This entry is part 2 of 45 in the series 4 மார்ச் 2012

எழுதாமல் பல

பக்கங்கள் காலியாகவே

இருக்கின்றன.

எழுதுவதற்காக இருந்தவன்

எழுதாமல் போனதால்

பலன் பெற்றனவோ

அந்தப் பக்கங்கள்.

எழுதுபவன் எழுதாததால்

வெள்ளை உள்ளத்துடன்

வெற்றிடம் காட்டி

விரைந்து அழைக்கிறதோ

அந்தக் காகிதப் பக்கங்கள்.

காகிதத்தின் மொழி

அறியாமல் காகிதத்தில்

எழுத முயல்கையில்

எங்கோ இருந்து

வந்தக் காற்று

காகிதத்தை

அடித்துப் போயிற்று.

காற்று அந்தக் காகிதத்தில்

தன் கவிதையைக்

கொட்டி கொட்டி

உரக்கப் பாடியது.

நிச்சயமாக அந்தக்

காகிதம்

காற்றின் கவிதையில்

காலம் முழுவதும்

நிறைந்திருக்கும்.

குமரி எஸ். நீலகண்டன்

Series Navigation“தமிழகத்தில் பெருகும் பீஹாரிகள்”மகளிர் தினமும் காமட்டிபுரமும்