திராவிட இயக்க அரசியல் சார்ந்த முதல் இலக்கிய பதிவு
கடந்த ஒரு நூற்றாண்டாக தமிழ் நாடு பெரும் சமூக மாற்றங்களை, அரசியல் மாற்றங்களை, கண்டிருக்கிறது. இம்மாற்றங்களின் விளைவாக வாழ்க்கை மாறியுள்ளது. வாழ்க்கை மதிப்புகளும் மாறியுள்ளன. ஆனால் இந்த அரசியல் போராட்டங்களோ அவற்றின் பின்னிருந்த உந்துசக்திகளோ பார்வைகளோ மாறிய வாழ்க்கை இலக்கியத்தில் , கலைகளில் பதிவு பெற்றதில்லை. காரணம் இவை எவற்றிலும் உண்மை இருந்தது இல்லை. சத்தம் பெரிதாக இருக்கலாம். ஆனால், ஆழ்மனதில் ரத்தத்தில் கொதிநிலையில், அனுபவத்தில் இல்லாத எதுவும் இலக்கியமாக கலைகளாக மலர்வது சாத்தியமில்லை.
குறிப்பாக 1916—ல் பிரகடனப் படுத்தப்பட்ட தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்ற பெயரில் பிறந்து, பல அவதாரங்களில் பல்கிப் பெருகி, இன்று தமிழ் நாட்டின் பெரும் அரசியல் சமூக சக்தியாக விளங்கும் திராவிட இயக்கமும் சரி, அதற்குச் சற்றுப் பின் தோன்றி இன்று வரை சமூகத்திலும் சரித்திரத்திலும் எந்த வித பாதிப்பையும் விளைவித்திராத பொது உடமை இயக்கமும் சரி, கிட்டத் தட்ட ஒரு நூற்றாண்டு கால இவற்றின் தொடர்ந்த் இருப்பில் இவ்விரண்டின் கூச்சல், மேடைப் பேச்சுக்களிலும், பத்திரிகைப் பிரசாரங்களிலும் மிக உரக்க இருந்த போதிலும், இவை பிரசாரமாகவே நின்றுவிட்டன, ஆதியிலிருந்து இன்று வரை .இவையெல்லாம் என்னதான் நாவல், சிறுகதை, கவிதை, நாடகம், சினிமா என்று எல்லா இலக்கிய, கலை வடிவங்களிலும் எழுதிக் குவிக்கப் பட்டுக்கொண்டே இருந்தாலும், அவை குப்பைகளாகத் தான் மலையென பெருகிக் கிடக்கின்றன.
ஒன்று விலகி இருந்து சாட்சி பூதமாக தன் பார்வையை வைக்கத் தெரிந்திருக்கவேண்டும். அல்லது எந்தத் தரப்பிலிருந்தாலும், கம்யூனிஸ்ட் கட்சியிலோ அல்லது திராவிடக் கட்சிகளிலோ எதிலிருந்தாலும், தனக்கும் தன் அனுபவத்துக்கும் உண்மையாக நேர்மையாக இருக்கத் தெரியவேண்டும். இரண்டுமே இதுவரை சாத்தியமாகவில்லை. இரண்டு தரப்புகளுமே தானே நம்பாத கொள்கைகளின் பிடியில் சிக்குண்டு அவற்றை உரத்து சத்தமிட்டு
கிடப்பவை. அதில் சுயலாபம் இருப்பதால் தாம் சிக்குண்டு கிடப்பதில் அவர்களுக்கு விருப்பம் தான். அதில் திளைத்துக் கிடப்பவர்கள். அவர்கள்.
ஆச்சரியமாகத் தான் இருக்கிறது. இந்த இரண்டு கட்சிகளும் ஒரு நூற்றாண்டு காலமாக நீடித்திருப்பதும், தமிழ் மண்ணில் வேரூன்றி பலம் பெற்றிருப்பதும் அவற்றில் உண்மை இல்லாது சாத்தியமா?, அதற்கு மக்கள் வரவேற்பும் அவர்கள் கொள்கைகளில் மக்களுக்கு நம்பிக்கை இல்லாது இந்த வெற்றி சாத்தியமா என்று.. சாத்தியமாகியிருப்பது இரு தரப்பினரின் கோட்பாட்டின் பலத்தால் அல்ல. இரு தரப்பினரின் கொள்கை நடைமுறை என்ற இருமுக வாழ்வின் காரணமாகத் தான். இது தலைவனிலிருந்து தொண்டன் வரை புரிந்து கொள்ளப் பட்டுள்ளதன் காரணமாக, இருமுக வாழ்வே ஒரு நூற்றாண்டு காலமாக சாத்தியமாகியுள்ளது.
தமிழ் மகனின் வெட்டுப்புலி நாவல் தமிழ் நாட்டின் ஒரு சின்ன பகுதியின் ஒரு நூற்றாண்டு மக்களின் வாழ்வையும் சிந்தனையோட்டத்தையும் ஆசைகளையும் சொல்கிறது. அது மக்களின் வாழ்க்கையும் ஆசை நிராசைகளும். அந்த மக்கள் சென்னையை அடுத்த ஒரு ஐம்பது – நூறு மைல்களுக்குள்ளான மண்ணில் வாழ்கிறவர்கள்.
வெட்டுப் புலி படம் ஒட்டிய தீப்பெட்டிகளை நான் பள்ளியில் படித்த காலத்தில் பார்த்திருக்கிறேன். சொல்லப்போனால் 1940 களில் நிலக்கோட்டையில் தீப்பெட்டி வாங்கினால் அது வெட்டுப் புலி படம் ஒட்டியதாகத்தான் இருக்கும். இடது பக்கம் ஒரு வளைந்த அரிவாளை, கதிர் அறுக்கும் அரிவாளை ஓங்கிய கையும் முழங்காலுக்கு தூக்கிக் கட்டிய வேட்டியுமாக ஒரு வாலிபன். அவனோடு ஒரு நாயும் இருக்கும். அவன் முன்னால் புதரிலிருந்து சீறும் ஒரு புலி. இது முப்பதுக்களில் நடந்த கதை என்பது இப்போது தமிழ் மகனின் இந்த நாவலிலிருந்து தெரிந்து கொள்கிறேன்.
இது ஒரு பெரிய விஷயமா என்றால் தனி ஒருவனாக ஒரு புலியை அரிவாளால் எதிர்கொண்டு வெட்டி வீழ்த்தியது ஒரு தனி மனித சாகஸம் தான். ஆனால் அது இவ்வாறு கொண்டாடப் படுவது கிட்டத் தட்ட அந்த காலகட்டத்தோடு சற்று முன்னும் பின்னுமாக இணைந்த பெரிய சமூக நிகழ்வுகள். இரண்டுமே தமிழ் வாழ்க்கையின் சமூகத்தின், சரித்திரத்தின் குணத்தை நிர்ணயித்தவை. இரண்டும் அதற்குச் சற்று முன்னரே தொடங்கி விட்டவை தான்.
எங்களூரில் கிட்டத்தட்ட இம்மாதிரி ஒரு சின்ன நாட்டார் காவியமாக சிறப்பிக்கப்பட்ட நிகழ்வுகள் உண்டு. ஒன்று தென் மாவட்டங்களில் அந்நாட்களில் மிகவும் பரவலாகப் பேசப்பட்ட, ஜம்பு லிங்கம் என்ற ஒரு பெரிய கொள்ளைக்காரனின் சாகசங்கள். மக்களால் கொண்டாடப்பட்டவன். பின் என் சின்ன வயசில் எல்லோரும் வியந்து வாய் பிளந்து பேசும் தீச்சட்டி கோவிந்தன் என்றே மக்களால் பட்டம் தரப்பட்ட ஒரு சப் இன்ஸ்பெக்டரின் சாகஸங்கள். கோவிந்தன் தீச்சட்டியைத் தூக்கி முன்னால் செல்ல, அவரைப், பின்னால் தொடர்ந்த காவலர்கள் சுமந்து வந்த பாடையில் துப்பாக்கிகளை அடுக்கிப் போர்த்தி பிணமென மறைத்து மயானத்துக்கு எடுத்துச் சென்ற சாகஸ வரலாறு.. அம்மாதிரி ஒரு கதாநாயகன் ஆன சப் இன்ஸ்பெக்டர் என்ன, போலீஸ் டைரக்டர் ஜெனரல் கூட யாரும் இல்லை. இந்த 70 – 80 வருட காலத்தில்.
வெட்டுப்புலி சம்பந்தமில்லாது ஒட்டவைக்கப்பட்ட சமாந்திர கால நிகழ்வு என்றில்லை. இந்த நாவல் சொல்லும் கதையின் இன்னொரு இழையின் மூத்த தலைமுறைக்காரர் சின்னா ரெட்டி தான் வெட்டுப் புலி தீப்பெட்டி லேபிளில் காணும் ஹீரோ. நாவல் தொடங்கும் தசரத ரெட்டியின் சகலை. அந்த ஆரம்பம் மிக அழகாகவே சொல்லப்பட்டிருக்கிறது. அந்த சாகஸ நிகழ்வின் சாதாரணத்வத்துக்கு மேலே அது வீர காவியமாக ஆக்கப் படவில்லை. அந்த சாதாரண நிகழ்விலேயே அதன் எதிர்பாராத தன்மையில் எதிர்கொண்டதிலேயே தான் சாகஸம். அனேகமாக நாவல் முழுதும் இந்த சாதாரண தோரணையிலெயே நிகழ்வுகள் சொல்லப்படுகின்றன. அதன் இடைவிடா தொடர்ச்சி தான் சரித்திரமாக நம் எல்லோரையும் ஆக்கிரமித்துக்கொண்டுள்ளது.
பத்திருபது அய்யர்மார்கள் இருந்த அக்கிரகாரம் இப்போது இரண்டு மூன்று பேர் கொண்ட அகரமாகக் குறுகிவிட்டது அந்த முப்பதுகளிலேயே. அவர்கள் ஒரு பொருட்டே இல்லை. முப்பதுக்களில் மற்ற இடங்களில் சுதந்திரப் போராட்டம் பெரும் கொந்தளிப்பாக இருக்கலாம். ஆனால் ஜெகநாதபுரத்தின் .தசரத ரெட்டிக்கு அது “உபயமத்த வேலை” அது ஜமீந்தார்களும், அங்கு ஒரு மணி ஐயர் கணக்குப் பிள்ளையாகவும், குதிரைமேல் சவாரி செய்து வெள்ளைக்காரன் வருவதுமான காலம். விவசாயம் செய்யும் ரெட்டியார்கள். ஆனால் நாமம் போட்டு வைணவர் களானால் நாயக்கர்கள்,. இன்னும் சற்றுத் தள்ளி தெற்கே போனால் படையாச்சி. மதராஸ் பக்கம் போய் ”ரெட்டியார்னு சொன்னா தெலுங்கனான்னு கேக்கறான்,”. என்று இப்படி சாதி பற்றிய பிரக்ஞை தான் முன்னிற்கிறது.
ஒர் இடத்தில் தஸரத ரெட்டி சொல்கிறார், ”சாதியெல்லாம் ரொம்ப நாளா வந்திட்டிருக்கு. அதுலே ஏதோ இருக்குன்னு தான் இப்படி யெல்லாம் செஞ்சு வச்சிருக்காங்க. நம்ம காலத்திலே எப்படியாவது இதைக் கட்டிக் காத்துட்டோம்னா போதும்” என்று நினைக்கிறார். நண்பர்களிடையே பேச்சு வருகிறது. “வெள்ளைக்காரன் மாதிரி இவனுங்களும் (பாப்பானுங்களும்) காபி குடிக்க ஆரம்பிச்சுடானுங்க. அவன் மாதிரி உடுத்த, அவன் பாஷைய பேச ஆரம்பிச்சுட்டானுங்க. ஆனா அவன் மாத்திரம் நாட்டை விட்டுப் போயிடனும்” என்று பேச்சு நடக்கிறது. அந்தப் பேச்சு செய்யும் வேலையையும் தொடுகிறது. ”அவன் படிக்கிறான். நம்ம பசங்களுக்கு செருப்பு தைக்கணும், வண்டி ஒட்டணும். படிப்புன்னா மாத்திரம் கசக்குது. என்னடான்னா, அவன் செய்யறது ஒசத்தி, நாம செய்யறது மட்டம்னு ஆயிப்போச்சு. ஒவ்வொத்தன் அவனுக்கு தெரிஞ்சதைத் தான் செய்யறான்”. என்று பேசிக் கொள்கிறார்கள். இதுக்கெல்லாம் முத்தாய்ப்பா வருவது “பாப்பானைத் திட்டனும்னா அப்[படி ஒரு ஆவேசம் வருதுய்யா”. என்கிறார் கணேச ரெட்டி. ஆவேசம் வருது. திட்டணும் .
ஆனால் ஏன் அப்படி ஆவேசம் வருது என்று கேட்டால் அதற்கு பதில் அவரவர் வாழ்க்கையிலிருந்து கிடைப்பது இல்லை. உதாரணத்துக்கு கருணாநிதியிடம் பொங்கிப் பெருகும் அதீத பார்ப்பன துவேஷத்துக்கு காரணம் என்ன என்று அவரது நெஞ்சுக்கு நீதியின் அவ்வளவு பாகங்களிலும் கிடைக்காது. அவரது திருக்குவளை வாழ்க்கையிலும் கிடைக்காது. அவர் அதைப் பெற்றது பனகல் மகாராஜைவைப் பற்றிப் படித்ததிலிருந்து தான் என்று சொல்கிறார். அதே கதைதான் தசரத ரெட்டியாருக்கும் கணேச ரெட்டியாருக்கும். எல்லாம் பொது வெளியில், காற்றில் மிதந்து வரும் பரிமாறல்கள் அவற்றின் நியாயத்தை விட அவை அவர்களுக்கு திருப்தி அளிப்பவையாக இருக்கின்றன என்று தான் சொல்லவேண்டும் நாவலின் 370 சொச்சம் பக்கங்கள் அத்தனையிலும் எங்கும் யாரும் என்ன காரணங்களுக்காக இத்துவேஷத்தை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கான காரணங்கள் கிடைக்காது. இப்படி கிடைக்காமல் போவது நிச்சயமாக அனுபவம் சார்ந்தது. இது வரை நாம் கண்ட திராவிட, கம்யூனிஸ் எழுத்துக்கள் போல கொள்கைகள் சார்ந்து பின்னப்பட்ட கதையோ வாழ்க்கையோ மனிதர்களோ அல்ல. .பாப்பானிடம் காணும் ஒவ்வொன்றையும் பார்த்து உள்ளூர கொதித்துக்கொண்டிருக்கும் பொறாமை தான் துவேஷத்துக்கான காரனங்களைத் தேடச் சொல்கிறது.
தசரத ரெட்டியும் அவர் மனைவி மங்கம்மாவும் பேசிக்கொள்கிறார்கள். தசரத ரெட்டி சொல்கிறார் மனைவியிடம்.
“குருவிக்காரன், பள்ளி, பறையன், செட்டி, கம்மான் எல்லாம் சமம்னு சட்டம் வரப்போவுதாம். அப்புரறம் எல்லாரும் எல்லா வேலையும் செய்யவேண்டிதான்”.
அதற்கு மங்காத்தா பதில், “நல்லாருக்கு. நாம அணில் அடிச்சி சாப்பிடணும், அவன் வந்து வெள்ளாமை பண்ணுவான்.”
இது இந்த இரண்டு பேருடன் மாத்திரம் முடிகிற விஷயம் இல்லை. ஆரம்பித்து வைத்த பனகல் மகாராஜாவிலிருந்து, ஈரோட்டு ராமசாமி நாயக்கரிலிருந்து தொடங்கி திருமாவளவனும் டாக்டர் கிருஷ்ணசாமியும் ஒருவர் முகம் ஒருவர் பார்த்துக்கொள்ள விரும்பாத இன்று வரை நம்மூர் கிராமத்து கூரை வேய்ந்த சாயாக் கடையின் தனித் தம்ளர் வரை.
பாப்பானைத் திட்டுவதில் தான் ஒரே குரல் இவர்களுக்கு. அதனால் தான் மங்காத்தாவுக்கு இந்த சிக்கலை தசரத ரெட்டி விளக்கமாகச் சொல்கிறார்.
“குருவிக்காரனும் நாமும் சமம்னு ஆயிடணும்னு இல்லடி. பாப்பானும் நாமும் சமம்னு சொல்றதுக்குத் தாண்டி சட்டம் போடச் சொல்றாங்க.”
மங்காத்தாவுக்கு இது ஒன்றும் சரியாகப் படவில்லை. “அவன் மேரி நாமும் ஆவணும்னா கறி மீனை விட்டுப்புட்டு தயிர் சோறு சாப்பிட்டுக்கினு நாக்கு செத்துப் போக வேண்டியது தான். அடச்சீ, நாம எதுக்கு பாப்பானை மாரி ஆவணும்”
இந்தக் கேள்வி பல ரூபங்களில் இன்று வரை எல்லா திராவிட அரசியல் சாரந்தவர்கள் குடும்பங்களிலும் தலைவர் முதல் தொண்டன் வரை கேட்கப்படும் கேள்வி தான். நமக்குத் தெரியும் இந்தக் கேள்வி இன்றும் தொடர்கிறது, மூன்று தலைமுறை வயதான, இன்று இந்தப் போக்கிற்கே அச்சாணியாக தம்மை சந்தர்ப்பம் நேரும்போதெல்லாம் விளம்பரப் படுத்திக்கொள்ளும் தலைமைகளின் வீடுகளிலும் தொடர்கிறது. வேறு வேறு தொனிகளில், அழுத்தங்களில், வார்த்தைகளில். அப்போது ஒரு தரப்பு உள்ளார்ந்த நம்பிக்கையின், வளமையின் வழி வாழும்போது, மறு தரப்பு, மூர்க்கம், முரட்டு அதிகாரம் வழி ஆள்கிறதையும் பார்க்கலாம். இந்த நாவலிலேயே அனேக பக்கங்களில் விரியும் இதற்கான சான்றுகளை, ஒரு சில என சுட்டிக்காட்டலாம்.
இது இரண்டு தலைமுறைகள் கடந்து அறுபதுகளில் நடப்பது. என்றும் நிகழும் வாழ்க்கையில் ஒரு நாளைய ஒரு நேர காட்சி. ஒரு சோத்துப் பதம். இது தியாகராஜன் என்னும் ஒரு தீவிர திமுகவுக்கும் அவனது புது மனைவி, தெலுங்குக் குடும்பம், ஹேமலதா என்னும் ஒரு அப்பாவிக்கும் இடையில்
“இரவு சாப்பாடெல்லாம் முடிந்து சந்தோஷமான மன நிலையில் இருக்கும் போது, சாதாரணமாகப் பேச்சு எடுக்கிறாள் ஹேமா
“ஏங்க, ஐயருங்கள திட்டுறதை விட்டுட்டு நாமளும் அவங்க மாதிரி ஆனா என்னாங்க”
அதெல்லாம் நடக்ககூடிய காரியம் இல்லடி.
“நாமளும் நாமம் போட்டுக்கிட்டு தயிர் சாதம் சாப்பிடணும், அவ்வளவு தானே”
பதில் சொல்லாது அவன் திசை திருப்பவே, புனிதா கேட்கிறாள் திரும்பவும்.
“நான் சொன்னதுக்கு பதிலைச் சொல்லுங்க. அவங்க மாதிரி சுத்தபத்தமாக இருக்க முடியலைன்னு தானே அவங்க மேலெ பொறாமை?”
“அடி செருப்பாலே”.. மென்ற வெற்றிலைச் சாறை பிளிச் சென அவள் முகத்தில் துப்பினான் .”பைத்தியக்காரி…..முட்டாள்….. தயிர் சாதம் சாப்பிட்டா நீயும் ஐயர் ஆயிடுவியா?, கலெக்டர் ஆயிடுவியா?, ஜட்ஜ் ஆயிடுவியா?” ஆத்திரம் தாளாமல் அப்படியே இழுத்து முதுகில் நாலு சாத்து சாத்தினான்”
இது ஒரு காட்சி.
இதுவே குடும்பத்தை மீறி வெளி உலக வாழ்க்கையிலும் எந்த காரணமும் இல்லாது பொறாமை, தன் இயலாமை, பாப்பான் என்ற ஒரு சொல்லே மூர்க்கத்தனத்துக்கு இட்டுச் செல்கிறது.
இடையிடையே நாவல் எங்கிலும் எழுபது எண்பது வருட கால நீட்சியை உள்ளடக்கிய சரித்திரத்தில் வேறு பல மாற்றங் களையும் ஆங்காங்கே பதித்துச் செல்கிறார். தமிழ் மகன்
.இதற்கு முந்திய போன தலைமுறையிலேயே, “அரிசிச் சோறு சாப்பிடும் ஆசை பிள்ளைகளூக்கு வந்து விட்டது பற்றிய கவலை சின்னா ரெட்டிக்கு வந்துவிடுகிறது. அதனால் நாலு ஏக்கர் நிலம் நெல்லுக்கு என ஒதுக்க வேண்டி வந்துவிடுகிறது.
.பல இடங்களில் இவையெல்லாம் அப்போது நடந்தனவா என்ற சந்தேகம் எனக்கு எழுந்ததுண்டு. முப்பதுகளில் டீசல் மோட்டார் வைத்து நீர்ப்பாசனம் வந்து விட்டதா என்ற சந்தேகம் கூட்டணி என்ற சொல் அந்தக் கால அரசியலிலேயே வரவில்லை. பொது வாழ்க்கையில் வந்து விட்டதா? 1940 களில் நான்காம் ஜார்ஜ் தலை போட்ட ஒரு ரூபாய் தாள் இருந்ததா? அந்தக் காலத்தில் டெர்ரிலீன் சட்டைகள் வந்தனவா? இது போன்று ஆங்காங்கே படிக்கும்போது தட்டுப் படும்போது புருவம் உயரும். இருந்தாலும், ஆசிரியர் மிகவும் கஷ்டப்பட்டு அவ்வக் கால நடப்புகளையும் மாறி வரும் சூழல்களையும் பதித்துச் செல்கிறார் என்று நாவல் முழுதும் தெரிவதால், ஒரு வேளை இருக்கலாம் என்று சமாதானம் கொள்கிறோம். இது மட்டுமல்ல இன்னும் பல தகவல்களையும் தாண்டிச் செல்கிறோம். அதனால் மூன்று நான்கு தலைமுறைகளின் தமிழ் வாழ்க்கை அந்த இரண்டு வடக்கு மாவட்டங்களில் அதன் மைய நீரோட்டத்தைப் பதிவு செய்வதில் பெரும் தவறுகள் ஏதும் நிகழ்ந்துவிட்டதாகத் தோன்றவில்லை. விவரம் தெரிந்து தான் இத்தகவல்களை சேர்த்திருப்பார் என்ற நினைப்பில் மேல் செல்கிறோம்.
இருபதுகளில் தொடங்கும் இத்தலைமுறைக் கதை திராவிட அரசியலைத் தொடுவதோடு தமிழ் வரலாற்றின் போக்கிலேயே சினிமாவையும் தன்னுள் இணைத்துக்கொள்கிறது..முதல் சினிமாப் படம் தியாகராஜ பாகவதரை வைத்து எடுத்த படத்திலிருந்தே இந்த இணைப்பு தொடங்கிவிடுகிறது. சினிமா எடுக்க வேண்டும் என்ற ஆசை பிடித்தலையும் ஊத்துக்கோட்டை ஆறுமுக முதலியாரிலிருந்து இது தொடங்கிவிடுகிறது. படம் பார்க்கும் ஆசையிலிருந்து சினிமா எடுக்கும் ஆசை வளர்கிறது. மதராஸுக்கு பயணம். மாம்பலத்தில் வீடு வாங்கி குடியிருக்கும் அண்ணன் கணேசன் வீட்டுக்கு வருகிறார். அண்ணனிடம் தன் திட்டத்தைச் சொல்லி அரை நோட்டு ஆகும்கறாங்க” என்கிறார். அண்ணனுக்கு ரொம்ப சந்தோஷம். தம்பியின் தைரியத்தைப் பார்த்து. அவர் கொடுக்கும் ஒரே ஆலோசனை” ”இந்தப் பாப்பானுவ நுழையறதுக்கு முன்னாலே நீ நுழைஞ்சிடு. ”நாம பாப்பனுவ கிட்டே தான் அடிமையா இருக்கோம் வெள்ளைக்காரங்கிட்டே இல்லே. அதான் பெரியார் சொல்றாரு. ரெண்டாயிரம் வருஷமா அடிமையாயிருக்கோம். இதுதான் பெரிய விஷயம். இதை வச்சு படம் எடுத்துடு”. என்றவர் அடுத்து, “நம்ம சோடா ஃபாக்டரி வஜ்ரவேலு முதலியார் படம் எடுக்கறாரு. அவரிட்ட போய் ஜஸ்டிஸ் பார்ட்டி கணேசன் அனுப்பினார்னு சொல்லு” என்று வழி காட்டுகிறார். அங்கு போன இடத்தில் கே.பி.கேசவனின் நாடகத்தை, எம்.கே ராதாவின் அப்பா கந்தசாமி முதலி படம் எடுக்கப்போவதாகவும் அதில் பங்குதாரராகலாம் என்றும் தெரிகிறது.
ஆக, முதலியார்கள் நிறைந்திருக்கும் தொழிலில் பாப்பான் நுழைஞ்சிடப்போறானே என்று கவலையில் அடிமைத்தனம் எங்கு வந்தது.? போட்டியும் பொறாமையும் தானே. கவலைக்குக் காரணம்? இது ஆரம்பம். இதன் அடுத்த, அல்லது அதற்கும் அடுத்த கட்டம் தலைமுறைகள் தாண்டி ஐம்பது-அறுபதுக்களில் தொடர்கிறது அதே பொறாமையுடன்.
இப்போது அறுபதுகளுக்கு வந்தால், தியாகராஜனைச் சந்திக்கலாம். முதலியார் சாதியில் பெண் இருக்கக் கூடாது.
நாயுடு என்று சொன்னார்கள். தமிழ் தெரியாது தெலுங்கு பேசுகிறவள். ஐயரு இல்லாம செய்துகிட்ட சீர்திருத்த மணம் அவளையும் தன்னைப் போல் பெரியார் பக்தையாக்கிவிட முயன்றால், அவள் “எல்லாரையும் சமமா பாக்கணும்னு சொல்றீங்க… அப்புறம் இது வேறே அது வேறேனு சொல்றீங்க. எதுக்கு இந்தப் பித்தலாட்டம்கறா? என்று அவனுக்கு எரிச்சல். கடைசியில் திராவிட இயக்கக் கொள்கை தான் இதற்கு பதில் சொல்லி மனம் சமாதானமடையச் செய்யும் போலிருக்கிறது.
“தன்னைப் பழி வாங்க பார்ப்பனர் செய்த சதி போல இருந்தது அவனுக்கு மனைவி வாய்த்தது.” பிரசினை எதுவாக இருந்தாலும் பாப்பானைத் திட்டினால் பிரசினை தீர்ந்துவிடுவதாகத் தோன்றுகிறது.
வீட்டில் மாத்திரம் இல்லை. அவன் வேலை செய்யும் ஏஜீஸ் ஆபீஸிலும் அவனுக்கு எதிரான பார்ப்பன சதி தான்.
அவன் ஆபீஸில் ஒரு பார்ப்பனர் நாடகங்கள் போடுவதிலும் சினிமாவுக்கு வசனங்கள் எழுதுவதிலும் ஈடுபட்டிருந்ததை அறிந்ததும் அதுவும் அவன் தன் ரேங்கில் இருப்பவன் அவன் எம் ஜி ஆர் படங்களுக்கு வசனம் எழுதும் அளவுக்குப் போனது அவனுக்கு தாளமுடியாத ஆத்திரமாக வந்தது. இதுவும் பார்ப்பன சதி இல்லாமல் வேறென்ன?
அவனை யாரோ ஒரு பார்ப்பான் என்று உதறி எறியவும் முடியவில்லை. அந்த பாப்பானுக்கு ஒரு ரசிகர் கூட்டம் வேறெ. “பால சந்தர் படம்” என்று புகழ் பரவியது. அடுதடுத்து அந்த பாப்பான் வளர்ந்து கொண்டே போனால்? நாணல், எதிர் நீச்சல், பாமா விஜயம் மேஜர் சந்திரகாந்த், சர்வர் சுந்தரம் என்று அந்த வளர்ச்சி பெரிய தலைவலியாக இருந்தது. அவர் பெயரை “பால சந்திரனோ, பால சுந்தரமோ என்று தெனாவட்டாக உச்சரிப்பான்.
”என் கூட வேலை செஞ்ச பய” என்று சொல்வான். பின் ”என் கீழே வேலை செஞ்சவன்” என்றும் சொல்லிப் பார்த்தான்..
லட்சுமண ரெட்டியார் திராவிட கழக அனுதாபி, அப்பப்போ படிப்பகம் அது இது என்று உதவுவதோடு நிற்பவர். அவர் தன் குடும்பத்தையே ஒன்றும் செய்ய முடிந்ததில்லை. அவர்கள் சம்பிரதாயத்திலேயே மூழ்கியவர்களாக இருந்தார்கள். இன்னும் ஏதாவது செய்யலாம் என்று தீவிர கழகக் காரரான மணி நாயுடுவை அண்டலாம் என்றால் அவர் சாராயக் கடையை ஏலம் எடுப்பதிலும் கவர்ன்மெண்ட் காண்டிராக்ட் ஏலம் எடுக்க அரசுத் தரகர்களுக்கு லஞ்சம் தருபவராக மாறிப்போனதால் அந்தத் தொடர்பும் விட்டுப் போகிறது.
முன்னர் ஜஸ்டீஸ் பார்ட்டியிலிருந்த சௌந்திர பாண்டிய நாடாரும் இதில் வருகிறார். பெரியார் திடலில் லட்சுமண் ரெட்டியாரைச் சந்திக்கிறார். நாடார் குல மித்ரன் என்ற பத்திரிகையின் பழைய இதழைப் படிக்கிறார். அதில் பெரியார் காங்கிரஸில் இருந்த போது ஹிந்து- முஸ்லீம் ஒற்றுமையைப் பற்றியும்,, ஸ்ரீமான் காவ்ய கண்ட கணபதி சாஸ்திரிகள் வரவேற்புரை அளிக்க, ஸ்ரீமான் ராமாசாமி நாயக்கர் அக்கிராசனராகிறார். காந்தியடிகள் உண்ணாவிரதம் வெற்றியடைய கடவுளைப் பிரார்த்திக்கிறார் ஜஸ்டிஸ் கட்சி ஒழிய நாள் தோறும் பிரார்த்தனை செய்து வருவதாகவும் சொல்கிறார். லட்சுமண ரெட்டியார் பெரியாரிடம் மரியாதை வைத்திருப்பவர். நாடார் குல மித்ரனில் தப்புத் தப்பாகப் போட்டிருக்கிறானோ என்று கேட்கிறார் சௌந்திர பாண்டிய நாடாரை.
லட்சுமண ரெட்டியார் சினனா ரெட்டி வெட்டுபுலி காலத்தில் சின்ன பையன். இப்போது தாத்தாவாகிவிட்டவர்.
இன்னொரு தலைமுறையில் நடராஜனுக்கு ஒரு கேள்வி. “இவனுங்க (பாப்பானுங்க) நாலு பேர் இருந்தா நாம நானுரு பேர் இருக்கோம். நாலு தட்டு தட்டி வச்சோம்னா சரியாயிடும்ல, அவனுங்க என்ன நம்ம அதிகாரம் பண்றது?, என்று கேட்கிறான். இன்னொரு சமயம் “இவனுங்க குரலே எனக்கு பிடிக்கல மாமா,. என்னமோ மூக்கில் பிரசினை மாதிரியே பேசறானுங்க. தொண்டையிலே சளி கட்டின மாதிரி. இவனுங்க மனுசனே இல்லே மாமா. வேறே ஏதோ மிருகம். குரங்குக்கும் மனுஷனுக்கும் நடுவிலே” இதற்கு மாமாவின் பதில், “அப்படி இல்லேடா. மனுஷனுக்கு அடுத்து வந்த மிருகம்னு வேணா சொல்லு. ஒத்துக்குவானுங்க” என்கிறார் சிரித்துக்கொண்டே.
ஆனால் நடராஜனுக்கு எப்படியோ பாரதியாரைப் பிடிக்கும். ஆனால அவன் வட்டாரத்தில் பாரதியாரை .ஒதுக்கினார்கள். பாரதி தாசன் போதும் அவர்களுக்கு. பாரதியும் பெரியாரும் சந்தித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நினைப்பான்.
வ.வு.சி.க்கும் பெரியாருக்கும் இடையே இருந்த நெருக்கம் பாரதிக்கும் வ.வு.சிக்கும் இடையே இல்லை. மனஸ்தாபமாவது இருந்திருக்கும். அப்படியானால் பாரதியாரை மறைமுகமாகக் கூட ஆதரிக்க வேண்டியதி்ல்லை” என்று இப்படிப் போகும் அவன் திராவிட இயக்க சிந்தனை பிரசினைகளும் அதற்கான சமாதானங்களும்.
நடராஜனுக்கு கன்னிமாரா லைப்ரரியில் ஒரு பெண்ணுடன் பழக நேரிடுகிறது. அவள் பிராமணப் பெண் என்று தெரிந்ததும் “அது ஒரு கரப்பான் பூச்சி பறந்து வந்து அவன் உடம்பில் உட்கார்ந்தது போல் இருந்தது” அவனுக்கு.
அவர்கள் பேசிக்கொள்வதைக் கேட்கலாம்:
நடராஜன்: “பொஸ்தகம்னா ப்ராமின்ஸ் எழுதறது தானே? பாரதியார், வ.வே.சு. தி.ஜானகிராமன், சுஜாதா, பாலகுமாரன், எல்லாம் யாரு?
(பேசிக்கொண்டிருபபது பிராமணப் பெண் இல்லையென்றால் ப்ராமின்ஸ்க்கு பதிலாக ”பாப்பானுவ” என்று சொல்லியிருப்பான். ).
எல்லாத்தையும் பெரியார் கண்ணாடி போட்டுப் பாக்காதீங்க. புதுமைப் பித்தன் ஜெயகாந்தன்லாம் உங்க ஆளுங்க தானே”? என்கிறாள் அவள்.
இதற்கு நடராஜன் பதில்: “உங்களுக்கு ஏத்த மாதிரி எழுதினதாலே விட்டு வச்சிருக்கீங்க.”
அவர்களை வழியில் ஒரு போலீஸ் இடைமறிக்கிறான். வழக்கமான சென்னை போலீஸ்தான். அவன் விசாரணைகள் எப்படி இருக்கும் என்பது நமக்குத் தெரியும்.
“அப்படி லவ்வு?” என்று கிண்டல் செய்கிறான்.
“அப்படிலாம் இல்லை சார். இது எங்க மாமா பையன். ஒண்ணாத்தான் படிக்கிறோம்.” என்று பதில் சொல்கிறாள் நடராஜன் கூட இருக்கும் கிருஷ்ண ப்ரியா.
“அப்படியாடா? “ என்று கேட்கிறான் நடராஜனப் பார்த்து.” நம்மைப் போன்ற ஒரு கருப்பனே நம்மை இழிவு படுத்தும்போது பாப்பான் ஏன் ஏளனமாக நடத்தமாட்டான்” என்று சிந்தனை போகிறது நடராஜன் மனதில்.
நாடு முழுக்க கொந்தளிப்பா இருக்கு. பத்திரமா வூடு போய்ச் சேரு. ஊரைச் சுத்திட்டு இருந்தே பொண்ணு பாழாயிடும் பாத்துக்க ஜாக்கிரத” என்று மிரட்டுகிறான்.
இருவரும் கிருஷ்ண்பிரியா வீட்டுக்குப் போகிறார்கள்.
பாப்பாத்தி என்று மனதில் வெறுப்பேற்றிக்கொண்டிருந்தவனை “என் மாமா பையன்” என்று சொல்லி அந்த இக்கட்டிலிருந்து காப்பாற்றியவளை “ஏன் அப்படிச் சொன்னாய்? என்று கேட்கிறான்.
“நான் அப்படிச் சொன்னதாலே தான் விட்டான்” என்று பதில் சொல்கிறாள்.
கிருஷ்ணபிரியா வீட்டு வாசலில் குடுமி யோடு நிற்கும் அவள் அப்பா, “நமஸ்காரம்: என்கிறார் நடராஜனைப்பார்த்து. அது நடராஜன் காதுகளில் ஈயம் காய்ச்சி ஊத்தின மாதிரி இருக்கிறது.
தொண்ணூறுகளில் நாம் சந்திப்பது ரவியை.. அவனுக்கு மணிரத்தினம் ‘அக்கினி நக்ஷத்திரம் என்ற இரண்டு பெண்டாட்டி கதையை ஜனாதிபதி பார்க்க வைத்தது, இரண்டு பேரும் பாப்பானுகளாக இருந்ததால் தான் சாத்தியமாகிறது என்று தோன்றுகிறது. .அந்த வெங்கட்ராமன் என்கிற பாப்பார ஜனாதிபதி அடிக்கடி விமானத்தில் வந்து சங்கராச்சாரியாரைப் பார்த்து போவது ஆச்சரியமாயில்லை.
அந்த சங்கராச்சாரியாரை ஜெயலலித அரெஸ்ட் செய்ய முடிகிறது. கலைஞரால் முடியவில்லையே. என்று கேட்கிறார் நியூயார்க் வந்திருக்கும் திமுக அப்பா வளர்த்த தமிழ்ச்செல்வனை.
”சட்ட சபை எங்க கையிலே இல்லை. நீதித்துறை எங்க கையிலே இல்லை. நிர்வாகமும் எங்க கையிலே இல்லை பாப்பான் உட்கார்ந்திருந்த இடமெல்லாம் இப்ப அவங்க கையிலே. ராஜாஜி இல்லே. வரதாச்சாரி இல்லே. ஆ,மாவா இல்லையா?”
எங்களைத் தான் நாட்டை விட்டே வெரட்டி அடிச்சுட்டாங்களே. இந்தக் கோட்டா, அந்தக் கோட்டா,, ரிசர்வேஷன்னு.. செரி அதை வுடு.க்ஷேமமாத்தான் இருக்கோம். இல்லாட்டிப் போனா அங்கே தான் கோயில்லே மணி அடிச்சிட்டு இருக்கணும்…” என்று சொல்லிக் கொண்டு வந்தவர் தமிழ்ச்செல்வனைக் கேட்கிறார். அம்மாவும் பெரியார் கட்சியா? என்று. தமிழ்ச் செல்வன் சிரித்துக்கொண்டே சொல்கிறான். இல்லை பேர் தான் நாகம்மா. ஆனால் சாய் பக்தை என்கிறான்.
இது போல்தான், சமூக மாற்றங்கள், மதிப்பு மாற்றங்கள்…பார்வை மாற்றங்கள் எப்படியோ நிகழ்கின்றன. என்றாலும் எல்லாம் ஒரு நேர்கோட்டில் நிகழ்வதில்லை. எல்லோருக்கும் வழியில் பாதை மாறிவிடுகிறது. ஆனால் ப்ழைய கோஷங்கள் தொடரத்தான் செய்கின்றன. வடமொழியைக் கேட்டால் நாராசமாக இருந்த தமிழ்ப் பற்றில் தொடங்கியது, ராஜெஷ் மகேஷ் என்ற பெயர்கள் வீட்டுக்குள் புழங்குவதைக் கேட்டு முகம் சுளிக்க வேண்டியிருக்கிறது. சினிமாவுக்குத் தாண்டிய தமிழும், இயக்கமும் அந்த கதிக்குத் தான் ஆளாகின்றன., இன்றைய சன் டிவியில் கேட்கப்படும், தமிழ் நிகழ்ச்சி. இந்த மாதிரிதான்.
“அடுத்த காலர் யார்னு பாக்கலாம். ஏம்மா டிவி வால்யுமைக் கம்மி பண்ணுங்கம்மா… நான் வெயிட் பண்றேன். நாங்க கேட்ட கொச்சினுக்கு ஆன்சர் தெரிஞ்சுதா. நல்லா திங்க் பண்ணீட்டு சொல்லுங்க… ப்ச்.. லைன் கட் ஆயிடுச்சு….அடுத்த காலர் யாரு?
இன்னொரு காட்சி. நடேசன் தீவிர திமுக. கலைஞர் விசுவாசி. தன் பெண்டாட்டி ரேணுவை தன் வழிக்குக் கொண்டு வர அயராது முனைந்தும் அவள் திருந்துவதாக இல்லை. கலைஞர் ஆட்சிக்கு வந்தால் தான் நாடு உருப்படும் என்ற உறுதியான நம்பிக்கை இருந்தது அவனுக்கு. ஆனால் ரேணுவுக்கு அந்த நம்பிக்கை என்றோ மறைந்துவிட்டது. அவள் தலைவரின் மகன் பெண்களிடம் மோசமாக நடந்துகொள்வது உண்மையா? என்று ஒரு முறை நடேசனிடம் கேட்டாள். நடேசனுக்கு ஆத்திரம் தாளவில்லை. “எவண்டி சொன்னான் உனுக்கு? கண்டவன் சொல்றதையெல்லாம் நம்பிக்கிட்டு.”
“அழகான் பொண்ணு ரோட்டிலே போனா கார்ல தூக்கிட்டுப் போயிடுவாராமே?
பிரேமா இங்கே வந்தாளாக்கும். “ பிரேமா அந்தப் பகுதி அதிமுக வட்டாரச் செயலாளரின் மனைவி.
”யார் சொன்னா என்னா?. சொன்னது உண்மையானு பாக்கணும்”.
”போடி. நல்ல உண்மையப் பாத்த…. எவனாவது பொறம்போக்கு ஆயிரம் சொல்லுவான். அதெல்லாம் உண்மையானு பாப்பியா? உனுக்கு ஒண்ணு சொல்றேன் கேட்டுக்க .”இன்னொரு வாட்டி தம்பியப் பத்தி இப்படி ஏதாவது கேட்டே, தொடப்பக்கட்ட பிச்சிக்கும்.”
பெரியார் கண்ட கனவு, அப்பாவுக்கு இருந்த லட்சியம், எல்லாமே எப்படி எப்படியோ திசை மாறிப் போய்க்கொண்டிருக்கிற வலி எப்படியாவது கலைஞரை ஆட்சிக்கு வரவழைத்துவிட்டால் எல்லாம் சரியாகிப் போயிடும் என்ற நம்பிக்கை இருந்தது..அவனுக்கு.…
எல்லாம் சரியாப் போயிற்றா என்பதை யாரும் நமக்குச் சொல்ல வேண்டிய அவசியமில்லை.
மூன்று தலைமுறைகளின் வாழ்வில் காட்சிகள் எப்படி யெல்லாமோ மாறிவிடுகின்றன. அதற்கும் முன்னால் இருபதுகளிலேயே தசரத ரெட்டியார் காலத்தில் தான் இது தொடங்குகிறது. அந்தத் தொடக்கம் “பட்டணத்திலே இப்ப இது தான் பெரிய பிரசினையாம். பாப்பான் மாதிரி எனக்கும் ராஜாங்கத்திலே வேலை குடுன்னு கேட்டு ஒரு கட்சியே ஆரம்பிச்சிட்டங்களாம்,” என்று தான் அதன் தொடக்கம். அடுத்த தலைமுறை லட்சுமண ரெட்டியார் ஒருவர் தான் எப்படி பெரியார் பக்தர் ஆனார் என்று சொல்லப் படாவிட்டாலும் அடிக்கடி அவர் தான் காண்பதை அவர் அப்படி இருக்காது என்று தனக்குள் சொல்லிக்கொள்கிறார். கடைசி வரை தன் நம்பிக்கைகளில் நம்பிக்கை வைத்தவராக, அதைச் சொல்லிக் கொண்டு வேறொன்றை நாடாத மனிதராக, ஒரு சாதாரண மனிதராகக் காண்கிறோம். மற்றவர்கள் எல்லோரும் ”எல்லாம் சமம்,” என்று சொல்லிக்கொண்டே அடாவடித்தனமும் பொட்டை அதிகாரம் செய்பவர்களாகவுமே காண்கிறார்கள் அவர்கள் அக்கறைகள் எங்கெங்கோவெல்லாம் பரவுகிறது. கோஷங்களும் காரணம் தெரியாத ஆனால் எல்லோரும் உடன் படுகிற துவேஷமும் தான் தொடர்கிறது.
திராவிட இயக்கமும் சரி, கம்யுனிஸ்ட் கட்சியினரும் சரி, அவர்களது நீண்ட பல தலைமுறைகள் நீண்ட வாழ்வில் இலக்கியத்திற்கோ கலைக்கோ எதுவும் கொடுத்தது கிடையாது. அவர்கள் பங்களிப்பு பிரசாரங்களிலும் எழுப்பும் இரைச்சல்களிலும் தான். அதில் உண்மை இல்லை, காரணம், அவர்கள் சொல்வதில் அவர்கள் அனுபவம் இல்லையென்பதால் தான். தலித் எழுத்துக்கள் தான் அவர்களின் உண்மை அனுபவங்களைச் சொல்கின்றன. அவை தமிழ் இலக்கியத்துக்கு தம் பங்களிப்பைத் தந்துள்ளன.
தமிழ் மகனின் வெட்டுப் புலி வாழ்க்கையின் பல தளங்களில் இயங்குகிறது. சினிமா, அரசியல், பின் அன்றாட வாழ்க்கை. வெகு சில இடங்களில், சில காட்சிகள் சில மனிதர்களின் செயல்கள், சில திருப்பங்கள், தமிழ் சினிமா போல இருந்தாலும், அவை மூன்று தலைமுறைகளின், 70-80 ஆண்டுகளின் வாழ்க்கையில் நீட்சியில் பொருட்படுத்த வேண்டாதவையாகின்றன. இங்கு சொல்லப்பட்ட வாழ்க்கையும் மனிதர்களும், அவர்கள் செயல்பாடுகளும், நம்பகத் தன்மை கொண்டு ஜீவனோடு நம் முன் நடமாடுகின்றன அவர்களுடன் சேர்ந்து அந்த வாழ்க்கையைக் காணும்போது சுவாரஸ்யமாகத் தான் இருக்கின்றன.
நான் என் வார்த்தைகளில் சொல்ல முயன்றால் அவற்றின் தொனி மாறுமோ என்ற கவலையில் பெரும்பாலும் மேற்கோள்கலாகவே தந்திருக்கிறேன்.
தமிழ் மகனின் வெட்டுப் புலி ஒரு புதிய திருப்பத்தைத் தந்துள்ளது. 70-80 வருடங்களாக மற்றவர்கள். தோற்ற பாதையில் முதல் வெற்றியை நமக்குத் தந்திருக்கிறார்.
திராவிட இயக்கத்தைப் பர்றிப் பேசும் இந்த எழுத்தை அதன் கலைஞர்களும் கவிக்கோக்களும், கவிப்பேரரசுகளும் எப்படி எடுத்துக் கொள்வார்களோ தெரியாது.
எல்லா புத்தகங்களையும் போல, இதைப் பற்றியும் கூட தமிழ் உலகம் மௌனம் சாதிக்கலாம்.
வெட்டுப்புலி: தமிழ் மகன் (நாவல்) உயிர்மை பதிப்பகம்,11/29 சுப்பிரமணியன் தெரு, அபிராமபுரம், சென்னை- 600018 ப..374 விலை ரூ. 220 .
- வெண்வெளியில் ஒரு திருவாலங்காடு(ALAN GUTH’S INFLATION THEORY)
- வடக்கு வளர்கிறது! தெற்கு தேய்கிறது! அணுமின் உலை எதிர்ப்பாளிகள்! அணு உலை அபாய எதிர்பார்ப்புகள்!
- கதையல்ல வரலாறு 3-1:ஸ்டாலின் மரணத்தின் பின்னே…
- தமிழ் மகனின் வெட்டுப்புலி- திராவிட இயக்க அரசியல் சார்ந்த முதல் இலக்கிய பதிவு
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 14
- அக்கறை/ரையை யாசிப்பவள்
- முடியாத் தொலைவு
- காற்றில் நீந்திச் சுகித்திட வேண்டும்!
- இரவுதோறும் கரும்பாறை வளர்கிறது
- தான் (EGO)
- ‘மூங்கில் மூச்சு’ சுகாவின் “தாயார் சன்னதி” கட்டுரைத் தொகுப்பு – ஒரு பார்வை
- ”மாறிப் போன மாரி”
- தாலாட்டு
- ராசிப் பிரசவங்கள்
- நேர்மையின் காத்திருப்பு
- விலகா நினைவு
- நம்பிக்கையெனும் கச்சாப்பொருள்
- தீபாவளி நினைவுகள்
- நிரந்தரமாய்…
- என் பாட்டி
- சிலர்
- மீண்டும் முத்தத்திலிருந்து
- நீவிய பாதை
- தமிழ் ஸ்டுடியோவின் மூன்றாவது ஊர் சுற்றலாம் வாங்க.
- புலம்பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாடு 2012 .
- இதம் தரும் இனிய வங்கக்கதைகள்
- பழமொழிப் பதிகம்
- நிலத்தடி நெருடல்கள்
- இயலாமை
- நெகட்டிவ்கள் சேமிக்கப்படும்
- உறக்கமற்ற இரவு
- நானும் நம்பிராஜனும்
- அணையும் விளக்கு
- மூளையும் நாவும்
- குளம்
- தோற்றுப் போனவர்களின் பாடல்
- இதுவும் அதுவும் உதுவும் -3
- சரவணனும் மீன் குஞ்சுகளும்
- சனநாயகம்:
- அழகிய உலகம் – ஜப்பானிய நாடோடிக்கதை
- சற்றே நீடிக்கட்டும் இந்த இடைவேளை
- பிறவிக்குணம்
- நன்றி சொல்லும் நேரம்…
- மூன்று தேங்காய்கள்
- பெருநதிப் பயணம்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) திருமணப் பாதையில் ! (கவிதை – 50 பாகம் -3)
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) மீட்டெழுச்சி நாள் (The Resurrection Day)) (கவிதை -51 பாகம் -5)
- இந்தியா – குறைந்த விலை பூகோளம்
- பஞ்சதந்திரம் தொடர் 16 ஏமாந்துபோன ஒட்டகம்
- முன்னணியின் பின்னணிகள் – 12 சாமர்செட் மாம்
- நம்பிக்கை
- பூபேன் ஹசாரிகா –
- தொலைந்து கொண்டிருக்கும் அடையாளங்கள்
ஈ.வே.ராவின் பிராமண துவேசத்தையும், ராஜாஜியின் சுயசாதி ஜம்பத்தையும் சமதூரத்தில் வைத்து பார்பானுக்கும்,பஞ்சமனுக்கும் ஒன்றாக கல்வி கொடுத்து பத்தாண்டுகாலம் தமிழ்நாட்டை இந்தியாவின் முதல்மாநிலமாக வைத்திருந்த சூத்திரனைப்பற்றி எங்கும் காணோமே?
நீங்கள் சொல்லும் அந்த சூத்திரர் ஒரு குறிப்பிட்ட ஜாதிக்கு வெண்சாமரம் வீசினார் என்பதையும் எழுதுங்கள். தமிழ்நாட்டை அப்போது இந்தியாவின் முதல் மாநிலமாக வைந்திருந்தார் அவர் என்று எந்த புள்ளியிய விவரங்களை வைத்துக் கூறுகிறீர்கள். மைய அரசில் ஆதிக்க நிலையில் அவர் இருப்பினும், தமிழகத்தில் அகன்ற ரயில் பாதைகள், சரியான சாலைகள், கிராம முன்னேற்ற திட்டங்கள் என்று எதை அவர் கொண்டு வந்தார்.? கிராமத்தை கிராமமாகவே வைத்திருந்த புண்ணியவான் அவர். திமுக ஆட்சி பின்னரே, பல முன்னேற்றங்கள். (( காசு கொடுத்து ஓட்டு வாங்கியது அந்த சூத்திரர் கட்சியும் நடத்தியது. )). அவரால் சாதிக்க முடிந்தது எல்லாம் யோக்கியமாக மந்திரியாக இருந்தவரை கடைசி காலத்தில் ஜென்ரல் மருத்துவமனையில் கிடத்தியதே… ராஜாஜியை திட்டுபவர்கள், அவர் மாதிரி ஆக வேண்டும் என்று தானே படிப்பு, படிப்பு, யோகா, என்று மாறிப்போவது. ஜாதிய பற்றுடன் இருந்ததால் தான் அவர் ஜாதியினர் அதிகமிருந்த ஏரியாவில் மட்டும் அவர் கட்சி ஓட்டு வாங்கியது.
நானறிந்தவரை காமராஜர் சுய ஜாதிக்காரர் என்பதற்காக எவருக்கும் விதிகளை மீறி சலுகைகள் அளித்து மேலே தூக்கிவிடவில்லை. ஆனால் அவரது ஜாதியினர் தம் ஜாதியைச் சேர்ந்தவர் முதல்வராக உள்ளார் என்ற உத்சாகத்தில் துணிந்து பல துறைகளில் இறங்கி முன்னேறினார்கள். நகரத்தார் போலவே அந்த ஜாதியினரும் செயலூக்கம் மிக்கவர்கள். வெகு காலம் முன்பே மகமை வைத்து சுய ஜாதியினர் ஒற்றுமையாய் முன்னேற்றம் காண்பதில் ஈடுபாடு காட்டி வந்தவர்கள். நேருவின் கோட்பாடுகளை முழுமையாக நம்பிய காமராஜர், அவைதாம் நாட்டை முன்னேற்றும் என்று கண்மூடித்தனமாக ஐந்தாண்டுத் திட்டங்களே தீர்வு என இருந்துவிட்டார். ஆனால் மாநிலம் முழுவதும் தொழில் பேட்டைகள் உருவாகவும் கிராமப்புற இளைஞர்கள் பலவாறான தொழில் கற்று முன்னேற இன்டஸ்ட்ரியல் ட்ரயினிங் இன்ஸ்டிட்டியூட்களை மாவட்டந் தோறும் தொடங்கச் செய்து வறிய நிலையில் உள்ள பிற்பட்ட வகுப்பாருக்கு உதவித் தொகையுடன் அங்கு பயில ஏற்பாடு செய்யவும் காரணமாக இருந்தார். ஆர். வெங்கட் ராமனை சுயமாகச் செயல்பட வைத்து இந்தப் பணியை நன்கு நிறைவேற்றினார். பல கிராமப்புற இளைஞர்கள் ஃபிட்டர்களாக வும் டர்னர்களாகவும் வெல்டர்களாகவும் வேலை வாய்ப்பு பெற முடிந்தது. காமராஜரின் தேசிய உணர்வும் உறுதியானது. பாரத தேசத்தின் எந்தப் பகுதி தொழில் வளம் பெற்றாலும் அது தேசம் முழுமைக்குமே பயன் தரும் என நம்பியவர். ராஜாஜியுடன் அவருக்கு அரசியல் போட்டி இருந்த போதிலும் அவ்ர் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தவர். அவருக்கு பிராமண துவேஷம் இருந்ததில்லை. அவருக்கு மிகவும் நம்பிக்கை யானவர்களாகப் பல பிராமணர்களே இருந்தனர். டி.டி.கே., ஆர்.வி., மவுண்ட் ஃபார்மசி பாலு, அம்பி என்கிற ஜகந்நாதன் எனப் பலர் என் நினைவில் நிழலாடுகிறார்கள். 1971-ல் தி.மு.க. வை முறியடிப்பதற்காக ராஜாஜியுடன் கூட்டு வைக்கவும் பின் கோவை-புதுவை தேர்தல்களின் போது இந்திரா காங்கிரசுடன் கூட்டு வைக்கவும் தயங்காத அளவுக்கு சுய கவுரவத்தைவிட தேச நலனுக்கு முக்கியத்துவம் அளித்தவர். உடல் நிலை எவ்வளவு மோசமாக இருப்பினும் அரசு பொது மருத்துவ மனையில்தான் சிகிச்சை மேற்கொள்வார். அன்றும் சில தனியார் மருத்துவ மனைகள் இருக்கவே செய்தன. இந்தப் பண்பு அண்ணாவிடமும் இருந்தது. அவர் மிகவும் பிடிவாதமாக அரசு பொது மருத்துவ மனைக்குத்தான் போய்க்கொண்டிருந்தார். வேலூர் அமெரிக்கன் மருத்துவ மனையில் சேர வற்புறுத்தியபோது அது நமது அரசு டாக்டர்கள் மீது நம்பிக்கையில்லை என்பது போலாகும் என்றார். இது அந்தக் காலத்து ராஜாஜி உள்ளிட அரசியல் தலைவர்கள் கடைப்பிடித்த ஒழுக்கம். ஆகவே கக்கன் அவ்வாறு சிகிச்சைக்கு மதுரை அரசு மருத்துவ மனையில் சேர்ந்ததில் வியப்பில்லை. அங்கு அவரை சரியாக கவனிக்காமல் இருக்கக் காரணம் அவரை யாருக்கும் சரியாகத் தெரியவில்லை. நான் முன்னாள் அமைச்சர் என்று சொல்லி அவர் விசேஷ கவனத்தை எதிர்பார்க்கவும் இல்லை. தனக்கு உரிய கவனம் தரப்படவில்லை என எவர் மீதும் குறை கூறவும் இல்லை. முதல்வராக இருந்த எம் ஜி ஆர் தான் அதிர்ச்சியடைந்து ஏக ரகளை செய்து பின்னர் அவருக்கு உரிய கவனிப்பு கிடைக்கச் செய்தார். காமராஜரும் மேலும் சில ஆண்டுகள் வாழ்ந்திருப்பின் அவ்வாறே அரசுப் பொது மருத்துவ மனைக்குத்தான் போய் அவதிப்பட்டிருப்பார்! அரசாங்க மருத்துவமனைகளை நாமே புறக்கணித்தால் ஜ்னங்கள் அந்த மருத்துவ மனைகளைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்றுதான் காமராஜரும் அண்ணாவும் சொல்வார்கள்.
தேர்தல்களில் காமராஜர் ஜாதியைச் சேர்ந்தவர்கள் கூடுதலாக இருந்த தொகுதிகள்களில்தான் அவரும் அவரது கட்சி வேட்பாளர்களும் வெற்றி பெற முடிந்தது என்கிற முடிவுக்கு வருவது சரியாக இருக்காது. அவரது ஜாதியினரில் பலர் இயல்பாகவே காங்கிரஸ் அபிமானிகளாக இருந்தனர். மேலும் காமராஜர் முதல்வர் பதவியைத் தக்க வைத்துக் கொள்வதற் காக வட ஆர்க்காடு மாவட்டம் குடியாத்தம் தொகுதியில்தான் போட்டியிட்டு பலம் வாய்ந்த கம்யூனிஸ்ட் கட்சி கோதண்ட ராமனை வென்றார். தமது சுய ஜாதியினர் கூடுதலாக உள்ள தொகுதியைத் தேடிப் போகவில்லை. ஆனால் ஜாதி, பண வசதி பார்த்து அவர் காங்கிரசில் வேட்பாளர்களை நிறுத்தி வந்தது என்னவோ உண்மைதான்.
-மலர்மன்னன்
//தமது சுய ஜாதியினர் கூடுதலாக உள்ள தொகுதியைத் தேடிப் போகவில்லை.//
விருதுநகரில் சீனிவாசனால் தோற்கடிக்கப்பட்ட பின், நாகர்கோயில் இடைத்தேர்தலின் தன் ஜாதிக்காரர்களை நம்பி நின்று அவர்களின் ஒட்டு மொத்த இலட்சத்துக்கும் அதிகமா வாக்குகளைப்பெற்று வெற்றி வாகை சூடினார் காமராஜர். எதிர்கட்சியாளர்கள் எந்தவொரு பொதுக்கூட்டத்தையும் தேர்தல் பிரச்சாரத்துக்காகக் கூட்ட முடியாதபடி நாடார்கள் கவனித்துக்கொண்டார்கள்.
காமராஜர் எப்போது சூத்திரர் ஆனார்? ஒரிஜினல் அக்மார்க் சத்திரியர் அவர்.
Those who hate Brahmanism were somehow or other affected by it.When there were instances involving others,even though certain individuals were not affected personally,they started revolting.Venkat Saminathan or the author of the book Vettupuli might not have read Mother India,a book by American tourist to India in 1930s by name Katherine Mayo or Revolt,a radical magazine of Justice Party published from Madras in 1930s.These two publications will throw light on the atrocities committed by Brahmins in those days.Periyar EVR has written many books on social inequality.But for the untiring efforts of Periyar,non-brahmins could not have got employment in Government as well as private companies.Indian Bank,which was started by Nagaratthaars gave employment only to Nagaratthaars and Brahmins,until it was nationalised in 1969..Brahminism is still alive and hence the struggles also continue.
காமராஜர் காலத்தில் சத்திய மூர்த்தி பவனில் அலுவலகச் செயலாளராக இருந்தவர் வெங்கட்ராமன் என்ற பிராமணர் என்பதைச் சொல்ல மறந்தேன். காமராஜருக்கு அவர் மீது மிகுந்த நம்பிக்கை. காமராஜர் சில சமயங்களில் என் மீது எரிந்து விழுவார். காரணம் அப்போது ப சிதம்பரம், அனந்த நாயகி, ஏ கே சண்முக சுந்தரம், ஆகியோர் நடத்திய அன்னை நாடு நாளிதழில் செய்தி ஆசிரியனாக இருந்தேன். காமராஜருக்குதான் நம்மைக் கண்டால் ஆகவில்லையே என்று அவரிடம் போகாமல் இருந்து விடுவேன். எங்கே அவனைக் காணோம், வரச் சொல்லு என்று வெங்கட்ராமனைத்தான் அனுப்புவார். அவருக்கு குறுக்கு வெட்டில் நாட்டு நடப்பு தெரிய வேண்டுமே! வெங்கட்ராமனும் ராயல் என்ஃபீல்டு மோட்டார் சைக்கிளில் வந்து நம்ம பெரியவர்தானே கோபித்துக் கொள்கிறார் அதெல்லாம் அந்தந்த நேரத்தோடு போய்விடுவதுதானே, வா போகலாம் என்று வண்டியின் பின்னால் வைத்து அழைத்துப் போவார்! போய் நின்றால் அப்போதும் கோபமான பேச்சோடுதான் வரவேற்பு கிடைக்கும்!
-மலர்மன்னன்
ஸ்ரீ பரமசிவம் தவறான அனுமானங்களின் அடிப்படையில் கருத்துகளை வெளியிடுகிறார் என்கிற முடிவுக்கு வர வேண்டியுள்ளது. அவர் 17,18, 19 ஆம் நூற்றாண்டு தமிழ்நாட்டு சமூக, அரசியல் நிலைகளைப் படித்து அறிய வேண்டும். பிராமணர் அல்லாதார் வகுப்புகளில் ஏராளமான சான்றோர்கள் கல்வி கேள்விகளில் சிறந்தவர்களாக இருந்துள்ளனர் என்பதோடு அப்போதைய சமஸ்தானங்கள், ஜமீன்கள், பின்னர் கிழக்கிந்திய ஆங்கிலேய, ஃப்ரெஞ்சு கம்பெனி அலுவலகங்கள், அதன்பின் பிரிட்டிஷ் ராஜாங்க நேரடி நிர்வாக அலுவலகங்களில் முக்கிய பதவிகளை வகித்து வந்துள்ளனர். சென்னை ராஜதானியை ஜஸ்டிஸ் கட்சிதான் தொடக்கத்தில் ஆண்டு வந்தது. ஈ.வே.ரா. அவர்களின் கவனம் பிராமணர் அல்லாத மேல் ஜாதியினருக்குக் கூடுதல் வேலை வாய்ப்புக் கிட்டச் செய்வதில்தான் இருந்தது. ஜஸ்டிஸ் கட்சியை அந்தக் காலத்தில் முதலியார் கட்சி என்றுதான் சொல்வார்கள்! ஆனால் முதலியார்கள் அன்றைய ஆட்சியில் நல்ல செல்வாக்கோடுதான் இருந்தார்கள்! பிராமணர் அல்லாத வகுப்பினரில் பெரும்பான்மையினர் கை கட்டிச் சேவகம் செய்வதைவிட சுயமாக தொழில் செய்து கவுரவமாக வாழ விரும்பியதால்தான் அவர்கள் அதிக அளவில் அரசுப் பணிகளில் இருக்கவில்லை. தரம்பால் என்ற சமூகவியல் அறிஞர் தமிழ் நாட்டு நிலவரம் குறித்து எழுதியுள்ள ஆய்வு நூல்கள் இணையத்தில் இலவசமாகவே கிடைக்கின்றன. Dharampal என்று கூகிளில் தேடினாலே கிடைத்து விடும்! இவர் காந்திஜியின் வார்தா ஆசிரமத்தில் வாழ்ந்தவர். கடந்த நூற்றாண்டுகளில் இருந்த நமது கல்வி முறை குறித்தும் இவர் ஆய்வு நூல் எழுதியுள்ளார். Beautiful Tree by Dharampal என்று தேடினால் கிடைக்கும். பார்ப்பனியம் என்று ஸ்ரீ பரமசிவம் எதைக் குறிப்பிடுகிறார் என்று தெரிந்தால் நல்லது. ஈ.வே.ரா.வின் மாபெரும் சாதனை ஹிந்து சமுதாயத்தை பிரமணர்-பிராமணர் அல்லாதார் என இரு பிரிவுகளாக நிரந்தரமாகப் பிளவு படுத்தியதுதான்! இந்தப் பார்த்தீனியம் இன்றுவரை உயிர்த்திருப்பதால்தான் ஸ்ரீ பரமசிவம் போன்ற விவரம் அறிந்தவர்கள் மத்தியில்கூட அம்மதிரியான ஒரு மாச்சரியம் இருந்துகொண்டிருக்கிறது! ஹிந்துக்கள் இவ்வாறு பிளவு பட்டிருப்பது பலருக்குக் கொண்டாட்டம்! இதனால் ஹிந்து மதம் என்பதாக எதுவும் இல்லை, ஜாதிகள்தான் உண்டு என்று பலர் வாதிடவும் ஏதுவாகிறது!
-மலர்மன்னன்
காமராஜர் சார்ந்த நாடார் ஜாதியினர் தமிழ்நாட்டின் அச்சு அசல் சத்திரியகுடிகள். அவர்கள் வேதம் ஓதியவர்கள், ஓதுவித்தவர்கள். நாடாண்ட குலத்தினர். அவர்களை சூத்திரர் என்று சொல்வதை அவர்களே ஒப்புகொள்ளமாட்டார்கள். எந்த உண்மையான வரலாற்றாசிரியரும் ஒப்புகொள்ளமாட்டார்கள்.
பிரிட்டிஷ் ஆட்சிகாலத்திலும் அதற்கு சற்று முன்பும் அவர்கள் திட்டமிட்டு இறக்கப்பட்டவர்கள். தங்களை எதிர்த்த வீர குடிகளை குற்றப்பரம்பரையினர் என்று இழிததது பிரிட்டிஷ்காரர்கள் மட்டுமல்ல.
இதையே இராமநாதபுரத்தில் பள்ளர்களும் சொல்கிறார்கள். அதற்காக அவர்கள் அங்கு மறவர்கள், கள்ளர்கள், அகமுடையார்கள் சேர்ந்த கூட்டணியால் தாக்கப்படுகிறார்கள்.
உண்மை. நாடார் (நாடாள்வார்) அரச மரபினர் எனும் புரிதல் பலருக்கு இல்லை. சங்க இலக்கியம் முதற்கொண்டு தமிழ் இலக்கியங்களில் சான்றார், சான்றாண்மை, சான்றோன் எனும் சொற்கள் சால்புடைய அறப்போர் வீரன் எனும் பொருளிலேயே பயன்படுத்தப்பட்டிருப்பதைப் பலரும் உணர்வதில்லை. (ஒன்றாம் – ஒன்னாம், ஒண்ணாம் என்பது போல சான்றார் -சானார்,சாணார் என வழங்குகிறது. அச்சாதியினரது வலங்கை மாலை, வெங்கலராஜன் கதை வாசித்திருப்போர் இதை உணர்வர்.
உண்மை. நாடார் (நாடாள்வார்) அரச மரபினர் எனும் புரிதல் பலருக்கு இல்லை. சங்க இலக்கியம் முதற்கொண்டு தமிழ் இலக்கியங்களில் சான்றார், சான்றாண்மை, சான்றோன் எனும் சொற்கள் சால்புடைய அறப்போர் வீரன் எனும் பொருளிலேயே பயன்படுத்தப்பட்டிருப்பதைப் பலரும் உணர்வதில்லை. (ஒன்றாம் – ஒன்னாம், ஒண்ணாம் என்பது போல சான்றார் -சானார்,சாணார் என வழங்குகிறது. அச்சாதியினரது வலங்கை மாலை, வெங்கலராஜன் கதை வாசித்திருப்போர் இதை உணர்வர்.
அவர் எந்த ஜாதிக்கு வெண்சாமரம் வீசினார் என்று சொன்னால் நாங்களும் தெரிந்து கொள்வோம்,அவர் சாதிக்காரர்கள் அதிகமுள்ள விருதுநகரில்தான் அவர் தோற்கடிக்கபட்டார்.மலர்மன்னன் சொன்னதுபோல் அவர் சாதியினரே இல்லாத குடியாத்தம் தொகுதியிலும் அவர் வெற்றிபெற்றுள்ளார்.அவர்காலத்தில்தான் பப்ளிக் செக்டர் நிறுவனங்கள் வேறு மாநிலங்களைவிட தமிழ்நாட்டில் அதிகமாயிருந்தது,எவ்வளவு தொழில்பேட்டைகள்,அணைகள்,மாநிலமுழுவதும் மின்மயம்.வடக்கு வாழ்கிறது,தெற்கு தேய்கிறது என்று அண்ணாதுரை சொன்னபோது அவரது கட்சியினரே அதை மறுத்தது இங்கு சரித்திரத்தில் பதிவாகிஉள்ளது.திமுக ஆட்சியில்தான் கிராமங்கள் முன்னேறியது என்று சொன்னபோது நம் நினைவில் வருவது லாட்டிரி சீட்டுகளும்,ஊருக்கு நாலு டாஸ்மாக் கடைகளும் அதன் பயனாக வீட்டிற்கு இரண்டு விதவைகளும்தான்.
விருது நகரும் நாடார்கள் அதிகம் உள்ள தொகுதிதான். அது அவரது சொந்தத் தொகுதி என்பதால் அங்கு போட்டியிட்டார். அன்றைய சூழலில் காங்கிரஸ் சார்பில் யார் எங்கு நின்றாலும் தோல்விதான் என்ற நிலைதான் இருந்தது. ஆகவே பலரும் வற்புறுத்தியதால் நாகர்கோயில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டார். எதிர்த்துப் போட்டியிட்ட சுதந்திரா கட்சி மத்தியாஸும் நாடார் கிறிஸ்தவ்ர்தான் என்று நினைவு. கருணாநிதிதான் காமராஜரைத் தோற்கடிக்கத் துடித்தார். காமராஜர் லோக் சபாவுக்குப் போவது தமிழ் நாட்டுக்கு நல்லது என்று முதல்வர் அண்ணா சொன்னார். தி.மு.க.வினரை அடக்கி வாசிக்கச் சொன்னார். காமராஜர் நாகர்கோவிலைத் தேடிப் போகவில்லை. அச்சமயம் அங்கு இடைத் தேர்தல் வந்தது. அதனால் அங்கு நின்றார்.
-மலர்மன்னன்
சூத்திரன், வைசியன், பிராமணன் சத்திரியன் என்பனவெல்லாம் வைதீக மதம் இந்தியர்கள் மேல் திணித்த போலி அடையாளங்கள். அதை கிருஸ்ணரே பகவத்கீதையில் சொன்னார் என்று மக்களை நம்ப வைத்தார்கள் ! தமிழக மககளிடையேயும் வந்தன இந்த வருண சமூகக்கொல்லிப்பிசாசுகள். அந்த அடையாளங்களைக்காக்க வேதம் கோபால் தனிக்கட்டுரையே போட்டுவிட்டார் !!!
இவற்றை இன்றும் நம்ப வேண்டுமா ? காமராஜர் காலம் அக்காலமன்று; தற்காலம்தான். இக்காலத்தில் செல்லாக்காசாகிவிட்ட இந்து வருணக்கோட்பாட்டைத் தூக்கித் தூரப்போட்டால், நாடார்கள் சத்திரியரா? சூத்திரரா? என்ற பேச்சுக்கே இடமில்லை.
பார்ப்பனரைத் தவிர வேறெவரும் இந்த வருணப்பெயரை வைத்துக்கொண்டு இன்று அலைவதில்லை. பார்ப்பனர்கள் மட்டுமே தங்களைப் பிராமணர்கள் என்றும் பிறரும் அப்படித்தான் சொல்லவேண்டுமெனவும் எதிர்ப்பார்க்கிறார்கள். மலர்மன்னன் ‘பிராமணர்கள் படித்தவர்கள்’ என்றுதானே பரமசிவனுக்குப் பதில் சொல்கிறார். பார்ப்பனரென்றா எழுதுகிறார் ?
அதே வேளையில் தொல்காப்பியம் முதற்கொண்டு வள்ளுவர் ஈராக, பார்ப்பனர் என்றுதானேக் குறிப்பிடுகிறார்கள். அதேன் ? ஆண்டாள் கூட ‘பார்ப்பனச்சிட்டர்கள்’ என்றுதானே பாடுகிறார் நாச்சியார் திருமொழியில் ?
எனவே இன்றும் வருணக்கொள்கையை வைத்துப்பிழைப்பவர் பார்ப்பனர்கள் மட்டுமே. என்ன பிழைப்பு என்றால் அதில் ஒரு சுகமும் சுயபோதையும் கிடைக்கிறதெனலாம். செவிக்குணவில்லாதபோது சிறிதளவும் வயிற்றுக்கும் ஈயப்படும் என்றாரே புரட்சித்தலைவர் வள்ளுவர் ?
வெறும் பார்ப்பனர்கள் என்றால் வைதீக இந்து மதத்தை என்ன செய்வது ? தான் படைத்த வருணக் கொள்கையை தானே வீசுவதா ? அடையாளமில்லா வாழ்க்கையுண்டா ?
மற்றவர்கள் அதைக் கடாசி விட்டார்கள். ஆனால் அக்கொள்கையிலிருந்து திரிந்த ஜாதிகளை தம் மேல் போட்டுக்கொண்டார்கள். எனவே நாடார்கள் என்பவர் நாடார் ஜாதியினர் என்பது மட்டுமே உண்மை. சூத்திரா என்றால் வருணச்சூழ்ச்சி வலையில் வீழ்ந்து, முதல் வருணத்தாருக்கு அடிமையென்றுதான் ஏற்றுக்கொள்ளவேண்டும். உடனே மலர்மன்னனோ, வெங்கட் சாமினாதனோ, வேதம் கோபாலோ நீண்ட வியாக்கியானத்தை அருளி வருணக்கொளகையில் அனைவரும் சமம் என எழுதுவார்கள். ஆனால், பிராமணர் என்பார் முதல் வருணத்தார் என்பது ஆயிரமாயிரமிடங்களில் ஆயிரமாயிரமாண்டுகளாக எழுதப்பட்டும் சொல்லப்பட்டும் வந்து நம்பவைக்கப்பட்டது. அவர்களே பிற வருணத்தாரை அனைவரையும் தீண்டத்தகாதவர்கள் என்றுதான் வாழ்ந்தார்கள் என்பது வரலாறு.
காமராஜர் லோக் சபாவுக்கு வரவேண்டும் என்று அப்போதைய பிரதமர் இந்திராவும் வற்புறுத்தினார். அவரைத் தமது அமைச்சரவையில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்கிற விருப்பமும் இந்திராவுக்கு இருந்தது. இதை ஆஃப்த ரெகார்டாக என்னிடமும் இன்னும் இரு நம்பிக்கையான பத்திரிகையாளர்களிடமும் காமராஜர் சொல்ல, அதை அப்போது நான் வேலைபார்த்த செய்தி நிறுவனத் தலைவரிடம் சொல்லப் போக அவர் நான் கூடாது என்று சொல்லியும் ஸ்கூப்பாக வெளியிட்டுவிட, மறுநாள் பத்திரிகைகள் தமது மந்திரிசபை யில் காமராஜரை சேர்க்க இந்திரா விருப்பம் என்று ஃப்ளாஷ் செய்துவிட்டன. இதனால் என் மீது காமராஜருக்கு அடக்க மாட்டாத ஆத்திரம் வந்துவிட்டது. அந்தம்மா மந்திரிசபையிலே சேர எனக்கு ஆசை அதனால இப்படி நானே ஒரு சேதி வரும்படியா பண்ணியிருக்கேன்னுதான் பேச்சு வரும்னு உனக்குத் தோணவேயில்லயா? கடைசியிலே பத்திரிகைக்காரன் புத்தியைக் காமிச்சிட்டியே என்று கடுமையாகப் பேசினார். அந்தச் செய்தி வந்தது என் தவறில்லை, நான் பலவாறு சொல்லியும் நிர்வாக இயக்குனர் ஆர்வக் கோளாறால் அவ்வாறு செய்தி வெளியிட்டு விட்டார் என்று மன்றாடியும் நா உங்கிட்டதானே சொன்னேன், அதை ஏன் அந்தக் கொம்பன் கிட்டப்போய் சொன்னே, இனிமே நீ இங்க வரக் கூடாது என்று கண்டிப்பாகக் கூறிவிட்டார். ஆறுமாத காலம் திருமலைப் பிள்ளை சாலையில் நான் தலை காட்டவே இல்லை! அதன் பின் அவராகவே சமாதானம் அடைந்து மவுண்ட் ஃபார்மசி பாலுவை அனுப்பி என்னை வருமாறு அழைத்தார்! இச்சமபவம் குறித்து நான் அக் காலகட்டத்தில் கணையாழியில் ஒரு கட்டுரை எழுதினேன்!
-மலர்மன்னன்
1.அவர்கள் வேதம் ஓதியவர்கள், ஓதுவித்தவர்கள். நாடாண்ட குலத்தினர்.–> ஏதாவது வரலாற்றுச் சான்று இருக்கிறதா…? சுஜாதாவின் கறுப்பு,வெளுப்பு,சிவப்பு தொடர் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா..?
2.அவர் சாதியினரே இல்லாத குடியாத்தம் தொகுதியிலும் அவர் வெற்றிபெற்றுள்ளார்.—> நல்ல நகைச்சுவை. எதிர்த்து அண்ணாவால் வேட்பாளர் நிறுத்தப்படாத போது ஜெயித்தது வேறு கதை..
3.காமாராஜ் நாடருக்கு, வேட்பாளர் உரிமை வாங்கித் தந்ததே, முத்துராமலிங்கத் தேவர் – ஆட்டுக்குட்டி தானமாக கொடுத்து , விற்று , வரிகட்டி….. என்று செல்லும் விஷயம். ஆனால், முத்துராமலிங்கத் தேவர் நேதாஜி பின் சென்றதால், அரசியல் சதுரங்க சூழ்ச்சியை காமராஜர் கையில் எடுத்தார்.. தேவர் ஜெயில் போனார். அதனால் தான், காங்கிரஸில் நாடார்கள் அதிகமாகி போனது.
4. காவ்யா, பாவம் நீங்கள். பார்பனர்கள் அரசியல்,தொழில்துறை,ஆடிட்டர், வக்கீல்,அலுவலர், வெளிநாடு, என்று போக போக நம் வீட்டில் அவன மாதிரி வா என்று படி படி என்றார்கள். பின் பார்ப்பனர் நாம் படிக்க போன போது சினிமா, விவசாயம் , புத்தக வெளீயீடு, பத்திரிக்கை, வெளிநாட்டிலிருந்து திரும்புதல் என்றாக….. நாம் பூணூல் போடாத குறை ஒன்று தான்.
தம் ஜாதியைச் சேர்ந்தவர் முதல்வராக உள்ளார் என்ற உத்சாகத்தில் துணிந்து பல துறைகளில் இறங்கி முன்னேறினார்கள்.—> இது எப்படி இருக்கு…? ( கவுண்டமணி பதில் தான் உங்கள் மனதில் வரும் )
என் அன்பார்ந்த ஸ்ரீ கோவிந்த கோச்சா,
குடியாத்தத்தில் காமராஜர் போட்டியிட்டபோது தி.மு.க. தேர்தலில் போட்டியிடும் எண்ணத்திலேயே இல்லை. தன் கொள்கையை ஆதரிப்போருக்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டில் அது இருந்து வந்தது. காமராஜருக்கு தி.மு.க.வின் ஆதரவும் இல்லை, எதிர்ப்பும் இல்லை என்று அண்ணா சொன்னார்.
கவுண்டமணி என்பது யார்? எனது அறியாமையை ஒப்புக்கொள்கிறேன்.
பொதுவாக ஒரு குறிப்பிட்ட ஜாதிக்காரர் மிகவும் உயர்ந்த பதவிக்கு வரும்போது உளவியல் ரீதியாகவே அந்த ஜாதியினருக்கு ஒரு தெம்பு வருவதும் அதிகாரிகள் அவர்களுக்கு விசேஷ கவுரவம் அளிப்பதும் வழக்கம். காமராஜர் இதனால் எம் பேரைச் சொல்லிக்கிட்டு எவனும் சலுகை எதிர் பார்த்து வந்தா இணங்கக் கூடாது என்று உயர் அதிகாரிகளுக்குக் கட்டளையிட்டிருந்தார். ராஜாஜியும் அவ்வாறு கண்டிப்பாக இருந்தவர்தான். பக்தவத்சலமும்கூட. நான் நீண்ட காலம் தமிழக அரசு தலைமைச் செயலக செய்தி சேகரிப்பாளனாக இருந்தவன். குறையில்லாத மனிதர் இல்லை. காமராஜர் அதற்கு விதிவிலக்கல்ல. ஆனால் இங்கு பேசப்படும் விவகாரங்களில் காமராஜரிடம் குறைகாண இடமில்லை என்றே கருதுகிறேன். முத்துராம லிங்கத் தேவர் விவகாரத்தில் அவர் நடந்துகொண்ட முறை தவறுதான். ஆனால் இது தனியாகப் பேசப்பட வேண்டிய விஷயம்.
-மலர்மன்ன்ன
இங்கென்ன வைதீகமத காலச்சேபமா அல்லது பரப்புரையா நடக்கிறது ? ஸ்ரீ கோவிந்த கோச்சா கூப்பிட்டால் உன்னதமா ? உயர்வா ? திரு என்று போட்டால் என்ன அவமானமா ? திரு வை விட ஸ்ரீ உயர்ந்ததா ? தமிழைவிட சமசுகிருதம் உயர்ந்ததா ?
என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே
என்றுதானே சொன்னார் திருமூலர் ? இல்லை, தன்னை நன்றாக சமசுகிருதம் பரப்புமாறே என்று சொன்னாரா ?
தன்னேரில்லாத் தமிழ் என்றுதானே கம்பர் சொன்னார். சமசுகிருதமும் தமிழும் ஒன்றே என்றாரா ? தன்னேரில்லாத் தமிழ் என்றால் என்ன பொருள்? சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே என்றுதானே பாரதியார் சொன்னார். இல்லை சமசுகிருதச்சொல்லே உயர்வென்றாரா ?
நண்பர்கள் கூடிப் பேசுகையில் அடிக்கடி அரசியல்ல இதெல்லாம் ஜகஜமப்பா என்று கவுண்ட மணி சொல்வதாக அவர்கள் சொல்லிச் சிரிப்பூட்டுவார்கள். அது ஏதோ முல்லா கதாபாத்திரம்போல என்றுதான் நினைத்து நானும் இரண்டொருமுறை அவ்வாறு எழுதிக்கூட இருப்பதாக ஞாபகம். ஆனால் ஸ்ரீ கோச்சா சொல்வதைப் பார்த்தால் நிஜமாகவே அப்படி ஒருவர் இருப்பதாகத் தெரிகிறது. யார் அவர், ஜாதியையே பெயராகவும் வைத்துக்கொண்டு?
எனக்குத் தெரிந்து ஜாதிப் பெயரையே தனது பெயராக யாரும் வைத்திருப்பதாகத் தெரியவில்லை.
-மலர்மன்னன
1953-54 ல் வட ஆர்க்காடு மாவட்டம் குடியாத்தத்தில் நாடார் பெருமக்களின் எண்ணிக்கை வெற்றி – தோல்வியை நிர்ணயிக்கக் கூடியதாக இருக்கவில்லை. வன்னியர்களூம் தாழ்த்தப்பட்டோரும் பெருவாரியாக உள்ள தொகுதியாக இருந்தது. மேலும் அச்சமயம் தி.மு.க. ஒரு பெரும் அரசியல் சக்தியாக உருவாகவில்லை.
அன்று அரசியல் களத்தில் பலம் பொருந்திய சக்தியாக இருந்தது பிளவு படாத கம்யூனிஸ்ட் கட்சிதான். ராஜாஜி முதல்வராக சட்டசபையில் கம்யூனிஸ்ட் கட்சி எனது முதல் எதிரி என்று பகிரங்கமாக அறிவித்த காலகட்டம் அது.
-மலர்மன்னன்
ஆரிய வைசிய, வன்னிய குல க்ஷத்திரிய என்றெல்லாம் வழக்கில் உள்ளது. ராஜபாளையம் ராஜுக்கள் தம்மை க்ஷத்திரியர் என்றே சொல்லிக் கொள்வது வழக்கம்.
-மலர்மன்னன்
ராஜபாளையம் ராஜுக்கள் தமிழர்கள் அல்ல. தெலுங்கர்கள். தமிழ்நாடு வாழும் மக்களில் தங்களைச் ‘சத்திரியர்கள்” எனவழைத்துக்கொள்ளும் பழக்கம், தமிழரல்லாத் தெலுங்கர் கன்னடியரிடையுமே. தமிழர்களிடமிருந்தால் அவர்கள் தங்களை வெறும் சத்திரியர் எனச்சொல்வது கிடையாது. அவர்கள் ஜாதியினர் முழுவதையும் சத்திரியர்கள் எனச்சொல்லிக் கொள்ளவில்லை. ஆனால், பார்ப்பனர்களை மட்டுமே பிராமணர்கள் எனக்கூப்பிட்டுக்கொள்கிறார்கள். மலர்மன்னனும், காமராஜர் பிராமணர்களை ஆதரித்தார் என்று தன் ஜாதியினர் மொத்தத்தையும் பிராமணர்கள் என்றுதான் சொல்கிறார். இஃது ஆதிகாலத்தில் இல்லை. மறையோதும் வேதியர்கள் அல்லது சதுர்வேதிமார்கள் என்றெல்லாம் அவர்களுள் வேள்விப்பார்ப்ப்னர்களை மட்டுமே இலக்கியங்கள் குறிக்கும். மற்றவர்களெல்லாரும் பார்ப்பனர்களே. ஆனால், இன்று தினமலர், பார்ப்பனர் என்ற சொல்லை நீக்கிவிட்டு பிராமணர்கள் என்று சொல்கிறது. வைதீக மத லாபியைச்சேர்ந்தவர்கள் அதைப்பரப்பி வருகிறார்கள். எல்லாரும் பிராமணர்கள் ஆகிவிட்டார்கள். அந்த அடையாளத்தில் ஒன்றும் கிடைக்கவில்லை எனினும் அதுதான் முன் வைக்கப்பட்டு, பார்ப்பனர் என்ற தமிழ்ச்சொல்லே அழிக்கப்பட்ட்டு வருகிறது. காரணம். இந்து வைதீக மதத்தை அறுவடை செய்ய. முதல் வருணம் என்ற சுயபோதைக்காக.
மலர்மன்னன் அப்போதையில் இருப்பதை அவர் காமராஜர் பிராமணர்களை ஆதரித்தார் என்பதிலும் பல அரசியல்வாதிகளை, பிராமணர்கள் என்றழைப்பதிலும் தெரிகிறது. வருணக்கொள்கை அனைவரும் கைவிட்டாலும், பார்ப்ப்னர்களும்கூட விடத்தயாராக இருந்தாலும் மலர்மன்னன் போன்றோர் விடுவதாக இல்லை. இது சுயபோதை மட்டுமன்று; ஒரு சூழ்ச்சியாகவும் தெரிகிறது. இவர்கள் பிராமணர்கள் என்றால், மற்றவர்கள் இவர்களுக்குக் கீழ் எனவாகும். எனவே வருணக்கொள்கையோடுதான் வைதீக மதத்தை ஏற்றுக்கொள்ளவேண்டும். மறுத்தால், கேவலாமான மிருக ஜன்மங்கள் என்றெழுதிவிடுவார்கள்.
போச்சுடா.
சத்திரிய வைஸிய சூத்திரர்கள் என்பது தமிழ்நாட்டில் மட்டும் இல்லை. இந்தியாவெங்கும் இருந்தது. இன்னும் பாகிஸ்தானிலும் பங்களாதேஷிலும் கூட இருக்கிறது. காவ்யா அவர்களே கொஞ்சம் படித்துவிட்டு எழுதினால் நல்லது. ஏன் சாதிமுறை, சாதி அடுக்கு ஜப்பானிலும் நைஜீரியாவிலும் ஹவாய் தீவுகளிலும் கூட இருக்கிறது. கொஞ்சம் படித்துவிட்டு பேசினால் நலம். தீண்டாமை இங்கிலாந்தில் கூட இருந்தது. தீண்டாமை அரபியாவிலும் இருக்கிறது. தீண்டாமை நைஜீரியாவிலும் இருக்கிறது இன்னமும்.
//அவர்கள் வேதம் ஓதியவர்கள், ஓதுவித்தவர்கள். நாடாண்ட குலத்தினர்.–> ஏதாவது வரலாற்றுச் சான்று இருக்கிறதா…? – ஸ்ரீ கோவிந்த கோச்சா//
இருக்கின்றன, என் அன்பார்ந்த ஸ்ரீ கோச்சா. கல்வெட்டுகள், பட்டயங்கள், ஆவணங்களும் உள்ளன. எனக்கு நேரமில்லை. இதைவிட முக்கியமான வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறேன். இல்லையேல் இது குறித்து விரிவாக ஒரு கட்டுரை எழுத இயலும். எத்தனை தூண்டில் போட்டும் கிறிஸ்தவராக மதம் மாறாது உறுதியுடன் ஹிந்துக்களாக நீடிக்கும் கொங்குநாட்டு நாடார் பெருமக்கள் பற்றிய தகவல்களூக்காகக் காத்திருக்கிறேன். கிடைத்ததும் அதுபற்றி எழுதுவேன். அப்போது வேண்டுமானால் நீங்கள் கேட்கும் சான்றுகளையும் சேர்த்துத் தரப்பார்க்கிறேன்.
-உங்கள் அன்பு மறவாத மலர்மன்னன்
-மலர்மன்னன்
பூவை பூ என்று சொல்லலாம், புட்பம் என்று சொல்லலாம் ஐயா சொல்றாகளே அதுபோலவும் சொல்லலாம்! தெரிகிறவர்களுக்குத்தான் தெரியும் கற்பூர வாசனை! ஸ்ரீ யின் மகிமையும் அவ்வாறே!
அறிவாளர் அவையில் மூடரும் அறிவாளியாக ஏற்கப்படுவர். அவர்கள் மவுனமாக இருக்கும் வரையில்! அவசரக் குடுக்கையாக வாயைத் திறந்தால் அவமானப்பட வேண்டியதுதான்.
-மலர்மன்னன்
-மலர்மன்னன்
எந்த வகையில் ‘திரு’ உங்களுக்கு உதவவில்லையென்று ஸ்ரீ யைதேடுகிறீர்கள். ஸ்ரீயில் மகத்தான தன்மையிருக்கிறதென்றால், தமிழுக்கு இல்லையென்றுதானே பொருள்? தமிழுக்குத் தெய்வத்தன்மை கிடையாது; சமசுகிருதத்துக்கே என்று சொல்லும் சங்கராச்சாரியார்களுக்கும் உங்களுக்கும் என்ன வேறுபாடு? கோவிந்த கோச்சா விரும்பலாம் விரும்பாமலும் இருக்கலாம். ஆனால் நீங்கள் எல்லாருக்குமே ஸ்ரீ போடுகிறீர்கள். ஏன்? தமிழ் நீச பாசையா ?
தமிழ்ச்சொற்களுக்கு மகத்துவம் இல்லையென்றால், ஏன் திருமூலரின் சிவபேருமான் தன்னைப் படைத்ததே தமிழைப் படிக்கத்தான்; பாடத்தான் என்று சொல்ல வேண்டும் ? யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணேம்; என்றும், சொல்லின் உயர்வு தமிழ்ச்சொல்லே; அதைப் தொழுது படித்தடி பாப்பா ! என்று சமசுகிருதம் தெரிந்த பாரதியார் சொல்லவேண்டும்.
அவர்களெல்லாம் மாங்கா மடையர்களா மலர்மன்னன்?
அரசியலில் அண்ணாவின் சாதனை குழப்பவாதிகளான கம்யூனிஸ்டுகளை ஓரம்கட்டித் தலையெடுக்கவிடாமல் செய்ததுதான். ராஜாஜிக்கு அண்ணாமேல் மிகுந்த பாசம் ஏற்பட்டதற்கு அது ஒரு காரணம். இன்றுவரை தமிழ் நாட்டில் தொகுதி உடன்பாடு என்கிற ஏற்பாடு இருந்தால்தான் சில பாக்கெட்டுகளிலாவது ஜயிக்க முடியும் என்கிற நிலை இரண்டு கம்யூனிஸ்டுகளுக்கும்.
-மலர்மன்னன்
கன்னடத்து ஈவேரா காமராஜரை பச்சைத் தமிழன் என்று அழைத்து ஆதரித்து வந்த்தால் ஈவேரா என்கிற கறை காமராஜர் மீதும் படிந்திருக்கும் எனப் பலர் கருதுவதால் காமராஜருக்கு பிராமண துவேஷம் இல்லை என்பதைச் சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது. ஆனால் ஈவேராவின் வற்புறுத்தல் காரணமாக அரசில் பல பிராமணர் அல்லாதவர்களுக்கு சீனியாரிட்டியைப் பொருட்படுத்தாமல் பதவி உயர்வும் நியமனங்களும் அளிக்க வேண்டிய கட்டாயம் காமராஜருக்கு ஏற்பட்டதை அறிவேன். பல பிராமண அதிகாரிகளுக்கு இதனால் பாதிப்பு ஏற்பட்டது. அண்ணா முதல்வரானபோது அவர்களில் பலருக்கு நியாயம் கிடைத்தது. அனவருக்கும் நியாயம் கிடைப்பதற்குள் அண்ணா மறைந்துவிட்டார்கள். அண்ணா மறைந்ததால் அவ்வாறு நியயம் கிட்டாமல் போனவர்களில் ஒருவர் வைகுந்த் ஐ.பி.எஸ். இன்னும் பல்ர் உண்டு. பெயர்கள் நினைவுக்கு வரவில்லை. நேமையும் கண்டிப்பும் மிக்க டி என் சேஷனும் அந்தப் பட்டியலில் இருந்ததாக நினைவு.
-மலர்மன்னன்
வருணாசிரமம் உருவானதே தமிழ்நாட்டில்தான். வட இந்தியாவைவிடத் தமிழகத்திலேயே வருண அமைப்பு மிகத் தீவிரமாகக் கடைபிடிக்கப்பட்டது என்பது வரலாற்றின் அடிப்படை.
தமிழக வர்ண அமைப்பின்படி சத்திரியர்களே (அரசர் குலம்) படிநிலையில் முதல் இடம் பிடித்தவர்கள். அரசர், அந்தணர், வைசியர், வேளாளர் என்பதே சரியான வருண அமைப்பாகும். அதை அந்தணர், அரசர் என்று திரித்துச் சொல்லியது வேளாளர்களின் சதி.
காவ்யா, பிறாமணாளை விட ஜாதிய இந்துக்களிடம் தான் அதிகமான ஜாதி பற்றும், வெறியும் உண்டு. கலப்பின திருமணம் – எல்லா தள வேறுபாடு நிலையிலும் – நடந்த பிறாமின் குடும்ப சம்பவங்களும், பிறாமணாள் அற்ற கலப்புத் திருமண அல்ல காதல், திருமண முயற்சியில் நடந்த/நடக்கும் கொலை, வெட்டு குத்து ஏன்..? நான்… “… டா” என்று ஜாதிய வெறி அதிகம். இங்கு பிறாமினை காட்டி மற்ற ஜாதி இந்துக்கள் கொள்ளைகார தலைவர்களைக் கண்டதே மிச்சம். பாப்பான் பாப்பான் என்று பயமுறுத்தியே சிலர் இங்கு பார்பானை விட மிகப் பெரிய பார்ப்பான் குணம் கொண்டதே உண்மை. புத்திசாலிகள் இங்கு பாப்பான் என்று சொல்லி, பெரிய பெரிய கல்லூரிகள். பள்ளிகளுக்கு அதிபதி ஆனாதே தமிழகத்தில் நடந்தது… வேற்றுமை ஏதாவது ஒரு ரூபத்தில் தொடரும்…
ராஜபாளையத்து ராஜுக்கள் நானூறு – ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பே தமிழகம் வந்து, தமிழகத்தையே தமது தாயகமாகக் கொண்டு, தமிழ்ச் சமூகதைக் காத்து தமிழகத்தின் கல்வி, தொழில் வளர்ச்சியில் கணிசமான பங்களித்திருப்பவர்கள். அவர்களில் சிறந்த தமிழ்ப் புலவர்களும் தமிழ் மொழி வல்லுனர்களூம் உண்டு. அவர்களை தெலுங்கர் என்று அடையாளம் காட்டி அந்நியப்படுத்துவது கடைந்தெடுத்த துரோகமாகும். ராஜபாளையத்து ராஜு எவர் காதிலாவது விழுந்தால் அந்நியப்படுத்தியவன் நாவை அறுத்துவிடுவார்கள். இணையத்தில்தானே எழுதுகிறோம் அடையாளத்தைக் காட்டாமல் என்று மனம் போன போக்கில் எதையாவது எழுதினால் ஒரு சமயம் போல இருக்காது. அரை குறை அறிவிலும் குறைவாக வைத்துக்கொண்டு சபை நடுவே வந்து குதித்துக் கூத்தாடுவதைக் கோமாளித்தனம் என்று பிறர் வேண்டுமானால் வேடிக்கை பார்ப்பார்கள். ஒரு காமெடி ரிலீஃபாக!
-மலர்மன்னன்
தமிழக வரலாற்றில் பலவேறு மானிலமக்கள் வந்து குடியேறினார்கள் பல காரணங்களால். பஞ்சம் பிழைக்க, மன்னர்களால் குடியமர்த்தப்ப்ட்டு, இப்படி.
நாயக்க மன்னர்கள் காலத்தில் வந்தவர்கள் தென் தமிழக தெலுங்கர்கள். 300 ஆண்டுகளுக்கு முன் பஞ்சம் பிழைக்க குஜராத்திலிருந்து வந்தவர்கள் மதுரை வாழ் சவுராட்டியர்கள். தஞ்சை மராட்டிய மன்னர்களால் குடியமர்த்தப்பட்டவர்கள் தஞ்சை மராட்டியர்கள். இவர்கள் அனைவரும் தத்தம் மொழிக்காக தமிழர்களிடையே சண்டை பிடிக்கவில்லை. தமிழா,? தெலுங்கா? என்று ராஜீக்கள் தமிழர்களோடு மல்லுக் கட்டவில்லை. தமிழா? சவுராட்டியமா என்று சவுராட்டியர்கள் வம்புக்கு வரவில்லை. ராஜீக்களைப்போல வந்த தெலுங்கர்களான கம்பளத்தார் – தூத்துக்குடி, மதுரை மாவட்டக் கிராமங்களில் வாழ்பவர்கள் – இப்போது முழுக்க முழுக்கத் தமிழர்களாகி விட்டார்கள். தெலுங்கே என்று கொடி பிடிக்கவில்லை. வைகோ, விஜயகாந்த் போன்றவர்கள். இவர்கள் ராஜீக்களைப்போல பெரும்பணக்காரர்கள் அல்ல. உழைக்கும் வர்க்கமே.
இந்த மொழிப்போராட்டம் தமிழ்பார்ப்ப்னர்களிடமே உண்டு. இவர்களே சமசுகிருதமே உயர்ந்தது என்று சொல்லி ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தமிழ்மக்களிடையே கிளர்ச்சி உண்டு பண்ணி வாழ்ந்து வருகிறார்கள். இங்கும் அஜ்ஜாதியைச்சேர்ந்த மலர்மன்ன்ன் ‘திரு’ எழுத மாட்டாராம். சிர்தான் மகத்தானதென்பாராம். இவர் ஒருதளத்தில் எழுதியிருக்கிறார்: சமசுகிருதமும் தமிழும் தமிழர்களுக்கு இருகண்களைப் போன்றவையாம். எந்த இந்திகாரனாவது, தமிழும் இந்தியும் என் இரு கண்கள் என்பானா ? மலையாளி சொல்வானா ? மராட்டியன் சொல்வானா ? கன்னடியன் சொல்வானா ? வங்காளி சொல்வானா ?
பிறமொழிகளைக் கற்பது வேறு. அதைத் தன் தாய்மொழிக்குச் சமமாக வைப்பது வேறு. எல்லாரும் அப்படித்தான் செய்வார்கள். ஏன் தமிழன் மட்டும் வடமொழியைத் தன் தாய்மொழிக்கு ஈடாகக் கொள்ளவேண்டும் ?
ஒருவனுக்கு ஒரே ஒருத்திதான் தாயாக இருக்க முடியும். இன்னொருத்தி, எவ்வளவுதான் புனிதவதியாக இருந்தாலும், தாய்க்கு ஈடானவளாக மாட்டாள்?
இப்படித் தமிழர்களை ஏற்கவைக்க இவர்கள் செய்யும் தந்திரம் இந்துமதம். வேதங்கள் சமசுகிருத்த்தில் உள்ளன; எனவே தமிழ்மக்களே! சமசுகிருத்த்தை ஏற்காமல் நீவிர் இந்துவாக இயலாது. அது தமிழைவிட உயர்ந்த்து! திரு போட்டு எவரையும் அழைக்காதீர். அபச்சாரம். சாமி குத்தம்!
ராஜீக்கள், தெலுங்கே உயர்ந்த்து தமிழ் தாழ்ந்தது என்று தண்டலெடுத்துக்கொண்டு ராஜபாளையத்திலும் அதைச்சுற்றி உள்ள கிராமங்களிலும் தெலுங்கைத் திணித்திருந்தால், அவர்கள் நாவுகள் வெட்டப்படுமா? இல்லை, தமிழுக்காக போராடும் தமிழர்கள் நாக்குகள் வெட்டப்படுமா என்று மலர்மன்ன்ன் அவரைப் பெற்றதாயை, அம்மா என்றும் பெற்ற தகப்பனை ‘அப்பா’வென்றும் தமிழில் அழைத்திருந்தால் கேட்டுக் கொள்ளட்டும். மாறாக, மாதாஜி என்றழைத்திருந்தால் கேட்க வேண்டாம்.
