மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (மூன்றாம் அங்கம்)

This entry is part 3 of 23 in the series 7 அக்டோபர் 2012


அங்கம் –3 பாகம் –5

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா

தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா



பரத்தைமைத் தொழிலுக்கு மெய்யான காரணம் பெண்டிரின் சீர்கெட்ட பாதையல்ல !  ஆடவரின் ஆதிக்கப் போதையல்ல !  ஏழ்மை, வறுமை, இல்லாமை, பசி பட்டினி, தனிப்படுதல், வேலையின்மை, முறிந்த குடும்பம், சமூகப் புறக்கணிப்பு, பெற்றோர் புறக்கணிப்பு, வன்முறைக் கற்பழிப்பு, கட்டாய அழுத்தம் போன்ற சமூக இடையூறுகளே அப்பாவிப் பெண்டிரை மீளாத பரத்தைமைச் சிறையில் தள்ளி விடுகின்றன.

பெர்னாட் ஷா (Preface to Mrs. Warren’s Profession Drama)


ஜார்ஜ் பெர்னாட் ஷா அயர்லாந்தின் தலைநகர் டப்ளினில் 1856 ஆம் ஆண்டில் ஜார்ஜ் கார் ஷா & லுஸிண்டா எலிஸபெத் ஷா இருவருக்கும் பிறந்தவர்.  அவரது அன்னை ஆப்ரா (Opera) இசையரங்குப் பாடகி, வாய்க்குரல் பயிற்சியாளி. தந்தையார் தோல்வி யுற்ற வணிகத்துறையாளர். வறுமையிலிருந்து குடும்பத்தை விடுவிக்க முடியாத பெருங் குடிகாரர்.  இருபது வயதில் பெர்னாட் ஷா அன்னையுடன் லண்டனுக்குச் சென்றார்.  அங்கே தாயார் இசைத்தொழில் மூலம் ஊதியம் பெற்றுக் குடும்பத்தை நடத்திக் கொண்டு வந்தார்.  நிரம்ப இலக்கிய நூற் படைப்புகளைப் படித்து வந்த பெர்னாட் ஷா, முதலில் ஐந்து தோல்வியுறும் நாடகங்களை எழுதினார்.  பிறகு நாடக மேடை உலகில் புகுந்து மற்றவர் நாடகங்களை விமர்சனம் செய்து 1894 இல் “சனிக்கிழமை கருத்திதழில்” (Saturday Review) நாடகங்களைப் பற்றித் திறனாய்வு செய்து வந்தார். அப்போது பொதுவுடைமைக் கோட்பாடில் ஈடுபாடு மிகுந்து பிரதம மேடைப் பேச்சாளாராகவும் உரைமொழி ஆற்றினார்.

அவர் எழுதிய சிறப்பான நாடகங்கள்: பிக்மாலியன் (Pygmalion), ஜோன் ஆ·ப் ஆர்க் (Saint Joan), மனிதன் & உன்னத மனிதன் (Man & Superman), ஆப்பிள் வண்டி (The Apple Cart), டாக்டரின் தடுமாற்றம் (The Doctor’s Dilemma), மெதுசேலாவுக்கு மீட்சி (Back to Methuselah), மேஜர் பார்பரா (Major Barbara), கோடீஸ்வரி (Millionairess), இன்பியல் நாடகங்கள் (Plays Pleasant), துன்பியல் நாடகங்கள் (Plays Unpleasant), தூயவருக்கு மூன்று நாடகங்கள் (Three Plays for Puritans), நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House), ஆயுத மனிதன் (ஊழ் விதி மனிதன்) (The Man of Destiny) (1898), மிஸிஸ் வார்ரனின் தொழில் (Mrs. Warren’s Profession) (1893) போன்றவை.  ஐம்பது ஆங்கில நாடகங்கள் எழுதிய பெர்னாட் ஷாவுக்கு 1925 இல் இலக்கிய நோபெல் பரிசு அளிக்கப்பட்டது.

