின் வாழ்வைப்பற்றிய ஆராய்ச்சி அறிக்கையை வரும் மே மாதம் வேல்சில் நடைபெறவிருக்கும் ‘ஹே இலக்கிய விழாவில் (Hay literary festival in Wales in May) வெளியிடப் போகிறார்கள்.

ஷேக்ஸ்பியரின் ‘கொரியோலேநஸ்’ (Coriolanus) என்ற அரசியல்-துன்பியல் நாடகத்தில் விவரிக்கப் பட்டிருக்கும் காட்சிகளில் ஒன்று பண்டைய ரோமாபுரியின் பஞ்சகாலத்தில் ஏற்பட்ட புரட்சியை விளக்குவதாகும். ஆனால், இப்போழுது அந்தக் காட்சிக்கு அடிப்படையாக விளங்கியது 1607 ஆம் ஆண்டு, ஷேக்ஸ்பியர் வாழ்ந்த காலத்தில் இங்கிலாந்தில் நிகழ்ந்த பஞ்சமும், அதனால் ஏற்பட்ட விவசாயிகளின் புரட்சியும்தான் என்று கருதப்படுகிறது. தனது சொந்த அனுபவத்தை அவர் விவரிதுள்ளதாகத் தெரிகிறது.

‘கூல வணிகர் ஷேக்ஸ்பியர்’ தனது ‘மேக்பெத்’ (Macbeth) நாடகத்தின் வாயிலாகவும், மற்றும் ‘மெர்சண்ட் ஆஃப் வெனிஸ்’ (The Merchant of Venice) நாடகத்தில் அவர் வடித்த, கொடுமைக்கார, பேராசை நிறைந்த, வட்டிக்கு கடன் கொடுக்கும் ‘ஷைலாக்’ (Shylock) என்னும் பாத்திரத்தின் வழி அவர் தன்னை சித்தரிப்பதாகவும், அவரது குற்ற உணர்ச்சி இவ்வாறு வெளிப்பட்டிருக்கலாம் எனவும் ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். ஆனால் பல நூற்றாண்டுகளாக இலக்கியவாதிகள், ஏழைகளுக்கு இரங்கிய அவரது இரக்க குணத்தின் வெளிப்பாடே கொரியோலேநஸ், மேக்பெத் நாடகத்தின் மாந்தர்களை அவர் வடிவமைத்ததன் காரணம் எனக் கருதி வந்தனர்.

 
REFERENCES:
Study shows Shakespeare as ruthless businessman.
By JILL LAWLESS, Associated Press, Mar 31, 2013

Shakespeare was a tax-evading food hoarder, study claims
William Shakespeare evaded tax and illegally stockpiled food during times of shortage so he could sell it at high prices, academics have claimed.
By Sam Marsden, The Telegraph, 31 Mar 2013

Shakespeare called grain hoarder, tax dodger, money lender and ruthless businessman of Stratford-upon-Avon
‘Over a 15-year period he purchased and stored grain, malt and barley for resale at inflated prices to his neighbors and local tradesmen,’ write researchers from Aberystwyth University in Wales.
BY GINGER ADAMS OTIS, NEW YORK DAILY NEWS, APRIL 1, 2013

Study: Shakespeare Resorted To Tax Fraud, Grain Hoarding For Money And Livelihood.
By Heather Manes, Opposing Views, Sun, March 31, 2013

William Shakespeare: Study sheds light on Bard as food hoarder.
By BBC News, 1 April 2013

Was Shakespeare a tax dodger? Bard was ‘ruthless businessman who exploited famine and faced jail for cheating revenue.’
By DAILY MAIL REPORTER, 31 March 2013

William Shakespeare: Tax Cheat, Grain Hoarder.
Fox News, 31 Mar 2013

Tax Day Comfort—Shakespeare Was A Tax Cheat.
Robert W. Wood, Forbes, 4/06/2013

A tempest over Bard’s biz head
By Howard Gensler, Daily News wire services, April 02, 2013

William Shakespeare a tax-dodging, food hoarder?
The Economic Times, Mar 31, 2013.

Researchers Look Into Shakespeare’s Finances
NPR News, April 01, 2013

Series Navigationவிஸ்வரூபம் – விமர்சனங்களின் அரசியல்வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -2 பாகம் -4 மூன்று அங்க நாடகம்
author

தேமொழி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *