This entry is part 14 of 41 in the series 13 நவம்பர் 2011

பின்னெப்போதும்
இருந்திருக்கவில்லை
அந்த உணர்வு.

புரவி பிடறி சிலிர்க்க
ஓடியபோதும்
வியர்த்திருந்தது.

காணாத ஒன்றைக்
கண்டதாய்
பொய்ப்பித்தது கண்.

நினைவுகள் தப்பிய
நேரத்தில் வேர்
பிடித்திருந்தது பயம்.

கண்ணேறு., காத்து
கருப்பு., மோஹினி
எல்லாம் சுத்தினபடி.

ஒரு ஆழப்பாயும்
வெறுப்பு கத்தியில்லாமல்
குத்தினபடி..

ஒன்றுமற்று கலக்கும்
காழ்ப்பின்முன்
கவிழ்ந்திருந்தது தன்மை.

பின்னெப்போதும்
சந்திக்க முடியவில்லை
அசூயை படிந்த கண்களை.

**************************************

இடறி விழவைத்தும்
போதாமல் இருப்பற்றுத்
திரிந்து கொண்டிருக்கிறது..

சாவேற்படுத்துவதற்கில்லை.
வெறுப்பேற்படுத்துவதற்கே
வெறித்துப் பார்க்கிறது.

குழம்பிக் கிடக்கும்
மென்மையை மிதித்து
சவாரி செய்கிறது.

இன்னும் காயங்கள் படாத
இடங்களைக் குறிவைத்து
கோரைப் பற்கள் பதிக்கிறது.

Series Navigationபழமன் ‘தலைச்சுமை’ – கொங்கு வட்டார நாவல்நானும் பிரபஞ்சனும்