தமிழ்நாட்டில் வந்து வாழும் தெலுங்கர்களில் தெலுங்குப் பார்ப்பனரைத் தவிர மற்றவர்கள் எல்லாரும் தமிழைப் போற்றினார்கள். தெலுங்குப்பார்ப்ப்னர்கள் என்ன செய்தார்கள்? தெலுங்கிலேயே கீர்த்தனைகள் எழுதித் தமிழனுக்கு இசையுணர்வே கிடையாது என்று மக்களை நம்ப வைத்து, தமிழிசையை அழித்தார்கள். மேடைகளில் அவர்கள் இசைதான். தமிழ் இசைக்காகப் போராட்டம் இன்னும் தொடர்கிறது. பன்னெடுங்காலமாக தெலுங்கு இசைதான் தமிழக மேடைகளில். தமிழ்மக்கள் இவர்கள் நாக்குகளை அறுத்தெறிந்திருக்கவேண்டும். ஆனால் முடியவில்லை. இந்துமத்த்த்தைக்காட்டி மிரட்டினார்கள். சாமி கோயில் என்றால் மக்கள் மிரளுகிறார்கள். சாமிகுத்தமாகி விடுமில்ல. தமிழுக்குத் தெய்வத்தன்மை கிடையாது என்று சங்க்ராச்சாரியின் தொண்டர்கள் சொல்ல, தெலுங்குப் பார்ப்ப்னர்களோ, தமிழுக்கு இசைத்தன்மை கிடையாது என்று தமிழர்களை நம்ப வைத்தார்கள். ராமனைப்பற்றியோ, கணபதியைப்பற்றியோ தெலுங்கில் பாடினால்தான் தமிழ் இந்துவுக்குப் பக்திவருமாம்.
திரு மலர்மன்னன், (திரு போடக்காரணம் நன்றாக நெளியட்டும்!) ராஜீக்கள் இப்படியெல்லாம் தமிழ் மக்களை சாமியைக் காட்டித் தெலுங்கைத் திணிக்க குள்ளநரிவேலைகள் பண்ணவேயில்லை. எவரையும்; மிரட்டவில்லை அவர்கள் பள்ளிகளும் கல்லூரிகளும் நட்த்துகிறார்கள். தெலுங்கை நேரடியாகவோ, மறைமுகமாகவோ திணிக்கவில்லை.
தமிழை எவன் அவமதித்தாலும் -, அவன் வந்தேறியாக இருந்தாலும், உள்ளுக்குள்ளேயிருந்து குழிவெட்டும் எட்டப்பன்களாக இருந்தாலும் – தமிழ்மக்கள் அவர்கள் நாவுகளை அறுத்தெறியத் தயங்கக்கூடாது. தமிழனுக்கு மானம் என்று ஒன்றிருந்தால் அவன் தன் தாய் மொழியை இந்த குள்ளநரிக்கூட்டத்திடமிருந்து காப்பாற்றிக்கொள்ளட்டும்.
இல்லையென்றால், தமிழைத் தூக்கி விட்டெறிந்துவிட்டு அந்த எட்டப்பன்கள், வந்தேறிகளின் மொழியை எடுத்துக்கொண்டு வாழலாம். தன் தாயைக் கொன்றதை வேடிக்கைப்பார்த்த கயவர்கள் இந்த்த் தமிழர்கள் என்று எதிர்காலம் காறி உமிழட்டும்.
விழுந்தால் அந்நியப்படுத்தியவன் நாவை அறுத்துவிடுவார்கள்– என்னாபது ஒரே நாக்கை அறுக்கும் மேட்டரா கீது…. மமவே சொல்வது சரியா..?
தெலுங்கர்கள், மராட்டியர்கள், கன்னடியர்கள், மலையாளிகள் என்று சொல்வது உண்மைகள். அவை அன்னியப்படுத்துதல் என்பனாகாது. வந்தேறியவர்கள் தங்கள் வரலாறுகளை மறைக்க முடியாது. அவ்வரலாற்றைப் பயன்படுத்தி அரசியல் ஆதாயம் செய்வ்துதான் தவறு. அதே அரசியல்வாதிகள் தமிழ்நாட்டு எல்லையோரங்களில் அண்டை மானில மொழி பேசப்படுவதால், அந்தந்த மொழிகளிலேயே பேசி எழுதி அச்சடித்து வாக்குச் சேர்ப்பர்.
இங்கு பேசப்படுவது. அப்படிப்பட்ட மக்கள் தமிழகத்தில் வாழும்போது, தமிழர்களின் மொழியையோ, அவர்களின் கலாச்சாரக்கூறுகளையோ கேலியும் கிண்டலும் செய்யக்கூடாது. அவர்களின் மொழியையும் திரிக்க்க்கூடாது.\
அப்படி வந்தேறியவர்கள் எவருமே இந்த ஈனச்செய்லகளைச்செய்வதில்லை. நான் கண்ட்தில்லை. கேட்ட்துமில்லை. சமசுகிருதமும் தமிழும் ஈடானவை என்று மலர் மன்ன்னும், வடமொழியே தெய்வத்தன்மை வாய்ந்த்து என்று வைதீகப்பார்ப்ப்னர்களும் மட்டும்தான் பன்னெடுங்காலமாகத் தமிழகத்தில் தொல்லை தந்து வருகிறார்கள். இவர்களுக்கும் வடமொழிக்கு வால்பிடித்து அம்மொழியைத் தமிழகத்தில் திணித்துவரும் பார்ப்பனர்களுக்கு மேற்சொன்ன தெலுங்கர்கள், கன்னடியர்கள், மலையாளிகள் போன்றோர் எவ்வள்வோ மேலானவர்கள்.
ராஜுக்கள் என்னைப் போல சாதுக்கள் அல்லவே, எவ்வளவு அவமதித்தாலும் பொறுத்துக் கொண்டிருக்க! அதனால் நல்லெண்ணத்துடன் முன்னெச்சரிக்கை செய்து வைத்தேன், அவ்வளவுதான், என் அன்பார்ந்த ஸ்ரீ கோச்சாவே!
-மலர்மன்னன்
தின்னை தன் வாசற்கதவுகளை பின்னூட்டங்களுக்குத் திறந்து விட்டது கண்ணாடியில் தம் முகம் பார்ப்பது போல் ஆகிவிட்டது நம் தமிழ் அன்பர்களுக்கு. எதைத் தொட்டாலும் பேசினாலும், இரண்டே பெட்டிகளூக்குள் அடைபட்டு விடுகிறது. பின்னூட்டங்களுக்குக் காரணமான புத்தகத்தைப் பற்றி, புத்தகம் பேசும் விஷ்யங்களைப் பற்றி ஒரு சொல்லைக் காணோம். பாப்பான், சூத்திரன், ஆரியன், வடமொழி சமாசாரங்கள் தான். இப்படி விஷ்யத்தை விட்டு, திசை மாறி திட்டித் திட்டியே கட்சியை வளர்த்து, அதிகாரத்தைப் பிடித்து, சொத்து சேர்த்து, – இப்படித்தான் தமிழ் நாட்டு சரித்திரம் 70 வருடங்களாக் சரித்திரம் படைத்து வருகிறது. ஸ்ரீ ஏன், திரு என்று தானே திருமூலர் சொன்னார் என்று பேசுபவருக்குப் பெயர் காவ்யா. இப்படித்தான் தமிழ் நாட்டில் தமிழ் வளர்கிறது. ச்ன்,கலைஞர் டிவியில் த்மிழ் பேசுபவர்களைக் காண்பது மிக அரிதாக இருக்கிறது. எல்லோரும் இங்கிலிஸில் பேச்வ்தையே பெருமையாக, கௌரவமாக நினைக்கிறார்கள்.
இந்த வகை இரட்டை நாக்குகள் தான் கட்சியின் ஆரம்ப காலத்திலிருந்தே தலைமையிலிருந்து தொண்டர் வரை காட்சி தருகிறார்கள்.
அதன் பிரதிபலிப்பைத் தான் மேற்காணும் பின்னூட்டங்களில் காணமுடிகிறது.
தமிழ் மகனின் வெட்டுப் புலி பற்றி? – அது கிடக்கு விடுங்க. நம்ம விஷ்யத்துக்கு வருவோம். “இந்தப் பாப்பானுவ இருக்காணுங்களே……………
very nice comment V.S
//“இந்தப் பாப்பானுவ இருக்காணுங்களே……………//
நன்னா சேமமா இருப்பானுங்கோ. கவலைப்படாதேள்.
நிற்க.
ஒரு நாவலை பற்றி விமர்சனம் எழுதியிருக்கிறீர்கள். விமர்சனத்தை எவரும் விமர்சனம் பண்ணுவது கிடையாது.
1. அன்னாவல் உங்களைத்தவிர பிறரால் படிக்கப்படவில்லை. படிக்கமாட்டார்கள் எனச்சொல்லலாம். ப்ராபகாண்டா நாவல்கள் மக்களால் விரும்பப்படுவதில்லை. எ.கா – சினிமாவுக்குப்போன சித்தாளு என்ற ப்ராபகாண்டா நாவல்.
2. அப்படியே தமிழ்மகனின் நாவலைப் படித்தாலும் உங்கள் விமர்சனத்தில் தலையிட முடியாது. மேலும் உங்கள் நோக்கம் வெறும் விமர்சனம் மட்டுமல்ல. வேறொன்றும் இருக்கலாம். அஃது உங்கள் சொந்த அஜன்டா என்பது ஏன் இந்த நாவலை மட்டும் சிறப்பாக விளம்பரத்துகிறீர்கள் என்பதிலிருந்து புரியும்.
எனவேதான் எவரும் இந்த நாவலைபற்றியோ உங்கள் விமர்சனததைப்பற்றியோ எழுதவில்லை என்பது என் அனுமானம்..
//ஸ்ரீ ஏன், திரு என்று தானே திருமூலர் சொன்னார் என்று பேசுபவருக்குப் பெயர் காவ்யா.//
ரொம்ப நன்றி. வெரி வேலிட் கமெண்ட்.
தனித்தமிழ் இயக்கத்தின் செயல்பாடுகளை என்னால் போற்ற முடியும். ஆனால் தனித்தமிழ் எழுதுவது என் கொள்கையில்லை. எழுத மாட்டேன். சாரி!
திராவிட இயக்கத்தின் கொள்கைகளை என்னால் பரவசமாக பாராட்ட முடியும். அக்கொள்கைகள் எனக்குத் தனிப்பட்ட முறையில் பிடிக்காமல் இருக்கலாம்.
தமிழையும் அதன் உயர்வையும், தமிழர்கள் தம் தாய்மொழியை காப்பாற்றிக் கொள்ளவேண்டும் என நான் உணர்ச்சிகரமாக அவர்களை தட்டி எழுப்பலாம். அதே வேளையில் என் தாய்மொழி தமிழல்லாமல் வேறொன்றாக இருக்கலாம்..
தமிழருக்குத் தமிழே தாய். வேறெந்த மொழியும் அதற்கு ஈடாகாது என நான் அரக்க பரக்கக்க் கூறலாம். ஆனால் தமிழ் என் இருகண்களில் ஒன்றல்ல. அது என் தாய்மொழிக்கு ஈடாகாது.
இதே போலத்தான் இப்பெயரும். வடமொழியில். அதற்கும் நான் எழுதும் பின்னூட்டங்களுக்கும் தொடர்பில்லை. ஆசா பாசங்களுக்கு அப்பால் நின்று விவாதிக்க முடியும் ஒரு மருத்துவன் தன் உண்ர்ச்சிகளைத் தள்ளி விட்டு நோயாளியின் வயிற்றை வெட்டி உள்ளே பார்ப்பது போல. தன்னையே கொல்ல வந்தவனுக்கும் மருத்துவன் சேவை தரப்படவேண்டுமென்பதே ஹிப்பாகிரட் ஓத்.
இதையே நான் உங்களிடமும் எதிர்பார்க்கிறேன். உங்கள் ஜாதியிலிருந்து விலகி சமூகத்தைப் பார்க்கும் போது, நீங்கள் ஒரு பாரதியாராகவும் ஆக முடியும். ஏன் செய்யக்கூடாது மிஸ்டர் சாமிநாதன் ? உங்கள் நினைவலைகள், தமிழகத்தையும் தமிழ்மக்களையும் பார்க்கும் நோக்கு எல்லாமே உங்கள் ஜாதி என்ற நாற்காலியின் மேலின்றுதான் செய்யப்படுகின்றன. நாற்காலியைத் தட்டி விட்டால் பொத்தென்று விழுந்துவிடுவீர்கள். நாங்கள் விழ மாட்டோம் அப்படி. எங்களுக்கு ஜாதிகள் இல்லை.
ஒவ்வொருவரும் தன் ஜாதியிலிருந்தோ இனத்திலிருந்தோ விலகி நின்று அன்னியன் போலப் பார்க்கும்போது, குற்றம் குறைகள் தெரியலாம். மனங்கள் விசாலமாகலாம். நம்மிலிருந்து விலகியோருக்கு நீதி வழங்க முடியலாம். மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணம் வீசும் என்று பேருண்மை தெளிவாகலாம்.
ராஜீக்கள் தெலுங்கைத்தாய்மொழியாக்க்கொண்டவர்கள். நாயக்க மன்னர்கள் காலத்தில் தமிழகத்தில் வந்து குடியேறிவர்கள். அப்படியே கம்பளத்து நாயக்கமார்களும் உண்மை.
சவுராட்டியர்கள் சவுராஷ்ட்ராவிலிருந்து பஞசம் பிழைக்கத் (அதாவது 300 வருடங்களுக்கு முன் சவுராட்டிரத்தில் பெரும்பஞ்சம் வறட்சி ஏற்பட மக்கள் பஞ்சம் பிழைக்க இந்தியாவின் பலப்குதிகளுக்குச் சென்றனர். அவர்களில் ஒரு பிரிவைனர் தமிழகத்துக்கு வந்தனர். தமிழகத்தில் வந்து குடியேறிவர்கள். சவுராஷ்ட்ராவைத் தாய் மொழியாக்க் கொண்டவர்கள். உண்மை.
சௌகார்பேட்டை மருதாந்தகம், வேலூர், புதுச்சேரி, மதுரை போன்றவிடங்களில் வந்து குடியேறி இன்று செழிப்பாக வாழ்பவர்கள் மார்வாடிகளும், ராஜஸ்தானியர்களும்.உண்மை. இவர்கள் தாய் மொழி குஜராத்தி.
சென்னை, கோவையில் குடியேறியவர்கள் பஞ்சாபிகள். இவர்கள் தாய்மொழி இந்தி, மற்றும் பஞ்சாபி. உண்மை.
இந்த உண்மைகளைச்சொன்னால், முறையே ராஜீக்கள், கம்பளத்தார், சவுராட்டியர்கள், மார்வாடிகள், பஞ்சாபிகள், உங்கள் நாக்கை அறுதெறிந்துவிடுவார்கள் என்று அவர்கள் சார்பாக மிரட்டுகிறார் மலர்மன்னன்.
இது தமிழ்நாடு. இங்கேயே தமிழன் பயந்து வாழவேண்டும் என்று மிரட்டல் விடுகிறார்.
ராஜபாளையம் ராஜுக்கள் தெலுங்கர்கள் என்று சொன்ன நாக்கு அறுத்துவிடப் போகிறார்கள் என்று நான் எச்சரித்ததும் அடித்தது பார் ஒரு அந்தர் பல்டி! இதுதான் வாய்ச்சொல்லில் வீரர் அடி என்பது! நானு பிளேட்டைத் திருப்பிப் போட்டுட்டேன் என்று லஜ்ஜையில்லாமல் சொன்னவருக்குச் சரியான வாரிசுகள்!
-மலர்மன்னன்
அந்தர் பல்டியும் இல்லை. ஆகாசப்பல்டியும் இல்லை.
தமிழ்நாட்டு உப்பைத்தின்று விட்டு தமிழ்மொழியைக் குழிதோண்டிபுதைக்கத்துடிக்கும் எட்டப்பன்களைப் பற்றிப் பேசினால், பல்டியடித்தலா ?
ராஜீக்களோ மற்றெவருமே தங்கள் மொழியைத் தமிழர்கள் மேல் திணித்தால் யாருடைய நாக்குகள் வெட்டப்பட வேண்டும் என்பதை மலர் மன்ன்ன் சொன்னால் போதும்.
ராஜபாளையம் ராஜீக்கள் தமிழர்களல்ல. தெலுங்கர்கள். வந்து குடியேறிய்வர்கள் என்ற உண்மைகளைச் சொன்னால் நாக்கு வெட்டப்ப்டும் என்று மிரட்டுவதா ? இவைகள் உண்மைகளில்லையென்றால் எவை உண்மையென்று மலர் மன்னன் சொல்லட்டும்.
திரு என்றெழுத மாட்டேன் என்று சொல்ப்வர் தமிழராக முடியும் ? இதற்கும் மலர் மன்ன்ன் பதில் சொல்லட்டும்.
ராஜபாளையம் ராஜீக்கள் அனைவரும் மில் முதலாளிகள் அல்ல. அவர்களின் சாதாராமாணவர்களிடமும் நான் பழகி அவர்களே தங்கள் தாய்மொழி தெலுங்கெனவும் அவர்கள் வரலாற்றைச் சொன்னதுண்டு. நானும் அதன் பின்னர் சொன்னதுண்டு. எந்த ராஜீவும் என் நாக்கை வெட்டவில்லை.\
Every Tamilian knows Rajus of Rajapalayam are original Telugus who migrated to Tamil nadu. History books say. Let Malarmannan go and destroy such books. It is recent history. No need for excavation and research.
If he does not want history to speak truth, let him burn the books in a bon fire !
தமிழ்நாட்டு உப்பைத்தின்று விட்டு — காவ்யா டாடா சால்ட்டில் எந்த மண் உப்பு என்று சொன்னால் நல்லது…
எனக்கும் ராஜபாளையம் ராஜீஸ் நண்பன் உண்டு. தெலுங்குல தான் மாட்லாடுவாக வீட்டில்… தமிழக அரசியலில் அசைக்க முடியாத சக்திகளில் அவர்களும் உண்டு. தெலுங்கில தான் பேசுவாக…. அவர்கள் தெலுங்கர்கள் என்பது ராஜாபாளையம் ….. கூட தெரியும்…
சந்தடி சாக்கில் காமராஜ் நாடார் தப்பிச்சிட்டாரு… ராஜபாளையம் ராஜீஸ் மற்றும் டிவிஎஸ் கம்பெனி தான் அவரின் தேர்தல் பலமே… நேரு மதுரை வந்த போது கார் தந்தது யார்.. ? அப்படி கார் வசதி பெற்ற பின் அவர்களிடம் காமராஜர் நேர்மையான கண்டிப்புடன் இருக்க முடியுமா..?
காவ்யா!, மலர்மன்னன்!
இங்கு மொழியை வைத்து சண்டை உக்கிரமாக நடந்து கொண்டிருக்கிறது. நாக்கை அறுக்கும் வரை சென்று விட்டது. மொழிப் பற்று இருக்கலாம். ஆனால் மொழி வெறி இருக்கக் கூடாது.
உலகில் உள்ள மூல மொழிகள் எல்லாமே இறைவன் மனிதர்களுக்கு கற்றுக் கொடுத்ததாக இறைவன் குர்ஆனிலே கூறுகிறான். ஒவ்வொரு மொழிக்கும் ஒரு தூதரை அனுப்பியதாக இறைவன் கூறுகிறான். நமது தமிழ் மொழிக்கும் ஒரு தூதர் வந்திருக்கலாம். அவர் திருவள்ளுவராகக் கூட இருக்கலாம்.
14:4. ஒவ்வொரு தூதரையும் அவருடைய சமூகத்தாருக்கு அவர் விளக்கிக் கூறுவதற்காக அவர்களுடைய மொழியிலேயே (போதிக்கும் படி) நாம் அனுப்பிவைத்தோம்;
30:22. மேலும் வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதும்; உங்களுடைய மொழிகளும் உங்களுடைய நிறங்களும் வேறுபட்டிருப்பதும், அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும். நிச்சயமாக இதில் கற்றரிந்தோருக்கு அத்தாட்சிகள் இருக்கின்றன.
46:12. இதற்கு முன்னர் மூஸாவின் வேதம் ஒரு இமாமாகவும் நேர்வழி காட்டியாகவும் ரஹ்மத்தாகவும் இருந்தது; (குர்ஆனாகிய) இவ்வேதம் முந்தைய வேதங்களை மெய்யாக்குகிற அரபி மொழியிலுள்ளதாகும்; இது அநியாயம் செய்வோரை அச்சமூட்டி எச்சரிப்பதற்காகவும், நன்மை செய்பவர்களுக்கு நன்மாராயமாகவும் இருக்கிறது.
பள்ளிவாசல்களில் குர்ஆன் அரபியில் ஓதப்படுவது கூட உலக ஒற்றுமைக்காக! அதே பள்ளியில் தமிழில் மார்க்க சொற்பொழிவு நடைபெறும். இறைவனிடம் பிரார்த்தனையில் ஈடுபடும்போது தாய் மொழியான தமிழில்தான் நாங்கள் பிரார்த்திப்போம்.
693. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
“உங்களுக்குத் தலைவராக நியமிக்கப் படுபவர் கருப்பு நிறமுடைய (நீக்ரோவான) உலர்ந்த திராட்சைப் பழம் போன்ற தலையை உடையவராக இருந்தாலும் அவருக்குக் கட்டுப்படுங்கள். அவர்சொல்வதைக் கேட்டு நடங்கள்.”
என அனஸ்(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :10 Bhuhary.
இந்த நபி மொழி மூலம் தலைவனாக ஒரு நீக்ரோ நியமிக்கப்பட்டாலும் அவரின் நிறத்தை கொண்டு ஒதுக்காமல் அவரது தலைமையை ஏற்று செயல்பட வேண்டும் என்ற அறிவுறுத்தல் பெறப்படுகிறது. இதனால் நிறத்தாலோ மொழியாலோ குலத்தாலோ ஒருவன் சிறந்தவனாகவோ உயர்ந்தவனாகவோ முடியாது என்பதை விளங்குகிறோம்.
திரு.கோவிந்தா அவர்களே நேருவிற்கு சிறிது நேரம் கார் கொடுததற்க்காக காமராஜ் டிவிஎஸ் அய்யங்காருக்கு ஒரே பெர்மிட்டில் பத்து பஸ் ஓட்ட அனுமதுகொடுத்தார்.குடியாத்தம் தேர்தலில் அண்ணாதுரை போட்டியிடாததால் காமராஜ் ஜெயித்தார் என்று நீர் எழுதியதிலிருந்து உமது அறிவு தீட்சண்யம் விளங்குகிறது.நீர் என்ன பூணுல் போட்ட துண்டனோ.
அந்தோ பரிதாபம், இடையில் புகுந்து இவர் அஹிம்சை அல்லது அகிம்சை பற்றி பேசுகிறார். அப்படி பேசுவது போல் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளார். காவ்யா, மம இருவரும் டென்ஷனில் பேசுகிறார்கள். ஆனால், செயலில் காட்டுவது இவர்கள் அல்ல என்று உலகறியும். மகாபாரதத்திலும், திருக்குறளிலும் இல்லாதது அல்ல நீங்கள் சொல்வது. அதை உங்களவறுக்கு சொல்லுங்கள்.
விஜயன், இல்லை… எங்க ராஜா … காமராஜா.. என்று துள்ளிக் குதித்து காங்கிரஸில் தொண்டாற்றியவன்.
MrVenkat Saminathan laments saying that nobody talked about Vettukkili novel.Since there was mention about the hatred of non-brahmins against brahmins in the novel and since the author feels that hatred is without reason,we started talking about Brahmanism.I wonder whether it is true that Mr.Malarmannan,who was a senior journalist does not understand what is meant by Brahmanism.I will read Dharampal as suggested by him.But,I can not accept his view that Periyar”s singular achievement was creation of wedge between Brahmins and Nonbrahmins.But for Periyar,social evils like child marriage,Devadasi system and lot of superstitions would have continued.He was instrumental in creating awareness about equal rights to women.According to Mr.Malarmannan,majority of non-brahmins were not interested in Govt service and preferred to do their own business.I wonder whether all of them were so well off?Was it the reason for Rajaji to introduce Kulakalvi Thittam?I already informed Mr.Malarmannan that I am also a senior citizen retired from a bank.Whatever I am writing is my personal trauma faced by me during 37 years of service and I am not repeating whatever I read from Periyar’s books.R.K.Shanmugam Chettiyar and Dr Nair are not Mudaliyars.It is usual for likes of Mr.Malarmannan to call Justice party a Mudaliyar party.Even taken for granted that party was dominated by Mudaliyars,what is wrong in getting Govt posts for high caste nonbrahmins?I can also reel out statistics of those days to show the dominance of Brahmins in Govt service.Mr.Gocha was telling that Brahmins have atlast gone to media.That dominance is the main reason for” media trials” and sensationalism in media.Mr Malarmannan has got the clue now.
கோவிந்த் கோச்சா…..உங்களுக்கு என்ன பிரச்சினை? இன்று தமிழகத்தில் நிலவும் அனைத்து கேடுகளுக்கும் காமராசரே காரணம் என்று நாங்கள் ஒத்துக்கொள்ள வேண்டுமா? காமராஜர் மிக சமீபத்தில் வாழ்ந்தவர்…..அவர் நிகழ்த்திய சாதனைகளுக்கான சான்றுகள் நம் கண் முன்னே உள்ளன…….[ பல அணைகள், திருச்சி பெல் நிறுவனம், சேலம் உருக்காலை போன்றவை….] கக்கனை பற்றி குறிப்பிட்டுள்ளீர்கள்……..காமராஜர் என்ன செய்திருக்க வேண்டும் என்கிறீர்கள்? துரைமுருகன், நேரு , வீரபான்டி ஆறுமுகம் போல் பல கொள்ளையர்களை உருவாக்கி, தானும் கப்பம் பெற்று சுக வாழ்வு வாழ்ந்திருக்க வேண்டும் என்கிறீர்களா?காமராஜரின் தலையாய சாதனை என்ன தெரியுமா? கல்வி என்றாலே அது உங்களை போன்றவர்களுக்கு மட்டும்தான் என்ற நிலையை மாற்றி எங்களை போன்றவர்களையும் கல்வி பெற வைத்ததது தான்…….
எங்கே பிராமிணன் ? இல்லாத ஒருவனை பற்றி என்ன விவாதம்? விவேகானந்தர் எல்லோரையும் பிராமிணன் போல் மாற்றுங்கள் என்றார் ஆனால் இந்த திராவிட வியாதிகளால் பிராமிணன் கெட்டது தான் மிச்சம். ஒரு காலத்தில் பத்திரிகைகளிலும் ,அரசியலிலும், அரசாங்கத்திலும் நீதிமன்றங்களிலும் இவர்களது பங்களிப்பு இருந்தபோது நாட்டின் நிலை என்ன ? இவர்களை படி படியாக இந்த இடங்களிலிருந்து துரத்திவிட்டு இன்று நாடு இருக்கும் நிலை என்ன? இப்படி துரத்தி துரத்தி விரட்டியும் இன்று இந்து ஒற்றுமைபற்றி தூக்கிபிடிப்பதிலும் ஊழல் அரசியல் பேர்வழிகளை நாடறிய அம்பலபடுத்துவதிலும் இவர்கள்தான் பங்கு அளிக்கிறார்கள். மக்கள் நலம் மக்கள் நலம் என்று சொல்லியே தன் குடும்ப மக்களுக்காக தமிழ்நாட்டையே சூரையாடிவிட்ட கருணா தான் தோற்றது பிராமிணர்களால் தான் என்று பொறாமையால் ஆத்திரத்தால் சாடினார். இப்படிபட்ட பொறாமையும் ஆத்திரமும்தான் தமிழக திராவிடர்களிடம் உள்ளது
முதற்கோணல் முற்றும் கோணல் என்பார்கள். அதுதான் இங்கே.
முதல் வாக்கியத்தை நோக்கவும்.
எங்கே பிராமணன் என்ற கேள்வியும் அதற்கான விடையும் மதம் சார்ந்தவை. அவைகளை அப்படி அப்ரோச் செய்து அதற்குரிய பதிலை எழுதினால்தான் எம்.ஏ வைஷ்ணவம் பாஸ். வேங்கட கிருஸ்ணன் சுவாமி அப்பத்தான் மார்க்கு போடுவார். இல்லாவிட்டால் முட்டை.
ஆனால், இங்கே அதற்கான பதிலை அக்ரகாரங்களில் தேடுகிறார். வேதம் கோபால்.
என்றைக்கு இந்த பித்தலாட்டம் ஒழிகிறதோ, அன்னைக்கு எல்லாக் கிருத்துவரும் இசுலாமியரும் இந்துவா ஆயிடுவாங்கோண்ணா!
உள்ள சுத்தம், உடல் சுத்தம், உடை சுத்தம், உரை சுத்தம், உணவு சுத்தம்,
உழைப்பு சுத்தம். இப்படி இந்த 6 சுத்தங்களை ஒருவன் கடைபிடித்து வாழ்ந்தால் அவனே உத்தமன். இப்படி வாழ்கை நடத்துவது நாகரிக வளர்சி பெற்ற இந்த காலத்தில் மிகவும் அரிது. சூழ்நிலை சகவாசம் நிச்சயம் ஒருவரது மனதை மாற்றும் சக்தி படைத்தது. இதிலிருந்து ஒருவர் தம்மை காத்துக்கொள்ள சமுகத்திலிருந்து பல நிலைகளில் ஒதுங்கி இருந்தே ஆகவேண்டும். இப்படி ஒதுங்கி வாழ்பவர்களை சமூகம் நிச்சயம் எப்பொழுதுமே சந்தேக கண்கொண்டு பார்பது இயற்கை. எனவேதான் ஒழுக்கமாக ஒதிங்கி வாழ்பவர்களை சுமூகம் அவன் ஒரு சுயநலவாதி சமூகத்தை ஒதிக்கி வைத்துவிட்டான் என்றுதான் தூற்றும்.
இந்தியாவில் இப்படி ஒதுங்கி பலவற்றை ஒதிக்கி வாழ்ந்தவனையே சமூகம் ஒதிக்கிவைத்தது. இப்படி சமூகம் ஒதிங்கி இருந்தவனையே ஒதிக்கிவைத்ததால் ஒழுக்கமானவன் வாழ்வு ஆதாரத்தை தேடி சூழ்நிலைகேற்ப சமூக ஜோதியில் கலந்துவிட்டான். சுயநலம்தான் பொதுநலம் என்று நாகரிக வாழ்கை நமக்கு பாடம் கற்றுதந்துள்ளது. இதனால் ஏற்பட்ட சமூக சீர்கேட்டை இன்று நாம் கண்கூட காண்கிறோம். கிடைத்தவரையில் ஆதாயம் என்றுதான் இன்று ஒவ்வொரு இந்தியனும் சிந்திகிறான். நாட்டின் முன்னேற்றம் பற்றியோ இந்திய பண்பாடு சீர்புலைவைகபற்றியோ வருங்கால சந்ததிகள் பற்றியோ எள்ளவும் சிந்திப்பதில்லை
//உள்ள சுத்தம், உடல் சுத்தம், உடை சுத்தம், உரை சுத்தம், உணவு சுத்தம்,
உழைப்பு சுத்தம். இப்படி இந்த 6 சுத்தங்களை ஒருவன் கடைபிடித்து வாழ்ந்தால் அவனே உத்தமன். இப்படி வாழ்கை நடத்துவது நாகரிக வளர்சி பெற்ற இந்த காலத்தில் மிகவும் அரிது. சூழ்நிலை சகவாசம் நிச்சயம் ஒருவரது மனதை மாற்றும் சக்தி படைத்தது. இதிலிருந்து ஒருவர் தம்மை காத்துக்கொள்ள சமுகத்திலிருந்து பல நிலைகளில் ஒதுங்கி இருந்தே ஆகவேண்டும். இப்படி ஒதுங்கி வாழ்பவர்களை சமூகம் நிச்சயம் எப்பொழுதுமே சந்தேக கண்கொண்டு பார்பது இயற்கை. எனவேதான் ஒழுக்கமாக ஒதிங்கி வாழ்பவர்களை சுமூகம் அவன் ஒரு சுயநலவாதி சமூகத்தை ஒதிக்கி வைத்துவிட்டான் என்றுதான் தூற்றும்.//
ஒன்னை மறந்துட்டீர்களே. அதுதான் உங்கள் அஜன்டா. அதன்படி, இவ்வளவு நற்குணங்கள் ஒருவனுக்கு இருந்தால் மட்டும் போதாது சார். அவனோ அவளோ இசுலாமியானாக கிருத்துவனாக இருக்கக்கூடாது. இருந்தால் எவ்வளவுதான் நற்குணங்கள் இருப்பினும் அவனை உங்கள் உலகம் தூற்றும்.
திருத்தி எழுதிவிடுங்கள். இல்லாவிட்டால் சேம் சைடு கோல் போடுகிறீர்கள் என அரக்க பரக்கப் பேசுவேன்.
//திராவிட இயக்கமும் சரி, கம்யுனிஸ்ட் கட்சியினரும் சரி, அவர்களது நீண்ட பல தலைமுறைகள் நீண்ட வாழ்வில் இலக்கியத்திற்கோ கலைக்கோ எதுவும் கொடுத்தது கிடையாது. அவர்கள் பங்களிப்பு பிரசாரங்களிலும் எழுப்பும் இரைச்சல்களிலும் தான். அதில் உண்மை இல்லை, காரணம், அவர்கள் சொல்வதில் அவர்கள் அனுபவம் இல்லையென்பதால் தான். தலித் எழுத்துக்கள் தான் அவர்களின் உண்மை அனுபவங்களைச் சொல்கின்றன. அவை தமிழ் இலக்கியத்துக்கு தம் பங்களிப்பைத் தந்துள்ளன//
உண்மை
பாஞ்சாலி சபதத்தை பாரதியார் எழுதினார் என்பது உண்மை. பாஞ்சாலி சபதம் படிப்பதற்கு ஒரு இனிமையான தொடர் கவிதையா என்றால், சிலர் ஆமென்பர்; சிலர் இல்லையெனலாம். ஆமென்பது ஒரு சாரார் கருத்து; இல்லையென்பது இன்னொரு சாரார் கருத்து.
இவைகள் கருத்துக்கள் அவரவர் சிந்தனைக்கேற்ப. ஆனால் பாஞ்சாலி சபதத்தை பாரதியார் எழுதினார் என்பது கருத்தன்று. அஃது ஒரு உண்மை. அஃது அவரவர் சிந்தனைக்கேற்ப மாறாது. மாறினால் பொய் என்றாகிவிடும்.
தங்கமணி இதை உணர்தல் நலம். திராவிட இயக்கத்தினர் எழுதியவை இலக்கியமா இல்லை வெறும் வெட்டி வேலையா என்பது கருத்துச் சொலலே. அவை ஒரு சாராருக்கு இலக்கியம். இன்னொரு சாராருக்கோ இலக்கியமாகா.
