This entry is part 26 of 48 in the series 15 மே 2011
 

ரோட்டோர பிளாட்பாரத்தில் 

ஒரு தொழுநோயாளனும்

ஒரு தொழுநோயாளியும்

அவர்களைத் தாண்டி

கால்கள் போகிற போது

கைகளை நீட்டி

பிச்சை கேட்கிற நேரம் தவிர

சுவாரஸ்யமான சம்பாஷனை ஒயாமல்..

பிச்சை விழும் காசில் போட்டியில்லை – எனில்

தம்பதியனரோ ? ஓப்பந்தமின்றி சேர்ந்து உள்ளனரோ ?

நோய் சந்தித்த பின்பா ? முன்பா ? பின் எனில்

உன்னிடமிருந்து தொற்றியதென்ற குற்றபதிவு கண்களிலில்லை

முன்பே எனில் ஒருவருக்கொருவர் ஆறுதலோ ?

ஆறுதலோ ஆர்வமோ

அகநானூறு படலங்களை தீர்மானிப்பது

புற நானூறாயிரம் நியாயங்கள்

இந்நியாயங்களின் காவல் அருகிலில்லை

இம்மனிதர்களுக்கும் காவல் அருகிலில்லை

சடசடவென்ற பாதசாரிகளின் நடைகளுக்கிடையில்

சில்லறை சத்தம் மட்டும் அவ்வப்போது

மற்ற சமயங்களில் யாவும்

’தொடர்பு கொள்ளும் நிலையிலில்லை’ – என

சமூகம் பதிவுசெய்த ஒரேகுரல்.

பிளாட்பாரத்தின் விளிம்பு

தொடுவான கோடாய்

வெவ்வேறு உலகத்தை பார்த்தபடி நீளமாய்….

Series Navigationகடக்க முடியாத கணங்கள்பிராத்தனை