This entry is part 38 of 41 in the series 8 ஜூலை 2012

-வ.ஐ.ச.ஜெயபாலன்

கரும் திரை அசையும் தோற்பாவைகளாய்
நெளியும் நீல மலைத்தொடர்களின் மேல்
முலை சிந்தச் சிந்த நிலா
நட்சதிரக் கன்றுகளைத் தேடுது.

சொட்டும் நிலாப் பாலில்
கரையும் இருளில்
பேய்களே கால்வைக்க அஞ்சும்
வழுக்கு மலைப் பாதை
பாம்பொடு பாம்பாய் நெளிகிறது.

மின்மினிகள் துளை போடும்
இருள் போர்த்த காட்டின் வழி நீழ
கமழும் நாவல்மரங்கள் உதிர்க்கும் கனிக்கு
கரடிகள் அலையும் இரவில்
பூத்துக் குலுங்குது முல்லை.

ஆதிவாசிகளே அஞ்சும் வன இருளில்
வண்ணத்துப் பூச்சிகளும் உறங்கும்
இந்தக் கொடிய நள்ளிரவில்
ஏன் பூத்தாய் காட்டு முல்லை.

நான் மண்ணுக்கு பழசு கவிஞா
பொறுத்திரு என்று நகைத்த
முது முல்லை சுட்டும் திசையில்
ஆளரவம் தெரிகிறது.
என்ன பிரமையா இல்லை ஆவியா
இருக்காது பின்னே குறிஞ்சி முருகனா
துணுக்குற்றேன்.

வேல் இல்லை
கானமயில் இல்லை
காற்ச்சட்டை சேட்டு
கையில் சிணுங்கி ஒளிருகிற செல்பேசி.
வருகிறது மனிதன்தான்.

அவன் மேகம் உறங்கும் மேலூரான்
பகலில் காட்டு யானைகள் நடுங்க
குமுக்கியில் பவனிவரும் பாகன்.
இரவெல்லாம் காதலன்.

கீழே சிறு குடியில்
தூங்காது விரகத்திலே புரண்டு
குறுஞ்சேதி தட்டுகிற ஒருத்திக்காய்
புலி விலகி கரடி ஒதுங்கி
பாம்புகள் கடந்து வருகின்ற இருளன்
போகும் வழியில்
பூ பறிப்பான் குழலிக்கு’

கொட்டும் பனியிலும்
பெருமூச்சில் கனன்றபடி
வாடா வந்திரென ஓயாமல்
குறும்சேதி தட்டுகிற பாதகத்தி
பகலில்கூட இப்பாதை வரத் துணிவாளோ

கபிலன் இல்லையே இன்று
உயிரினும் காதல் இனிதென்னும்
இந்தக் காமுகனைப் பாடுதற்கு.

——————

Series Navigationவிஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் தொண்ணூற்று ஏழுபுள்ளியில் விரியும் வானம்