இக்கருத்து ஆளாளுக்கு கூட்டத்துக்கு கூட்டம் மாறும். திராவிட இயக்கத்தினரைப் பிடிக்காதவருக்கு அவை இலக்கியமல்ல. இவர்கள் கணிசமான அளவில் இருக்கிறார்கள். நம்ம சாமிநாதனும் ஜெயமோகனும் அவர்களுள் சிலர், இவர்கள் பாரதிதாசனுக்குக் கவிதையே எழுத வராதென்பர் ஏனெனில் அவர் திராவிட இயக்கத்தைச்சேர்ந்தவராம் ! திராவிடச்சாயல், அல்லது அதை விரும்பியோர் அதை இலக்கியமெனப் போற்றுகிறார்கள். பாரதிதாசனின் கவிதைகளைப் படித்துக்களிக்க முடியாமல் இருக்க முடியாது. அவைகளுக்கு இலக்கியத்தரமில்லை என வாதிடுவது திராவிட இயக்கத்தின் மேலுள்ள காழ்ப்புணர்ச்சியை அவரது கவிதைகளுக்கும் இடுவதே. மாமியார் உடைத்தால் மண் சட்டி; மருமகள் உடைத்தால் பொன்சட்டி என்ற கொள்கை இலக்கியக்கணிப்பிற்குப் பயன்படுத்தினால் தடுமாற வேண்டும்
என் கருத்தென்றால், இப்படி:
இலக்கியம் என்பது படிப்பவருக்கு ஏதாகினும் ஒருவகையில் – மொழி நடையாலோ, கருத்தைச் சொல்லும் அழகினாலோ, புதிய கருத்தென்பதாலோ இன்னபிறவற்றால் – ஈர்க்கப்பட்டால் அது படிக்கப்படும்; போற்றப்படும். பின்னர் அவற்றை இலக்கியமென்று சொல்லாமல் வாத்து என்றா சொல்வது?
அண்ணாவின் நாடகங்களைப்படித்து இன்புற்றேன். வசனங்களில், கதை சொல்லும்போக்கில், உணர்ச்சிப்பிரவாகத்தில், கருத்துக்களை அழுத்தம் திருத்தமாகச் சொல்வதில்.
பாரதிதாசனின் –
“ஏடெடுத்து தேன்கவி வரைந்திடு என்று சொன்னது வான்
ஓடையும் தாமரைப்பூக்களும் என்னைச் சித்திரம் தீட்டுக என்றுரைக்கும்”
என்று சொக்கிப்ப்போனேன்.
காலையிளம் பரிதியிலே அவளைக் கண்டேன்!
கடற்பரப்பில், ஒளிப்புனலில் கண்டேன்! அந்தச்
சோலையிலே, மலர்களிலே, தளிர்கள் தம்மில்,
தொட்ட இடம் எலாம் கண்ணில் தட்டுப்பட்டாள்!
மாலையிலே மேற்றிசையில் இலகு கின்ற
மாணிக்கச் சுடரிலவள் இருந்தாள் ஆலஞ்
சாலையிலே கிளைதோறும் கிளியின் கூட்டந்
தனில் அந்த ‘அழகெ’ ன்பாள் கவிதை தந்தாள்.
சிறுகுழந்தை விழியினிலே ஒளியாய் நின்றாள்;
திருவிளக்கிற் சிரிக்கின்றாள், நாரெடுத்து
நறுமலரைத் தொடுப்பாளின் விரல்வளைவில்
நாடகத்தைச் செய்கின்றாள்; அடடே செந்தோட்
புறத்தினிலே கலப்பையுடன் உழவன் செல்லும்
புதுநடையில் பூரித்தாள்; விளைந்த நன்செய்
நிறத்தினிலே என் விழியை நிறுத்தினாள்; என்
நெஞ்சத்தில் குடியேறி மகிழ்ச்சி செய்தாள்.
திசைகண்டேன், வான்கண்டேன், உட்புறத்துச்
செறிந்தனவாம் பலப்பலவும் கண்டேன். யாண்டும்
அசைவனவும் நின்றனவும் கண்டேன். மற்றும்
அழகுதனைக் கண்டேன் நல் லின்பங் கண்டேன்.
பசையுள்ள பொருளிலெல்லாம் பசையவள் காண்!
பழமையினால் சாகாத இளையவள் காண்!
நகையோடு நோக்கடா எங்கும் உள்ளாள்!
நல்லழகு வசப்பட்டால் துன்ப மில்லை.
இவையெல்லாம் என்னைப் படி படி இன்புறு என்றன. ஆயினும் நான் செய்யவில்லை? ஏன் ?
எனக்குத் திராவிட இயக்கம் பிடிக்காது. அவ்வியக்கத்திலுள்ளவர்களை நினைத்தாலே குமட்டிக்கொண்டு வரும். எனவே ‘அழகின் சிரிப்பு’ ஒரு இலக்கியமாகாது. அஃதொரு குப்பைத்தொட்டி. சரிதானே தங்கமணி?
காழ்ப்புணர்ச்சிக்கும் ஒரு எல்லையை நமக்குநாமே வரைந்து கொண்டு அதன்படி வாழ்தல் நலம். நல்லழகு வசப்பட்டால் துன்ப மில்லை.
M.K.Gandhi
Do you think you will gain anything by becoming non-Hindus, he told them, do not think you will gain anything by abusing, Brahmins or burning their homes. “Who were Tilak, Gokhale, Ranade and Agarkar?” he asked them. They were Brahmins, they were in the forefront of every nationalist struggle, they served the cause of non-Brahmins at the greatest cost to themselves, it is in many cases through the work of Brahmins that the non-Brahmins have been made aware of their rights, he told them. It is the Brahmins who exert for the uplift of the depressed classes, more than anybody else. Lokmanya Tilak is revered by all classes for his services to the country. The late Mr. Gokhale, Mr. Ranade and the Hon’ble Mr. Sastri have all done splendid work for the regeneration of the backward classes. You complain of the Brahmin bureaucracy. But let us compare it with the British bureaucracy. The latter follow the ‘divide and rule policy’ and maintain its authority by the power of the sword, whereas, the Brahmins have never restored to the force of arms and they have established their superiority by sheer force of their intellect, self-sacrifice, and penance. I appeal to my non-Brahmins brethren not to hate the Brahmin and not to be victims of the snares of the bureaucracy…”
“By indulging in violent contempt of a community which has produced men like Ramdas, Tulsidas, Ranade, Tilak and others,” he told the non-Brahmins, “it is impossible that you can rise.” By looking to the British for help you will sink deeper into slavery. ”
I have not a shadow of doubts,” he declared, “that Hinduism owes its all to the great traditions that the Brahmins have left for Hinduism. They have left a legacy for India, for which every nation, no matter to what varna he may belong owes a deep gratitude. Having studied the history of almost every religion in the world it is my settled conviction that there is no class in the world that has accepted poverty and self-effacement as its lot. ”
By indulging in violent contempt of a community which has produced men like Ramdas, Tulsidas, Ranade, Tilak, and others”, he told the non-Brahmins, it is impossible that you can rise.”
Anti-Brahminism have deep roots in Christian theology
To be against “Brahminism” is part and parcel of the political correctness of progressive scholars in twenty-first-century India. This indicates that something is very wrong with the Indian academic debate. Promotion of animosity towards a religious tradition or its followers is not acceptable today, but it becomes truly perverse when the intelligentsia endorses it. In Europe, it took horrendous events to put an end to the propaganda of anti-Semitism, which had penetrated the media and intelligentsia. It required decades of incessant campaigning before anti-Semitism was relegated to the realm of intellectual and political bankruptcy. In India , anti-Brahminism is still the proud slogan of many political parties and the credential of the radical intellectual.
Both anti-Semitism and anti-Brahminism have deep roots in Christian theology.
The contemporary stereotypes about Brahmins and the story about Brahminism also originate in Christian theology. They reproduce Protestant images of the priests of false religion. When European missionaries and merchants began to travel to India in great numbers, they held two certainties that came from Christian theology: false religion would exist in India ; and false religion revolved around evil priests who had fabricated all kinds of laws, doctrines and rites in order to bully the innocent believers into submission. In this way, the priests of the devil abused religion for worldly goals. The European story about Brahminism and the caste system simply reproduced this Protestant image of false religion. The colonials identified the Brahmins as the priests and Brahminism as the foundation of false religion in India . This is how the dominant image of “the Hindu religion” came into being. The theological criticism became part of common sense and was reproduced as scientific truth. In India , this continues unto this day. Social scientists still talk about “Brahminism” as the worst thing that ever happened to humanity.
Some Jews began to believe that they were to blame for what happened during the Holocaust; many educated Brahmins now feel that they are guilty of historical atrocities against other groups. In some cases, this has led to a kind of identity crisis in which they vilify “Brahminism” in English-language academic debate, but continue their traditions. In twentieth-century Europe, we have seen how dangerous anti-Semitism was and what consequences it could have in society. Tragically, unimaginable suffering was needed before it was relegated to the realm of unacceptable positions. In India, anti-Brahminism was adopted from Protestant missionaries by colonial scholars who then passed it on to the secularists and Dalit intellectuals. The question that India has to raise in the twenty-first century is this: Do we need bloodshed, before we will realize that the reproduction of anti-Brahminism?
Anti-Brahmanism, the New Communalism of Modern India
Anti-Brahminism has a long history in India, being a dominant theme of the long period of foreign rule. In the last thousand years India was primarily governed by non-Hindus – Muslims and Christians – who certainly cannot be called pro-Brahmin in their policies. When India was invaded by foreign powers, the Brahmins proved to be a great obstacle, particularly against religious conversion.
Muslim rulers made special efforts to convert or even kill Brahmins. They destroyed Hindu temples in order to deprive the Brahmins, who were mainly temple priests, of their influence and their income. The British rulers of colonial India targeted the Brahmins and dismantled the traditional educational system that the Brahmins upheld.
However, the same groups which attacked the Brahmins found that they had to use the Brahmins at times, who represented the intelligentsia of the country, to help administer the country. So occasionally they compromised with the Brahmins and allowed them certain privileges. But the Brahmins had little power under their rule, and were officially discredited as heathens.
But all fail to explain why Ambedkar did not convert to Caldwell’s “great brotherhood” called Christianity.
In fact, B R Ambedkar wanted to send a strong message through his religious conversion. After examining Christianity, he wrote in 1938:
“caste governs the life of Christians as much as it does the life of the Hindus. There are Brahmin Christians and non-Brahmin Christians. Among non-Brahmin Christians there are Maratha Christians, Mahar Christians, Mang Christians and Bhangi Christians. Similarly in the south there are Pariah Christians, Malla Christians and Madiga Christians. They would not inter-marry. They would not inter-dine” (Selected Speeches and Writings, Vol. 5, Government of Maharashtra, 1989, p. 445-78).
வேதம் கோபால்!
//When India was invaded by foreign powers, the Brahmins proved to be a great obstacle, particularly against religious conversion.
Muslim rulers made special efforts to convert or even kill Brahmins. They destroyed Hindu temples in order to deprive the Brahmins, who were mainly temple priests, of their influence and their income.//
வாரணாசி விசுவநாதர் ஆலயம்! -ஒளரங்கஜேப்
வங்காளத்திற்குப் பயணம் செய்து கொண்டிருந்த ஒளரங்கஜேப் வாரணாசி அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது அவரது ஆட்சியின் கீழிருந்த ஹிந்து ராஜாக்கள் ஒளரங்கஜேப்பிடம் ‘பயணத்தை ஒரு நாள் நிறுத்தித் தங்கிச் சென்றால் அந்த நாளில் எங்களது ராணிகள் கங்கையில் குளித்து விட்டு விசுவநாதரை தரிசனம் செய்வதற்கு ஏதுவாக இருக்கும்’என்று கோரிக்கை வைத்தனர்.
ஹிந்து அரசர்களும் ராணியரும் கங்கைக் கரையில் தங்கி விசுவநாதர் ஆலயத்தில் வழிபட்டுச் செல்ல வேண்டுமென்ற கோரிக்கையை தயக்கமின்றி ஏற்றுக் கொண்டவர் ஒளரங்கஜேப்.
அதனைத் தொடர்ந்து ஒளரங்கஜேப்பின் அன்றைய வழிப்பயணம் நிறுத்தப் பட்டது. வாரணாசிக்கு இடையேயான ஐந்து மைல்தூரம் முழுவதும் முகலாயப் பெரரசின் இராணுவத்தினர் நிறுத்தப் பட்டார்கள்.
இந்து ராணிகள் பல்லக்குகளில் சென்று புனித கங்கையில் நீராடினர். காசி விசுவநாதர் ஆலயத்தில் வழிபட்டார்கள். (ஒளரங்கஜேப் ஆட்சியில் அவரவர் விருப்பப்படி வணங்கிட அனுமதிக்கப் பட்டனர் என்பதற்கு இதுவும் ஒரு சான்றாகும்)
பூஜைகள் முடிந்தபின் ஹிந்து ராணிகள் திரும்பினர். ஆனால் கட்ச் சமஸ்தானத்தின் ராணி மட்டும் திரும்பவே இல்லை. உடனே அந்த ராணியைத் தேடிக் கண்டு பிடிக்க முழு அளவிளான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆனாலும் ராணியைப் பற்றிய தகவல் எதுவும் தெரியாததால் ஒளரங்கஜேப் ஆத்திரமடைந்தார். ராணியைத் தேடிக் கண்டு பிடித்திட தனது மூத்த அதிகாரிகளை அனுப்பி வைத்தார்.
அதிகாரிகள் தீவிரமாகத் தேடுகையில் விசுவநாதர் ஆலயத்தில் உள்ள ஒரு சிலை மட்டும் அசைந்தது. அந்தச் சிலையை அசைத்த போது பாதாளச் சுரங்கம் ஒன்றிற்குச் செல்லும் படிக் கட்டுகள் காணப்பட்டன. உள்ளே இறங்கிப் பார்த்தபோது அங்கே காணாமல் போன ராணி அவமானப் பட்ட நிலையில் அழுது கொண்டிருந்தது கண்டுபிடிக்கப் பட்டது.
விசுவநாதர் விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப் பட்டிருந்த இடத்திற்கு நேர் கீழே அந்தத் துயரச் சம்பவம் நடைபெற்றிருந்தது.
நடந்த சம்பவம் குறித்து ஹிந்து ராஜாக்கள் தங்களது எதிர்ப்பை உரத்த குரலில் வெளியிட்டார்கள். இந்த அக்கிரமத்திற்கு தகுந்த நடவடிக்கை எடுத்திட வேண்டுமென்று ஒளரங்கஜேப்பிடம் கோரினார்கள்.
அந்த இடத்தின் புனிதத் தன்மை மாசு படுத்தப்பட்டு விட்டதை உணர்ந்ததால் ஒளரங்கஜேப் விசுவநாதர் விக்கிரகத்தை வேறு இடத்திற்கு மாற்றிட உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து அந்தக் கோவில் தரைமட்டமாக்கப் பட்டது. அந்தக் கோவிலின் மடாதிபதி கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட்டார்.
ஆதாரம்: பிஷம்பர்நாத் பாண்டே, ‘இஸ்லாமும் இந்திய கலாசாரமும்’
Page : 70,71
இதனை தஸ்தாவேஜூகளின் சான்றுகளுடன் டாக்டர் பட்டாபி சீதாராமையா (The Feathers and the Stones)என்ற தனது நூலிலும் பாடனா அருங்காட்சியகத்தின் பொறுப்பாளர் பி.எல்.குப்தாவும் இந்த நிகழ்ச்சி பற்றி குறிப்பிட்டுள்ளனர். மேற்கண்ட அவமானகரமான துயரச் சம்பவம் குறித்து பி.என்.பாண்டே என்ன கூறுகிறார் என்று பார்ப்போம்.
P.N.Pande
“Aurangzeb came to Know of it. He was very much enraged. He sent his senior officers to search for the Rani. Ultimately they found that the statue of Ganesh: which was fixed in the wall was a movable one. When the statue was moved. They saw a flight of stairs that led to the basement. To their horror, they found the missing Rani dishonoured and crying. The basement was just beneath Lord Vishwanaths seat. The Rajas expressed their vociferous protests. As the crime was heinous the Rajas demanded examplary action. Aurangzeb ordered that as the sacred precinets has despoiled. Lord Viswanath may be moved to some other place. The temple be razed to the ground and the Mahant be arrested and punished.”
P.N.Pande, Islam And Indian Culture, Page 55
//When India was invaded by foreign powers, the Brahmins proved to be a great obstacle, particularly against religious conversion.
Muslim rulers made special efforts to convert or even kill Brahmins. They destroyed Hindu temples in order to deprive the Brahmins, who were mainly temple priests, of their influence and their income.//
மொகலாயர்களை அன்னியர்கள் என்று சொலவதே ஒரு வகையில் தவறு. ஏனெனில் அவர்கள் இந்திய பெண்களை மணந்து இந்திய ரத்தத்தோடு அனேகம்பேர் கலந்து விட்டனர். பாபரும், ஹூமாயூனும் வேண்டுமானால் அந்நியர்களாக இருக்கலாம். அவர்களின் வழித்தோன்றல்கள் இந்தியர்களாகவே கருதப்பட வேண்டும்.
இவர்கள் முஸ்லிம்கள் என்பதற்காக இவர்கள் செய்த பல தவறுகளை நியாயப்படுத்த இங்கு வரவில்லை. தங்களின் அரியணையைக் காப்பாற்றிக் கொள்வதற்காக பல தவறுகளை நம் சேர சொழ பாண்டியர் செய்தவாறு செய்திருக்கிறார்கள் என்பதையும் இங்கு பதிய வைக்கிறேன்.
இந்து இளவரசியை மணந்த அக்பர்!
முகலாயப் பேரரசர் அக்பர் ஆஜ்மீருக்குச் சென்று திரும்புகையில் சாம்பர் (Sambhar) என்ற ஊரில் ஆம்பர் (Ambar)மன்னர் ராஜா பார்மலின் மகளை இந்து மரபுப்படி திருமணம் செய்தார். அக்பரின் முகலாய வழியும், இராஜபுத்திர வழியும் இத்திருமணத்தால் ஒன்று சேர்ந்தது.
க.வெங்கடேசன், அக்பர்,சென்னை.
1972 –Page 47,48
ஷா பாய் என்று ஜெய்ப்பூர் ஆவணங்களில் அழைக்கப்படும் இராஜபுத்திர இளவரசியை, அக்பரை திருமணம் செய்து கொண்டதற்கு பின் மரியம்-உஸ்-ஸமானி (Mariam-uz-zamani) என்று அழைக்கப்பட்டார்.
Ashirbadilal Srivastava, Akbar The Great, volume 2, Agra, 1973, Page 59.
******************************************
இந்து இளவரசிக்குப் பிறந்த ஜஹாங்கீர்!
முகலாயப் பேரரசர் அக்பரின் வாரிசான ஜஹாங்கீர் இராஜபுத்திர ராணி ஷாபாய் என்ற மரியம் உஸ் ஸமானிக்குப் பிறந்தவர். ஓர் இந்துப் பெண்ணுக்குப் பிறந்தவர் என்பதால் முகலாயப் பேரரசில் ஜஹாங்கீர் அரசுரிமையை இழக்கவில்லை. அக்பருக்குப் பின் ஜஹாங்கீரே அரசப் பொறுப்பிற்கும் வந்தார்.
“Already earlier in the year 1562, Akbar had married a Rajput Princess if Jaiour, who was to become the mother of his successor Jahangir”.
Laurence Binyon, Akbar, Edinburgh, 1932, page 59.
********************************************
இராஜபுத்திர இளவரசிக்குப் பிறந்த ஷாஜஹான்!
முகலாயப் பேரரசர் ஜஹாங்கீர் மார்வாடா மன்னர் ராஜா உதயசிங்கின் மகளை திருமணம் செய்தார். அந்த இராஜபுத்திர இளவரசி ஜகத்கஸாயினி என்பவரின் வயிற்றில் பிறந்தவர்தான் முகலாயப் பேரரசர் ஷாஜஹான்.
ஷாஜஹானின் தந்தையார் ஜஹாங்கீர், அக்பருக்கும் இராஜபுதன இளவரசிக்கும் பிறந்தவர். ஜஹாங்கிருக்கும் இராஜபுதன இளவரசிக்கும் பிறந்தவர் சாஜஹான். ஷாஜஹானின் உடலில் ஓடிய ரத்தத்தில் முகலாய ரத்தத்தை விட இந்திய ரத்தமே அதிகமாக இருந்தது என்பர் வரலாற்றாசிரியர் லேன்பூல்.
குலாம் ரசூல், இந்தியாவை ஆண்ட முஸ்லிம் மன்னர்கள், தஞ்சாவூர்.
1998, page 461.
“Like his father Shah-jahan was the offspring of a union with a Rajput princess, a daughter of the proud Raja of Marwar, and had more Indian than Mughal blood in his veins.”
Stanley Lane-poole, Aurangzib, New Delhi, Page 14.
************************************
ஹிந்து ராணியின் பேரன் ஒளரங்கஜேப்!
இத்தகைய ஷாஜஹானுக்கு மகனாகப் பிறந்த மஹா சக்ரவர்த்தியாகிய ஒளரங்கஜேப் ஒரு ஹிந்து ராணியின் பேரனாயிருந்தும் மதத் துவேஷிகள் அவரையும் சும்மா விடவில்லை. அபாண்டப் பழிகளை அவர் மீது அடுக்கிக் கொண்டே செல்கிறார்கள் என்பதனை அறிகிறபோது வேதனையான விசித்திரமாகத்தான் இருக்கிறது. அது மட்டுமா?
நவாப் பாயின் கணவர் ஒளரங்கஜேப்!
ஒளரங்கஜேப்புக்குப் பின் முகலாயப் பேரரசில் அரியணை ஏறிய பகதூர்ஷாவின் தாயார் நவாப் பாய் (Nawab Bai)காஷ்மீர் இந்து அரசரின் மகள். (She was the daughter of Raja Raju of the Rajuari State of Kashmir) இராஜ புதன வழியில் வந்த நவாப் பாயின் (ரஹ்மத்துன்னிஷா) கணவர் யார் தெரியுமா? மாமன்னர் ஒளரங்கஜேப்தான்.
பரூக்கி, இந்தியாவை ஆண்ட முஸ்லிம் மன்னர்கள்,
page 545.
உதயபுரி மஹல் அல்லது பாய் உதயபுரி (Udai Puri Mahal) என்ற மனைவியும் ஒளரங்கஜேப்பிற்கு இருந்ததாகச் சொல்லப் படுகிறது. (Kam Baksh) காம்பக்ஸ்என்ற ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தவர் இவர்தான்.
டி.எப்.ஆர். மஆலிசாஹிப், முஸ்லிம் மன்னர்களின் இந்து ராணிகள், பத்ஹூல் இஸ்லாம்.
1957, November, Chennai.
வேதம் கோபால்!
//When India was invaded by foreign powers, the Brahmins proved to be a great obstacle, particularly against religious conversion.
Muslim rulers made special efforts to convert or even kill Brahmins. They destroyed Hindu temples in order to deprive the Brahmins, who were mainly temple priests, of their influence and their income.//
சீக்கியர்கள் தங்கள் மத நடவடிக்கைகள் தவிர அரசியலில் தீவிரம் காட்டிப் பேரரசருக்கு எதிராக ஆலோசனைகளும் ஆயுதங்களும் தந்து கிளர்ச்சிக்கு உதவிக்குக் காரணமான குருதேஜ பஹ்தூர் கொல்லப்பட்டார், எனவே சீக்கியர்கள் எதிரி.
மூடப்பழக்க வழக்கங்களைத் தடுக்கும்பொருட்டு ஜோதிடம் பார்த்தல், பஞ்சாங்கம் தயாரித்தல், குழந்தைத் திருமணம், உடன்கட்டை ஏறுதல் தீண்டாமை போன்ற வைகளுக்குத் தடை விதித்ததார். எனவே ராஜபுத்திரர்கள் எதிரி.
காட்டுமிராண்டிகளாக வாழ்ந்து பொது மக்களுக்கும் சமூகத்திற்கும் தொல்லை கொடுத்த ‘சத்நாமிகள் ‘ என்ற கூட்டத்தாரை அழித்ததால் அந்த இனம் பாதுஷாவுக்கு பரம்பரை எதிரி.
மராட்டியர்களின் நாயகனாகக் கருதப்பட்ட சிவாஜியை கைது செய்து சிறையில் அடைத்ததார். அவர் தந்திரமாகத் தப்பிச்சென்று அவுரங்கசீப்புக்கு எதிராக மராட்டிய மக்களிடம் பிரச்சாரம் செய்தகாரணத்தினால் மராட்டியர்கள் எதிரி.
ஷியா முஸ்லிம்கள் தங்கள் உடல் முழுவதும் அலகுகள் குத்திக்கொண்டும் சாட்டையால் தங்களை அடித்துக்கொண்டும், மார்பில் அடித்துக்கொண்டும் மொஹரம் பண்டிகையைக் கொண்டாடினர். அந்த பண்டிகை ஊர்வலத்திற்கு தடை விதித்ததால் ஷியா முஸ்லிம்கள் அவுரங்கசீப்புக்கு எதிரி.
(முஸ்லிம் மன்னராட்சியில் இந்தியாவின் முன்னேற்றம் – கரைகண்டம் கி. நெடுஞ்செழியன்)
பிற மதத்தவரின் பிரார்த்தனைக்கு அனுமதி!
‘நமது பரிபாலனத்தின் கீழ் உள்ள இந்த நாளில் பனாரஸிலும் அதன் சுற்றுப் புறங்களிலுமுள்ள இந்துக் குடிமக்கள் சிலரால் கொடுமைப் படுத்தப் படுவதாகவும் புராதனமான இந்துக் கோவில்களின் பொறுப்பிலுள்ள பிராமணர்கள் அங்கிருந்து வெளியேறும்படி அச்சுறுத்தப் பட்டு மிரட்டலுக்கு ஆளாகி அதனால் அந்த வகுப்பினர் மன வேதனைக்கு ஆளாகி இருப்பதாகவும் நமது மேன்மைக்குரிய புனித அரசவைக்குத் தகவல் வந்துள்ளது. எனவெ இந்த அரசாணை பிறப்பிக்கப்படுகிறது. பிராமணர்களையோ மற்ற இந்து குடிமக்களையோ சட்ட விரோதமாகத் தலையிட்டுத் தொல்லைக்குட்படுத்தக் கூடாது. அவர்கள் தங்கள் தொழிலைத் தொடர்ந்து செய்து வரவும் இறைவன் அளித்த இந்த வரமான இந்த சாம்ராஜ்யம் நிலைக்கும் வகையில் அவர்கள் சமாதானம் நிறைந்த மனதுடன் பிரார்த்தனைகள் நடத்தவும் முன்பு போலவே அனுமதிக்க வேண்டும். இந்த ஆணையை அவசரமானதாக மேற்கொண்டு இது வந்து சேர்ந்ததும் அதற்கான நடவடிக்கைகள் மேற் கொள்ள வேண்டும்.’
இவ்வாறு ஒளரங்கஜேப்பின் பனாரஸ்ஃபார்மன் என்ற சாசனத்தில் கூறப்பட்டுள்து.
பி.என்.பாண்டே, இஸ்லாமும் இந்திய கலாச்சாரமும், டாயல் மொழி பெயர்ப்பு,சென்னை.
1987, Page 61.
‘சதி’யை நிறுத்தியவர் ஒளரங்கஜேப்!
ஆதரவற்ற துர்பாக்கியவதியான ஒரு பெண்ணை ‘சதி’ (உடன்கட்டை ஏறுதல்) உயிருடன் எரிக்க முயன்றனர். ஆடசித் தலைமை வகித்த ஒளரங்கஜேப் இதை அறிந்து அந்த கொடுமையை தடுத்து நிறுத்தினார். அதோடு எந்த ஓர் இந்துப் பெண்ணையும் உயிருடன் எரிக்க அதிகாரிகள் அனுமதி அளிக்கக் கூடாதென்றும் உத்தரவு பிறப்பித்தார்.
இதனை அறிந்த உயர் ஜாதி இந்துக்கள் தங்கள் மத விஷயத்தில் ஒளரங்கஜேப் தலையிடுவதாக புகார் கூறினர். ‘உயிருள்ள ஒரு பெண்ணை எரிப்பது அவர்களுடைய மத நம்பிக்கை என்றால் அத்தகைய மோசமானச் செயலை செய்திட அனுமதி அளிக்காமலிருப்பதே தன்னுடைய நம்பிக்கை என்று ஒளரங்கஜேப் உறுதியாக நின்றார். உயர் பிரிவைச் சேர்ந்தவர்கள் பலரது எதிர்ப்பை மீறிதாம் இட்ட கட்டளையை நிறைவேற்றிடவும் பணித்தார். பலவந்தமாக உடன் கட்டை ஏற்றப்படும் பெண்களின் நகை, ஆபரணங்களைப் பெற்று அனுபவித்து வந்தவர்கள் பாதிப்பிற்குள்ளாயினர்.
விளைவு, மதத் தலைவர்கள் ரகசிய இடத்தில் ஒன்று கூடினர். ஒளரங்கஜேப் அரசைக் கவிழ்க்க சதி செய்தனர். அவரைக் குறித்து ஹிந்து மத விரோதி என பொய்களைப் புனைந்துரைத்தனர்.
ஜோசப் இடமருகு, பிராமண மதம், (மலையாளம்) தமிழில் த.அமலா, சென்னை 1995, Page 227
Premnath Bazaz, The Role Of Bhagavadgita in Indian History, New delhi 1975, Page 339
எனது தேசத்து ஏழைகளுக்கு……
ஒரு சமயம் புனித மக்கா நகரத்தின் ஷெரீப் பொருள் உதவி வேண்டி தனது தூதரை ஒளரங்கஜேப்பிடம் அனுப்பியபோது அவரக்கு பொருளுதவி செய்ய மறுத்ததோடு ‘எனது தேசமான இந்தியாவில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு அந்தப் பணத்தை வினியோகிக்க்க் கூடாதா? என்று கேட்டு விட்டு ‘இறைவன் எங்கும் நிறைந்திருக்கிறான்’ என்றும் அந்தத் தூதரிடம் பதில் தந்தவர் ஒளரங்கஜேப்’
டி.என். ராமச்சந்திரன், நமது சரித்திர பாரம்பரியம், நாகப்பட்டினம்.
Page 80, 81.
@Suvanppiriyan
Aurangzeb, as he was according to Mughal Records an exhibition mounted by FACT – India
This exhibition contains, and is based on Farmans, original edicts in Persian issued by Aurangzeb, preserved at the Bikaner Museum, Rajasthan, India
(Visit Fact India web site to know more about atrocities of Aurangzeb)
Francois Gauiter என்ற பிரெஞ் எழுத்தாளர் ஔரங்கசீப் செய்த அட்டூழியங்கள் பற்றிய புகைப்பட கண்காட்சியை சென்னையில் நடத்த ஏற்பாடு செய்து ஒருசில தினங்களில் நம் ஊர் முத்திரிகொட்டை ஆர்காடு நவாப் கருணாநிதிமூலம் வற்புறுத்தி அந்த நிகழ்ச்சியை கிழ் தரமான முறையில் ஆவண படங்களை நாசம் செய்து மூடவைத்தார்கள். இஸ்லாமியர்களாலேயே எழுதிவைத்த பல சரித்திர ஆதாரங்கள் தெளிவாகவே அன்றைய இஸ்லாமிய கொலைவெறி செய்திகளை ஆவணபடுத்தியுள்ளார்கள். இந்துக்கள் காதில் பூ சுற்றி நல்லவராகலாம் என்பது சாத்தியமில்லை. அவற்றை ஒப்புக்கொண்டால்தான் நீவீர் உண்மையான முஸ்லீம் ஆவீர்
Anti-Brahminism has nothing to do with christian theology in modern India.Vedham Gopal,in his comments,himself has accepted the crux of the problem.Yes,the superiority complex, thinking that they are only the intelligent people in the world only paves the way for bullying others either through political power or through media.Of course,what christian theologists felt about the false religion are very much true.The religion still revolves around evil priests who had fabricated all kinds of laws,doctrines and rites in order to bully the innocent believers into submission.He also says that the invaders used the Brahmins at times.Only correction is “at many times”They allowed not “certain” privileges but “ample” privileges.Brahmins had “vast”powers and not “little” powers.He says that there was no contribution from Dravidian ideologists towards Arts and Literature.As Kavya has stated he could not appreciate the contributions by them only because he has chosen to ignore the Dravidian leader”s contributions.After all,what is called literature or arts?Arts and Literature are considered the mirrors of the period reflecting the life of the people.Communist party only gave us Jayakanthan,Samudhram and Jeeva.Vedha Gopal would not have read Thamarai,Semmalar etc.Similarly he will not look at Kalaignar”s or Anna”s contributions.Popular arts also include Cinema and a Parasakthi only threw lot of questions against superstitions and exploitation under the guise of religion.Bharathidaasan and Pattukottai KLalyanasundaram fought against superstitions.Mr Vedham Gopal thinks only devotional writings are forming part of literature or arts.Even Kannadaasan,who portrayed the contemporary lives of Tamilians woul not rank among contributors,in Mr Vedham Gopal”s dictionary.Brahminism can be eliminated just by rethinking among Brahmins.Let them stop discriminating on the basis of caste or community.Let them treat all as equal.Let them bury their bias and prejudices.Are they ready?
Mr.Paramasivam
What a fine beautiful name while typing itself I am getting a devine shock in the body “OM NAMASIVAYA OM”
// He says that there was no contribution from Dravidian ideologists towards Arts and Literature ? //
// Mr Vedham Gopal thinks only devotional writings are forming part of literature or arts.? //
Sorry sir, I did not raised any of the above question in my comments so far
Sorry Mr Vedham Gopal,that part of my comments are in responce to Mr.Thangamani and not to you
@Suvanppiriyan
இஸ்லாமியர்களை இந்தியபடைகளிலிருந்து குறைக்க வேண்டும் – அம்பேத்கர் (பாகம்-20) திரு.ம.வெங்கடேசன் (தமிழ் இந்து வலைதளத்தில்) சென்று படிக்கவும். முஸ்லீம்கள் கிருஸ்துவர்களது தேசபற்று எப்படி இருந்தது என்பதையும் அதனால் தேசியத்திற்கு ஆபத்து வரும் என்று என்றோ சொல்லிவிட்டார்
சாமிநாதன் இக்கட்டுரையைத் தமிழ் ஹிந்து. காமில் ஓரிரு மாதங்களுக்கு முன் எழுதி வெளியிட்டு பல பின்னூட்டங்களைப் பெற்றபின், அதே கட்டுரையை வரி பிசகாமல் திண்ணையில் வெளியிடுகிறார். இப்படி முன்பே பிற பதிவுகளிலோ தாளிதழ்களிலோ வெளியான கட்டுரையை மீள் பதிவு செய்ய திண்ணையிடம் கொடுக்கிறதா ?