மேடம் மோனிகா வார்ரன் நாடகத்தைப் பற்றி :

[தமிழில் எழுதப் பேசும் வசதிக்காக பெர்னாட் ஷாவின் நாடகப் பெயர்கள் சிலவற்றை நான் எளிதாய் மாற்றி இருக்கிறேன்.]

பெர்னாட் ஷா நாடகத்தின் அடிப்படைக் கருத்து இதுதான் :  ஏழ்மையாலும், சமூகப் புறக்கணிப்பாலும், தனிப்படுவ தாலும், இல்லாமையாலும், வேலையின்மையாலும் சில மாதர் பரத்தையர் தொழில் சிக்கிக் கொள்கிறார் என்பதாக பெர்னாட் ஷா தன் நாடக முன்னுரையில் கூறுகிறார்.  மிஸிஸ் மோனிகா வார்ரன் ஒரு நடுத்தர வயது மாது.  உயர்தரப் பரத்தையர் மாளிகையை மேற்குடிச் செல்வந்தருக்கும், சமூகச் செல்வாக்கு மாந்தருக்கும் நடத்தி வரும் உரிமையாளி. நளினமும், நாகரீகமும் கவர்ச்சி மேனியும் கொண்டவள். மோனா லிஸா போன்று பார்க்க ஓர் அழகிதான். அவளுக்கு விவியன் என்றொரு வாலிபப் புதல்வி. மகள் கேம்பிரிட்ஜ் யுனிவெர்சிட்டி பட்டதாரி. அவளது கல்லூரிப் படிப்புக்குத் தொடர்ந்து பணத்தை அனுப்பிய அவளது அன்னை எப்படிப் பணம் சம்பாதிக்கிறாள் என்று தெரியாமல் இருக்கிறாள்.

அந்த இரகசியம் தெரிந்ததும் விவியன் வெகுண்டு, வெடித்து அன்னையைத் திட்டி அறவே வெறுக்கிறாள்.  தாய் சிறு வயதில் வறுமைப் பிடியில் பட்ட துயர்களைக் கூறிப் பரத்தையர் தொழிலில் தான் தள்ளப் பட்ட காரணத்தை விளக்குகிறாள்.  மகளால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தர்க்கத்தின் முடிவில் உடன்பட ஒருவரும் இயலாது இருவரும் தாம் விரும்பும் தனித்தனிப் பாதையில் போகிறார்.  மோனிகா தன் பரத்தையர் தொழிலைத் தொடர்கிறாள்.  தாயைப் போல பிள்ளை என்பார் சிலர். ஆனால் விவியன் ஒரு விதி விலக்கு மங்கை.  அவள் அன்னையைப் போலின்றி ஒரு கௌரவத் தொழிலில் உழைத்துச் சம்பாதிக்க ஈடுபடுகிறார்.

மிஸிஸ் வார்ரனின் தொழில் நாடகத்துக்குத் தடை உத்தரவு

1893 இல் எழுதிய பெர்னாட் ஷாவின் நாடகம் 1925 ஆண்டுவரை அடுத்தடுத்துத் தடை செய்யப்பட்டு இங்கிலாந்தில் அரங்கேறாது முடங்கியே மூலையில் கிடந்தது. பிரிட்டனின் அக்கால அரங்க மேடை அதிபரரான லார்டு சேம்பர்லின் “மிஸிஸ் வார்ரனின் தொழில்” நாடகத்தை எந்த நகரிலும் அரங்கேற்றக் கூடாது என்று தடை உத்தரவு போட்டார்.  காரணம் அந்த நாடகம் பரத்தையர் தொழிலைப் பற்றிக் காட்டி ஆடவரையும், மாதரையும் இழிவு செய்கிறது.  பரத்தையர் தொழில் நாட்டில் ஊன்றி வளர்வதற்கு மூல காரணமே சமூகம் தான் என்பது நாடகக் காட்சியாக வெளியாவது அப்போது வரவேற்கப் படவில்லை.  1902 ஆண்டில் லண்டனில் உள்ள “நியூ லிரிக் கிளப்” தன் உறுப்பினர் மட்டும் பார்க்க அந்த நாடகம் முதலில் அரங்கேறியது.  1905 இல் நியூ யார்க்கில் “மிஸிஸ் வார்ரன் தொழில்” நாடகம் முதன்முதல் அரங்கேறிப் பாதியில் போலீசார் குறுக்கிட்டு நடிகர் குழுவினர் கைது செய்யப் பட்டனர். பொதுநபர் ரசிக்க 1925 ஆண்டில்தான் அதை லண்டன் நாடக அரங்குகள் மேடையில் காட்ட முன்வந்தன.

