This entry is part 25 of 32 in the series 24 ஜூலை 2011

நூலிழை கொண்டு
நெய்து வைத்தது போல்
பெய்து கொண்டிருந்தது
மழை

இடியாமலும் மின்னாமலும்
சற்றேனும் சினமின்றி
சாந்தமாயிருந்தது
வானம்

சீயக்காய் பார்க்காத
சிகையைப்போல
சிக்குண்டு கிடந்தன
மேகங்கள்

உதயகாலம் உணராமல்
உறங்கிக்கொண்டிருந்தது
உலகம்

பஞ்சுப்பொதி மேகம் போர்த்திப்
படுத்துறங்கிக் கொண்டிருந்தது
பகலவன்

தற்காலிக ஓடைகளிலும்
தான்தோன்றிக் குட்டைகளிலும்
துள்ளின
தவளைகள்

நைந்தும்
சிதைந்தும்போய்விட்ட
மழைநீர் சேகரிப்புக் கொள்கலன்களில்
ஐந்தாண்டுகளுக்குப் பிறகு
மீண்டும்
அனிச்சையாகவே
சேகரமாயது
மழைநீர்.

Series Navigationகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) அன்புமயமும் சமத்துவமும் (Love & Equality) (கவிதை -47 பாகமும் -1)குறுநாவல்: ‘பிள்ளைக்காதல்’