This entry is part 11 of 13 in the series 15 ஆகஸ்ட் 2021

 

ருத்ரா

எழுபத்தைந்து ஆண்டுகளின்
கனமான சுதந்திரம்
இதோ
நம் ஒவ்வொருவரின் தலையிலும்
சுடர்கிறது
மணிமகுடமாய்!
வரலாற்றின் தியாகத் தருணங்கள்
நம் முன்னே நிழலாடுகின்றன.
தூக்குக்கயிறுகள்
துப்பாக்கி குண்டுகள்
அதிரடியான பீரங்கிகள்
இவற்றில்
மடிந்த இந்திய புத்திரர்கள்
வெறும் குப்பைகளா?
மியூசியங்களில் அவர்கள்
உறைந்து கிடந்த போதும்
அவர்களின் கனவுகள் இன்னும்
கொழுந்து விட்டு எரிகின்றன‌
ஆம்
இன்னும் நமக்கு வெளிச்சம்
தருவதற்குத்தான்!
ஆனால்
ஓ! இந்திய மண்ணின் வேர்த்தூவிகளே
இன்னுமா
நீங்கள் இருட்டில் கிடக்கவேண்டும்?
சாதி மத வர்ணங்கள்
எத்தனை தூரிகைகள் கொண்டு
தீட்ட வந்த போதும்
ஓவியத்தின் வரி வடிவம்
விடியல் கீற்றுகளையே
நம் கண்ணில் இன்னும் காட்டவில்லையே!
இப்போது அந்த மகுடத்தின்
கனம் தெரிகிறதா?
அவை மயிற்பீலிகள் அல்ல‌
அவற்றுள் மறைந்திருப்பது
புயற்பீலிகள்!
உங்கள் சுவாசமாகிப்போன‌
அந்த பெருமூச்சுகளில்
நம் மூவர்ணம் படபடத்துப்
பறப்பது
உங்களுக்குத் தெரிகிறதா?
“ஜெய்ஹிந்த்!”

_________________________________

Series Navigationஅருள்பாலிப்புஅதுதான் சரி !