பரத்தைமைத் தொழில் (Prostitution) பற்றி பெர்னாட் ஷாவின் கருத்துகள்

பெர்னாட் ஷா 1893 இல் “மிஸிஸ் வார்ரனின் தொழில்” என்னும் நாடகத்தை எழுதினார்.  அது பரத்தைமைத் தொழலில் ஈடுபட்டு ஊதியம் சம்பாதிக்கும் மிஸிஸ் வார்ரனைப் பற்றியது. அந்த வெறுப்புத் தொழிலில் கிடைத்த பணத்தை மகளுக்குத் தெரியாமல் சேர்த்து மகளைப் பட்டப் படிப்பில் ஏற்றி வளர்த்த நிகழ்ச்சியே நாடகத்தின் ஆணிவேராய் அமைந்துள்ளது.  இறுதியில் அதை அறிந்து கொண்ட மகள் ஆவேசம் கொண்டு அன்னையைப் பிரிவதே நாடக உச்ச முடிவாக எழுதப்பட்டுள்ளது.

மிஸிஸ் வார்ரன் உட்பட பரத்தைமைத் தொழிலில் பங்கு கொண்ட மற்றவரும், அவளது ஆசை நாயகரும் கண்ணியமாக காட்சி அளித்துப் போவதாய் பெர்னாட் ஷா காட்டி இருக்கிறார்.  இந்த கசப்பு நாடகத்தை தடை செய்யத் தகுதியுள்ள ஆபாச நடைப் போக்குகள், முரண்பாடுகள் எதுவும் வசனங்களில் இல்லை.  பரத்தைமை பற்றிய ஆபாசக் காட்சிகள், அமங்கலச் சொற்கள், அதிர்ச்சி வரிகள் எவையும் நாடகத்தில் எங்கும் காணப் படவில்லை. நாடக வசனங்களை இரட்டைப் பொருளில் பெர்னாட் ஷா எழுதி இருப்பது திறமையான நவீன நடைப் போக்காக திகைக்க வைக்கிறது.

பரத்தையர் தொழில் மாளிகை வைத்து நடத்தும் மிஸிஸ் வார்ரன் முரண்பாடு நாடகத்தை பெர்னாட் ஷா எழுதியதின் நோக்கம் என்ன ?  பரத்தைமைத் தொழிலின் மெய்யான காரணம் பெண்டிரின் சீர்கெட்ட நெறிகள் அல்ல !  ஆடவரின் ஆதிக்க வன்முறை வெறிகள் அல்ல !  வறுமை, ஏழ்மை, பசி, பட்டினி, தனிமை, வேலையின்மை, சமூகப் புறக்கணிப்பு, முறிந்த குடும்பம், வன்முறைக் கற்பழிப்பு, கட்டாயத் தொழில் அழுத்தம் போன்ற சமூக இடை யூறுகளே அப்பாவிப் பெண்டிரை மீளாத பரத்தைமைச் சிறையில் தள்ளி விடுகின்றன என்று பெர்னாட் ஷா தன் நாடக முகவுரையில் கூறுகிறார்

**********************

நாடக  உறுப்பினர்

1. மேடம் மோனிகா வார்ரன் [Mrs. Kitty Warren] (45 வயது)

2. மிஸ் விவியன் வார்ரன் – [Ms. Vivie Warren] மோனிகாவின் ஒற்றை மகள் (வயது : 22)

3. பாதிரியார் சாமுவெல் கார்டுநர் [The Rev. Samuel Gardner] (வயது : 50)

4. பிராங்க் கார்டுநர் [Frank Gardner], விவியனின் காதலன் & சாமுவெல் பாதிரியாரின் மகன் (வயது : 20)

5. வில்லியம் பவல் [Praed] (நடுத்தர வயது) : மேடம் மோனிகாவின் கூட்டாளி

6. ஜார்ஜ் வாலஸ் (Sir George Crofts) (50 வயது) : மேடம் மோனிகாவின் தோழன்.

************************

மேடம் மோனிகாவின் வேடம்

(Mrs. Warren’s Profession)

நான்கு அங்கங்கள்

(மூன்றாம் அங்கம்)

அங்கம் –3 பாகம் –5

இடம்:  ஹாஸ்லிமியர், ஸுர்ரி, இங்கிலாந்து

நடந்த ஆண்டு : 1893

பொழுது :  அடுத்த நாள் காலை

அரங்க அமைப்பு:   பாதிரியார் மாளிகைப் பூந்தோப்பு.   உதய சூரியன் முகிலற்ற வானில் தனியாட்சி செய்கிறான்.   ஃபிராங்க் ஒரு நாற்காலில் அமர்ந்து மர நிழலில் காலையில் வந்த செய்தித் தாளைப் படித்துக் கொண்டிருக்கிறான்.   தந்தை பாதிரியார் மெல்லத் தள்ளாடிய வண்ணம் மாளிகையிலிருந்து வெளியே வருகிறார்.   கண்கள் சிவந்துள்ளன.   தந்தையும் மகனும் தர்க்கம் புரியும் போது வில்லியம் வருகிறார்.  எதிர்பாராத விதமாய் மேடம் மோனிகா, மிஸ். விவியன், ஜார்ஜ் வாலஸ் மூவரும் வருகிறார்.   மிஸ். விவியனும்  ஃபிராங்க்கும் தனிமை நாடி உல்லாசமாக இருக்கிறார்.   அப்போது ஜார்ஜ் வாலஸ் விவியனை மயக்கித் தன்னை மணந்து கொள்ளும்படி ஆசை காட்டி வலை விரிக்கிறார்.

(சென்ற வாரத் தொடர்ச்சி)

மிஸ். விவியன் :  நல்ல சிந்தனைதான் !  அவள் பாமரப் பெண்ணா ?

படித்த பெண்ணா ?  இல்லை பணக்காரப் பெண்ணா ?

ஜார்ஜ் வாலஸ்:   அவள் பட்டம் பெற்ற பெண் !   ஆனால் பிறரது பண உதவியில் படித்தவள்.

விவியன்:  உங்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும்.

வாலஸ்:   என்னை நானே புகழ்ந்து கொள்ளக் கூடாது.   நானும் சில குறைபாடுகள்  கொண்டவன்; அது கடவுளுக்குத்தான் தெரியும்.    நானதை உணர்ந்தவன்.  நான் பூரண மனிதன் அல்லன் என்பதும் எனக்குத் தெரியும்.   நடுத்தர வயதினனாக இருப்பதில் உள்ள பற்பல முன்னேற்றங்களில் அது ஒன்று.   ஏனெனில் நானொரு வாலிபன் இல்லை.   எனது குறி மொழி எளிதானது, இனியது.  மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையே மதிப்பிருப்பது.   ஒரு மனிதனுக்கும் மாதரசிக்கும் இடையே  உறவு உறுதி இருப்பது.  நலம் பயப்பது இந்த மதமா, அந்த மதமா  என்பதில் தேர்வு கிடையாது எனக்கு.   ஒரு நேர்மையான நம்பிக்கை போதும்,  வாழ்க்கை யானது  முடிவில் ஒரு நல்வினை நோக்கிச் செல்லுது என்று.