”அதே கட்டுரையை வரி பிசகாமல் திண்ணையில் வெளியிடுகிறார்” – காவ்யா
வெட்டுப்புலி பற்றிய, அல்லது எது பற்றியுமான என் அபிப்ராயங்கள், எல்லா இடங்களிலும் ஒன்றேயாக இருக்கும். அப்படித்தான் எனக்கு மட்டுமல்ல, எல்லொரிடத்தும் இருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன். இடத்துக்கு இடம் அபிப்ராயங்களை மாற்றுக்கொள்வது நேர்மையான விஷ்யம் அல்ல.
காவ்யா தன் இஷ்டத்துக்கு எப்படி வேண்டுமானாலும் கருத்துக்களை மாற்றிக்கொள்வது அவர் உரிமை. வேறென்ன சொல்ல?
நான் எழுதியது திண்ணை இணைய இதழின் விதிமுறைகள் இன்னொரு இதழில் ஏற்கனவே வெளியாகிப் பலரால் படிக்கப்பட்டு விவாதம் செய்யப்படட கட்டுரையை மறுபதிவு செய்ய அனுமதிக்கிறதா அதுவும் வரிக்கு வரி பிசகாமல் என்ற கேள்வியே. அப்படி செய்வதால் திண்ணை இதழ் ஒரு காப்பி பேஸ்ட் பத்திரிக்கையாக மாறி விடும்.
காப்பி பேஸ்ட் கட்டுரைக்குள் எங்கேயோ ஒரு கருத்திற்கு அழுத்தம் கொடுக்கத்தான் செய்யப்படவேண்டும்; முழுக்கட்டுரையையும் காப்பி பேஸ்டு என்றால் அது என்ன அதை இவ்விதழ் அனுமதிக்கிறதா என்பதே என் வியப்பாகும். பொதுவாக எந்த இதழும் இப்படி அனுமதிப்பதில்லை.
இதை இப்படிப்புரியாமல், இங்கொரு கருத்து அங்கொரு கருத்தை சாமிநாதன் சொல்கிறார் என்று காவ்யா சொன்னதாக சாமிநாதன் கதையை மாற்ற முயல்கிறார்.
U had written ur essay and got it released in your favorite public website tamilhindu.com. Many ppl read and discussed it there. You had also exchanged views with them there. After all that, you have cut and pasted it here, as if it were a new essay fresh for Thinnai.
No problem if you want your views – the same views !!!- to be known to Thinnai readers also. That should not, however, be done by lifting your complete essay w/o changing a comma, bodily from tamilhindu.com to puthu.thinnai.com.
U cd have written permanent and frozen views in a new essay specially for thinnai. There s a different between films of hollywood or bollywood, in Tamil and the films remade here with our own artistes.
Ur essay is like a hollywood or bollywood film dubbed in Tamil. !
@வேதம் கோபால்!
//@Suvanppiriyan
இஸ்லாமியர்களை இந்தியபடைகளிலிருந்து குறைக்க வேண்டும் – அம்பேத்கர் (பாகம்-20) திரு.ம.வெங்கடேசன் (தமிழ் இந்து வலைதளத்தில்) சென்று படிக்கவும். முஸ்லீம்கள் கிருஸ்துவர்களது தேசபற்று எப்படி இருந்தது என்பதையும் அதனால் தேசியத்திற்கு ஆபத்து வரும் என்று என்றோ சொல்லிவிட்டார்//
//இன்றைய அவலநிலையினைத் தடுக்கும் திறமில்லாத இந்துக்களை இதற்குப் பொறுப்பாக்க முடியாது. ஆனால் இதே நிலை நீடித்துத் தொடருவதை அனுமதிக்க வேண்டுமா? இதுவே இன்று நம்மை எதிர்நோக்கும் கேள்வியாகும். இதனை உடனடியாக நிறுத்த வேண்டுமென நாம் விரும்பினால், அதற்கு உறுதியான வழி பாகிஸ்தான் பிரிந்துபோகவிட்டுவிடுவதே. பாகிஸ்தான் பிரிவினையை எதிர்ப்பது, நம்முடைய அழிவுக்கான ஆயுதத்தை நாமே விலை கொடுத்து வாங்குவதற்கு அல்லது காசு கொடுத்துக் கொள்ளிக்கைட்டை வாங்கி முதுகில் சொறிந்து கொள்வதற்கு ஒப்பாகும். எனவே, பாதுகாப்பான எல்லை என்பதைவிடப் பாதுகாப்பான படையை நாடுவதே நன்மையான காப்பு நெறியாகும்.’’//
//இந்திய ராணுவத்தில் முஸ்லீம்களின் செல்வாக்கை குறைத்து, விரோத சக்திகளை வெளியேற்றிவிட வேண்டும். நமது பூமியை நாம் காப்பாற்றுவோம். இந்தியாவில் முஸ்லீம் சாம்ராஜ்ஜியத்தை பாகிஸ்தான் விரிவுபடுத்திவிடும் என்று தவறான கருத்துக் கொண்டிருக்க வேண்டாம். இந்துக்கள் அதை மண்ணைக் கவ்வச் செய்வார்கள்.//
அம்பேத்கார் சொல்லி விட்டால் அது வேத வாக்கா என்ன? இந்திய பிரிவினையின் போது அந்த நேரத்தில் அவரால் எழுதப்பட்ட ஒரு கட்டுரையை இன்றைய கால கட்டத்தோடு ஒப்பிட்டு பார்த்தல் அறிவார்ந்த செயலாகுமா? கார்கில் போரில் பாகிஸ்தானியர்களை விரட்டி நமது மண்ணை மீட்டெடுத்ததில் ‘முஸ்லிம் ரெஜிமண்டுக்கு’ அதிக பங்கிருக்கவில்லையா? அந்த போரில் தனது பிரதிநிதித்துவத்துக்கு அதிகமாகவே உயிர்களை முஸ்லிம் வீரர்கள் இழந்தனரே!
அம்பேத்காரின் சொல்லுக்கு கட்டுரையாளர் ரொம்பவும் முக்கியத்துவம் கொடுப்பது போல் தெரிகிறது. அப்படி என்றால் இந்து மதத்தை பிடிக்காமல் தனது தோழர்களோடு புத்த மதத்தை தழுவினார் அம்பேத்கார். அவர் வழியில் கட்டுரையாளரும புத்த மதத்துக்கு சென்று விடுவாரா?
அம்பேத்காரின் வாக்கை அவரது இனத்தாரே புறந்தள்ளி விட்டனர். பல கோடிகள் இருந்த தாழ்த்தப்பட்டவர்களில் ஒரு லட்சம் பேரைத்தான் அவரால் புத்த மதத்துக்கு கொண்டு செல்ல முடிந்தது. நம் ஊர் பெரியார்தாசன் கூட ‘அம்பேத்கார் இந்த விஷயத்தில் தவறிழைத்து விட்டார். அவர் புத்த மதத்துக்கு பதிலாக இஸ்லாத்தை தனது வாழ்க்கை முறையாக ஏற்றிருந்தால் இந்தியாவின் வரலாறே மாற்றப்பட்டிருக்கும்’ என்று கூறி இன்று ‘அப்துல்லா’ வாக வலம் வந்து கொண்டிருக்கிறாரே!
இந்துவாய் சாகமாட்டேன். அம்பேத்கர்
மேல் ஜாதிக்காரர்கள் என்று சொல்லிக் கொள்ளுகின்றவர்களிடத்தில் நம்மீது கருணை ஏற்படும்படி நாம் செய்து வந்த முயற்சிகள் எல்லாம் வீணாய்ப் போய்விட்டன.
இனி அவர்களிடத்தில் சமத்துவமாயும், ஒற்றுமையாயும் வாழ முயற்சித்து நம் சக்தியையும், உழைப்பையும், பணத்தையும் செலவழிப்பது வீண் வேலையாகும். நமது முறைகளும் இழிவுகளும் மேல் ஜாதிக்கார இந்துக்களால் தீர்க்கப்படும் என்று எதிர்பார்ப்பது ஏமாற்றத்தைத்தான் அளிக்கும்.
இனி நாம் செய்ய வேண்டியது என்ன என்கின்ற விஷயத்தில் நான் ஒரு முடிவுக்கு வந்து விட்டேன். அம்முடிவு என்னவென்றால்,
நாம் இந்து மதத்தைவிட்டு அடியோடு விலகி விடுவது என்பதுதான்.
நமக்கு யார் சுதந்திரம் கொடுக்க மறுக்கிறார்களோ அவர்களை இனி நாம் கெஞ்சக் கூடாது. அவர்களது சம்மந்தத்தை இனி நாம் விலக்கிக் கொள்ள வேண்டும்.
நாம் நம்மை இந்துக்கள் என்று கூறிக்கொள்வது கூடாது.அதனால்தான் மேல் ஜாதிக்காரர்கள் நம்மை இழிவாகவும் கொடுமையாகவும் நடத்துகிறார்கள்.
நாம் வேறு மதத்தைச் சார்ந்தவர்களாய் இருந்தால் நம்மை இப்படி கொடுமைப்படுத்த அவர்களுக்கு துணிவு இருந்திருக்காது. எந்த மதத்தினர் உங்களுக்கு சம அந்தஸ்து கொடுத்து சமத்துவமாய் நடத்துகிறார்களோ அப்படிப்பட்ட மதம் எதுவாயினும் அதில் சேர்ந்து கொள்ளுங்கள்.
பிறக்கும் போதோ நான் தீண்டப்படாதவனாய் பிறந்தேன். என்றாலும் அது நான் செய்த குற்றமல்ல.
ஆனால் இறக்கும் போது தீண்டப்படாதவனாய் இறக்கமாட்டேன். அதற்கு மார்க்கம் என் கையிலேயே இருக்கிறது. அதாவது நான் ஒரு இந்துவாய் இறக்கப் போவதில்லை
(நாசிக்கில் கூடிய பம்பாய் மாகாண ஆதி இந்துக்கள் மாநாட்டில் டாக்டர் அம்பேத்கர் குடிஅரசு 20.10.1935)
அம்பேத்காரிடமிருந்து இஸ்லாமிய எதிர்ப்பை மட்டும் எடுத்துக் கொண்டு இந்து மதத்தை பற்றி அவர் கூறிய கருத்துக்களை கண்டு கொள்ளாமல் விடுவது சிறந்த தர்மமா என்பதை கட்டுரையாளரின் சிந்தனைக்கே விட்டு விடுகின்றேன்
நான் இந்துவாகப் பிறந்தேன். அப்பிறப்பைத் தவிர்க்கும் சக்தி எனக்கில்லை.
ஆனால் நான் இந்துவாக இறக்க மாட்டேன். அந்த சக்தி எனக்குண்டு என்று சொல்லித்தான்
அம்பேத்கர் இந்து மதத்தை விட்டு விலகினார்.
இதை விட இந்து மதத்திலன்மேல் ஒரு நேரடி விமர்சனம் வைக்கமுடியுமா ?
இன்று கோயில் நுழைவு எல்லா இனத்த்வருக்கும் என்று திருவாங்கூர் ராஜாவால் செய்யப்பட்ட பிரகடனத்துக்கு 75 ஆம் ஆண்டுவிழா கொண்டாடுகிறார்கள்.
என்று தோன்றியது என அனுமானமே செய்யவிலா இம்மதத்தில் – அதாவது பல்லாரயிராமாண்டுகளுக்க்ப்பின், 75 ஆண்டுகளுக்கு முன்புதான் கோயிலுள் சாமியைக்கும்பிட தாழ்த்தப்பட்டோருக்கு அனுமதி !
ஆச்சரியப்பட வைக்கும் மதம்.
12 -ம் நூற்றாண்டிலேயே இராமுனுசர் மைசூர் மேல்கோட்டை செலுவ நாராயணன் திருகோவிலில் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களை திருக்குலத்தார் என அழைத்து ஆலய பிரவேசம் செய்தார்.
ம்ம்….அது வாரத்தில் சில நாட்கள்; அல்லது இரு நாட்கள் மட்டுமே. ஏன் செய்தார்? ‘உம்மோட கோயிலுக்குள் நாங்க வரமாட்டோம் என்றார்கள் அவாள்.
இவர் யோசித்தார்: “தலித்துகளுக்கு மட்டும் என்றல்லவா கோயில் ஆகிவிடும்? ரிவர்ஸ் அபார்த்தீட் அவர்களே தம்மைத் தனிமைப்படுத்திக்கொண்டாலும்!”
எனவே சொன்னார்: ‘தோ பாருங்க…நீங்களெல்லாம் எல்லா நாளும் வாங்கோ. அவா இரண்டே ரண்டு நா மட்டும் வருவா! நீங்கள் அந்த நாளைக்கு வரவேணா. நீங்க வரும் நாட்களில் அவா வரமாட்டா! சரிதானா?” என்று காம்பரமைஸ் பண்ணினார். தலித்துகள் வரும் நாட்களில் இவரும் இவரின் பிரதானா சகாக்களும் – கூரேசர், பெரியநம்பி மற்றும் சிலர் – தலித்துகளை வரவேற்று அவர்களின் விருப்பப்படி தீர்த்தமாடி பெருமாளை கும்பிட வைத்தார்கள். இவரும் இவர் சகாக்களின் மேலே எந்த தீட்டும் படவில்லை என்று அந்த ‘அவா’ மரமண்டைகளுக்குப் புரியவில்லை.
இப்படி இவர் செய்யக்கூடாச் செயல்களை செய்ய, “இவர் இந்து மத்த்தையே குளோஸ் பண்ணிட்டா என்ன பண்ணது?” என அவாள் பயந்தார்கள். எப்படியானும் போட்டுத்தள்ளு என்று பிளான்.
திருக்குறுங்குடி அக்ரகாரத்தில் பிச்சையேந்தி வரும்கால் விடம் வைக்கப்பட்டது. அருந்து முன் கண்டிபிடிக்கப்பட்டு உயிர் பிழைக்கப்பட்டது. திருக்கோட்டியூர் நம்பி, ‘இனி நீர் பிறர் தரும் பிச்சையை ஏற்க வேண்டாம். உமக்கென ஒரு ஸ்பெசலா கூக்கை வச்சிடறேன் என்று அப்படியே செய்தார்.
பெரியநம்பியும் கூரேசரும் பல அவதிகளுக்கு உள்ளானார்கள். மாறனேரி (தலித்து)யின் ஈமச்ச்டங்குகளைச் செய்ததற்கு, ‘பிராமணன் இப்படிச்செய்யலாமா’ என சிரிரங்கத்து அவாள் பெரிய நம்பியை பாய்காட் பண்ணினார்கள்.
இராமானுசர் தனி ஆவர்தனம்தான் வாசித்தார் அவருடன் ஒத்து ஊதியோர் வெகு சிலரே. மாற்றங்கள் உண்டாக்கினார். அனைவரும் சம்ம் என்றார். சொல்வன் சொல்லட்டும் துணிந்து செல்வோம் என்றார். ஓரளவுக்கு வெற்றியைக்கண்ட பின்னர் திருநாடு அலங்கரித்தார்.
பிறகு ? வேதாளம் முருங்கை மரம் ஏறியது. !!!!
நம்ம விஜயன் பன்னிரண்டாம் நூற்றாண்டை விட்டு நகல மாட்டேங்கிறாரே. அதுக்குப்பின்னாடி வேதாளம் முருங்கை ஏறின காட்சி பாருங்கோ.
(All from my memory only. The incidents narrated above are subject to corrections if pointed out. For e.g I am not sure whether it was Thrukkottiyur Nambi who arranged for a special cook or some one else)
@Suvanppiriyan
அம்பேத்கர் இந்து மதத்தில் மரியாதையில்லை ஆதலால் இந்தியாவிலேயே தோன்றிய வேறு மதத்திற்கு தான் மாற சொன்னாரே தவிற அன்னிய மதங்களான கிருஸ்துவத்திற்கும் இஸ்லாமிற்கும் அல்ல. அவ்வாறு இந்த மிலேச மதங்களுக்கு மாறினால் நமது தேசியத்திற்கு பெரும் ஆபத்து வரும் அதோடு நமது பண்பாடும் பாரம்பரியமும் கலாசாரமுன் குலைக்கப்படும் என்றார். அவர் கூற்றுப்படியே புத்தமதத்திற்கு மாறிய தலித்துகள் இன்று அதே புத்த மதத்தில் நவ பௌதர்கள் என்று ஒதுக்கப்பட்டுள்ளார். மதம் மாறினால் ஜாதி மாறிவிடும் என்று காவ்யா அவர்கள் கூறுகிறார். ஆனால் இன்று மதம் மாறிய பின்பும் ஜாதி தொடர்ந்து வருவதும். அதைவைத்து கிருஸதுவ முஸ்லீம் தலித்துகள் நாடார்கள் வன்னியர்கள் என்று இடஒதுக்கீடு பிரச்சனையை எழுப்புவது ஏன் ?
சொலவது சரிதான். ஆனால் நாம் ஏன் இந்து மதம் இந்தக் கழிவை இன்னும் தன்னுள் வைத்திருக்கிறது என்றுதான் வியக்கிறோம்.
தலித்துக்கள் முத்தாலம்மனைக் கும்பிட்த் தடுக்கப்படுகிறார்கள் உத்தபுரத்தில். சுவர் கட்டி அவர்களைத் தடுக்கிறார்கள். இதை எந்த இந்துச்சாமியாரும் கேட்கவில்லை. ஆனால்,கம்யூனிஸ்டுகள் போனால் இந்த நாத்திகர்களுக்கு இங்கே என்ன வேலை? என வக்கனையாக்க் கேள்வி எழுப்புகிறார்கள் சும்மாக்கிடந்த சோம்பேறிகள்.
மடத்தில் ஏசி ரூமில் ஜம்மென்று உட்கார்ந்து கொண்டு சிவப்புத்தோல் சினிமா நடிகைகளுக்கும் பணத்துக்காகப் பணக்காரனுக்கும் ஆதர்வுக்காக. அரசியல்வாதிகளுக்கும் தரிசனம் தரும் இச்சாமியார்கள் துரும்பைக்கூட கிள்ளிபோடவில்லை உத்தபுரத்தில். கம்யூனிஸ்டுகள் பண்ணியவுடன் “அவாள் ஆதாயம் தேடுறா!; அவாள் நாத்திகர்கள்!” என்ற பேச்சில் மட்டும் குறையில்லை.
நியு யார்க் டைம்ஸ், பிபிசி, லண்டன் டைம்ஸ் என்றெல்லாம் உத்தபுரமும் இந்துமதமும் துவைத்தெடுக்கப்பட்டு ஊரெல்லாம் சிரித்தபிறகு, இருநாட்களுக்கு முன் தலித்துகள் முத்தாலம்மனைக் கும்பிட ‘அனுமதிக்கப்பட்டார்கள்’ இவர்கள் மன்ங்கள் இளகினால் மட்டுமே தலித்துகளுக்குச் சாமி!
எந்தச்சாமியா இருந்தாலென்ன – சாமிகளை இவர்கள் கட்டி வைத்து ஆட்சி புரிகிறார்கள். இவனுக்குத்தான், அவனுக்கில்லை. என்னடா மதம் பொல்லாத மதம் என்ற சளிப்புத்தான் வருகிறது.
தொன்மை என்று காணவியலா மதத்தில் இருக்கும் இந்தத் தொன்மைக் கழிவை முதலில் அகற்ற முடியவில்லை. அதை மூடி மறைக்க, முசுலிம்கள், கிருத்துவர்களும்…! என்று பேசிப்பேசியே வாய்ச்சொல் வீரம் காட்டுகிறார்கள்.
கிடம்பிஆச்சான் என்ற சீடனைத்தான் இராமுனுசருக்கு அமுதுபடைக்க ஏற்பாடு செய்தார் திருகோட்டியூர் நம்பி.இது ஒரு தகவலுக்காகத்தான்.
tks
தகவலுக்குத்தான்! என்றால் நீங்கள் நான் எழுதியவற்றை ஏற்றுக்கொள்ளவில்லை.
வேதாளம், முருங்கைமரம் – என்றுமே போகா.
@வேதம் கோபால்
//@Suvanppiriyan
அம்பேத்கர் இந்து மதத்தில் மரியாதையில்லை ஆதலால் இந்தியாவிலேயே தோன்றிய வேறு மதத்திற்கு தான் மாற சொன்னாரே தவிற அன்னிய மதங்களான கிருஸ்துவத்திற்கும் இஸ்லாமிற்கும் அல்ல. அவ்வாறு இந்த மிலேச மதங்களுக்கு மாறினால் நமது தேசியத்திற்கு பெரும் ஆபத்து வரும் அதோடு நமது பண்பாடும் பாரம்பரியமும் கலாசாரமுன் குலைக்கப்படும் என்றார்.//
இதுதான அம்பேத்கார் தனது வாழ்நாளிலேயே செய்த மிகப் பெரிய தவறு.
இந்தியாவிற்கென்று வரலாறு எழுதப்பட்ட நாட்களிலிருந்து பெருமைபடக் கூடிய கலாசாரம் என்று எதைச் சொல்கிறீர்கள்? ஆதி காலம் தொடடே தமிழகத்தில் தீண்டாமைதானே மனிதர்களின் முதல் கலாசாரமாகவும் பண்பாடாகவும் இருந்தது.! இப்படிப்பட்ட ஒரு கலாசாரம் நமக்கு தேவையா?
//அவர் கூற்றுப்படியே புத்தமதத்திற்கு மாறிய தலித்துகள் இன்று அதே புத்த மதத்தில் நவ பௌதர்கள் என்று ஒதுக்கப்பட்டுள்ளார். மதம் மாறினால் ஜாதி மாறிவிடும் என்று காவ்யா அவர்கள் கூறுகிறார். ஆனால் இன்று மதம் மாறிய பின்பும் ஜாதி தொடர்ந்து வருவதும். அதைவைத்து கிருஸதுவ முஸ்லீம் தலித்துகள் நாடார்கள் வன்னியர்கள் என்று இடஒதுக்கீடு பிரச்சனையை எழுப்புவது ஏன் ?//
முஸ்லிம்கள் அனைவருக்குமேதான் தனியான இட ஒதுக்கீடு கேட்டு வருகிறோம். ஆனால் அரசு சில நேரம் தலித் முஸ்லிம் என்ற வார்த்தையை உபயோகிககும் போது அதனை முதலில் எதிர்ப்பவர்கள் முஸ்லிம்களே! ‘தலித் முஸ்லிம்’ என்ற ஒரு பிரிவே இல்லாத போது அரசு எவ்வாறு இட ஒதுக்கீடு கொடுக்க முடியும?
முன்பு ‘மீனாட்சிபுரம்’ ‘ரஹ்மத் நகராக’ மாறியதல்லவா? அங்கு சென்று தற்போதய நிலையை பாருங்கள். பரம்பரை முஸ்லிம்களோடு பெண் எடுத்து பெண் கொடுத்து வரும் அழகிய காட்சியை பார்க்கலாம். இன்று அவர்களின் உடையும் கலாசாரமும் முற்றிலும் மாறி உள்ளதை நேரிலேயே சென்று பார்க்கலாம். பலர் வெளிநாடுகளும் வந்து பொருளாதாரத்திலும் சிறந்து விளங்குகின்றனர். அடுத்த தலைமுறையில் தலித் என்ற இழிவு முற்றிலுமாக நீங்கி விடும். இன்று தமிழகத்தில் பெரும்பாலான இஸ்லாமியர்கள் ஒடுக்கப்பட்ட சாதியிலிருந்து வந்தவர்களே! இன்று அவர்களைப் பார்த்து யாராவது தலித் என்று கூற முடியுமா? அராபிய வம்சாவளியோடு இரண்டற கலந்ததனால் நிறமும் கூட மாறி விட்டதே!
முஸ்லிம்கள் அனைவருக்குமேதான் தனியான இட ஒதுக்கீடு கேட்டு வருகிறோம்— விஷயம், இட ஒதுக்கீடு உரிமை பற்றியதல்ல… விஷ்யம் ஜாதி வேற்றுமை என்று தவ்வினால், அங்கும் ஜாதி வேற்றுமை தொடர்வது பற்றித் தான்..
அராபிய வம்சாவளியோடு இரண்டற கலந்ததனால் –> ஜோக்…. தலித் விடுதலை மத தாவுதலினால் அல்ல… அறிவு கொள்ளுதனிலால் தான்.. அதனால் தான் அம்பேத்கார், கற்பி… என்ற பதம் உப்யோலித்துள்ளார். மேலும் அரேபியர்கள், மஸ்கட் இனத்தினரை தாழ்வாக நடத்துவார்கள். இங்கு யாருக்கும் நடப்பது என்னவென்று தெரியாது என்று எழுத வேண்டாம். விஷய்ம் உயர்வு தாழ்வு மதத்தினால் அல்ல….
@வேதம் கோபால்!
//தலித் விடுதலை மத தாவுதலினால் அல்ல… அறிவு கொள்ளுதனிலால் தான்.. அதனால் தான் அம்பேத்கார், கற்பி… என்ற பதம் உப்யோலித்துள்ளார்.//
படித்து விட்டால் தீண்டாமை மறைந்து விடும் என்றுதான் நாமும் காலகாலமாக சொல்லி வருகிறோம். ஆனால் நடைமுறையில் இன்னும் தீண்டாமை கடைபிடிக்கப்படுகிறது. ஒரு நீதிபதியே வன்கொடுமை படுத்தப்படுவதை அதுவும் உச்ச நீதிமன்றத்திலேயே சமீபத்தில்கூட பத்திரிக்கையில் படித்தோமே! இது சம்பந்தமாக நான் அளித்த பதிவின் சுட்டியில் சென்று பார்த்துக் கொள்ளுங்கள். ஒரு நீதிபதிக்கே இந்த நிலை என்றால் சாமான்யனின் நிலையை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது.
http://suvanappiriyan.blogspot.com/2011/11/blog-post_05.html
//மேலும் அரேபியர்கள், மஸ்கட் இனத்தினரை தாழ்வாக நடத்துவார்கள். இங்கு யாருக்கும் நடப்பது என்னவென்று தெரியாது என்று எழுத வேண்டாம்.//
புது விஷயமாக இருக்கிறது. அரபுகள் அனைவரும் பெண் கொடுத்து எடுப்பதிலோ பள்ளிவாசல்களிலோ பொது இடங்களிலோ உயர்வு தாழ்வு பார்ப்பதில்லை. ஒரு சிலர் அவ்வாறு பார்த்தால் அதற்கு குர்ஆன் தடையாக இருக்கிறது. இஸ்லாத்தை சரியாக விளங்காதவர்கள்தான் தீண்டாமையை கடைபிடிப்பர். நம் நாட்டிலேயே இஸ்லாத்துக்கு மாறியவுடன் மசூதிக்கு முதல் ஆளாக வந்தால் அவன் அரிஜனாக இருந்தாலும் முதல் வரிசையில் நிற்க வைக்கப்படுவார். மக்காவிலும முதல் ஆளாக சென்றால் முதல் வரிசையிலேதான் நிற்க வைக்கப்படுவார்.
ஆனால் தமிழ்நாட்டிலோ நேற்றுதான் உத்தமபுரத்தில் தலித்கள் கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கவேபட்டிருக்கிறார்கள். இதை பெருமையோடு வேறு சொல்லிக்கொள்கிறோம். இது போன்ற மாற்றம் வர வேண்டிய ஊர்கள் தமிழகத்தில் இன்னும் ஆயிரக்கணக்கில் உள்ளது.
ஆனால் இன்று மட்டுமல்ல எந்த எதிர்காலத்திலும் முஸ்லிம் பெண்கள் மசூதிக்கு செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
@தங்கமணி!
//ஆனால் இன்று மட்டுமல்ல எந்த எதிர்காலத்திலும் முஸ்லிம் பெண்கள் மசூதிக்கு செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள்.//
தவறான தகவல். முகமது நபி காலத்தில் பெண்கள் பள்ளிக்கு வந்து தொழுதார்கள். ஆண்களைப் போல் பெண்கள் அவசியம் பள்ளிக்கு வந்து தொழ வேண்டும் என்று கட்டாயம் இல்லை. விரும்பினால் பள்ளியில் வந்து தொழலாம். விருப்பமில்லாவிட்டால் வீட்டிலேயே தொழுது கொள்ளலாம். இந்த சட்டத்தை பயன்படுத்தி நமது நாட்டிலும் பாகிஸ்தானிலும் பெண்களை அறவே பள்ளிக்கு வருவதை தடை செய்து விட்டனர். அது தவறு என்று விளக்கி வருகிறோம். பல ஊர்களில் பெண்கள் பள்ளிக்கு வருகின்றனர். எனது மனைவியும் தாயும் கூட பெருநாள் தொழுகை, வெள்ளிக்கிழமைகளில் பள்ளிக்கு செல்கின்றனர். சவுதியில் ஒவ்வொரு பள்ளியிலும் பெண்கள் தொழுவதற்கு இடம் ஒதுக்கப்பட்டிருக்கும். மெக்காவில் காஃபாவில் பெண்கள் தொழுவதை நீங்கள் தொலைக்காட்சியில் பார்க்கவில்லையா?
உங்கள் பெண்கள் பள்ளிக்கு செல்ல அனுமதி கேட்டால் (கணவர்களாகிய) நீங்கள் அவர்களை தடுக்க வேண்டாம்
அறிவிப்பவர் (இப்னு உமர்(ரலி) ஆதாரம்: புகாரி 865,873,5238)
இரவில் பெண்கள் பள்ளிக்கு வருவதை தடுக்காதீர்கள்
அறிவிப்பவர் (இப்னு உமர்(ரலி) ஆதாரம்: புகாரி 899)
நபி(ஸல்) அவர்களின் பள்ளியை சுத்தம் செய்ய ஒரு பெண் நியமிக்கப்பட்டிருந்தார்.
ஆதாரம்:புகாரி அறிவிப்பவர் (அபூஹூரைரா(ரலி) 458,460)
நல்லது சுவனப்பிரியன்
அதே மாதிரி எல்லோரும் கோவிலுக்கு போகலாம் என்பதை இந்துக்களும் எல்லோருக்கும் விளக்கி வருகிறார்கள்.
கோயில் என்பது சபரிமலையை குறிக்குமா ? அங்கு மினோபாஸ் ஆன வயதான பெண்களைத்தவிர மற்றபெண்கள் போக்க்கூடாது. ‘விளக்கி வருகிறோம்’ என்பது சபரிமலைக்குமா ? விளக்கவும்.
பெண்கள் போகப் பொருளாக நடத்தப்படுவதை பார்க்காமல் கண்மூடி இருப்பாரோ இவர்…? பள்ளியை சுத்தம் பண்ண அல்ல அந்த பள்ளியின் ஆசிரியையாகவே இந்துமதத்தில் இருக்கிறார்..
பள்ளி என்பது பள்ளிவாசல். அழகான தமிழ்ச்சொல்.
பள்ளியில் ஆசிரியையாக இருக்கிறார் என்பது பள்ளிவாசலையா, இல்லை பள்ளிக்கூடத்தையா ?
@தங்கமணி!
//நல்லது சுவனப்பிரியன்
அதே மாதிரி எல்லோரும் கோவிலுக்கு போகலாம் என்பதை இந்துக்களும் எல்லோருக்கும் விளக்கி வருகிறார்கள்.//
ஒரு முஸ்லிமிடம் சென்று ‘பெண்களை பள்ளிக்கு அனுப்பு! தீண்டாமை பாராட்டாதே! தர்ஹாக்கு செல்லாதே! வரதட்சணை வாங்காதே’ என்று குர்ஆனையும் நபிமொழிகளையும் வைத்து ஒரு பாமர முஸ்லிமிடம் என்னால் வாதாட முடியும். அவனும் குர்ஆனுக்கு கட்டுப்பட்டு தனது தவறான கொள்கைகளை விட்டு விடுவான்.
இதே வார்த்தயை ஒரு இந்துவிடம் சொன்னால் ‘நன்னா சொன்னேள் போங்கோ! பெரியவாளே தீண்டாமை சேமமானது என்று சொல்லியிருக்காளே! நம்ம மனு ஸ்ருமிதி தீண்டாமையையும், பெண்களையும் பற்றி பல கருத்தகளை சொல்லுகிறதே! தீண்டாமைக்கு ஆதாரம் ராமாயணததிலேயே இருக்கிறதே! அப்படியென்றால் இந்து மத சட்டங்களை எல்லாம் என்னை விட்டு விட சொல்கிறீரா ஓய்…’ என்று உங்களிடம் எதிர் கேள்வியை வைத்தால் உங்கள் பதில் என்னவாக இருக்கும்.
தீண்டாமை என்பது திருக்குறளிலோ, மனுதர்மத்திலோ எந்த ஒரு இந்து சட்டத்திலோ இல்லை. அது மொகலாயர்கள் இந்தியாவில் தங்களிடம் தோற்ற வீர பரம்பரையின்ரை அடிமைப்படுத்தவும் தங்கள் பெண்களை வீட்டுக்குள்ளே வைப்பதால் அவர்களது மலத்தை அள்ள இவர்களை உருவாக்கியதால் உருவான பழக்கம். ஆகவே இது தீய பழக்கம். இதனை இந்தியாவில் இனி தொடர வேண்டிய அவசியமில்லை என்பதாக இருக்கும்.
prophet mohammad said
I know that you women love to pray with me, but praying in your inner rooms is better for you than praying in your house, and praying in your house is better for you that praying in your courtyard, and praying in your courtyard is better for you than praying in your local mosque, and praying in your local mosque is better for you than praying in my mosque.[19]
Muhammad is also recorded to have said: “The best places of prayer for women are the innermost apartments of their houses”[20]
சுவனப்பிரியன்
இதனையும் பார்த்துகொள்ளுங்கள்
http://youtu.be/3tKSrKDA0Vk
சுவனப்பிரியன்,
//‘நன்னா சொன்னேள் போங்கோ! //
இவ்வாறு அவதூறு எழுதுவது இதுவே கடைசியாக இருக்கட்டும். முஸ்லீம்கள் எல்லோருமே இப்படித்தான் என்று எழுதுவது எவ்வளவு தவறோ அதே போல பிராம்மணர்கள் எல்லோருமே இப்படித்தான் என்று எழுதுவதும் தவறு.
இது போன்ற முத்திரை குத்துதல்களை, அவதூறுகளை, திண்ணை அனுமதிப்பது தவறு.
இதேபோல முஸ்லீம் மொழியில் முஸ்லீம்களை அவதூறாக குறிக்கும் தமிழ் சொற்களை திண்ணையில் எழுதினால் திண்ணை அனுமதிக்குமா?
விவாத நாகரிகம் வேண்டும்.
“பிராமணர்கள்”? அப்படி இறைவன் சொன்னானா ? ஏன் நீங்கள் பிராமணர்கள்?
இப்படி வருணாசிரமத்தின் முதல்வருணப்பெயரை வைத்துக்கொண்டு, எப்படி கூசாமல் சாதிகள் இல்லையென்று தங்கமணியால் சொல்ல முடிகிறது?
வருணங்கள் வேறு; சாதிகள் வேறு என்ற கதையெல்லாம் வேண்டாம். ஏன் நீங்கள் மட்டும் பிராமணர்கள் அதாவது முதல் வருணம் ? ஏன் பகவத் கீதை நீங்கள் இறைவனின் முகத்திலிருந்து பிறந்தீர்கள்? தாழ்த்தப்பட்ட வருணம் இறைவனின் காலிலிருந்து பிறந்தது?
@தங்கமணி!
//இவ்வாறு அவதூறு எழுதுவது இதுவே கடைசியாக இருக்கட்டும்.//
//ஆனால் இன்று மட்டுமல்ல எந்த எதிர்காலத்திலும் முஸ்லிம் பெண்கள் மசூதிக்கு செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள்.//
இந்த வார்த்தை உங்களுக்கு அவதூறாக படவில்லையா? முதலில் ஆரம்பித்து வைத்தது நீங்கள்தானே!
இந்த வார்த்தையில் உங்கள் மனம் புண்பட்டிருந்தால் அதற்காக நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். இந்து மத சட்டங்களை இந்திய சட்டமாக்க முயல்பவர்களில் பெரும்பான்மையோர் பிராமணர்களே! எனவேதான் நான் அவ்வாறு எழுத நேர்ந்தது. இன்று வரை வர்ணாசிரமம் தழைக்க வேண்டும் என்று அல்லும் பகலும் பாடுபடுபவர்களும் பிராமணர்களே! இதனை உங்களால் மறுக்க முடியுமா?
//தீண்டாமை என்பது திருக்குறளிலோ, மனுதர்மத்திலோ எந்த ஒரு இந்து சட்டத்திலோ இல்லை.//
திருக்குறளில் இல்லை. நானும் ஒத்துக் கொள்கிறேன். மனு தர்மத்தில் இல்லை என்று எப்படி சொல்கிறீர்கள்? எல்லோருக்கும் பட்டவர்த்தனமாக தெரிந்த ஒரு உண்மையை எப்படி மறைக்கிறீர்கள்? ஆதாரங்களை நான் தரட்டுமா? இந்து மதத்தில் வர்ணாசிரம கொடுமை இல்லாமல் இருந்திருந்தால் எனது முன்னோர்கள் இந்த மண்ணின் மதமான இந்து மதத்தை விட்டு விட்டு அரேபியாவில் உதித்த இஸ்லாததை ஏற்க வேண்டிய அவசியம் வந்திருக்காதல்லவா!
//மொகலாயர்கள் இந்தியாவில் தங்களிடம் தோற்ற வீர பரம்பரையின்ரை அடிமைப்படுத்தவும் தங்கள் பெண்களை வீட்டுக்குள்ளே வைப்பதால் அவர்களது மலத்தை அள்ள இவர்களை உருவாக்கியதால் உருவான பழக்கம்.//
வரலாற்றை எந்த அளவு திரிக்க முடியுமோ அந்த அளவு முயற்ச்சிக்கிறீர்கள். இந்து மத வேதங்களையும் ஸ்மிருதிகளையும் உண்டாக்கியதே மொகலாயர்கள்தான் என்று சொன்னாலும் சொல்வீர்கள்.
//Muhammad is also recorded to have said: “The best places of prayer for women are the innermost apartments of their houses”[20]//
பெண்களுக்கு குழந்தைகளை பராமரிக்கும் பொறுப்பு உள்ளது. வீட்டை பாதுகாக்கும் பொறுப்பும் உளளது. குடும்பத்தில் உள்ளவர்களுக்கான சமையல் வேலைகளை பார்ப்பதும் பெண்களின் பொறுப்பாக இருக்கிறது. இவ்வளவு வேலைகளை செய்யும் அனைத்து பெண்களுக்கும் ஒரு நாளைக்கு ஐந்து வேளையும் மசூதியில் சென்று தொழுவது சிரமமான காரியம். எனவேதான் மசூதிக்கு வர வசதியுடையவர்கள் வரட்டும். மற்றவர்கள் வீட்டிலேயே தொழட்டும் என்ற கட்டளை. ஆனால் ஆண்கள் கண்டிப்பாக பள்ளிக்கு செல்ல வேண்டும். இங்கு பெண்களின் வேலையின் தன்மையை அனுசரித்தே இந்த விலக்கு அளிக்கப்பட்டது. வேறு காரணங்கள் அல்ல.
@சுவனப்பிரியன்
ஒருவரது மொழியையும் ஒருவரது பிறப்பையும் இழிவாக பேசுவது வேறு. அது அவதூறு. ஒருவரது கொள்கையை விமர்சிப்பது வேறு. அது விமர்சனம். இரண்டையும் குழப்பிகொள்ளவேண்டாம்.
வர்ணாசிரமம் என்பது வேறு, தீண்டாமை என்பது வேறு. தீண்டாமை என்பது ராமாயணத்திலோ மகாபாரதத்திலோ இல்லை. இருந்தால் காட்டுங்கள். மனுதர்மத்தை எழுதியது பிராம்மணர்கள் அல்ல. எழுதியது மனு என்ற அரசர் (சத்திரியர்). இந்தியாவின் வரலாற்றை படித்து தெரிந்துகொள்வது தவறல்ல. படியுங்கள். திருகுறளில் இல்லை என்று சொல்கிறீர்களே? ஏன் தீண்டாமை கொடியது என்ற கண்டிப்பு கூட ஏன் திருக்குறளில் இல்லை? தீண்டாமை பற்றிய ரெபரன்ஸே சங்க இலக்கியத்திலோ ராமாயணத்திலோ இல்லாத போது அது எங்கிருந்து குதித்தது?
மீண்டும் சொல்வது நீங்கள் இந்தியாவின் வரலாற்றை படியுங்கள் என்பதுதான்.
அயீஷா போருக்கு சென்றதும் ஹஜ் யாத்திரைக்கு மற்றவர்கள் சென்றதும் இங்கே விவாதம் அல்ல. முஸ்லீம் பெண்கள் மசூதியில் சென்று தொழுவது இருக்கட்டும்? வீட்டுக்குள்ளேயே I know that you women love to pray with me, but praying in your inner rooms is better for you than praying in your house, and praying in your house is better for you that praying in your courtyard, and praying in your courtyard is better for you than praying in your local mosque,
வீட்டுக்குள்ளே கூட மிக உள்ளே இருக்கும் அறையில் பெண்ணை அடைத்துவைப்பதில் என்ன உரிமையும் அக்கறையும் இருக்கிறது?
இஸ்லாமிய சகோதரர்கள் பாகிஸ்தானிலும் ஆப்கனிஸ்தானிஸ்தனிலும் பெண்கள் பள்ளிக்கூடங்களுக்கு குண்டு வைத்து, பெண்கள் கல்விக்காகக் கூட வெளியே செல்லக்கூடாது என்று கூறுகிறார்கள். அங்கே சென்று உங்களது உபதேசங்களை கூறுங்கள். இங்கே பேசி என்ன பயன?
கார் ஓட்டும் முஸ்லீம் பெண்ணுக்கு 10 சவுக்கடிகள் தருகிறது சவுதி அரசாங்கம். அதுவும் கூட , அவர்கள் எங்கே காரை ஓட்டி இடித்துவிடுவார்களோ என்ற அக்கறையில்தான் அப்படி சவுக்கடி கொடுக்கிறது என்று நீங்கள் சொல்வீர்களா?
@சுவனப்பிரியன்,
தாழ்த்தப்பட்டவர்கள் பூசாரிகளாக இருக்கும் கோவில்கள் ஏராளம். தாழ்த்தப்பட்டவர்களே கட்டி, நடத்தும் கோவில்களில் அவர்கள் பூசாரிகளாக தொன்றுதொட்டு இருந்துவருகிறார்கள். இப்போது பல இந்திய மாநிலங்களில் (பீகார்) தலித்துகள் சிரீரங்கம் போன்ற பெரிய கோவில்களிலும் பூசாரிகளாக நியமிக்கப்பட்டு வருகிறார்கள். பெண்கள் பூசாரிகளாக இருக்கும் கோவில்கள் ஏராளம் (மாதா அமிர்தானந்தமயி பீடம் நடத்தும் கோவில்கள் போன்றவை, மேல்மருவத்தூர் அம்மன் கோவில்கள்)
ஆனால் பெண்கள் இமாமாக இருக்கக்கூடிய மசூதிகள் உண்டா?
http://islamqa.com/en/ref/9783
இஸ்லாமிய அறிவுரைகள் பக்கத்தில் இமாமாக ஒரு பெண் இருக்கமுடியாது என்று கூறுகிறது.
பெண்கள் மசூதிக்கு வரலாம் என்றால், பெண்கள் இமாம்களாக இருப்பதும் சரி என்று கூறுவீர்களா?
எல்லாருமே அர்ச்சர்கர்களாகலாம் என்ற அரசாணைக்கெதிராக வழக்குத் தொடுத்திருப்பவர்கள் இந்துக்கள்தானே ?
இசுமாமிலோ கிருத்துவத்திலோ இன்ன ஜாதியினர்தான் குருக்களாக இருக்கவேண்டும் என்ற ஆணை ஏதாவது இருக்கிறதா ? அதை எதிர்த்து அவர்கள் வழக்குப் போட்டிருக்கின்றனரா ?
The comment of Mr.Thangamani about creation of untouchablity by Muslims is unbelievable and atocious.Even if it is true also they are not the only culprits.
@தங்கமணி!
//வர்ணாசிரமம் என்பது வேறு, தீண்டாமை என்பது வேறு. தீண்டாமை என்பது ராமாயணத்திலோ மகாபாரதத்திலோ இல்லை. இருந்தால் காட்டுங்கள்.//
//தீண்டாமை பற்றிய ரெபரன்ஸே சங்க இலக்கியத்திலோ ராமாயணத்திலோ இல்லாத போது அது எங்கிருந்து குதித்தது?//
//மீண்டும் சொல்வது நீங்கள் இந்தியாவின் வரலாற்றை படியுங்கள் என்பதுதான்.//
முதலில் மகாபாரதத்தைப் பார்ப்போம்.
கர்ணன் வில் போட்டி அரங்கத்தில் பிரவேசிக்கும் கட்டத்தில், அவனது பிறப்பைச் சுட்டிக் காட்டி மறுப்பு தெரிவிக்கப் படுகிறது.. உடனே, ”தூணில் நரசிங்கம் தோன்றவில்லையா? நாணல் புதரில் கிருபர் என்ற முனிவர் பிறக்கவில்லையா…மீனவப் பெண்ணுக்கு வியாசர் மகனாகவில்லையா” என்று ஒரு பெரிய பட்டியலைக் கொடுத்து, பிறப்பு தகுதியைத் தீர்மானிப்பதில்லை என்று உபதேசிக்கப்படுகிறது. இங்கு சாதி வேற்றுமை பார்க்கப்படவில்லையா?
கர்ணனுக்கு ஜாதியால் மட்டுமே துரோணர் பயிற்சி தர மறுக்கிறார்.
மகாபாரதம் காட்டும் சமூகம் பிறப்பின் அடிப்படையிலான வர்ணம், ஏற்றத்தாழ்வு ஆகியவற்றை ஏற்றுக் கொண்ட சமூகம். இதற்கு உதாரணமாக ஏகலைவன் கதையை பார்ப்போம்.
ஏகலைவனுக்கும் கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆசை. அவன் படிக்க நினைத்த பாடத்தைக் கற்றுக் கொடுப்பதிலேயே மிகச்சிறந்த ஆசிரியன் துரோணன். வாத்தியாருக்கு ஊதியமும் சன்மானமும் தருவதற்கு வழியில்லாத மாணவன் ஏகலைவன் – ஏழை. அந்த வாத்தியாருக்கோ ராஜா விட்டுப் பிள்ளைகளெல்லாம் மாணவர்கள். வருமானத்தோடு மரியாதையையும் நிறைய சம்பாதிக்கும் அந்த வாத்தியாரிடம் ஏகலைவன் எப்படிப் பாடம் கற்றுக் கொள்ள முடியும்? எனவே அவரை ‘குரு’வாக்கிக் கொண்டு, அவர் சொல்லிக் கொடுப்பதை கற்பனை செய்து கொண்டு வித்தை பழகினான்.
மேலோட்டமாக இல்லாமல் மனதாரா விரும்பி, சிரத்தையோடு பழகியதால் வித்தையில் சிறப்பாகவும் தேர்ச்சி அடைந்தான். வாத்தியாருக்கு இது தெரிந்து விட்டது. ஏகலைவனிடம் உன் படிப்பிற்கு என் சம்பளம் வேண்டுமென்றார். தன்னிடம் இருக்கும் எதையும் தருகிறேன் என்கிறான் ஏகலைவன். ‘உன் கட்டை விரலைத் தா’ என்கிறான் துரோணன். குரு என்று மனதில் நம்பிவிட்டதால் தன் கட்டை விரலை வெட்டிக் கொடுத்தான் ஏகலைவன். அவன் கற்றது வில் வித்தை. கட்டை விரல் இல்லாமல் வில்லால் காற்றைக் கூட அடிக்க முடியாது. நமக்குச் சொல்லப்பட்ட கதை இதுதான். இந்த கதையிலிருந்து நீங்கள் விளங்கிக் கொள்வது என்ன? இங்கு சாதி வேற்றுமை தலைவிரித்தாடியதைத்தானே பார்க்கிறோம்!
இனி ராமாயணத்துக்கு வருவோம். சூர்ப்பநகையின் மூக்கை அறுத்தது ஒரு சூத்திரப் பெண் ராமனை மணக்க விரும்பியதே காரணமல்லவா? இதற்கு உங்கள் பதில் என்ன?
ஒருநாள் அரசர் இராமர் அரசவையில் அமர்ந்திருக்கும்போது, பார்ப்பனச் சேரியைச் சேர்ந்த சிலர் அங்கு வருகின்றனர். தங்கள் குழந்தை ஒன்று திடீரென இறந்து விட்டதாகவும், சம்பூகன் என்னும் ஒரு சூத்திரன் அருகிலுள்ள வனம் ஒன்றில் தவம் மேற்கொண்டிருப்பதே அதற்குக் காரணமாக இருக்கக்கூடும் என்றும் கூறுகின்றனர்.
அதைக்கேட்ட இராமர் மிகுந்த சினம் கொள்கின்றார். ‘சூத்திரன் ஒருவன், பிராமணர்களுக்கு உரிய தருமமான தவத்தை மேற்கொள்வதா? என் ஆட்சியில் இப்படி ஓர் அவச் செயலா’ எனச் சொல்லி, ‘வாருங்கள், அவன் தவம் செய்யும் காட்சியைக் காண நானே நேரில் வருகிறேன்’ என்று புறப்படுகின்றார்.
அவர்கள் அந்த இடத்திற்கு இராமரை அழைத்துச் செல்கின்றனர். அங்கே சம்பூகன் தவம் செய்யும் காட்சியை அவரே நேரடியாகக் காண்கின்றார்.
சம்பூகனைப் பார்த்து, ”தவத்தில் ஈடுபட்டிருக்கும் ஒருவன் வாய்மை தவறக் கூடாது. சொல், நீ எந்த வருணத்தைச் சேர்ந்தவன்” என்று கேட்க, தான் ஒரு சூத்திரன் என்று விடை பகர்கின்றான்.
உடனே தன் வாளை உருவிய இராமர், அந்த இடத்திலேயே அவன் தலையைக் கொய்து விடுகிறார். சம்பூகளைக் கொன்று, வருணாசிரமதர்மத்தைக் காப்பாற்றி விடுகிறார்.
-வால்மீகி ராமாயணம்
ராமாயணத்திலும் மகாபாரதத்திலும் வருண பேதத்தை காட்டுங்கள் என்று நீங்கள் கேட்டதாலேயே எடுத்து தருகிறேன். எனது புரிதலில் ஏதும் தவறுகள் இருந்தால் சுட்டிக் காட்டுங்கள்.
@சுவனப்பிரியன்,
தீண்டாமை?
//வர்ணாசிரமம் என்பது வேறு, தீண்டாமை என்பது வேறு. தீண்டாமை என்பது ராமாயணத்திலோ மகாபாரதத்திலோ இல்லை. இருந்தால் காட்டுங்கள்.//
நீங்கள் காட்டியிருக்கும் உதாரணங்களில் எங்கே தீண்டாமை இருக்கிறது?
சொல்லப்போனால், சாதி வேறுபாடுக்கான எதிர்ப்புணர்வுதான் அங்கே மகாபாரதத்தில் காட்டப்படுகிறது.
ராமாயணம் வேறொரு யுகத்தில் நடந்ததாக சொல்லப்படுகிறது.மகாபாரதம் பின்னால் நடக்கிறது. அங்கே சாதி வேறுபாடு எதிர்க்கபடுகிறது.
ஆனால் ஒரு இடத்திலும் தீண்டாமை வலியுறுத்தப்படவில்லை.
மற்றபடிக்கு நான் இங்கே கொடுத்திருக்கும் மற்ற செய்திகளை உதாசீனம் செய்துவிட்டீர்க்ளா?
இஸ்லாமில் ஏற்றத்தாழ்வு உண்டா என்று தேடியதில் ஒரு சகோதரர் வினவு பக்கத்தில் எழுதியதை காட்டுகிறேன்.
http://www.vinavu.com/2009/11/11/casteism-in-islam/
following are not suitable matches for one another:
1- a non-Arab man for an Arab woman (O: because of the hadith that the Prophet (Allah bless him and give him peace) said,
“Allah has chosen the Arabs above others”)
–
Fiqhul Ibadat, version 1.04 – Hajja Durriah Aitah
PART THREE >> THE BOOK OF PRAYER >> Congregational prayer (JAMA’A) >> THE FRIDAY PRAYER (JUMU’A) >> The conditions for the two khutbas
[…]
8- That the two khutbas be in Arabic, if there is an Arab in the congregation, otherwise, it is valid for it not be in Arabic except the Quran which must be in Arabic. (pa: 238)
One person of the congregation, at least, must learn Arabic, for if not, all are sinful and their Friday prayer is not valid with the ability of one of them to learn.
[…]
“I want them to profess a single creed by which the Arabs will accept them as their leaders (tudina lahum biha) and the non-Arabs will pay them jizya.”
cited from Ibn Hanbal, Musnad, I, 227.-2.
Muhammad, quoted in Tabari:
“I summon them to utter a saying through which the Arabs will submit to them and they will rule over the non-Arabs.”
Arabs preferred over other nations
http://qa.sunnipath.com/issue_view.asp?HD=7&ID=9427&CATE=1
இஸ்லாமில் அனைவரும் சேரலாம். அல்லாஹ் உலக மக்களில் மற்றவர்களை விட அரபுகளை உயர்த்தினான்.
அரபுகளில் கினானாவை உயர்த்தினார். கினானாக்களில் குறேஷியினரை உயர்த்தினான். குறேஷிகளில் பானு ஹாஷிமை உயர்த்தினான்.
குறேஷியினரே ஆளத்தகுதியானவர்கள் என்றே அறிவித்துள்ளார் நபிகள் நாயகம்(ஸல்) காலிபாக்களும், வமிசங்களும் அனைவரும் குறேஷிகளே. இதனை எந்த இஸ்லாமியரும் மறுத்ததில்லை. நீங்கள் ஏன் மறுக்கிறீர்கள்?
ஆகையால் இஸ்லாமில் சேர்பவர்கள் உடனே அரபுகளுக்கு தாங்கள் சமமானவர்கள் என கருதுவது ஆகுமானதல்ல. ஆணும் பெண்ணும் சமமாவார்களா? அடிமையும் அரபும் சமமாவார்களா? தமிழும் அரபு மொழியும் சமமாகுமா?
அரபி மொழி அல்லாஹ் நமக்கு வழங்கிய அருள் மறை குர்ஆனின் மொழி இன்னும்
சுவர்க்கத்தின் மொழியும் இதுவே.
சுவர்க்கத்தில் தமிழில் பேசவியலாது.
=-=
புஹாரி.7139. அறிவித்தவர்: முஹம்மது இப்னு ஜூபைர் இப்னி முத்யிம். நான் குரைஷியரின் தூதுக் குழுவில் ஒருவனாக முஆவியா அவர்களிடம் இருந்தபோது அவர்களுக்கு, அப்துல்லாஹ் இப்னு அம்ர் அவர்கள், விரைவில் கஹ்தான் குலத்திலிருந்து அரசர் ஒருவர் தோன்றுவார்’ என அறிவிப்பதாகச் செய்தி எட்டியது. உடனே அவர்கள் கோபம் கொன்டு எழுந்து நின்று அல்லாஹ்வை அவனுடைய தகுதிக்கேற்ப போற்றிப் புகழ்ந்துவிட்டுக் கூறினார்கள். இறைவனை துதித்த பின் கூறுகிறேன்: உங்களில் சிலபேர் அல்லாஹ்வின் வேதத்திலும் இல்லாத இறைத்தூதர் அவர்களிடமிருந்து அறிவிக்கவும் படாத செய்திகளைச் சொல்கிறார்கள் என்று எனக்குத் தகவல் கிடைத்துள்ளது. அவர்கள் உங்களிடையே அறிவீனர்கள் ஆவர். நீங்கள் உங்களை வழிதவறச் செய்கிற வெற்று நம்பிக்கைகளை வளர்த்துக்கொள்ள வேண்டாம் என எச்சரிக்கிறேன். ஏனெனில், இறைத்தூதர் அவர்கள் ‘குறைஷியரிடையே தான் இந்த ஆட்சி அதிகாரம் இருந்துவரும். அவர்களைப் பகைத்துக் கொள்ளும் எவரையும் அல்லாஹ் முகம் குப்பறக் கவிழ்க்காமல் விடமாட்டான். அவர்கள் மார்க்கத்தை நிலைநாட்டிவரும் வரை இந்நிலை நீடிக்கும் என்றார்கள். புஹாரி. 7140. இறைத்தூதர் அவர்கள் கூறினார்கள்’ இந்த ஆட்சியதிகாரம் குறைஷியரிடையே தான் இருந்துவரும்; அவர்களில் இருவர் எஞ்சியிருக்கும் வரை. என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
==
ஒவ்வொரு தக்பீரிலும் குரேஷிகளையும், முகம்மது நபியின் குடும்பத்தினரையும் அவரது வம்சாவளியான சையது சாதியையும் போற்றித்தானே பாடுகிறீர்கள்?
@தங்கமணி!
தீண்டாமை இஸ்லாத்தில் உள்ளதா என்பதை குர்ஆனிலிருந்து எடுத்துக் காட்டுங்கள். நீங்கள் எடுத்துக்காட்டிய ஹதீதுகள் அனைத்தும் அறிவிப்பாளர்கள் தொடர் விடுபட்ட ஹதீதுகள். இஸ்லாமிய எதிரிகளால் முகமது நபி பெயரால் கற்பனையாக புனையப்பட்டவை. இவற்றை எல்லாம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இஸ்லாமிய சமூகம் ஒதுக்கி விட்டது.
மனிதர்கள் அனைவரின் மூதாதையரும் ஒருவரே என்று குர்ஆன் கூறியிருக்க அதற்கு மாற்றமாக முகமது நபி எவ்வாறு சொல்ல முடியும். இந்த ஒரு வசனத்திலேயே அனைத்து ஏற்றத்தாழ்வுகளும் அடிபட்டு போகின்றன.
இஸ்லாமில் தீண்டத்தகாதவை எவை?
(இஸ்லாமை நம்பாதவனும் தீண்டத்தகாதவன். அவனது வேர்வையும் தீண்டத்தகாதது)
http://www.imamreza.net/eng/imamreza.php?id=4076
Therefore, if and when the Muslim should come in contact with any of these animals or substances, they must observe the rules governing impure (najes) and pure (taher), especially before they prepare to say their daily prayers.
According to Muslim beliefs, impure things are divided into eleven categories:
1) urine 2) feces 3) sperm 4) corpse 5) blood
6) dog 7) pig 8) unbelievers 9) liquor 10) wine
11) the sweat of those who eat impure things
The blood, urine and feces of humans and every animal that eats meat is impure.
Perhaps it can even be said that it is self-explanatory why urine, feces, sperm, a dead body and blood are impure. In the human kingdom, these have particular offensive natures, not to mention the presence of bacteria in them.
http://islamic-laws.com/tawzeh/najisthings.htm
NAJIS THINGS
Introduction
Urine & farces
Semen
Dead body
Blood
Dogs & pigs
Kafir
Alcoholic liquor
Beer (Fuqi)
Sweat of animal who persistently eats Najasat
Ways of proving Najasat
How a pak things becomes Najis
Rules regarding Najasat
http://www.al-islam.org/laws/najisthings.html
காபிர்கள் தீண்டத்தாகதவர்கள் என்ற கருத்துருவத்தை இந்தியாவுக்கு கொண்டுவந்தவர்களே முஸ்லீம்கள்தான். அதனால்தான் அதனை உறுதிப்படுத்த தங்களிடம் தோற்ற வீரப்பரம்பரையை தாழ்த்தி மலம் அள்ள வைத்தார்கள். மனிதர் மலத்தை மனிதர் அள்ளுவது என்பதே இந்தியாவில் இருந்திருந்திராத ஒரு பழக்கம். மன்னர்கள் கூட கொல்லைக்குத்தான் போய்கொண்டிருந்தார்கள். அதனால்தான் இன்றும் கொல்லைக்கு போவது என்பது மலம் கழிக்க செல்லுவதை குறிக்க பயன்படுத்தப்படுகிறது.
தீண்டாமை என்பதை தன் அடி ஆழத்தில் கொண்டது இஸ்லாம். காபிர்களை தீண்டத்தகாதவர்கள் என்பதனால்தான் வீட்டுக்குள் பூட்டி வைத்த பெண்களுக்கு மலம் கழிக்க வீட்டுக்குள்ளேயே கழிப்பறை கட்டினார்கள். அதனை எடுக்க தோற்ற வீரப்பரம்பரையை பணித்தார்கள். அதன மூலம் தங்களிடம் தோற்ற வீரர்களை இழிவு செய்தார்கள்.
இந்தியாவின் உண்மையான வரலாற்றை படிப்பதும் பேசுவதும் இந்தியாவில் தடைசெய்யப்பட்ட ஒன்று. கம்யூனிஸ இஸ்லாமிய ஆதரவாளர்களான ரோமிலா தாப்பர் போன்றோர் இந்திய வரலாற்றை நேருவின் கட்டளையால் திரித்து பிரச்சாரம் செய்து வருகிறார்கள். உண்மையான வர்லாறு இவ்வாறு தாழ்த்தப்பட்டவர்களிட்மிருந்தும் மறைக்கபட்டிருக்கிறது.
தங்கமணி!
நான் முன்பே குறிப்பிட்டது போல் ராமாயணம் மகாபாரதம் போன்ற இந்து மத வேதங்களிலிருந்தும் இதிகாசங்களிலிருந்தும் மேற்கோள் காட்டினேனே அதுபோல் குர்ஆனிலிருந்து மேற்கோள் காட்டுங்கள் என்றுதான் உங்களை கேட்கிறேன்.
ஹதீதுகளின் நம்பகத் தன்மை பற்றி ஏற்கெனவே நான் கூறியிருக்கிறேன். குர்ஆனுக்கு மாற்றமாக வரும் ஹதீதுகள் அனைத்தும் எதிரிகளால் புனைந்துரைக்கப்பட்டவை. அவற்றை இஸ்லாமிய உலகம் புறந்தள்ளி விட்டது.
//எல்லாருமே அர்ச்சர்கர்களாகலாம் என்ற அரசாணைக்கெதிராக வழக்குத் தொடுத்திருப்பவர்கள் இந்துக்கள்தானே ?
இசுமாமிலோ கிருத்துவத்திலோ இன்ன ஜாதியினர்தான் குருக்களாக இருக்கவேண்டும் என்ற ஆணை ஏதாவது இருக்கிறதா ? அதை எதிர்த்து அவர்கள் வழக்குப் போட்டிருக்கின்றனரா ?//
காவ்யாவின் இந்த கேள்விக்கும் தங்கமணியிடமிருந்து பதில் இல்லை..
//ஆனால் பெண்கள் இமாமாக இருக்கக்கூடிய மசூதிகள் உண்டா?//
காலைத் தொழுகைக்காக அதிகாலைக்கு முன்பே நான்கு மணி அளவில் முதல் ஆளாக பள்ளிக்கு சென்று பள்ளியை திறந்து பாங்கு கொடுக்க வேண்டும். இதை ஒரு பெண்ணால் அனைத்து ஊர்களிலும் செய்ய முடியுமா? அடுத்து மாதவிடாய் போன்ற நேரங்களில் அவர்களால் தொழுகை போன்ற செயல்களை செய்ய முடியாது. பிரசவ காலங்களில் அவர்களால் பள்ளிக்கு வர முடியாது. குழந்தை பிறந்தும் இரண்டு வருடம் வரையில் குழந்தையை தனியே விடுவது நடைமுறைக்கு ஒவ்வாதது. எனவே உடற்கூறு காரணங்களால்தான் பெண்கள் இமாமாக நியமிக்கப்படுவதில்லை.
இவ்வளவு பரந்த இந்தியாவில் பல ஆயிரக்கணக்கான சாமியார்கள் உள்ள இந்து மதத்தில் மாதா அமிர்தானந்தமயி என்ற ஒரே ஒரு பெண்ணத்தான் உங்களால் காட்ட முடிகிறது. அந்த பெண்ணையும் இந்துக்களில் பாதிக்கு மேற்பட்டோர் ஒத்துக் கொள்வதில்லை. எனவே இந்த மதத்திலும் இதே நிலைதான்.
என்னது அமிர்தானந்தமயியை இந்துக்களில் பாதிக்கு மேற்பட்டோர் ஒப்புகொள்வதில்லையா? எங்கே படித்தீர்கள்?
தீண்டாமை பற்றி குரானில்தான் இருக்கிறது. மேற்கண்ட பதிவுகளில் போய் நன்றாக படித்து பார்க்கவும்.
முகம்மது நபி உடற்கூறு காரணங்களால் பெண்கள் இமாமாக நியமிக்கப்படுவதில்லை என்று கூறியிருக்கிறாரா? அல்லது நீங்கள் நம்பும் குரானில் உள்ளதா? இதே மாதிரி ஆண்களும் வீட்டுக்கு உழைத்து சம்பாதித்து போட வெளியே செல்லவேண்டியிருக்கிறது, ஐவேளை தொழுகை சரிப்படாது. அவர்கள் மசூதிக்கும் வரவேண்டியதில்லை. பெண்களுக்கு வீட்டு வேலை முடித்து நிறைய நேரம் இருக்கிறது . ஆகவே அவர்கள் மட்டுமே மசூதிக்கு வரலாம் என்று சட்டம் வைத்தாலும் வாதிட நன்றாக்த்தானே இருக்கும்?
என்னிடம் குரான் ஆதாரம் கேட்கும்போது, நீங்களும் உங்களது குரானிலிருந்துதானே ஆதாரம் தரவேண்டும்? ஹதீஸ் எல்லாவற்றையும் ஒப்புகொள்வதில்லையா? அல்லது உங்களுக்கு வசதிப்படாத ஹதீஸ்களை மட்டும் ஒப்புகொள்வதில்லையா? அப்படி ஒப்புகொள்ளாத ஹதீஸ்களை நீக்கிவிட்டோம் அவற்றை புத்தகத்திலிருந்து எடுத்துவிட்டும் என்று அறிவித்து புத்தகம் போட வேண்டியதுதானே? அவற்றை வைத்துகொண்டே தேவைப்படும்போது செல்லாது என்று எங்களிடம் கூறிகொள்வது ஏன்?
குரானிலேயே குரானுக்கு மாற்றாக வரும் வசனங்களும் எதிரிகளால் புனைந்துரைக்கப்பட்டவையா? மன்சுக் நாஸிக் என்று நீக்கிய் வசனம், நீக்கப்படும் வசனம் என்றெல்லாம் வைத்துகொள்கிறீர்களே? அவற்றையும் வசதி போல பயன்படுத்திகொள்வீர்களா?
@சுவனப்பிரியன்
//
நான் முன்பே குறிப்பிட்டது போல் ராமாயணம் மகாபாரதம் போன்ற இந்து மத வேதங்களிலிருந்தும் இதிகாசங்களிலிருந்தும் மேற்கோள் காட்டினேனே அதுபோல் குர்ஆனிலிருந்து மேற்கோள் காட்டுங்கள் என்றுதான் உங்களை கேட்கிறேன்.
//
ராமாயணம் மகாபாரதம் வேதங்கள் அல்ல.
ஹதீஸை நீங்கள் ஒப்புகொள்ளவில்லை என்று குரானிலிருந்து மட்டுமே ஆதாரம் காட்ட வேண்டும் என்று சொன்னால் நீங்களும்
ரிக் யஜூர் சாம அதர்வண வேதங்களிலிருந்து மட்டுமே தீண்டாமை, சாதி ஆகியவற்றுக்கு ஆதாரங்களை சமர்பிக்க வேண்டும்.
அமிர்தானந்தமயி மட்டுமன்று! எந்தச் சாமியார், சாமியாரினிக்கும் ஒரு குறிப்பிட்ட தொண்டர் கூட்டம் மட்டுமே உண்டு.
காஞ்சி சங்கராச்சாரியரை ஏற்றுக்கொள்பவர்கள் தமிழ்நாட்டு ஐயர்கள் மட்டுமே. பிறர் இருக்கலாம். அவர்கள் எண்ணிக்கையில் மிகக்குறைவு.
பங்காரு பார்ப்பனரல்லாத் தமிழர்களிடையே மட்டுமே பிரபலம். ஆனால் அனைத்துத் தமிழர்களிடமும் கிடையாது.
கல்கி ‘பகவான்’ ஆந்திராவில் பிரபலம். தமிழ்நாட்டில் ஒரு சிறிய கூட்டம்.
எத்தனை இந்துக்களுக்கு எத்தனை ஜீயர்கள் இருக்கிறார்கள் என்று தெரியும்? முதலில் ஜீயர்கள் என்றால் யார் என்றுதான் கேட்பார்கள்.
