புருனோ: [ஷைலக்கை நோக்கி] மக்கள் சொல்வார். காதல் நோயில் வெந்து போனவன் பிறகு செம்மை அடைவான் என்று. மனதில் மோனிகா மீது காதல் உறுதியாக இருந்தால் நான் சொல்வது போல் நட. லெஃப்டினன்ட் காஸ்ஸியோ இன்று இரவு கோட்டைக் காவல் பார்க்கிறான். இதை நான் உனக்குச் சொல்ல வேண்டும். தெரியுமா ? மோனிகா வாலிப காஸ்ஸியோவை காதலிக்கிறாள் ! இது ஜெனரல் ஒத்தல்லோ வுக்கும் தெரியாது. ஆனால் மோனிகாவின் தந்தைக்கு எப்படியோ தெரிந்து உள்ளது. இந்தக் காதல் சூதாட்ட விளையாட்டில் யார் வெவார், யார் தோற்பார் ? யார் சாவார் ? யார் பலியாவார் ? யாருக்கும் தெரியாது.
ஷைலக்: [மனம் குழம்பி தடுமாற்றமாய்] பொடியன் அவனோடா ? இருக்க முடியாதே. ஏன் அப்படிச் சொல்கிறாய் ? மோனிகாவைச்
சுற்றி மொய்க்கும் தேனீக்கள் இத்தனையா ?
புருனோ: மௌனமாய் கேள். உனக்கு என் ஆலோசனை இது. மோனிகா முதலில் எவ்வளவு ஆவேசமாய் கரு மூர்க்கன் ஒத்தல்லோவை காதலித்தாள் என்று சொல்கிறேன். தளபதி ஒத்தல்லோ போரில் காட்டிய தன் வீர தீரச் செயல்களைப் பீற்றி தனக்கு நிகர் யாருமில்லை என்று புளுகியதில் மோனிகா மதி மயங்கிப் போனாள். இளங்குமரி மோனிகாவுக்கு கண்ணுக்கு அழகிய காளை வேண்டும். கரு வேதாளம்போல் இருக்கும் ஒத்தல்லோ ஒருபோதும் அவளுக்கு உடலின்பம் தர முடியாது. அவளது கனவில் வருபவன் வாலிப காஸ்ஸியோ. பார் போகப் போக அவளுக்கு கருமூர்க்கன் காதல் சலித்துவிடும். வெள்ளைப் பளிங்குபோல் இருக்கும் தேவதை அந்த காக்கை நிற மூக்கனை எப்போதும் நினைத்துக் கொண்டிருப்பாளா ? உனக்கு ஒரு வாய்ப்பு வருது மோனிகாவை பறித்துக் கொள்ள. அந்த வாய்ப்பை விட்டு விடாதே. கருமை வேதாளம் அவன், கவர்ச்சி வாலிபன் நீ. செல்வக் கோமான் நீ. மோனிகாவுக்கு ஏற்றவன் நீ ! ஒத்தல்லோ அல்ல ! காஸ்ஸிக்கா இல்லை !
ஷைலக்: ஓ அப்படியா ? நான் அவளை பொன் ஆபரணங்களால் ஒளிபெற ஒப்பனை செய்வேன். தேன்மொழிகளால் பொழிந்து தேவதையாய் ஆக்குவேன். ஒத்தல்லோ ஆஃப்ரிக்கன் ஆண்டி! அடிமை இனத்தைச் சேர்ந்தவன் ! அதுபோல் செல்வம் இல்லாத சாதா சேவகன் காஸ்ஸியோ.
புருனோ: தளபதி ஒத்தல்லோ வெறுப்புள்ள, வெறுக்க கூடிய விஷ நாக்கு மூர்க்கன். அந்த முரடனோடு எந்தமாதும் இல்லத்தரசியாய் நெடுங்காலம் வாழ முடியாது.
ஷைலக்: மோனிகா ஒரு பச்சிளம் மாது, ஒரு தேவதை. முரடன் ஒத்தல்லோ அவளுக்கு ஏற்ற கணவன் அல்ல. வஞ்சகம் பேசி ஏமாற்றி மணந்த கள்வன்.
புருனோ: அவளா தேவதை ? பார்த்தாயா, காஸ்ஸியோவுக்கு கை கொடுக்க வந்த போது
மோனிகா உள்ளங் கையைத் தடவ, அவன் ரசித்து மகிழ்ந்ததை.
ஷைலக்: ஆம், நான் அதைப் பார்த்தேன், ஆனால் வெறுத்தேன், சகித்தேன். காலம் மாறி விட்டது. கதையும் மாறி நடக்குது. கவர்ச்சிப் பெண்ணுக்கு காதலர் சுற்றம் பெருகுது. அவள் தன் கருப்புக் காதலன்,கணவனை நினைக்க நேரம் இல்லை. அவன் அருகில் இல்லை யென்றால் எவனாவது அழகியை தூக்கிக்
கொண்டு ஓடிவிடுவான்.
புருனோ: அது நடக்க நான் விட மாட்டேன். நான் தான் காவலன் மோனிகாவுக்கு. அவளை யாரும் தூக்கிச் செல்ல முடியாது. யார் பின்னாலும் அவள் செல்ல முடியாது.
ஷைலக்: இரவில் நீ தூங்கும் போது அவள் கடத்தப் பட்டால் ?
புருனோ: அதுவும் நடக்காது. என் மனைவி எமிலியோ மோனிகா படுக்கையில் கூட துணைக்கு இரவு முழுதும் இருக்கிறாள்.
ஷைலக்: புருனோ, நீ தான் எனக்கொரு வழி காட்ட வேண்டும். மோனிகாவை நான் வசீகரித்து என் கட்டிலில் அவளை அணைத்துக் கொள்ள முதலில் ஒரு சூழ்ச்சி செய்ய வேண்டும்.
*********************************************
வில்லன் புருனோ, மோனிகா & ஒத்தல்லோ
ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம் அங்கம் -2 காட்சி – 1 பாகம் : 6
[ஷேக்ஸ்பியரின்ஒத்தல்லோநாடகம்] தமிழ்த்தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா
புருனோ: [ மனதிற்குள்] கோமான் ஷைலக் காமன் வலையில் சிக்கிக் கொண்டான்.
இந்த இச்சைப் போராட்டம் ஒரு பச்சைக் களி ஆட்டம். இல்வாழ்வு நோக்கிப் போக வில்லை. முரணாக உடல் மோகம் பிடித்து, ஒற்றை அழகிக்கு சுற்று வட்டம் போடுகிறது. சதி எண்ணத்தின் மீது அடித்தளம் இல்லாது போலிக் கட்டடம் எழும்புகிறது. இந்த மாளிகை கவிழப் போகிறது. ஷைலக் உடல் உறவு கொள்ள மோனிகாவுக்கு வலை வீசுகிறான். என்ன நடக்கும் என்று தெரியாது. [ஷைலக்கைப் பார்த்து] நான் தான் உன்னை வெனிசிலிருந்து சைப்பிரசுக்கு அழைத்து வந்தேன். இன்று இரவு காவல் பணியாளியுடன் நீ தொடர்பு கொள். காஸ்ஸியோவுக்கு உன்னைத் தெரியாது. நான் அருகில் இருப்பேன். நீ ஏதாவது தப்பு செய்து காஸ்ஸியோவுக்கு கோபம் வரும்படி தூண்டு. ஆவேசமாகப் பேசி அவனோடு வாதாடு. ஷைலக்: அப்படியே செய்கிறேன். புருனோ: அறிந்து கொள், காஸ்ஸியோ ஆங்காரன். அவன் உன்னை அடிக்க வந்தால், வாங்கிக் கொள்.இந்த கைச் சண்டை, வாய்ச் சண்டையை பெரிதாகக் காட்டி, வாள் சண்டை ஆக்கி, காஸ்ஸியோவை புதிய வேலையி லிருந்து நீக்கிட நான் வழி வகுக்க வேண்டும். அப்போது தான் உன் இச்சையும் நிறை வேறும். என் இச்சையும் நிறைவு அடையும். உனக்கு மோனிகாவுடன் உடல் உறவு கிடைக்கும். எனக்கு உயர் பதவி கிடைக்கும். ஒற்றை முயற்சி, இரட்டை வெற்றி. ஷைலக்: நான் காஸ்ஸியோவுடன் சண்டை போட நீ ஒரு வாய்ப்பு வழி சொல்லிக் கொடு. புருனோ: எனக்குத் தெரியும் அது. கேள் ! ஆலயத்துக்கு முன் காலையில் நீ என்னைச் சந்திக்க வா. நான் ஒத்தல்லோவின் பெட்டிகளைக் கொண்டு வரக் கப்பலுக்குப் போக வேண்டும். விடை பெறுகிறேன் ஷைலக். ஷைலக்: சரி காலையில் சந்திப்போம். [போகிறான்] புருனோ: [தனக்குள்] காஸ்ஸியோவுக்கு மோனிகா மீது காதல் உள்ளது. மூர் இனத்தவன் ஒத்தல்லோவை நான் அறவே வெறுத்தாலும் அவன் நல்ல பண்பாளன். நியாய குணம் படைத்தவன். மோனிகாவுக்கு கிடைத்த ஏழ்மைக் கணவனாகத் தான் ஒத்தல்லோ வாழப் போகிறான். எனக்கு வெறுப்பை தருவது இதுதான். என் மனைவி எமிலிவுடன் ஒத்தல்லோ முன்பு உடல் உறவு வைத்துக் கொண்டாக எனக்கு தகவல் கிடைத்துள்ளது. நான் அதற்குப் பழிக்குப் பழி வாங்க வேண்டும் ஒத்தல்லோ வை ! மோனிகா ஓர் புதிய பறவை. பொறாமை உண்டாக்கி அவள் சிறகை வெட்டி மூர்க்கன் ஒத்தல்லோ மதிப்பு இழக்கச் செய்வேன்.பொய்க் கதைகளை உருவாக்கி ஒத்தல்லோ நம்பும்படிச் செய்வேன். அவன் மனைவி மீது காஸ்ஸியோவுக்கு இச்சை உள்ளது என்று சொல்லி
அவன் இரவு தூக்கத்தைக்
கெடுத்து, பைத்திய காரனாய் நான் ஆக்க வேண்டும். இதுவே என் குறிக்கோள். [போகிறான்]