This entry is part 21 of 29 in the series 12 மே 2013

 

 

தசாப்தங்கள் பல பார்த்துத் தரித்திருக்கிறது

காலையில் பறக்கும் கிளைகளை

தலையில் கொண்ட பெரு விருட்சம்

 

ஆற்று நீருக்கு வட்டப் பாலமாய்

நிழலைக் கொடுக்கும் அம் மரத்தை

அந்தி சாயும் நேரங்களில் பார்க்க வேண்டும்

 

வெள்ளைப் பூக்களென

வந்து தங்கிச் செல்லும்

கொக்குகள்

இரவில் பசித்து விழிக்க நேர்ந்தால்

கரு முகில்களிடையே நட்சத்திரங்களையுண்ணும்

 

இரை தேடி விடிகாலையில்

தமதிரு நெடிய கிளைகளையும்

வயிற்றில் பதித்துப் பறப்பவை

விருட்சத்தின் தலையில் சூடிக் கொள்ள

வெண்ணிறகுகளை அன்பாய்க் கொடுத்துச் செல்லும்

 

அவற்றைச் சேமிக்கும் மரம்

காற்றைத் தொட்டு

இறகுத் தூரிகையால்

ஓடும் ஆற்றில் கவியெழுதும்

 

– எம்.ரிஷான் ஷெரீப்,

இலங்கை

Series Navigation“ஓலைக்கிளிக‌ள்” (அன்னைய‌ர் தின‌ம்)….‘இசை’ கவிதைகள் ‘உறுமீன்களற்ற நதி’ தொகுப்பை முன் வைத்து…