விக்ரமாதித்யன் கவிதைகள் ‘கல் தூங்கும் நேரம்’ தொகுப்பை முன் வைத்து..

This entry is part 22 of 27 in the series 4 ஆகஸ்ட் 2013

vikrama

-ஸ்ரீரங்கம் சௌரிராஜன்

 

‘கல் தூங்கும் நேரம்’ தொகுப்பை விக்ரமாதித்யன் தந்துள்ளார். இதில் ‘கவி மனம்’ என்ற தலைப்பில் கே.ராஜேஷ்வர் அணிந்துரை தந்துள்ளார். கவிஞனைப் பற்றித் தத்துவப் பின்னணியில் மிக அழகாக எழுதியுள்ளார்.

    கரடி சைக்கிள் விடும்போது

    நாம்

    வாழ்க்கையை அர்த்தப்படுத்த முடியாதா?

    என்ற கேள்வி எவ்வளவு நம்பிக்கை தருகிறது! அணிந்துரையின் முடிவில், உரைநடையில் கவித்துவம் சுனாமி வேகத்தில் பாய்ந்துள்ளது. தத்துவ விசாரம் உச்சம் பெறுகிறது! ‘வார்த்தை’ என்பது பலமுறைகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. தாக்கம் பளிச்சடுகிறது.

 

    வார்த்தை மீறி இருக்கிறது வார்த்தை

    வார்த்தையில் அடங்கி இருக்கிறது வார்த்தை.

    என, 12 வரிகள் மனத்தைக் கிளர்ச்சி செய்கின்றன.

 

    விக்கிரமாதித்யன் கவிதைகள் மொத்தம் 52 உள்ளன. எளிய, தத்துவப் பின்னணி கவிதையை இயக்குகிறது.

    முதல் கவிதை ‘அம்மை’ உயர் குணங்களில் நேர்த்தியான பதிவு.

 

    அம்மா

    யாரையும்

    எதற்காகவும்

    எதிர்பார்ப்பதில்லை நம்பியிருக்கவில்லை.

 

    என்ற வரிகள் ஓர் உயர் ஞான நிலையை, திட சித்தத்தைக் காட்டுகின்றன.

 

    அப்பாவைப் பற்றிய கவிதையில்..

    வாய்த்தது இந்திர போகம்

    வாழ்ந்தது ராஜயோகம்

 

    என்பதில் உண்மை ஒப்பனையில்லாமல் சொல்லப்பட்டுள்ளது.

 

    வெட்டிச் சாய்க்கவும்

    எட்டுப்பேர் வேண்டும்

 

    எனத் தந்தையின் ஆகிருதி கண்முன் நிற்கிறது.

    ‘யாரோ எறிந்த கல்’ – தத்துவம், அனுபவம் சார்ந்த வாழ்க்கைக் கேள்வி கேட்கிறது.

 

    நினைப்பது வேறு நடப்பது வேறென்றாலும்

    நினைத்துக் கொண்டுதான் இருக்கிறோம்

 

    என்பது வாழ்க்கையின் யதார்த்தம்.

 

    இன்றும்

    பூமியைக் கட்டுப்படுத்துகின்றன கிரகங்கள்

    என்பது சோதிடக் கருத்தை வலியுறுத்துகிறது.

 

    இவனுக்கென்று

    இருக்கவே இருக்கின்றன வார்த்தைக்கலையும் குடிவகைகளும்

 

    என்று சுய விமர்சனம் செய்கிறார் விக்ரமாதித்யன்.

    இக்கவிதையிலும் தத்துவ தரிசனம் பதிவாகியுள்ளது.

    ‘தலைமுறை’ – யும் கவிதை சொல்லியின் வாய்மொழியாகவே அமைந்துள்ளது.

 

    உன் பேரனுக்கு

    தெரிய வருமா பனங்கிழங்குகள்

    என்ற வரிகளும்

 

    நல்லபாம்பைக் கண்டு

    நாள் அநேகமாகிறது

 

    என்ற வரிகளும் கிராமியக் காதலை அதிராமல் ஏக்கத்துடன் முன் வைக்கின்றன.

 

    ‘நேற்றைக்கு என் கிழமை’ – குறிப்படத் தக்க கவிதை. கருப் பொருள், வெளியீட்டு முறை இரண்டும் நன்றாக உள்ளன. நேற்று, இன்று, நாளை என்பதிலெல்லாம் வேறுபாடு வேண்டும் என்ற கருத்து இக்கவிதையில் காணப்படுகிறது.

 

    காலக் கணக்கு

    கவிஞனுக்கு எதற்கு

 

    இக்கவிதையில் எளிமை வியக்க வைக்கிறது. வாசகன் முரண்பட இயலாமல் தலையாட்டி இசைவு தருகிறான்.

 

    ‘மூணு சீட்டுக்காரன்’ – மனிதாபிமானம் மேலிடும் கவிதை! அவன் குடித்துவிட்டுச் சண்டை போடுகிறான். வீதியில் விலகிய வேட்டியுடன் விழுந்து கிடப்பதுண்டு.

 

    கைலியல்லாது

    வேட்டி கட்டுவானா

    தீபாவளிக்கேனும்

 

    என்று முடியும் கவிதை மிகவும் தற்செயலாக நமக்குச் சொல்கிற செய்தி, ‘அன்பு, நேசம், மனிதாபிமானம்’ என்பதுதான்.

 

    ‘மாயம்’ – வாழ்க்கை சொன்ன பாடத்தைப் பதிவு செய்துள்ளது. எல்லா ஆசைகளும் நிறைவேறுவதில்லை. என்ற உண்மை விளங்குகிறது.

 

    காம்யூ சார்த்தர்

    காஃகா என்று வாழந்தவன்

    அதீத

    குடிகாரன்

 

    என்கிறார். மாஜி கவிஞன் சிறுகதை எழுத்தாளன், சினிமா கனவுகளுடன் வந்தவன், கூலிப் பத்திரிகையாளன் என்று மனித வாழ்க்கையை விமர்சனம் செய்கிறார்.

 

    நிறைவாக, விக்ரமாதித்யன் கவிதைகள் தத்துவப் படகில் போய் ஞான வலை வீசி நாளைய மனிதர்களுக்கான புதையலை தந்துவிட்டுப் போகும் முயற்சியில் வெற்றி கண்டவை. புத்தகத்தைப் படித்து முடித்த பின்பும் வாசகர்கள் கூடவே வருவது ஒரு வெளிச்சம் என்றால் மிகையாகாது.

Series Navigationவணக்கம் அநிருத்உலகளவில் சீன வானொலி தமிழ்ச் சேவையின் செல்வாக்கு எனும் கருத்தரங்கு
author

ஸ்ரீரங்கம் சௌரிராஜன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *