மருத்துவக் கட்டுரை பெண்களுக்கு அடி வயிறு வலி

This entry is part 6 of 23 in the series 4 அக்டோபர் 2015

IntestineUrinre

பெண்களுக்கு அடி வயிறு வலித்தால் பல கோணங்களில் அதை ஆராய வேண்டியுள்ளது.

முதலில் வலியின்  தன்மைகள் குறித்து அவர்களிடம் கேட்டு அறிய வேண்டும். வலி எத்தனை நாட்களாக உள்ளது, எந்தப் பகுதியில் அதிகம் உள்ளது, எப்போது வருகிறது, என்ன செய்தால் கூடுகிறது, எப்போது குறைகிறது, வயிற்றுப்போக்கு உள்ளதா, வாந்தி உள்ளதா, மலச்சிக்கல் உள்ளதா, மாதவிலக்கு சரியாக வருகிறதா, பசி எடுக்கிறதா,மணமானதா , குழந்தைகள் உள்ளதா, வேறு நோய்கள் உள்ளதா என்பவைபற்றி மருத்துவர் கேட்டு தெரிந்துகொள்வார்.
பின்பு வயிற்றைப் பரிசோதித்துப் பார்ப்பார் . அழுத்தினால் வலி உள்ளதா என்று கேட்பார். உள்ளே கட்டிகள் உள்ளதா என்றும் ஆராய்வார்.
அடி வயிற்றுப் பகுதியில் சில முக்கிய உறுப்புகள் உள்ளன. அவற்றில் பிரச்னை உண்டானால் வலிக்கலாம்..
அனேகமாக எல்லா பெண்களுக்கும் மாதவிலக்கு காலத்தில் அடி வயிறு வலி உண்டாவது இயல்பு. இந்த வலி சிலருக்கு கடுமையாகவும் இருக்கும். சிலருக்கு மாதவிலக்கு வருமுன்பு வலிக்கும். சிலருக்கு அது வரும்போது வலிக்கும். சிலருக்கு அது முடிந்தபின்பும் வலிக்கலாம்.இந்த வலியால் சில பெண்கள் பணிக்கு செல்லவும் முடியாது. சிலருக்கு ஊசி தேவைப்படும். வேறு சிலருக்கு வலி குறைக்கும் மாத்திரைகள் தேவைப்படும்.
இனி அடி வயிறு வலிக்கான வேறு காரணங்களை ஆராய்வோம்.

* சிறுநீர் தொடர்புடைய வலி –  இது இரண்டு வகையானது. முதல் வகையில் சிறுநீரக கற்கள் உண்டாக்கும் வலி. அடுத்து சிறுநீரில் கிருமித் தொற்று உள்ளதால் உண்டாகும் வலி. இதை சிறுநீரில் அழுக்கு உள்ளது என்று மருத்துவர்கள் கூறுவதுண்டு.
* குடல் தொடர்புடைய வலி.
* கருப்பை , சினைப்பை , கரு வெளியேறும் குழாய் தொடர்புடைய வலி.

இனி இவை ஒவ்வொன்றயும் விரிவாகாக் காண்போம்.

* சிறுநீரகத் தொடர்புடைய அடி வயிறு வலி.
பெண்களுக்கு சிறுநீரில் கிருமிகள் தொற்று எளிதில் உண்டாகும். இது உண்டானால் சிறுநீர் கழிக்கும்போது எரிச்சலும் வலியும் ஏற்படும். அதோடு அடிக்கடி சிறுநீர் கழிக்கச் செல்வார்கள்.
கிருமித் தொற்று மேல்நோக்கி பரவினால் சிறுநீரகத்தில் தொற்று உண்டாகி அங்கு சீழ் பிடிக்கலாம்.இதை பைலோநெப்ரைட்டிஸ் ( Pyelonephritis ) என்பர். இது உண்டானால் இடுப்பு வலியுடன் குளிர் காய்ச்சலும் ஏற்படும்.
கடுமையான வலி இடுப்பிலிருந்து கீழ் நோக்கி பரவினால் அது சிறுநீரகக் கல்லைக் குறிக்கும் வலி. சிலர்  வாந்தியும் எடுப்பார்கள். சிறுநீர் பரிசோதனையில் இரத்தம் தென்படும். மலச்சிக்கலும் உண்டாகும்.

          சிலருக்கு சிறுநீர்ப்பையில் கிருமித் தொற்று காரணமாக் அழற்சி உண்டாகி வலி உண்டாகும்.

சிறுநீர் தொடர்புடைய வலி உண்டானால் சிறுநீரகப் பரிசோதனையுடன், தேவைப்பட்டால் எக்ஸ்ரே, அல்ட்ராசவுண்டு பரிசோதனைகள் தேவைப்படும்.இவை மூலம் கற்கள் உள்ளதா என்பது நிர்ணயம் செய்யலாம்.

* குடல் தொடர்புடைய வலி

மலச்சிக்கலும் வயிற்றுப்போக்கும் அடி வயிறு வலியை உண்டுபண்ணும். வயிறு உப்பலும் வீக்கமும் சிலருக்கு உண்டாகலாம்.
மலச்சிக்கலும் வயிற்றுப்போக்கும் மாறி மாறி உண்டானால் அது குடல் எரிச்சல் நோய்  (Irritable Bowel Syndrome ).
மலத்தில் இரத்தம் இருந்தால் அல்லது வெறும் இரத்தமாக வெளியேறினால் அது மூலம் தொடர்புடையது.
கருப்பு நிறத்தில் அல்லது  தார் போன்று மலம் வெளியேறினால் அது குடல் புற்று நோயின் அறிகுறி. உடன் மருத்துவரைப் பார்த்து மேற்கொண்டு பரிசோதனைகள் செய்துகொள்ள வேண்டும்.

          அடிவயிற்றின் வலது பக்கம் வலிப்பது குடல் வால் அழற்சியைக்( அப்பன்டிக்ஸ் ) குறிப்பிடும். இத்துடன் காய்ச்சல், வாந்தி உண்டாகும்.

* கருப்பை, சினைப்பை, கரு வெளியேறும் குழாய் தொடர்புடைய அடி வயிறு வலி.

அடிவயிற்றின் இடது அல்லது வலது பக்கம் வலிப்பது சினைப்பையைக் குறிக்கும். அதில் நீர்க் கட்டிகள் இருக்கலாம்.
மாதவிலக்கின்போது உண்டாகும் வலி கருப்பையிலிருந்து வரும் வலியாகும்.
சில பெண்களுக்கு உடல் உறவின்போது வலி உண்டாகும்.
கருப்பையில் பைப்ரைட் கட்டிகள், எண்டோமெட்ரியோசிஸ் , அழற்சி,.போன்றவற்றிலும் அடிவயிறு வலி உண்டாகும்.

          கருப்பையில் புற்று நோய் வளர்ந்தாலும் வலி உண்டாகும்.

கருச் சிதைவு, கரு வெளியேறும் குழாயில் கரு வளர்ச்சி போன்றவற்றில் அடி வயிறு கடுமையாக வலிக்கும். இவற்றுக்கு உடனடி அவசர சிகிச்சை மேற்கொள்ளவேண்டும்.
கருப்பை வாயில் அல்லது கழுத்துப் பகுதியில் அழற்சி அல்லது புற்று நோய் இருந்தாலும் அடி வயிறு வலிக்கும்.

ஆகவே பெண்களுக்கு அடி வயிறு வலி உண்டாவது பல்வேறு காரணங்களால் இருக்கலாம். அறிகுறிகள், பரிசோதனைகள் மூலமாகவே மருத்துவர் வலியின் காரணத்தை நிர்ணயம் செய்ய முடியும்.,வெறும் வாய்வு வலி, சூட்டு வலி என்று எண்ணிக்கொண்டு நோயை வளரவிடக்கூடாது. துவக்கத்திலேயே மருத்துவப் பரிசோதனையின் வழியாக காரணத்தைக் கண்டறிய வேண்டும். அதன்பின் அதற்கேற்ப சிகிச்சையை மேற்கொள்வதே நல்லது.

Series Navigationமழைக்குப்பின் பூக்கும் சித்திரம்தினம் என் பயணங்கள் -46
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *