This entry is part 36 of 47 in the series 31 ஜூலை 2011

நீராய் ஏறுகிறீர்கள் ஒருவருக்குள்.
மனதில் அவர் அருந்தியதும்
நிரம்பிய ரத்தச் சகதியில்
அழுந்தத் தயாராகுங்கள்.

ஆரிக்கிள் வெண்ட்ரிக்கிள் தடவி
ஆர்வத்துடன் ஓடத்துவங்குகிறீர்கள்.
உங்கள் உரையாடல்
ஆக்சிஜனைப் போல நிரம்புகிறது.

ஓட ஓட அழுக்கடைகிறீர்கள்.
உணவுச் சத்துக் கொடுத்து
உப்புச் சக்கையைப் பிரித்து
மாசுச் சொல் சுமந்து..

உப்பை எடுத்ததால்
நன்றியோடு இருக்கிறீர்கள்.
என்றும் உயிர்போல
ஒட்டிக்கொண்டே இருக்கலாமென..

நிறைய அறைகள் இருக்கின்றன.
ஓடிக்கொண்டே இருந்த நீங்கள்
ஓய்வெடுக்கப் போகிறீர்கள்.
சிறுநீரக நெஃப்ரான்களில்.

அழுக்கடைந்து தேங்கிய உங்களை
கனத்த பைகளோடு
காலியாக்கி கவிழ்க்கத்
தயாராகிறார்கள் அவர்கள்.

ஒய்வொழிச்சல் இல்லாமல் ஓடிய நீங்கள்
உங்கள் தேவை முடிந்ததும்
ஒழித்துக் கட்டப்படுகிறீர்கள்
உப்புச் சுமந்த திரவமாய்..

Series Navigationஅந்தப் பாடம்வெட்டுப்புலி’ நாவலுக்கு ரங்கம்மாள் விருது