‘சுவாமி ராம்தேவை’ எதிர்ப்பவர்கள் இந்துக்கள் மட்டுமல்ல. இந்துச்சாமியார்களும் உண்டு. இப்படியிருக்க, இங்கு ராவ்தேவை இந்துக்களில் ஒரு சிலரே ஏற்றுக் கொள்கின்றனர் என்றால், தங்கமணி மறுப்பார். பொய் சொன்னாலும் பொருத்தமாகத்தான் சொல்லவேண்டும் நித்தியானந்தாவை எல்லா இந்துக்களும் ஏற்றுக்கொள்கின்றனர் என்றும் சொல்வீர்களா ?
கேரளாவிலேயே அமிர்தான்ந்தமயி அனைத்து இந்துக்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அதற்கு ஒரு முக்கிய காரணமும் உண்டு அவர் ஒரு மீனவப்பெண். முக்குவர். தலித்து.
என்று தோன்றியதோ அன்றிலிருந்தே விமர்சனத்துக்குள்ளாகியே வந்துள்ளது இந்து மதம். இந்துக்கள் போற்றும் பகவத் கீதையிலே கண்ணனே மக்களை நான்காகப்பிரித்தேன் என்று சொல்ல வைதீக இந்துக்கள் வருணப்பிரிவுகளை நம்பினார்கள். அதன்படி முதல்வருணம் பிராமணர். இவருக்கும், வைசியர்க்கும், சத்திரியருக்கும் நலமாக வாழ சேவை செய்பவனே சூத்திரன் எனப்படுவான். இந்த வருணத்துக்கு அப்பால்பட்ட ஊருக்கு வெளியே வைக்கப்பட்டவன் தலித்து.
இதனால் இந்து மதம் பிரச்சினைக்குள்ளாகியது. அன்று முதல் இன்று வரை ஏராளம் இந்துக்களாலேயே எழுதப்பட்டும் பேசப்பட்டும் வந்தது; வருகிறது. ஆனால் இவர்கள் திருந்தியபாடில்லை. வருணத்தை மலர்மன்னன் போன்றோர் உயர்த்திப் பிடிக்கிறார்கள். இவர்கள் எவ்வளவுதான் அடிபட்டாலும் வடிவேலுதான். வலிக்கவே வலிக்காது
கிடக்கட்டும். இராமானுஜரே இந்த தலித்துகளுக்காக மதச்சடங்குகளையும் கொள்கைகளையும் மாற்றினார் என்னும்போது, தங்கமணி புனைகதைகளை எழுதிவருகிறார். இந்து மதத்தில் தீண்டாமையே இல்லையாம்!
லோகசாரங்க முனிவர் ஏன் திருப்பாணரைக்கண்டாலே தீட்டு என்றார் ? முகலாய மன்னர்கள் சொல்லிக் கொடுத்தார்களா ? ஏன் தமிழ்ப்பார்ப்பனர்கள், நம்மாழ்வார் சூத்திரர்; அவர் பாடல்களுக்குத் தெய்வத்தன்மை கிடையாது என்றார்கள் ? ஏன் திருமழிசையாழ்வாருக்கு மரியாதை செய்ய வேள்விப்பார்ப்பனர்கள் மறுத்தார்கள்? முசுலிம்கள் சொல்லிச் செய்தார்களா ? பக்தி இயக்கத்தில் எழுந்த இந்து புனிதர்கள் ஏன் தீண்டாமையை எதிர்த்து எழுதினார்கள்? ஏக்நாத், ராம்தேவ், துக்காராம் பாடல்களைப் படிக்கவும். அவர்களெல்லாம் முசுலீகளால் தூண்டப்பட்டனரா ? பக்தி இயக்கம் முகலாய மன்னர்கள் காலத்தில்தான் நடந்த்து. ஜெகசீவன்ராம் வந்து போனபின், ஏன் பெனாரஸ் பல்கலைக்கழக இந்து மாணவர்கள் அவர் நின்ற இடத்தைச் சுத்தம் செய்து பரிகார பூஜை நடாத்தினார்கள் ? முசுலீம்கள் சொல்லிச் செய்தார்களா ?
மலம் அள்ளுவது என்பது தீண்டாமை அன்று. அவனைக்காண்பதே தீட்டு என்றும் அப்படிக்கண்டால் வீட்டில் குளித்து சுத்திப்பரிகாரம் பண்ணுவதுமே தீண்டாமை ஆகும். மலம் அள்ளுபவன் தான் விரும்பினால் விட்டுவிட்டு வேறவேலைக்குச்செல்ல்லாம்.. தலித்தை விட்டுத்தள்ளுங்கள். திருக்கச்சி நம்பிகள் ஒரு மூன்றாவது வருணத்தார். சூத்திர்ர் கூட கிடையாது. அவர் வந்து போனபின், வீட்டைக்கழுவிவிட்டு, தானும் குளித்தார் தஞ்சம்மாள். இராமானுஜரியரின் பாரியாள். ‘ஏன் இப்படிச்செய்கிறாய்?’ என்று கேட்டதற்கு, வீடு மாசுபட்டு விட்டது திருக்கச்சி நம்பிகள் வருகையால்’ எனவெ பரிகாரம் பண்ணி குளிக்கிறேன் என்றார் அவர். இன்னிகழ்ச்சிய்தானே இராமனுஜரை சன்னியாசம் ஏற்க வைத்தது? தஞ்சம்மாள் ஒன்றும் ஒரிஜலனாகச் செய்யவில்லை. அவருக்கு எது கற்றுக்கொடுக்கப்பட்ட்தோ அதைச்செய்தார்! யாரவர்கள் ? தீண்டாமை இல்லையென்ற பொய் எதற்கு? திண்ணை வாசகர்கள் என்ன குழந்தைகளா ?
இன்று அப்படிப்பட்ட தீண்டாமையை வாழ்க்கையில் கடைபிடிக்காத காரணம், அயல் நாட்டு கலாச்சாரமே. எல்லாரும் பிறப்பால் சம்ம் என்பது வெள்ளைக்காரனின் தற்காலக்கொள்கை. போடும் சூட்டிலிருந்து எழுதும் கண்ணி வரை அவன் சொல்லித்தந்து அவனின் கொள்கைக்கலாச்சாரம் தாக்கியதால், இன்று வைதீக இந்துக்கள் அவர்கள் மதம் சொன்னபடி வாழ யோசிக்கிறார்கள். அதற்காக தலித்துக்கள் வெள்ளைக்காரனுக்குத்தான் நன்றி சொல்லவேண்டும். இந்து மதம் அப்படியேதான் இருக்கிறது. எழுத்தில்
தலித்து அடையாளத்தை இந்து மதம் மாற்றாது. தலித்து பிராமணன் ஆக முடியாது. சும்மா வாதத்துக்கு எவரும் ஆகலாம் என சமாளிக்கலாம். ஆனால், பிராமணன் தவறு செய்தால் அவன் பிராயச்சித்தத்தால் தன் பிராமணத்தன்மை பெறலாம். எவ்வளவுதான் யோக்கியனாக இருந்தாலும் தலித்து பிராமணன் ஆக முடியாது.
அதன்படி, சாமிநாதன், மலர்மன்னன், தங்கமணி, களிமிகு கணபதி – இவர்கள் போன்ற பிராமணர்கள், அறவோர். திருப்பாணாற்றாழ்வரை விட உயர்ந்தவர்கள் பிறப்பால்.
What a nonsense it is ! கழுதையைத் தூக்கிக் கோபுரத்திலும் குதிரையைத்தூக்கி குப்பையிலும் ? கோப்ப்படாதீர்கள். Dont shoot the messenger. I am just carryuing the message Hindu religion gave me. இந்து மதம் அதைச்செய்யச் சொல்கிறது என்கிறேன். அல்லது சொன்னதாக நம்பி வாழ்ந்தார்கள். இன்னும் வாழ்கிறார்கள்.
Let Thangmani continue with his imaginary tales.
காவ்யா அவர்களுக்கு,பிறப்பால் பிராமணனாக பிறந்த மதுரகவி ஆழ்வார் நாராயணனை பாடாமல் தன்னிலும் இளையவரான பிராமணரல்லாத நம்மாழ்வாரை போற்றி கண்ணிநுண் சிறுத்தாம்பு பாடினார்.நமது மதத்தின் குறைகளுக்கு எல்லா பிராமணர்களையும் காரணமாக்க முடியுமா என்பது என் கேள்வி. அதே சமயத்தில் தென்னாசாரிய சம்ப்ரதாயத்தை அனுசரிக்கும் வைணவ பிராமணர்கள்[தென்கலை அய்யங்கார்கள்}எத்தனைபேர் இராமானுசரை தங்கள் ஆசாரியனாக மனதார ஒப்புகொள்கிறார்கள்.
//கேரளாவிலேயே அமிர்தான்ந்தமயி அனைத்து இந்துக்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.//
“அரேபியாவில்கூட இப்போதும் அனைத்து இஸ்லாமியர்களும் முகமதுவை ஏற்றுக்கொள்வதில்லை” என்று சொல்வதில் எவ்வளவு உண்மை இருக்குமோ அவ்வளவு உண்மை மேலே சொன்னதிலும் இருக்கிறது.
.
காவ்யா!
//….இந்து மதம் அப்படியேதான் இருக்கிறது. எழுத்தில்
தலித்து அடையாளத்தை இந்து மதம் மாற்றாது. தலித்து பிராமணன் ஆக முடியாது. சும்மா வாதத்துக்கு எவரும் ஆகலாம் என சமாளிக்கலாம்…….//
ஆஹா…அருமை….அர்த்தமூட்டும் கேள்விகள். உங்களின் கேள்விகளுக்கு தங்கமணியும், களிமிகு கணபதி என்ன பதிலை தருகிறார்கள் என்று பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.
தங்கமணி!
//குரானிலிருந்து மட்டுமே ஆதாரம் காட்ட வேண்டும் என்று சொன்னால் நீங்களும்
ரிக் யஜூர் சாம அதர்வண வேதங்களிலிருந்து மட்டுமே தீண்டாமை, சாதி ஆகியவற்றுக்கு ஆதாரங்களை சமர்பிக்க வேண்டும்.//
ஏழை முஸ்லிமின வீடுகளில் கூட குறைந்த பட்சம் இரண்டு குர்ஆனோ, குர்ஆனின் மொழி பெயர்ப்போ இருக்கும்.
ஆனால் எத்தனை இந்துக்களின் வீட்டில் நீங்கள் குறிப்பிடும் ரிக்,யஜூர், சாம, அதர்வண வேதங்களைக் காட்ட முடியும். ஒன்றிரண்டு பிராமணர்கள் வீடுகளில் வேண்டுமானால் இருக்கலாம். அதிலும் தமிழில் மொழி பெயர்க்கப்படவில்லை. வேதங்களை உங்களிடமிருந்து இவ்வளவு தூரம் அந்நியமாக்கி விட்டு வேதத்திலிருந்து மேற்கோள் எப்படி காட்டச் சொல்கிறீர்கள்? இந்து மத வெதங்கள் மக்களிடமிருந்து அந்நியமானதே இததனை குளறுபடிகளுக்கும் காரணம். வேத வசனங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டால் தற்போதய இந்து மதம் காணாமல் போய்விடும் என்ற பயத்தினாலேயே சாமான்யனுக்கு வேதங்கள் கிடைப்பதில்லை.
களிமிகு கணபதி!
////கேரளாவிலேயே அமிர்தான்ந்தமயி அனைத்து இந்துக்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.//
“அரேபியாவில்கூட இப்போதும் அனைத்து இஸ்லாமியர்களும் முகமதுவை ஏற்றுக்கொள்வதில்லை” என்று சொல்வதில் எவ்வளவு உண்மை இருக்குமோ அவ்வளவு உண்மை மேலே சொன்னதிலும் இருக்கிறது.///
யாருக்கு யாரை உதாரணம் காட்டுகிறீர்கள். முகமது நபியின் சொல் செயல் அங்கீகாரத்தை முற்றும் முதலாக பின்பற்றக் கூடியவர்கள் அரபுகள். தமிழக முஸ்லிம்களிடத்திலே கூட தாய் தகப்பனுக்கு கட்டுப்படாத ஒரு முஸ்லிம் இளைஞன் முகமது நபியின் வார்த்தைக்கு உடன் கட்டுப்படுவான்.
ஆனால் கேரளாவைப் பொறுத்தவரை இந்துக்களில் பாதிக்கு மேல் கம்யூனிஸ்டுகளாகவும் நாத்திகர்களாகவும் ஆகி விட்டனர். இவர் மீனவப் பெண் என்பதால் உயர் குலத்தவரான நாயர்களும் இவர்களை ஒத்துக் கொள்வதில்லை. தமிழகத்தில் அதிக இந்துக்களுக்கு இவரின் பெயரையே சரியாக உச்சரிக்கத் தெரியாது. இதுதான் நிலைமை.
பொதுநல சேவை செய்வதால் நல்ல விஷயம் நடந்தால் பலரும் ஆதரிப்பார்கள். இதனை பக்திமார்க்கமாக நீங்கள் எடுத்துக் கொள்ளக் கூடாது.
@சுவனப்பிரியன்
இஸ்லாமை பற்றி நான் சொன்னதையும் கேட்டதையும் அம்போ என்று விட்டுவிட்டு இந்துக்கள் இந்து மதத்தை விமர்சிப்பதை வைத்து அதனை காப்பி பேஸ்ட் அடித்தே காலம் ஓட்டுகிறீர்களே? (இந்துக்கள் இந்துமதத்தை விமர்சிக்க அவர்களுக்கு நிறைய உரிமை இருக்கிறது. யாரும் அவர்கள் தலையை சீவப்போவதில்லை) இந்து மதத்தை பற்றி உங்களுக்கு என்ன அக்கறை? தீனுக்கும் வலியதீன் என்று ஏதோ சொல்வீர்களே. அது போல போங்கள்.
இஸ்லாமை பற்றி கேட்டதற்கு பதில் சொல்லுங்கள். பிறகு பார்க்கலாம். ஏனெனில் நான் இந்துமதத்தை பின்பற்ற சொல்லி நான் உங்களிடம் பிரச்சாரம் செய்யவில்லை. இஸ்லாமை பின்பற்ற சொல்லி நீங்கள் பிரச்சாரம் செய்கிறீர்கள். ஆகவே இஸ்லாமை பற்றிய கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்.
// தாய் தகப்பனுக்கு கட்டுப்படாத ஒரு முஸ்லிம் இளைஞன் முகமது நபியின் வார்த்தைக்கு உடன் கட்டுப்படுவான்.//
இதுதான் பிரச்னையின் ஆரம்பமே.
முகம்மது நபி சொன்னதாக அவனிடம் சொல்பவர்கள் உங்களை போன்ற பிரச்சாரவாதிகள். முன்னுக்கு பின் முரணாக இருக்கும் ஆயிரக்கணக்கான வசனங்களிலும் ஹதீஸ்களிலும் உங்களுக்கு வேலை ஆகக்கூடிய தேர்ந்தெடுத்த வசனங்களை வைத்து அல்லாஹ் சொன்னான். முகம்மது நபி சொன்னார் என்று அவனை உருவேற்ற இந்த பிம்பம் நன்றாக உதவும்.
இந்த ஹதிஸ் இப்படி இருக்கிறதே என்று கேட்டால், அது பொய்யான ஹதீஸ் என்று அவனிடம் சொல்லலாம். எங்களிடம் உண்மையான ஹதிஸ் என்று சொல்லலாம்.
kavya,
நான் சூத்திரர்கள் என்ற வர்ணாசிரமப்பிரிவு இருந்தது என்பதை மறுக்கவில்லை. ஆனால் அது தீண்டாமையாக இருந்ததா என்பதே நான் கேட்டது. மலம் அள்ளுவது என்பது எப்போது இந்தியாவுக்கு வந்தது? அதன் தொடர்ச்சியாக வந்த தீண்டாமை எப்போது இந்தியாவுக்கு வந்தது என்பதை தயவு செய்து ஆராய்ச்சி செய்து படித்துவிட்டு வந்து சொல்லுங்கள்.
//இந்துக்கள் போற்றும் பகவத் கீதையிலே கண்ணனே மக்களை நான்காகப்பிரித்தேன் என்று சொல்ல வைதீக இந்துக்கள் வருணப்பிரிவுகளை நம்பினார்கள்.// அரைகுறை அறிவு!
பகவத்கீதையில் இது எந்த இடத்தில் சொல்லப்படுகிறது என்று புரியவேண்டும். அர்ஜுனன் போரில் பலர் இறப்பதால், வர்ணக்கலப்பு நடந்துவிடுமே என்று அக்கறைபப்டுகிறான். அதற்கு கண்ணன் பதில் சொல்கிறான். நாந்தான் நான்காக பிரித்தேன். அவை அழிவதும் நான் செய்வதே என்று கூறுகிறான்.
சமூகவியல் ரீதியிலும் இது சரியானதே. தொடர்ந்து சாதியும் வர்ண்மும் சமூகவியலாக இந்தியாவில் இருந்தாலும் அதற்கு எதிரான குரல் இந்துமதத்திலிருந்தும் இந்து ஆச்சாரியார்களிடமிருந்தும் வந்துகொண்டே இருக்கிறது. சாதி என்பது இந்தியாவில் மட்டுமில்லை என்ற புரிதலும் வேண்டும். வர்ணாசிரமத்தை ஆரம்ப காலத்தில் ஆதரித்த காந்தி பிறகு சாதி அழியவேண்டும் என்ற நிலைப்பாட்டை நாராயணகுரு என்ற இந்து ஆச்சாரியரின் பேச்சுக்கு பின்னர் எடுக்கிறார்.
@சுவனப்பிரியன்
குரானில் இருக்கும் ஒரு வசனத்துக்கு வீடியோ விளக்கம் அளிக்கிறார் ஒரு சகோதரர்
குரான் வீடியோ விளக்கம்: ஈமான் கொண்டோரே! கொலைக்காக பழிதீர்ப்பது உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது-
2:178. ஈமான் கொண்டோரே! கொலைக்காகப் பழி தீர்ப்பது உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது- சுதந்திரமுடையவனுக்குச் சுதந்திரமுடையவன்; அடிமைக்கு அடிமை; பெண்ணுக்குப் பெண்
இது என்னவகையான நீதி என்று சுவனப்பிரியன் அவர்களே விளக்கலாம்.
வர்ணாஸ்ரம முறைக்கும் இன்றைய ஜாதி முறைக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. ஆங்கிலேயர் காலத்தில்தான் இது மிக மோசமாக சித்தரிக்கப்பட்டது . இதை வைத்து அரசியல் பண்ணும் நோக்கோடு மக்களை உசுப்பி விட்டு வேடிக்கை பார்க்கும் தலைவர்களை மக்கள் துரத்தி விட வேண்டும். உத்தாபுரத்தில் மக்களை சேரவிடாமல் செய்வதாக கம்யுனிஸ்ட் கட்சியினர் மீது பஞ்சயது தலைவர் கேஸ் போட்டுள்ளார்.
ஹிந்து சமுதாயத்தை பிளவு படுத்தும் வாதங்களைப்பற்றி மட்டும் படித்த காவ்யா போன்றவர்கள் ஹிந்து மதத்தைப் பற்றி ஒன்றுமே படிப்பதில்லை. இவர்களுக்கெல்லாம் பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க வேண்டாம்
தங்கமணி!
//2:178. ஈமான் கொண்டோரே! கொலைக்காகப் பழி தீர்ப்பது உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது- சுதந்திரமுடையவனுக்குச் சுதந்திரமுடையவன்; அடிமைக்கு அடிமை; பெண்ணுக்குப் பெண்//
//இது என்னவகையான நீதி என்று சுவனப்பிரியன் அவர்களே விளக்கலாம்.//
‘நம்பிக்கை கொண்டோரே! சுதந்திரமானவனுக்காக கொலை செய்த சுதந்திரமானவன், அடிமைக்காக கொலை செய்த அடிமை, பெண்ணுக்காக கொலை செய்த பெண், என்ற வகையில் கொல்லப்பட்டோருக்காக பழி வாங்குவது உங்களுக்குக் கடமையாக்கப்பட்டுள்ளது. கொலையாளிக்கு கொல்லப்பட்டவனின் வாரிசாகிய அவனது கொள்கை சகோதரன் மூலம் ஏதேனும் மன்னிக்கப்படுமானால் நல்ல விதமாக நடந்து அழகிய முறையில் நட்டஈடு அவனிடம் வழங்க வேண்டும். இது உங்கள் இறைவன் எளிதாக்கியதும் அருளுமாகும். இதன் பிறகு யாரேனும் வரம்பு மீறினால் அவருக்குத் துன்புறுத்தும் வேதனை உள்ளது’. – குர்ஆன் 2:178
இந்த வசனத்தில் என்ன தவறைக் கண்டீர்கள்? கொலையாளிகளைக் கொல்வதால் கொல்லப்பட்டவனின் உயிர் திரும்பி விடப் போவதில்லை. இழந்ததை மீட்பது தண்டனைகளின் நோக்கம் அல்ல. அப்படியானால் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டியதன் அவசியம் என்ன?
1. குற்றம் செய்தவனுக்கு வழங்கப்படும் தண்டனை மீண்டும் மீண்டும் குற்றம் புரிவதிலிருந்து அவனைத் தடுக்க வேண்டும்.
2. ஒரு குற்றவாளிக்கு வழங்கப்படும் தண்டனையைக் கண்டு மற்றவர்கள் குற்றம் செய்ய அஞ்ச வேண்டும்.
3.குற்றவாளியால் பாதிப்புக்கு உள்ளானவன் தனக்கு நீதி கிடைத்து விட்டதாக மன திருப்தி அடைய வேண்டும்.
இந்த மூன்று காரணங்களை உத்தேசித்தே மேற்கண்ட வசனம் இறங்கியது. தண்டனைகள் கடுமையாக இல்லாததால் நம் நாட்டில் ’50 முறை சைக்கிள் திருடியவர் 51 ஆவது முறையாக கைது’ என்றும் ‘கற்பழிப்பு வழக்கில் விடுதலையான நபர் புதிய கற்பழிப்பு வழக்கில் மீண்டும் சிறையில் அடைப்பு’ என்ற செய்திகளை தினமும் படிக்கிறோம். பாதிக்கப்பட்டவனின் மன நிலையில் இருந்து இந்த குர்ஆன் வசனத்தை அணுகிணீர்கள் என்றால் உங்களுக்கு வித்தியாசம் தோன்றாது.
அதே போல் மன்னிக்கும் உரிமையை பாதிக்கப்பட்டவனின் வாரிசுகளுக்கு வழங்குகிறது குர்ஆனின் சட்டம். ஆனால் நம் நாட்டிலோ தூக்கு தண்டனை கைதிகளை மன்னிக்கும் உரிமையை நமது ஜனாதிபதிக்கு கொடுத்து அழகு பார்க்கிறோம். யாரோ ஒரு குடும்பம் பாதிக்கப்பட்டதற்கு மன்னிக்கும் அதிகாரத்தை ஜனாதிபதி எப்படி எடுத்துக் கொள்ள முடியும்?
உலகிலேயே குற்றங்கள் குறைவாக நடப்பது அரேபிய நாடுகளில்தான். ஏனெனில் இங்கு குர்ஆன் கூறும் குற்றவியல் சட்டம் அமுல்படுத்தப்படுகிறது. பாசிச எல்.கே.அத்வானியே ‘நமது நாட்டுக்கு அரேபிய நாட்டு குற்றவியல் சட்டங்களைப் போல் வேண்டும்’ என்று உள்துறை அமைச்சராக இருந்த போது சொன்னதையும் ஞாபகப்படுத்திப் பாருங்கள்.
எனவே எக்காலத்துக்கும எல்லா நாட்டு மக்களுக்கும் பொருந்தக் கூடியதே குர்ஆனின் சட்டங்கள் என்பதை இதிலிருந்து நாம் அறியலாம்.
நமது நாட்டு குற்றவியல் சட்டத்தை வஞ்சப் புகழ்ச்சியால் எள்ளி நகையாடும் தினமலரின் சுட்டியைத் தருகிறேன். படித்து பரவசமடையுங்கள்.
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=348858
@சுவனப்பிரியன்
உங்களுக்கு அதன் மீதான விமர்சனம் புரியவில்லை. நான் கொடுத்த இணையப்பக்கத்தை பார்த்தீர்களா?
சுதந்திரமானவனுக்கு சுதந்திரமானவந்தான் தண்டிக்கப்படவேண்டும். அடிமைக்கு அடிமைதான் தண்டிக்கப்பட வேண்டும். பெண்ணுக்கு பெண் தான் தண்டிக்கப்பட வேண்டும் என்று சொல்கிறது.
உங்கள் மனைவியை ஒருவர் கொன்றுவிட்டால்,கொன்றவரின் மனைவியைத்தான் நீங்கள் கொல்ல வேண்டும். அந்த மனைவி என்ன தவறு செய்தார்? இவனுக்கு மனைவியாக இருந்ததா? அல்லது இஸ்லாமில் பிறந்ததா?
உங்களது அடிமையை ஒருவர் கொன்றுவிட்டால், கொலை செய்தவரது அடிமையைத்தான் நீங்கள் கொல்லவேண்டும். கொலை செய்தவரை கொல்லக்கூடாது.
மதம் உங்கள் கண்களை மறைக்கிறது.
@தங்கமணி!
//உங்கள் மனைவியை ஒருவர் கொன்றுவிட்டால்,கொன்றவரின் மனைவியைத்தான் நீங்கள் கொல்ல வேண்டும். அந்த மனைவி என்ன தவறு செய்தார்? இவனுக்கு மனைவியாக இருந்ததா? அல்லது இஸ்லாமில் பிறந்ததா?
உங்களது அடிமையை ஒருவர் கொன்றுவிட்டால், கொலை செய்தவரது அடிமையைத்தான் நீங்கள் கொல்லவேண்டும். கொலை செய்தவரை கொல்லக்கூடாது.//
பரவாயில்லையே! குர்ஆனின் வசனங்களை உங்கள் வசதிக்கு நன்றாக வளைக்கிறிர்களே!
‘இறைவன் தடை செய்துள்ள உயிர்க் கொலையை தக்க காரணமின்றி செய்யாதீர்கள். அநியாயமாகக் கொல்லப்பட்டோரின பொறுப்பாளருக்கு அதிகாரம் அளித்துள்ளோம். அவர் கொல்வதற்காக வரம்பு மீறிட வேண்டாம். அவர் உதவி செய்யப்பட்டவராவார்’
-குர்ஆன் 17:33
இங்கு இறைவன் ‘உயிர்க் கொலையை தக்க காரணமின்றி செய்யாதீர்கள்’ என்று கட்டளையிடுகிறான். உங்கள் வாதப்படி பார்த்தால் அநியாயமாக இந்த பிரச்னையில் சம்பந்தமே இல்லாத கொலை செய்தவனின் மகனையோ, தந்தையையோ கொல்ல வேண்டும். சிறிய குற்றத்தையே மிக கவனமாக கையாளும் குர்ஆன் அநியாயமாக பெரும் குற்றமான கொலையில் நீதி தவறி நடக்குமா?
குறிப்பிட்ட 2:178 வசனத்தில் மனிதர்களை இறைவன் ஆண்கள், அடிமைகள், பெண்கள் என்று மூன்றாக பிரித்து மூன்று சாராரிலும் கொலை செய்தவனை பழி வாங்குவது வாரிசுகளாகிய உங்களுக்கு கடமையாக்கப்பட்டுள்ளது என்று கூறுகிறான். அந்த வாரிசுகள் மன்னித்து நட்ட ஈடும் பெற்றுக் கொள்ளலாம் என்றும் கூறுகிறான்.
‘அறிவுடையோரே! பழிக்குப் பழி வாங்கும் சட்டத்தில் உங்களுக்கு வாழ்வு உள்ளது. இச்சட்டத்தினால் கொலை செய்வதிலிருந்து விலகிக் கொல்வீர்கள்’
-குர்ஆன் 2:179
இதற்கு அடுத்தாற்போல் வரும் வசனத்திலும் ‘கொலை செய்வதிலிருந்து விலகிக் கொல்வீர்கள்’ என்றும் இறைவன் கூறுகிறான். சம்பந்தமில்லாத மூன்றாமவனை நீங்கள் பழி தீர்த்துக் கொண்டால் சம்பந்தப்பட்ட மூன்றாமனின் வாரிசுகள் பழி தீர்க்க வர மாட்டார்களா? இது தொடர்கதையாகவல்லவா மாறும்.
முகமது நபி இஸ்லாத்தைப் பிரசாரம் செய்து 1400 வருடங்களுக்கு மேலாகியும் உலகில் எந்த முஸ்லிமும் நீங்கள் பொருள் கொண்டது போல் விளங்கிக் கொள்ளவில்லை. ‘கொலை செய்த சுதந்திரமானவன், கொலை செய்த அடிமை, கொலை செய்த பெண்’ என்ற ரீதியில்தான் சட்டங்கள் வகுக்கப்பட்டு இன்று வரை இஸ்லாமிய அரசுகளால் நிறைவேற்றப்படுகிறது. சவுதியிலும் இதே ரீதியில்தான் தண்டனை வழங்கப்படுகிறது.
குர்ஆன் உயர்ந்த இலக்கிய தரத்திலும் கவிதை நடையிலும் அருளப்பட்டதால் சில வாசகங்கள் மறைந்திருக்கும். அதனை மற்ற வசனங்களின் துணை கொண்டு புரிந்து கொள்ளலாம். குர்ஆனோடு நெருங்கிய தொடர்புடையவர்களுக்கு விளக்கம் பெறுவது மிக எளிது.
2545. மஃரூர் இப்னு சுவைத்(ரஹ்) அறிவித்தார்.
நான், அபூ தர் கிஃபாரீ(ரலி) ஒரு மேலங்கியை (தம் மீது) அணிந்தவர்களாக இருக்கும் நிலையில் அவர்களைக் கண்டேன். அப்போது அவர்களின் அடிமையும் ஒரு மேலங்கியை அணிந்திருந்தார். அதைப்பற்றி (இருவரும் ஒரே விதமான ஆடை அணிந்திருப்பது பற்றி) அபூ தர்(ரலி) அவர்களிடம் நாங்கள் கேட்டோம். அதற்கு அவர்கள் சொன்னார்கள்; நான் ஒருவரை (அவரின் தாயைக் குறிப்பிட்டு) ஏசிவிட்டேன்; அவர் நபி(ஸல்) அவர்களிடம் முறையிட்டார். நபி(ஸல்) அவர்கள் (என்னை நோக்கி) ‘இவரின் தாயாரைக் குறிப்பிட்டு நீர் குறை கூறினீரா?’ என்று கேட்டார்கள். பிறகு, ‘உங்கள் அடிமைகள் உங்கள் சகோதரர்கள் ஆவர். அவர்களை அல்லாஹ் உங்கள் ஆதிக்கத்தின் கீழ் ஒப்படைத்துள்ளான். எனவே, எவரின் ஆதிக்கத்தின் கீழ் அவரின் சகோதரர் இருக்கிறாரோ அவர், தன் சகோதரருக்கு, தான் உண்பதிலிருந்து உண்ணத் தரட்டும். தான் உடுத்துவதிலிருந்தே உடுத்தத் தரட்டும். அவர்களின் சக்திக்கு மீறிய வேலை பளுவை அவர்களின் மீது சுமத்தாதீர்கள். அப்படி அவர்களின் சக்திக்கு மீறிய வேலை பளுவை அவர்களின் மீது நீங்கள் சுமத்தினால் (அதை நிறைவேற்றிட) அவர்களுக்கு உதவுங்கள்” என்று கூறினார்கள்.
Volume :2 Book :49
மேற்கண்ட இந்த நபி மொழி அடிமைகள் கூட அந்த காலத்தில் எந்த அளவு கண்ணியப்படுத்தப்பட்டார்கள் என்பதை விளக்கும்.
@சுவனப்பிரியன்
மற்ற ஹதீஸ்கள் ஆகியவையோ மற்ற குரான் வசனங்களோ இங்கே எதற்கு? அவை இந்த வசனத்தை மன்சுக் ஆக நீக்கிவிட்டனவா? சொல்லுங்கள்.
2:178. ஈமான் கொண்டோரே! கொலைக்காகப் பழி தீர்ப்பது உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது- சுதந்திரமுடையவனுக்குச் சுதந்திரமுடையவன்; அடிமைக்கு அடிமை; பெண்ணுக்குப் பெண்
இதற்கு என்ன பொருள்? சுதந்திரமுடையவனுக்கு சுதந்திரமுடையன் கொல்லப்பட வேண்டும் என்றால், சுதந்திரமுடையவனை வேறொருவரின் அடிமை கொன்றால், அந்த அடிமையை கொல்ல வேண்டுமா? அல்லது சுதந்திரமுடையவனை கொல்ல வேண்டுமா? அடிமையை பழிதீர்த்தால், சுதந்திரமுடியவனுக்கு சுதந்திரமுடையவன் கொல்லப்பட வேண்டும் என்ற விதி எங்கே பின்பற்றப்படுகிறது? நஷ்ட ஈடு வேண்டாம் என்று சொல்லிவிட்ட சுதந்திரமுடையவனின் சகோதரன் யாரை கொல்ல வேண்டும்? கொலை செய்த அடிமையையா? அல்லது கொலை செய்த அடிமையின் முதலாளியையா? இந்த விதி எப்படித்தான் பின்பற்றப்பட்டது? கொலை செய்த அடிமையை கொன்றால், சுத்ந்திரமானவனுக்கு பதிலாக அடிமை கொல்லப்பட்டான் என்று ஆகும். அப்போது இந்த விதி மீறப்பட்டதா? அல்லது இந்த வசனம் மன்சுக் ஆக்கப்பட்டதா?
ஆனால் இந்த விதி இப்போதும் பாகிஸ்தானில் பின்பற்றப்படுகிறது.
முக்தரன் மாய் என்ற பெண்மணியின் மகன் வேறொரு ஜாதி பெண்ணோடு கள்ள உறவு வைத்திருந்தான் என்பதால் பழிக்குப் பழியாக முக்தரன் மாய் ஐந்து பேரால் கற்பழிக்கப்பட்டார். அது பெரிய பிரச்னையாக ஆனது. சென்று படித்து பாருங்கள்.
இருநாள் முன் பாரதிராஜாவின் பட பூஜை தேனியில் நடைபெற்றது. ஊரெங்கும் பல பேனர்கள், விழா காரணமின்றி தனியாக வைரமுத்துவிற்கு ”மூன்றாம் உலகப் போர் படைக்கும் உலகமகா கவியே – இவண் பிறமலைக் கள்ளர் சமுதயம் “ என்று வைக்கப்பட்டிருந்தது. வேற்று இன மணம் புரிந்த வைரமுத்து இதை விரும்பி ஏற்பாடு செய்ததாக கேள்விப்பட்டேன்… இது பற்றி காவ்யா மற்றும் பலர் என்ன நினைக்கிறார்கள் என தெரிய விழைகிறேன்…