Posted in

தந்தையர் தினம்

 

எந்தையும் தாயுமென்று

தந்தையை முன் வைத்தான்

சங்கப் புலவன்

 

கருவுக்குத் தந்தை

காரணமானதால்

கடைசி மூச்சிலும்

காவலன் ஆனான்

 

மனைவி மக்கள்

இளம் சூட்டில்

இதமாய்க் குளிக்க

இவன் வியர்வையில்

குளிப்பான்

 

உயர்வுகள் பகிர்வான்

குடும்பம் உழல்வது சகியான்

 

எண்ணெய்க்கும்

நெருப்புக்கு மிடையே

திரியாய் எரிவான்

 

விழிக்கும்

ஒளிக்கு மிடையே

இமையாய்க் கிடப்பான்

 

வில்லுக்கும்

அம்புக்கு மிடையே

விசையாய் இருப்பான்

 

மூழ்கியே செத்தாலும்

குடும்பம் மூழ்காமல்

காப்பான்

 

சேமிப்பு எல்லாம் குடும்பம்

சேரும் வகைசெய்து

செத்துப் போவான்

 

சொந்தங்களே அறியாமல்

சுமைகோடி இழுப்பான்

 

முற்களாய்க் கிடந்து

சுளைகள் காப்பான்

 

சூத்திரம் வாழ்க்கைக்கு

துயரங்கள் என்பான்

 

சாதனை வாழ்க்கையை

பிள்ளைக்குத் தந்து

சத்திர வாழ்க்கையைத்

தனதாக்கிக் கொள்வான்

 

எந்தையும் தாயுமென்று

தந்தையை முன்வைத்த

சங்கப் புலவனின்

தத்துவம் அறிவோம்

தந்தையைத் தொழுவோம்

 

அமீதாம்மாள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *