This entry is part 29 of 37 in the series 18 செப்டம்பர் 2011

 


 

அசையும் புழுவுடன்,

அசைவற்ற மீன்தூண்டில் நரம்பு

அனங்குவதற்கென

மழிக்கப்பட்டிருந்த தலையுடனும்,

பழைய தாமிர உலோக

நிறத் தோலுடனும்.

காத்திருந்தான் ஒரு கற்சிலை போல்

நீருக்குள்ளிருந்த மீன்

அவனைத்தனது

வாலை மட்டும்

அசைத்துக்கொண்டே

பார்த்துக்கொண்டிருந்தது.

வாலசைவால் சலனப்பட்ட நீர்

புழுவையும் சிறிது

அலைபாயச்செய்தது

ஏதுமறியாத புழு ,மீனின் கண்களை

உற்று நோக்கியவாறு வளைந்து

நெளிந்து கொண்டிருந்தது.

கலங்கிய நீர்த்திரைகளினூடே

அவனால் அக்காட்சியைக்காண

இயலவில்லை.

பின்னர் அதிவேகமாக

மீன் தனது வாலைச்சுழற்றி

தூண்டில் நரம்புடன்

மீனவனை உள்ளுக்கிழுத்து

இரையாக்கிக்கொண்டது

மாட்டிக்கொண்டிருந்த

புழு விடுபட்டு

பின்நீந்திச்சென்றது.

 

– சின்னப்பயல் (chinnappayal@gmail.com)

 

 

Series Navigationநிலா விசாரணைகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காதலராய் உள்ள போது (இசை மேதை) (கவிதை -48)