விவியன்:  (கடுத்த முகத்துடன்)  நேர்மை என்பது ஆளுக்கு ஆள் வேறு படுவது.     ஒருவனைக் குத்திக் கொல்பவனும் தான் செய்வது நேர்மை யானது என்றுதான் நியாயப் படுத்திக் கொள்கிறான்.

வாலஸ்:   உண்மைதான்.   உனக்குப் புரிகிறது நான் சொல்வது.  வெற்றுப் பேச்சை விட்டு இப்போது செயற்பாட்டுக்கு வருவோம்.

எனக்குப் பண நொடிப்பு ஏற்பட்டு விட்டதாய் நீ நினைக்கலாம்.   ஆனால் அப்படி இல்லை.   என் பணச் சேமிப்பு நாளுக்கு நாள் பெருகி வருகிறது.    எனது பணம் பங்கு வணிகத்தில் பன்முறை பெருகி வருகிறது.   உனக்கு எந்தப் பணக் கவலையும் இருக்காது.  நானொரு பாதுகாப்பு மனிதன் பணச் சேமிப்பில்.   என்னை நீ நம்பலாம்.

விவியன்:  என் மனம் நெகிழ்ந்தது உங்கள் உறுதி ஊக்கத்தைப் பார்த்து.

வாலஸ்:   இதோ பார் விவியன் !  நீ பாசாங்கு செய்யாதே !  நான் உன்னை எதற்குள் இழுக்கிறேன் என்று உனக்குப் புரியவில்லையா ?   மேடம் வாலஸ் ஒருத்தியுடன் இப்போது நான் குடும்ப வாழ்வில் புகுந்திட விழைகிறேன்.   நான் நேரடியாகக் கடூரமாகப் பேசுகிறேன் என்று நினைக்காதே !

விவியன்: இல்லை, இல்லவே இல்லை !  நான் வரவேற்கிறேன் உமது வாணிபத் தன்மையை, வைராக்கியத்தை !   செல்வீக நிறைவு, மேனிலை வாழ்வு, மேடம் வாலஸ் மதிப்பு போன்ற உமது அன்பளிப்புகளைக் கேட்டு நான் பூரிப்படைகிறேன்.   அதற்கு என்னுடைய ஒரே பதில் !  ஒரே முடிவு ! வேண்டாம்  என்பது.   வேண்டாம் எனக்கிந்த சீமாட்டி வாழ்வு !    நான் போகிறேன்.  (எழுந்து நடக்கிறாள்).

வாலஸ்: [பொறுமையுடன்]   என்ன வேண்டாம் என்றா தள்ளுகிறாய் ?  எனக்கொன்றும் அவசரமில்லை.  நீ சிந்தித்துச் சொல்.  நான் காத்திருக்கிறேன் உன் ஆதரவான முடிவுக்கு.  என்னுடைய கவலை , இந்த ஊதாரிப் பையன் ஃபிராங்க் உன்னை ஏமாற்றிப் பிடித்துக் கொள்ளக் கூடாது.   என் வேண்டுகோளுக்கு நீ திறந்த மனதுடன் பதில் கொடு.    அது போதும்.

விவியன்:  வேண்டாம் என்பது இறுதி முடிவு.  இதில் எந்த மாற்றமும் இல்லை.   நான் போகிறேன்.  (போக முயல்கிறாள்)

வாலஸ்:  நான் உன்னை விட மிக வயதானன்.  இருபத்தி ஐந்து வயது கூடியவன்.  கால் நூற்றாண்டு.   நான் நீண்ட நாட்கள் வாழப் போவ தில்லை.  என் ஆயுள் முடிவதற்கு முன், உன்னை நான் நல்ல சீரும், செல்வக்குடனும் வைத்து விட்டுத்தான் செல்வேன்.

விவியன்:  (புன்னகையுடன்) மிக்க நன்றி மிஸ்டர் வாலஸ் !  உமது தீர்க்க சிந்தனைக்கு என் பூரண சம்மதம் கிடைக்கும் என்று எதிர்பார்க்க வேண்டாம்.  நான் மிஸில் வாலஸ் ஆக விரும்ப வில்லை !  எனக்கு இப்போது திருமணத் திட்டம் எதுவும் இல்லை.  அப்படி நானினிச் செய்தாலும் நான் ஏன் முதியவரை நாட வேண்டும், வாலிய ஆண்கள் என் வீட்டு வாசல் முன்பு வரிசையாக நிற்கும் போது.

வாலஸ்:  (அழுத்தமுடன்) நான் அடுத்துச் சொல்லப் போது உன் மனத்தை விரைவில் மாற்றி விடும்.   ஆனால் நானதைச் சொல்லப் போவதில்லை.   காரணம் நான் நேர்மையாகப் பேசி உன்னைத் திருமணம் செய்து கொள்ள விழைகிறேன்.   நான் உன் அன்னைக்கு நல்ல நண்பன்.  நெடுங்கால நண்பன்.  நான் உனக்குச் செய்யும் நன்மை உன் அன்னைக்குச் செய்யும் உதவி.  உன் கல்லூரிச் செலவுக்குப் பணம் அனுப்பும் அளவுக்கு, அவள் சம்பாத்தியம் இல்லை.  நான் செய்த பண உதவியில்தான் உன் பட்டப் படிப்பு முடிந்தது.  உன் தாய் இதை உனக்குச் சொல்லி யிருக்க மாட்டாள்.   நான் அருகில் நின்று உன் தாயிக்கு உதவியது போல் வேறு யாரும் இல்லை தெரியுமா ?   மொத்தம் நான் இதுவரை உனக்குச் செலவு செய்தது 40,000 பவுண்டு தெரியுமா ?

விவியன்:  தெரியாது மிஸ்டர் வாலஸ் !  தெரிந்திருந்தாலும் நான் உம்மை மணந்து கொள்ளச் சம்மதம் அளிக்க மாட்டேன்.

வாலஸ்:  நான் உதவிய நிதியை வைத்துதான் உனது அன்னை கோடீஸ்வரியாய் ஆகி இருக்கிறாள் தெரியுமா ?

விவியன்:  ஓ !  நீங்கள்தான் என் தாயின் வணிகக் கூட்டாளியா ?  இப்போதுதான் எனக்கு அது தெரிகிறது

வாலஸ்:  ஆமாம், இதை எல்லாம் வெளியில் சொல்லி முரசடிக்காமல் நாம் நமக்குள் வைத்துக் கொள்ள வேண்டும் அல்லவா ?

விவியன்:   ஏன் அப்படி சொல்கிறீர் ?  அது நீங்கள் செய்யும் ரகசியத் தொழிலா ?

(தொடரும்)

***************

தகவல் :

Based on The Play : Mrs. Warren’s Profession By : George Bernard Shaw, – Plays Unpleasant) (1958)

(a) The Portable Bernard Shaw By : Stanley Weintraub (1977)

(b) Writers & Critics – Shaw By A. M. Gibbs (1969)

(c) The Oxford Dictionary of Quotations (New Edition) (1992)

(d) The Wicked Wit of Oscar Wilde (1997)

(e) http://en.wikipedia.org/wiki/Mrs._Warren’s_Profession

(f) http://www.enotes.com/mrs-warrens-profession

(g) The Great Quotations Compiled By : George Seldes (1967)

(h) BBC DVD Video Limited – Bernard Shaw’s Mrs. Warren’s Profession Released in August 2006 (109 minutes)

(i) A Guide to the Plays of Bernard Shaw By : C.B. Purdom (1964)

(j) Major Critical Essays By : Bernard Shaw Penguin Classics (1986)

(k) http://www.online-literature.com/george_bernard_shaw/mrs-warrens-profession/

********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com] (October 4, 2012)

http://jayabarathan.wordpress.com/

Series Navigationதாகூரின் கீதப் பாமாலை – 34 விடைபெறும் நேரத்தில் !சூர்ப்பனகை கர்வபங்கம் – தோற்பாவைக் கூத்து
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *