This entry is part 1 of 46 in the series 19 ஜூன் 2011

என்னை தரதரவென இழுத்துச் சென்று
கடலுக்குள் மூழ்கடித்த இஸ்ராயீல்
கரைதிரும்புவதற்குள்
ஒரு கெண்டைமீன்குஞ்சாய்
நீந்திக் கொண்டிருந்தேன்.
கடலுக்குள்
ஏதுமறியா உலகம் விரிந்திருந்தது.
செய்வதறியாது திகைப்புற்ற இஸ்ராயீல்
திமிங்கலத்தின் மீதேறி துரத்தினார்.
எனது துரித நீந்துதலை
கண்டறியமுடியாத துக்கம் அவருக்கிருந்தது.
கடலை வற்றச் செய்வதற்கு
துஆ கேட்டபடி இருந்தார்.
ஆயிரமாயிரம்
அதிசயங்களைக் கொண்டதொருகடல்
நிலை கொள்ளாமல் தவித்தது போக
திரும்பத் திரும்ப பொங்கியவாறு
என்னை அணைத்தபடி இருந்தது.
துரத்திவந்த இஸ்ராயீல்
சுழியில் சிக்கியபின்
திரும்பி வரவே இல்லை.
———————————————–
இஸ்ராயீல் –  மரணத்தூதர்.

 

 

ஹெச்.ஜி.ரசூல்

Series Navigationசாம்பல்வெளிப் பறவைகள்