Posted in

நிலத்தடி நெருடல்கள்

This entry is part 28 of 53 in the series 6 நவம்பர் 2011

புதை குழி புகுந்த பின்னரும்
உயிர்த்தலின் பாவனைகள்
நெஞ்சு தேக்கி வைத்திருந்த
தாத்தாவின் ஆவலாதிகளை
யார் தீர்ப்பார்கள் எனும்
தீர்மானத்துள் மூழ்கித் தவிக்கும்
வேர்களிடம் தொடங்குகிறது
அவரின் முதல் குற்றச்சுமை

அனுபவித்த உலகின் பொக்கைவாய்
பொய் பூசிய வெற்றிலை பாக்கு
மென்று துப்பியிருந்ததென்று
உவகையின் கைக்கோல்
இடரும் களமாகத்தான்
உலவிக் கொண்டிருக்கும்
ஊமை நிழல்கள் என்று
வயோதிகக் கனவுகள்
வன்மை உபாதைகள் சுமக்கச் செய்தனவென்று
பார்வையின் மாயை புரைவிழுந்து
நவீனங்களின் காட்சி மங்கலாய்
புராதானத்திரையில் மெழுகியிருந்ததென்று

ஒன்று, இரண்டு ..
ஒன்பது..பதினொன்று
வயோதிகம் வீசிய குற்றங்கள் பரிசீலிக்க
நிலத்தடி புதைந்து
பரிபூரண பிரயாசத்தில் உலகம் கண்டிராது
சுருள் சுருளாய் நீளும் வேர்களிடம்
தனதான சலிப்புகள் தவிர்த்து
தகுதி வேறொன்றில்லை
சொற்களைச் சுமப்பதற்கோ
காதொலிகள் உமிழ்வதற்கோ.


கொ.மா.கோ.இளங்கோ

Series Navigationபழமொழிப் பதிகம்இயலாமை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *